என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    திருக்கோவிலூர் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத நிலையில் கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பலியானார்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள அம்மன்கொல்லை மேடு கிராமத்தைச் சேர்ந்த வர் கணபதி. இவரது மகள் விருத்தாம்பாள் (வயது 25). இவர் அதே ஊரில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத வகையில் அருகில் இருந்த தரை கிணற்றில் விழுந்து விட்டார். உயிர் பிழைக்க எவ்வளவோ போராடியும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விருத்தாம்பாள் பிரேதத்தை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.
    தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி வருகின்ற 7-ந் தேதி காலை 9 மணியளவில் தியாக துருகம் போலீஸ் நிலைய வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் தமிழ்நாடு மது விலக்கு சட்டம் 14(4)-ன் படி இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அவைகளை தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி வருகின்ற 7-ந் தேதி காலை 9 மணியளவில் தியாக துருகம் போலீஸ் நிலைய வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. எனவே வாகனத்தை ஏலம் எடுக்க பார்வையிடுவோர் ரூ.100 நுழைவு கட்டணம் செலுத்திய பின் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர்.

    ஏலத்தொகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கப்படும். ஏலம் எடுத்த வாகனத்திற் குண்டான ரசீது அந்த வாகனத் தின் உரிமை ஆவணம் ஆகும். மேலும் விபரங் களுக்கு கூடுதல் காவல் கண்காணிப் பாளர், தலைமையிடம், கள்ளக்குறிச்சி மாவட்டம் அவர்களது அலுவலகத் திலோ அல்லது நேரடியாக வோ, தொலை பேசி மூல மாகவோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சங்கராபுரம் அருகே டிராக்டர் கவிழ்ந்து மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே கடு வனூர் பகுதியிலிருந்து கரும்புகளை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று மூங்கில் துறைப்பட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த டிராக்டர் மேல் சிறுவள்ளூர் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் டிராக்டருக்கு அடியில் சிக்கி சேதமானது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான டிராக்டரை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சரி செய்தனர்.

    கள்ளக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நெல் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேட்டை தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 47) நெல் வியாபாரி, இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் தியாகதுருகத்திலிருந்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வீரமங்கலத்திற்கு நெல் வியாபாரத்துக்கு சென்றார். மீண்டும் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக தியாகதுருகம் நோக்கி சென்றார்.

    அப்போது திம்மலை பிரிவு சாலை அருகே சென்றபோது தனக்குப் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இதுகுறித்து தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் விரைந்து சென்று உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தார். இதுகுறித்து சங்கர் மனைவி அம்சா (45) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது அமோதிய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சின்னசேலம் அருகே மனைவி திட்டியதால் வி‌ஷம் குடித்து கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கண்டாச்சிமங்கலம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது30) அவரது மனைவி ரேவதி (26). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

    இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீதர் லட்சத்தீவில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தவர் வானவரெட்டியில் உள்ள தனது மனைவி, மகளை பார்க்க கடந்த 28-ந் தேதி சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த ஸ்ரீதரை மனைவி ரேவதி திட்டினார்.

    மனமுடைந்த ஸ்ரீதர் டாஸ்மாக் கடையில் மது வாங்கி வந்தார். பின்னர் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்தார். இதனை பார்த்த அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஸ்ரீதரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
    சங்கராபுரம்:

    தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்கள் விளம்பர பேனர்களை அகற்றும் பணியில் உள்ளாட்சி பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், இளநிலை உதவியாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
    கள்ளக்குறிச்சியில் 2 தங்கும் விடுதிகளில் விபச்சாரம் செய்த 2 பெண் புரோக்கர்கள் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த சம்பவம் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே டி.ஏந்தல் கிராமத்தை அடுத்து உள்ள கொரக்கை நத்தம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). இவர் ராமநத்தம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் சர்வீஸ் ரோட்டில் ஓட்டல் நடத்தி வந்தார்.

    நேற்று இரவு மணிகண்டன் ஓட்டலுக்கு மேல் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இன்று காலை நீண்ட நேரம் அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்தது. உடனே ஓட்டலில் வேலை பார்க்கும் ஊழியர் ஜன்னல் வழியே எட்டிபார்த்தார். அப்போது மணிகண்டன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டன் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மலையை சுற்றி சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்வதால் குடும்பத்துடன் மலைப்பகுதிக்கு வருவதற்கு பலரும் அச்சமடைகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகத்தில் வரலாற்று நினைவுச்சின்னமாக மலை உள்ளது. இந்த மலை தியாகதுருகம் புறவழிச்சாலையை ஒட்டி சுமார் 67.2 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து, சுமார் 400 அடி உயரம் கொண்டதாக அமைந்துள்ளது.

    மேலும் 16-ம் நூற்றாண்டை சார்ந்த இந்த மலையில் 18-ம் நூற்றாண்டில் இங்கு ராணுவம் சிறப்பு பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து 1756 -ல் பிரெஞ்சுக்காரர்களும், 1760-ல் ஹைதர் அலியும், அடுத்த ஆண்டில் ஆங்கிலேயரின் கைப்பற்றிய நிலையில் 1790 -ல் திப்புசுல்தான் ஆங்கிலேயருடன் போர் புரிந்து உள்ளார். 1801-ல் பிரிட்டிஷ் ஆட்சி உறுதி பட்டதும் ராணுவத் தளம் என்ற நிலை மாறி உள்ளது. என்பது இந்த மலையின் வரலாறாக உள்ளது.

    இதேபோல் மலையின் மீது தாமரைகுளம், தானியக் கிடங்குகள், சூரியன் பாக்காத கிணறு, 3 பீரங்கிக் குண்டுகள், ரகசிய அறைகள், சுரங்கங்கள் ஆகிய வகையில் அமைந்துள்ளன. மலையடி வாரத்தில் குதிரை லாயம் அமைந்துள்ளது. மேலும் மலையின் மேற்குப் புறத்தில் மலைக் குன்றுகளுக்கு இடையே அருகர் குகைக் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் சமணர்களால் கட்டப்பட்டது. தற்போது மலையாம் பினை கோவிலாக வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு பல்வேறு வரலாற்று சிறப்புகளை பெற்றுள்ளது.

    இந்த நிலையில் நினைவுச் சின்னங்களை பாதுகாக்க ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2.13 கோடி நிதி ஒதுக்கியது அதன்படி தொல்லியல் துறையினர் கடந்த 2019 ஆம் ஆண்டு மலையைச் சுற்றி கம்பி வேலி, மற்றும் கோட்டை குளம் அருகே பூங்கா, பாதுகாவலர் அறை, மலையேறும் படி அருகே கழிவறை ஆகியவைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது ஆனால் இதுவரை பணிகள் முழுமையாக நிறைவடைய வில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

    தியாகதுருகம் புறவழிச் சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் முன்பெல்லாம் சற்று நேரம் மலையின் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு மலையின் அழகை ரசித்து விட்டு சென்றனர்.

    ஆனால் தற்போது மலையை சுற்றி சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்வதால் குடும்பத்துடன் மலைப்பகுதிக்கு வருவதற்கு பலரும் அச்சமடைகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் அன்று மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றவும், ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 3- வது சனியன்று பெருமாள் கோவிலில் உள்ள உற்சவர் சாமியை மலையின் உச்சிக்கு எடுத்துச் சென்று அங்கு வழிபாடு செய்துவிட்டு மீண்டும் பெருமாள் கோவிலுக்கு எடுத்து வருவது வழக்கம்.

    இந்த நிலையில் மலைக்கு செல்லும் படிகள் சேத மடைந்தும், முட்புதர்கள்மண்டியுள்ளதால் மலையின் உச்சிக்கு செல்வதற்கு பக்தர்கள் மிகுந்த சிரமமும், அச்சமும் அடைகின்றனர்.

    எனவே மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து தொல்லியல் துறையினர் பணிகளை விரைந்து முடிக்கவும், மலைக்கு செல்லும் படிகளை செப்பனிடவும், தியாகதுருகத்தில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னமாக விளங்கும் மலையை சுற்றுலாத்தலமாக மாற்றி தியாகதுருகத்திற்கு பெருமை சேர்க்கவும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 250 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் விரியூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வயல்வெளி பகுதியில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த ஒருவர், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 250 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். மேலும் இதுதொடர்பாக விரியூர் கிராமத்தைச் சேர்ந்த சவரிராஜ் (55) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19- ந் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அந்தந்தப் பகுதியில் உள்ள தேர்வு செய்யப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படும். 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெறும்.

    இதையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல் வக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கும் அறை, வாக்கு எண்ணிக்கை நடை பெறும் அறைகள், வாக்கு பதிவு எந்திரங்களை ஒவ்வொரு அறைக்கும் எடுத்துச் செல்வது, வாக்குச்சாவடி முகவர்கள் வந்து செல்வதுகுறித்தும், தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சான்று வழங்கும் அறை உள்ளிட் டவைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இதேபோல் சங்கராபுரம் மற்றும் வடக்கனந்தல் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் மேலூர் கிராமத்தில் உள்ள டி.எஸ்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரி வளாகத்தையும் ஆய்வு செய்தார். அப்போது கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ லட்சுமி, வருவாய் கோட்டாட் சியர் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் சம்பத்குமார், உஷா, ஆறுமுகம், நகராட்சி நகர மைப்பு ஆய்வாளர் தாமரைச் செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே நாகலூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் அங்கன்வாடி மையம் உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே நாகலூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் அதே பகுதியை சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் மற்றும் கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கும் இணை உணவு வழங்கப்படுகிறது.

    தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோர்களின் வீட்டிற்கே சென்று இணை உணவு மாவு, அரிசி, பருப்பு, கொண்டைக் கடலை, பச்சைப் பயிறு, துவரம் பருப்பு உள்ளிட்ட உலர் பொருள்களை வழங்கி வருகின்றனர்.

    இந்த அங்கன்வாடி மையத்தில் மேற்புறம் உள்ள சிமெண்ட் காரைகள் வலுவிழந்து அவ்வப்போது திடீரென பெயர்ந்து விழுகின்றன. மேலும் பல இடங்களில் எப்பொழுது வேண்டுமானாலும் விழும் நிலையில் சிமெண்ட் காரைகள் கம்பிகள் தெரியும் நிலையில் தொங்குகின்றன. இதனால் மையத்திற்கு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து தம்மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்தோடு மையத்திற்கு வந்து செல்லும் அவல நிலை உள்ளது.

    மேலும் மழை பெய்தால் மழைநீர் ஒழுகுவதாகவும் இதனால் மையத்தில் உள்ள பொருட்கள் வீணாகு வதாகவும் கூறப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சியில் கச்சிராபாளையம் சாலையில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாரின் அலுவலகத்திற்கு நகராட்சி ஆணையர் குமரன் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    தமிழகம் முழுவதும் நகர் புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் கடந்த 26-ந் தேதி வெளியிட்டார். அதன்படி நேற்று முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19-ந் தேதி நடைபெறுகிறது.

    அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி கள்ளக்குறிச்சியில் கச்சிராபாளையம் சாலையில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாரின் அலுவலகத்திற்கு நகராட்சி ஆணையர் குமரன் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

    மேலும் நகராட்சி பகுதியில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்றியும், அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    ×