என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரலாற்று சிறப்புமிக்க மலையை படத்தில் காணலாம்
    X
    வரலாற்று சிறப்புமிக்க மலையை படத்தில் காணலாம்

    கள்ளக்குறிச்சி அருகே சமூக விரோதிகளின் கூடாரமான வரலாற்று நினைவு சின்னம்

    மலையை சுற்றி சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்வதால் குடும்பத்துடன் மலைப்பகுதிக்கு வருவதற்கு பலரும் அச்சமடைகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகத்தில் வரலாற்று நினைவுச்சின்னமாக மலை உள்ளது. இந்த மலை தியாகதுருகம் புறவழிச்சாலையை ஒட்டி சுமார் 67.2 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து, சுமார் 400 அடி உயரம் கொண்டதாக அமைந்துள்ளது.

    மேலும் 16-ம் நூற்றாண்டை சார்ந்த இந்த மலையில் 18-ம் நூற்றாண்டில் இங்கு ராணுவம் சிறப்பு பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து 1756 -ல் பிரெஞ்சுக்காரர்களும், 1760-ல் ஹைதர் அலியும், அடுத்த ஆண்டில் ஆங்கிலேயரின் கைப்பற்றிய நிலையில் 1790 -ல் திப்புசுல்தான் ஆங்கிலேயருடன் போர் புரிந்து உள்ளார். 1801-ல் பிரிட்டிஷ் ஆட்சி உறுதி பட்டதும் ராணுவத் தளம் என்ற நிலை மாறி உள்ளது. என்பது இந்த மலையின் வரலாறாக உள்ளது.

    இதேபோல் மலையின் மீது தாமரைகுளம், தானியக் கிடங்குகள், சூரியன் பாக்காத கிணறு, 3 பீரங்கிக் குண்டுகள், ரகசிய அறைகள், சுரங்கங்கள் ஆகிய வகையில் அமைந்துள்ளன. மலையடி வாரத்தில் குதிரை லாயம் அமைந்துள்ளது. மேலும் மலையின் மேற்குப் புறத்தில் மலைக் குன்றுகளுக்கு இடையே அருகர் குகைக் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் சமணர்களால் கட்டப்பட்டது. தற்போது மலையாம் பினை கோவிலாக வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு பல்வேறு வரலாற்று சிறப்புகளை பெற்றுள்ளது.

    இந்த நிலையில் நினைவுச் சின்னங்களை பாதுகாக்க ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2.13 கோடி நிதி ஒதுக்கியது அதன்படி தொல்லியல் துறையினர் கடந்த 2019 ஆம் ஆண்டு மலையைச் சுற்றி கம்பி வேலி, மற்றும் கோட்டை குளம் அருகே பூங்கா, பாதுகாவலர் அறை, மலையேறும் படி அருகே கழிவறை ஆகியவைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது ஆனால் இதுவரை பணிகள் முழுமையாக நிறைவடைய வில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

    தியாகதுருகம் புறவழிச் சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் முன்பெல்லாம் சற்று நேரம் மலையின் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு மலையின் அழகை ரசித்து விட்டு சென்றனர்.

    ஆனால் தற்போது மலையை சுற்றி சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்வதால் குடும்பத்துடன் மலைப்பகுதிக்கு வருவதற்கு பலரும் அச்சமடைகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் அன்று மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றவும், ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 3- வது சனியன்று பெருமாள் கோவிலில் உள்ள உற்சவர் சாமியை மலையின் உச்சிக்கு எடுத்துச் சென்று அங்கு வழிபாடு செய்துவிட்டு மீண்டும் பெருமாள் கோவிலுக்கு எடுத்து வருவது வழக்கம்.

    இந்த நிலையில் மலைக்கு செல்லும் படிகள் சேத மடைந்தும், முட்புதர்கள்மண்டியுள்ளதால் மலையின் உச்சிக்கு செல்வதற்கு பக்தர்கள் மிகுந்த சிரமமும், அச்சமும் அடைகின்றனர்.

    எனவே மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து தொல்லியல் துறையினர் பணிகளை விரைந்து முடிக்கவும், மலைக்கு செல்லும் படிகளை செப்பனிடவும், தியாகதுருகத்தில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னமாக விளங்கும் மலையை சுற்றுலாத்தலமாக மாற்றி தியாகதுருகத்திற்கு பெருமை சேர்க்கவும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×