என் மலர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவை இரண்டாக பிரித்து ரிஷிவந்தியம் தொகுதி வானாபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சங்கராபுரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வானாபுரத்தை தாலுகாவாக அறிவித்துள்ளதை கண்டித்தும், சங்கராபுரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரிஷிவந்தியத்தை தலைமை இடமாக கொண்டு தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்றும் ரிஷிவந்தியம் மற்றும் அதை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ரிஷிவந்தியம் உள்பட 10 கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது குடும்ப அட்டையை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ரிஷிவந்தியத்தை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இவர்களுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், குடும்ப அட்டையை யாரும் ஒப்படைக்க வேண்டாம், மாறாக கோரிக்கை தொடர்பாக 10 பேர் கலெக்டரிடம் சென்று மனு கொடுக்கலாம் என்றனர். இதையடுத்து கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 10 பேர் கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து மனு கொடுத்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திலீபன்(வயது27). இவர், வீட்டில் இருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் தீக்காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திலீபன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீபன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் சட்டமன்றத்தில் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி நகரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வெளிவட்ட சாலை மற்றும் புறநகர் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும்.
கள்ளக்குறிச்சி நகராட்சி பஸ் நிலையத்திலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை நகர பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது எனவே புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னசேலம் கள்ளக்குறிச்சி ரெயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடத்தை கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடி அருகே கட்டித்தர வேண்டும். கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் தற்போது நகராட்சி திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட வாணாபுரம் பகண்டை கூட்டு சாலையில் ஒரு சார்பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம் மற்றும் விவசாயிகள் விளைபொருளை விற்பனை செய்திட ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவை அமைத்து தரவேண்டும்.
மணலூர்பேட்டை பெருமாள் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்து தரவேண்டும். மேலும் கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபும் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் புதிய அங்கன்வாடி கட்டடங்கள், உயர்மட்ட பாலங்கள், பள்ளிகள் தரம் உயர்த்துதல், பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கூடுதல் பஸ்கள், பட்டா வழங்குதல், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், தடுப்பணைகள், கால்நடை மருத்துவமனைகள், பகுதிநேர நியாய விலைக் கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள், காடுகளில் குடிநீர் தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
தியாகதுருகம் பேரூராட்சி உட்பட்ட புக்குளம் பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி பொதுமக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்தப்படும் கழிவு நீர், கால்வாய் மூலம் சித்தலூர் சாலையோரம் உள்ள பிரதான வாய்க்காலில் செல்கிறது. இவ்வாறு செல்லும் கழிவுநீர் சாலையோரமாக தொடர்ந்து செல்ல வழி இல்லாமல் அருகிலுள்ள விளைநிலங்களில் புகுந்து விடுகிறது.
இதனால் அந்த பகுதியில் சுமார் 15 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பயிர் செய்ய முடியாமல், மகசூல் பாதிப்பும் ஏற்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி மாயவன் (வயது 56) என்பவர் கூறுகையில், எனக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தில் வாழை, சம்பங்கி, குண்டுமல்லி ஆகிய பயிர்களை சாகுபடி செய்துள்ளேன். இந்த நிலையில் புக்குளம் பகுதியில் இருந்து வெளியேற்றும் கழிவுநீர் கால்வாய் மூலம் விளைநிலங்களில் பாய்கிறது. இதனால் எனது நிலத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள சம்பங்கி, குண்டுமல்லி ஆகிய பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்தது.
மேலும் 1 ஏக்கர் அளவில் பயிர் செய்யப்பட்ட வாழை வளர்ந்த நிலையில் வாழை மரத்தில் வேர் அழுகல் ஏற்பட்டு வாழை மரங்கள் சிறுத்து போகிறது. மேலும் வாழை மரம் குலை தள்ளிய நிலையில் வாழைக்காய் பிஞ்சுகளாக உள்ளபோதே வாழை மரங்கள் திடீரென சாய்ந்து விடுகின்றன. இதனால் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் தெரிவித்துள்ளேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து கழிவுநீர் விளைநிலங்களில் செல்லாத வண்ணம் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தொப்பையாங்குளம் கிராமத்தை சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் அந்த பகுதி அருகே உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். 18 வயது நிரம்பிய இவரது சித்தப்பா மகள் அதே பள்ளியில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு வருவதாக சென்ற 2 பேரும் வீடு திரும்பவில்லை. இவர்களை உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடி பார்த்தும் இருவரும் கிடைக்கவில்லை.
இது குறித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதில் அதே கிராமத்தை சேர்ந்த சேட்டு மகன் தமிழ் செல்வன் (22) நன்னிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் அருண் (18) ஆகிய 2 பேரும் தங்கள் மகள்களை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சு.ஒகையூர் காலனியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அதே பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிமெண்ட் காரைகள் உடைந்து மிகவும் பலவீனமடைந்த நிலையில் தண்ணீர் ஒழுகுவதாக கூறப்படுகிறது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் முழுவதுமாக தண்ணீர்ஏற்றினால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உடைந்து விடும் என்ற நிலை உள்ளது. இதனால் மின்சாரம் இருக்கும் போது மட்டும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு நேரடியாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலை உள்ளது.
அவ்வாறு குடிநீர் விநனியோகம் செய்யும் போது மின்சாரம் தடைபட்டால் பொது மக்களுக்கு குடிநீர் வழங்க இயலாத அவல நிலை ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்தவும், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் ராஜா தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காசாம்பு பூமாலை, முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ம.க. மாநில தலைவர் மணி கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார்.
தொடர்ந்து மாநில இளைஞரணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது, பா.ம.க. தொடங்கி 32 காலம் முடிந்து 33வது ஆண்டு தொடங்குகிறது. பா.ம.க. வில் உள்ளது போல் வேறு எந்த கட்சியிலும் இளைஞர்கள் இல்லை. நம்மிடம் தொலைநோக்கு திட்டம், திறமை உள்ளது.
கோடிக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்கான நேரம் வந்து விட்டது. எனவே இளைஞர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அன்புமணி ராமதாஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
தமிழ்நாட்டில் 55 ஆண்டுகாலம் 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தும் தமிழ்நாடு வளர்ச்சி பெறவில்லை. பா.ம.க. விடம் 5 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரம் கொடுத்தால் போதும் தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும். எனவே பா.ம.க.வினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ம் ஆண்டு பா.ம.க. ஆட்சி செய்யும் என கூறினார்.
இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






