என் மலர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் கரீம்ஷாதக்கா பகுதியைச் சேர்ந்தவர் சையத் உசேன் (வயது 45). இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரும், இதே பகுதியில் கலையநல்லூர் சாலையில் வசித்துவரும் முகமது இப்ராகிம் (52) என்பவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.
நேற்று இரவு முகமது இப்ராகிம் தனது நண்பரை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் போனை எடுத்துப் பேசாததால் ஆத்திரமடைந்த முகமது இப்ராகிம் நேராக சையத் உசேன் என்பவர் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளார்.
சத்தம் கேட்டு சையது உசேன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கதவைத் திறந்து கிரில் கதவுக்கு உள்பக்கமாக நின்றுகொண்டு எதற்காக இந்த இரவு நேரத்தில் இங்கு வந்து தொந்தரவு செய்கிறாய் என கேட்டார்.
அப்போது நான் செல்போனில் அழைத்தால் எடுக்க மாட்டாயா?, அவசரத்திற்கு என் போன் எடுக்காத நீ உயிரோடு இருக்க வேண்டியதே இல்லை எனக்கூறி முகமது இப்ராகிம் தனது கைலியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சையது உசேன் மார்பில் குத்தி உள்ளார்.
அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சையது உசேனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சையத் உசேன் மனைவி அஸ்மர் பீ கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது இப்ராகிமை கைது செய்தனர்.
புதுச்சேரியிலிருந்து கார் ஒன்று உளுந்தூர்பேட்டை வழியாக தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரை தஞ்சாவூரை சேர்ந்த சிறுவன் ஓட்டி வந்தான்.
உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் பகுதியில் கார் சென்றபோது சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிழ்ந்து கிடந்த காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் இருந்த சாராயக் கேனில் இருந்து சாராயம் வழிந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் காரை சோதனை செய்ததில் காரில் இருந்து 10 சாராய கேன்களை பறிமுதல் செய்தனர். உடனே திருநாவலூர் போலீசார் உளுந்தூர்பேட்டை மது விலக்கு போலீசாரிடம் தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
காரை ஓட்டி வந்த சிறுவனிடம் விசாரணை செய்தபோது அவன் தஞ்சாவூரைச் சேர்ந்தவன் என்பதும் திருமண நிகழ்ச்சிக்காக புதுவையிலிருந்து சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சாராயம் கடத்தி வந்த சிறுவனை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்,வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும்கண்காணிப்புக்குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மாவட்டத்தில் முதல் காலாண்டில் பதிவு செய்யப்பட்டவன்கொடுமை வழக்குகள் குறித்தும், அவ்வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட நவடடிக்கைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் விரிவாக கேட்டறிந்தார். மேலும், இனிவரும் காலங்களில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து வன்கொடுமை வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார், கள்ளக்குறிச்சி செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் சாந்தி, வேளாண்மை துணை இயக்குநர் விஜயராகவன், கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி முதல்வர் மோகன்தாஸ், இணை இயக்குநர் வேளாண்மை (திட்டம்) சுந்தரம் மற்றும் பலர் பங்கேற்றனர்.
சங்கராபுரம்:
தமிழகம் முழுவதும் மேயர், துணைமேயர், நகராட்சி, பேரூராட்சிகள் தலைவர், துணைத்தலைவர்கள் தேர்வுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. இதில் பல்வேறு இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் பதவிகளைப் பிடித்தனர்.
இருப்பினும் சில இடங்களில் தி.மு.க. தலைமையால் அதிகாரப்பூர்வமாக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க.வினரே போட்டி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றுள்ளனர். இதனால் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் போட்டியாக மனுதாக்கல் செய்து வென்றவர்கள் உடனடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த சூழலில் பல்வேறு இடங்களில் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சியில் தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சிசார்பில் லாவண்யா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த பேரூராட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர் கடைசி நிமிடத்தில் போட்டியிட மறுத்து விட்டார். இதனால் துணைத் தலைவர் பதவிக்கும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த தேர்தலுக்கான வாக்களிப்பை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சியினர் புறக்கனித்தனர். இதனால் துணைதலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில் தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தி.மு.க.வேட்பாளர் சிவாவை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த ராஜேந்திரன் வெற்றி பெற்றார். இந்த நகராட்சியிலும் துணைத்தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார்.
மேலும் அ.தி.மு.க., வி.சி.க., த.வா.க. வினரும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதனால் இங்கும் தேதி குறிப்பிடாமல் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
சங்கராபுரம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரோஜாரமணி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கு தி.மு.க.வும், வி.சி.க.வும் முட்டி மோதி வந்த நிலையில் காங்கிரசுக்கு அந்த பதவி ஒதுக்கப்பட்டது.
இதனால் பிற்பகல் நடந்த துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் புறக்கனித்தனர். எனவே இங்கும் தேதி குறிப்பிடாமல் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
திண்டிவனம் நகராட்சியில் தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட நிர்மலா ரவிச்சந்திரன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக சின்னசாமி என்ற தி.மு.க. வேட்பாளரை அறிவித்திருந்தனர். ஆனால் நகராடசி தேர்தலில் வி.சி.க. வினர் இந்த பதவியை தங்களுக்கு ஒதுக்கித் தருமாறு வலியுறுத்தி பெற்றதால் அக்கட்சியின் ராஜலட்சுமி துணைத் தலைவராக போட்டியின்றி வெற்றி பெற்றார்.
உளுந்தூர்பேட்டை முதல் நகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளில் உள்ள கவுன்சிலர்கள் 20 பேர் வெற்றி பெற்ற நிலையில் நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று காலை நடைபெற்றது.
இதில் திமுக சார்பில் நகராட்சித் தலைவர் பதவிக்கு முன்னாள் எம்எல்ஏ திருநாவுக்கரசு விண்ணப்பம் செய்தார். உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு வேறு யாரும் தாக்கல் செய்யாத நிலையில் திமுக முன்னாள் எம்எல்ஏ திருநாவுக்கரசு ஒருமனதாக வெற்றி பெற்றார்.






