என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜிடம் மனு  அளிக்க வந்த மீனவ குடும்பத்தினர்.
    X
    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜிடம் மனு அளிக்க வந்த மீனவ குடும்பத்தினர்.

    மீனவர்களை கண்டுபிடித்து தர வேண்டி கலெக்டரிடம் மனு

    நாகையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 12 மீனவர்களை கண்டுபிடித்து தர வேண்டி குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை பூம்புகார், செருதூர், விழுந்தமாவடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற, மணிவண்ணன், செண்பகம், சிவசுப்பிரமணியன், முருகன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 12 மீனவர்கள் கடந்த 2007 - 09ம் ஆண்டு வரை மாயமாகினர்.

    மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி அவர்களுடைய உறவினர்கள், நாகை மாவட்ட கலெக்டர் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து இருந்தனர். 

    இந்நிலையில் மாயமான மீனவர்கள் இலங்கை சிறையில் இருப்பதாக நாகையில் உள்ள உறவினர்களுக்கு அங்குள்ளவர்கள் மீனவர்கள் சிறையில் இருக்கும் புகைப்படங்களை கடந்த 2014ம் ஆண்டு அனுப்பி வைத்துள்ளனர்.

    புகைப்படங்கள் வெளியாகி 7 வருடங்கள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கிய நிலையில், இதுவரை மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கைவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள புகைப்பட ஆதாரங்களுடன் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த மீனவர்களின் உறவினர்கள், சிறையில் உள்ளதாக கூறப்படும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அருண் தம்பு ராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    10 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்தி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தந்தை இல்லாமல் காணாமல் போன மீனவர்களின் குழந்தைகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தவித்து வருவதாகவும் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×