என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகலூர் அங்கன்வாடி மையத்தில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுவதால் பணியாளர்கள் அச்சம்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே நாகலூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் அதே பகுதியை சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் மற்றும் கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கும் இணை உணவு வழங்கப்படுகிறது.
தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோர்களின் வீட்டிற்கே சென்று இணை உணவு மாவு, அரிசி, பருப்பு, கொண்டைக் கடலை, பச்சைப் பயிறு, துவரம் பருப்பு உள்ளிட்ட உலர் பொருள்களை வழங்கி வருகின்றனர்.
இந்த அங்கன்வாடி மையத்தில் மேற்புறம் உள்ள சிமெண்ட் காரைகள் வலுவிழந்து அவ்வப்போது திடீரென பெயர்ந்து விழுகின்றன. மேலும் பல இடங்களில் எப்பொழுது வேண்டுமானாலும் விழும் நிலையில் சிமெண்ட் காரைகள் கம்பிகள் தெரியும் நிலையில் தொங்குகின்றன. இதனால் மையத்திற்கு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து தம்மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்தோடு மையத்திற்கு வந்து செல்லும் அவல நிலை உள்ளது.
மேலும் மழை பெய்தால் மழைநீர் ஒழுகுவதாகவும் இதனால் மையத்தில் உள்ள பொருட்கள் வீணாகு வதாகவும் கூறப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






