என் மலர்
காஞ்சிபுரம்
- பாபுவை கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக பாபுவை 93 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தியுள்ளார். அதையொட்டி காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட காஞ்சிபுரம் சதாவரத்தை சேர்ந்த பாபு என்ற லொட்டை பாபு (வயது 26) நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. மூலமாக ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாபுவை கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக பாபுவை 93 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியாக பேச்சுப் போட்டிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
- பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) அன்றும் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) அன்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியாக பேச்சுப் போட்டிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியானது பள்ளி மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் ஒரு மணிக்கும் தொடங்க உள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் கல்லூரிக்கு 2 பேர் வீதம் அந்தந்த கல்லூரிகளின் முதல்வரே தெரிவு செய்தும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பள்ளிகளின் தலைமையாசிரியர்களே ஒரு பள்ளிக்கு ஒருவர் வீதம் தெரிவு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 1. தாய் மண்ணுக்கு பெயர் சூட்டிய தனயன், 2. மாணவர்க்கு அண்ணா, 3. அண்ணாவின் மேடைத்தமிழ், 4. அண்ணா வழியில் அயராது உழைப்போம் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகளும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, 1. பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், 2. பேரறிஞர் அண்ணாவின் சமுதாய சிந்தனைகள், 3. அண்ணாவின் தமிழ்வளம், 4. அண்ணாவின் அடிச்சுவட்டில், 5. தம்பி! மக்களிடம் செல் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
மேலும், தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு, 1. தொண்டு செய்து பழுத்த பழம், 2. தந்தை பெரியாரும் தமிழ் சமுதாயமும், 3. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், 4. தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், 5. தந்தை பெரியாரும் பெண் விடுதலையும் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகளும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, 1. தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், 2. தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், 3. பெண் ஏன் அடிமையானாள்?, 4. இனிவரும் உலகம், 5. சமுதாய விஞ்ஞானி பெரியார், 6. உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன.
இதேபோன்று பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன.
மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.
இதில் கல்லூரி மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான மனை கட்டிடம் பெரியகாஞ்சிபுரம் ஜவஹர்லால் தெருவில் 2,486 சதுர அடி பரப்பளவில் உள்ளது
- காஞ்சிபுரம் கோட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான மனை கட்டிடம் பெரியகாஞ்சிபுரம் ஜவஹர்லால் தெருவில் 2,486 சதுர அடி பரப்பளவில் உள்ளது. இந்த சொத்திற்கு ரூ.28 லட்சம் வரை வாடகை செலுத்தாமல் பிரசாந்த் மற்றும் நந்தகுமார் ஆகியோர் சட்ட அனுமதியின்றி ஆக்கிரமித்தும், அனுபவித்தும் வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக காஞ்சிபுரம் கோட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கினை விசாரித்த இணை ஆணையர் உரிய கால அவகாசம் கொடுத்தும் வாடகை நிலுவைத்தொகையை செலுத்த தவறியதால் ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தினை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்து கோவில் வசம் ஒப்படைக்குமாறு கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இணை ஆணையர் உத்தரவைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துரெத்தினவேலு, ஆய்வாளர் பிரித்திகா, கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், ஸ்ரீதர் ஆகியோர் போலீசார், வருவாய்த்துறை, மின்வாரிய அதிகாரிகளுடன் சென்று ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் சொத்தை ஒப்படைத்துள்ளனர்.
- டிரைவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் புல்லட் தீபக்கை சிவகாஞ்சி போலீசார் கைது செய்தனர்.
- அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ் நிலையத்திற்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் தாம்பரம் நோக்கி செல்லும் அரசு பஸ் வந்தது. டிரைவர் சுரேஷ்பாபு பஸ்சை ஓட்டினார்.
பஸ் நிலையம் எதிரே எதிர் திசையில் ஆட்டோவை நிறுத்தி அதில் வந்த பயணிகளை ஆட்டோ டிரைவர் புல்லட் தீபக் என்பவர் இறக்கிவிட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் சுரேஷ் பாபு, ஆட்டோ டிரைவர் தீபக்கிடம் கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த தீபக் ஆட்டோவை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டார். மேலும் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து டிரைவர் சுரேஷ்பாபுவை தாக்கினார். இதனை தடுக்க முயன்ற மற்றொரு அரசு பஸ்சின் டிரைவர் தனஞ்செயன், கண்டக்டர் கணேஷ் ஆகியோரையும் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை ஓட்டாமல் அங்கேயே நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அரசு பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் டிரைவர், கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பஸ் டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
தாக்குதலில் காயம் அடைந்த டிரைவர் சுரேஷ்பாபு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் காயம் அடைந்த தனஞ்செயன், கணேஷ் ஆகிய இருவரும் முதல் உதவி சிகிச்சை பெற்று மீண்டும் பணிக்கு சென்றனர்.
இதற்கிடையே டிரைவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் புல்லட் தீபக்கை சிவகாஞ்சி போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
இந்த திடீர் போராட்டத்தால் காஞ்சிபுரத்தில் சுமார் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்ப்பட்டது. காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம், திருப்பதி, வேலூர், செங்கல்பட்டு, சென்னை, செய்யாறு மார்க்கமாக செல்கின்ற அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- தற்கொலை செய்த மாணவி லஷ்ணா ஸ்வேதா பிளஸ்-2 வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் இருந்தார்.
- மாணவி லஷ்ணா ஸ்வேதா, ஆசிரியை அமுதாவுக்கு ஒரே மகள் ஆவார்.
திருநின்றவூர்:
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நீட் தேர்வால் மாணவ-மாணவிகளின் தற்கொலை சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில் திருமுல்லைவாயலை சேர்ந்த ஆசிரியையின் மகள் ஒருவர் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து இருப்பது மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருமுல்லைவாயல் அடுத்த சோழபுரம், இந்திரா நகரில் வசித்து வருபவர் அமுதா. இவர் ஆவடி அருகே பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் லஷ்ணா ஸ்வேதா (வயது 19). கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடித்து இருந்தார். இவர் டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக 'நீட்' தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை 3-வது முறையாக லஷ்ணா ஸ்வேதா எழுதினார். எப்படியும் தேர்ச்சி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் லஷ்ணா ஸ்வேதா தற்போதும் தேர்ச்சி பெறவில்லை. 3-வது முறையாக நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் லஷ்ணா ஸ்வேதா மிகவும் மனம் உடைந்தார். இதுபற்றி அவர் கவலையுடன் தனது தாய் அமுதாவிடம் கூறினார்.
இதையடுத்து மகள் லஷ்ணா ஸ்வேதாவுக்கு அமுதா ஆறுதல் கூறினார். அடுத்த நீட் தேர்வில் பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானப்படுத்தினார். எனினும் நீட் தேர்வு தோல்வியால் மாணவி லஷ்ணா ஸ்வேதா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
நேற்று இரவு வழக்கம்போல் தாயும், மகளும் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினர். நள்ளிரவு ஒரு மணியளவில் எழுந்த மாணவி லஷ்ணா ஸ்வேதா திடீரென அறையில் உள் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
அதிகாலை 3.30 மணியளவில் தாய் அமுதா எழுந்து பார்த்தபோது மகள் லஷ்ணா ஸ்வேதா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகளின் உடலை பார்த்து அவர் கதறி துடித்தார்.
இது குறித்து திருமுல்லைவாயில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவி லஷ்ணா ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்த மாணவி லஷ்ணா ஸ்வேதா பிளஸ்-2 வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் இருந்தார். இதையடுத்து அவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் தொடர்பாக ஆன்லைனில் படித்து முடித்து உள்ளார்.
எப்படியும் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்த அவர் 3 முறையும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இதனால் மனவேதனையில் இருந்த மாணவி லஷ்ணா ஸ்வேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
மாணவி லஷ்ணா ஸ்வேதா, ஆசிரியை அமுதாவுக்கு ஒரே மகள் ஆவார். அமுதா கணவரை பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வந்தார். மகளின் தற்கொலையால் அவரை டாக்டராக்கும் நம்பிக்கையில் இருந்த அமுதா நிலை குலைந்து போய் உள்ளார்.
தமிழகத்தில் நீ்ட் தேர்வு மேலும் ஒரு மாணவியை காவு வாங்கி உள்ளது.
- முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
- வரும் 14-ந்தேதி காலை 7 மணிக்கு செங்கல்பட்டு, திருப்போரூர் கூட்ரோடு போலீஸ் பூத் அருகில் தொடங்கி திருக்கழுகுன்றம் வரை சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம்:
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டில் 14-ந்தேதியன்று சைக்கிள் போட்டி நடைபெறவுள்ளது. இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்குமாறு இரு மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் போட்டி குறித்து மாவட்ட கலெக்டர் ஆ.ர. ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. வரும் 14-ந்தேதி காலை 7 மணிக்கு செங்கல்பட்டு, திருப்போரூர் கூட்ரோடு போலீஸ் பூத் அருகில் தொடங்கி திருக்கழுகுன்றம் வரை இந்தப் போட்டி நடைபெற உள்ளது.
இதில் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ, மாணவியர்களுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. மாணவியர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. மாணவியர்களுக்கு 15 கி.மீ. தூரமும் போட்டி நடத்தப்பட உள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ - மாணவியர்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். வருகிற 13-ந்தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 வீதமும், 4 முதல் 10 இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250-ம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். 14-ந்தேதி போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு போட்டி நடத்தப்படும் இடத்துக்கு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 74017 03481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் நடக்கவுள்ள சைக்கிள் போட்டி குறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சியில் சைக்கிள் போட்டி வருகிற 15-ந்தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு காஞ்சிபுரம், பழைய ரெயில் நிலையம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. கல்லறை அருகில் தொடங்கி வையாவூர் சாலை வழியாக கரூர் வரை நடைபெறும்.
இதில் பங்கேற்கவுள்ள மாணவ-மாணவிகள் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து சான்றிதழ் பெற்று வர வேண்டும். வருகிற 14-ந் தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7401703481 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிரிவினை அரசியலாலும், வெறுப்பாலும் நான் என்னுடைய தந்தையை இழந்தேன்
- நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தடைகளை வெல்வோம்.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்த ராகுல்காந்தி பின்னர் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பிரிவினை அரசியலாலும், வெறுப்பாலும் நான் என்னுடைய தந்தையை இழந்தேன். ஆனால் ஒரு போதும் நான் நேசிக்கும் இந்த நாட்டை இழக்க மாட்டேன்.
வெறுப்பை அன்பால் வெல்லலாம். பயத்தை தன்னம்பிக்கையால் வெல்லலாம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தடைகளை வெல்வோம்.
இவ்வாறு அந்த பதிவில் ராகுல்காந்தி குறிப்பிட்டிருந்தார்.
- தனியார் டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
- உணவு சாப்பிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் தனியார் டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. சுமார் 400 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இரவு நேர பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அவர்கள் அனைவரும் தொழிற்சாலையில் உணவகத்தில் இரவு நேர உணவை சாப்பிட்டனர். அப்போது தொழிலாளர்களுக்கு வழங்கிய ரசத்தில் பல்லி விழுந்து இருந்ததாக தெரிகிறது.
சிறிது நேரத்தில் உணவு சாப்பிட்ட 20 பேருக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உணவு சாப்பிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
- மதுரவாயலில் இன்று காலை முதியவர் ஒருவர் மர்மமாக இறந்து கிடந்தார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர்:
மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகில் மின்விளக்கு கம்பம் உள்ளது. இதில் இன்று காலை முதியவர் ஒருவர் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் வயரால் இறுக்கப்பட்டு இருந்தது. அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பள்ளிப் பருவத்திலேயே மகன் போதை பழக்கத்துக்கு அடிமையானதை கண்டு தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தாயின் நிலைக்கண்டு இரண்டு மகன்களும் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
சோமங்கலம் அடுத்த மலைப்பட்டு ரேணுகாம்பாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சிவராஜ். இவரது மனைவி சசிகலா (வயது35).
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் 10-ம்வகுப்பு படிக்கும் இளையமகன் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக தெரிகிறது.
இதனை தாய் சசிகலா பலமுறை கண்டித்தும் மகன் கேட்கவில்லை. இதில் மனவேதனை அடைந்த சசிகலா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்த 2 மகன்களும் தாய் மீதி வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து தாங்களும் தற்கொலைக்கு முயன்றனர்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் மயக்க நிலையில் இருந்த சசிகலா மற்றும் அவரது 2 மகன்களையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிப் பருவத்திலேயே மகன் போதை பழக்கத்துக்கு அடிமையானதை கண்டு தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தாயின் நிலைக்கண்டு இரண்டு மகன்களும் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சென்னையில் இருந்து பெங்களூருக்கு தற்போது தினமும் 9 விமானங்களும், பெங்களூருலிருந்து சென்னைக்கு 9 விமானங்களுமாக ஒரு நாளுக்கு 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
- சென்னையில் இருந்து மைசூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மட்டும் ஒரு புறப்பாடு, ஒரு வருகை இரு சேவைகளை இயக்கி வருகிறது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாடு தளர்வுக்கு பின்னர் பயணிகள் எண்ணிக்கை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. தொடர்ந்து உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மும்பையை தலைமையிடமாக வைத்து ஆகாசா ஏர் விமான நிறுவனம் மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு புதிய விமான சேவைகளை தொடங்கி உள்ளது. அந்த நிறுவனம் தற்போது சென்னையையும் மையமாக வைத்து அதிகமான உள்நாட்டு விமான சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூருக்கு தற்போது தினமும் 9 விமானங்களும், பெங்களூருலிருந்து சென்னைக்கு 9 விமானங்களுமாக ஒரு நாளுக்கு 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இனிமேல் 22 விமான சேவைகளாக அதிகரிக்கின்றன. இதனால் பயணிகளுக்கு கூடுதல் விமான சேவை வசதிகள் கிடைக்கும்.
இதேபோல் இந்த மாதம் 15-ந் தேதியில் இருந்து மாலை 6:10 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் ஆகாசா ஏர் விமானம் இரவு 7:55 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது. அதன்பின்பு அதே விமானம் மீண்டும் இரவு 8:50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, இரவு 10:45 மணிக்கு மும்பை சென்றடைகிறது.
இதுவரை சென்னை மும்பை இடையே 19 புறப்பாடு விமானங்கள்,19 வருகை விமானங்கள் மொத்தம் 38 விமானங்கள் உள்ளன. அது இனிமேல் 40 விமானங்களாக அதிகரிக்கப்படுகிறது.
வருகிற 26-ந் தேதியில் இருந்து ஆகாசா ஏர் விமானம், சென்னையில் இருந்து கொச்சிக்கும், கொச்சியில் இருந்து சென்னைக்கும் தினசரி விமானங்களை புதிதாக இயக்குகிறது.
மாலை 5 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம், மாலை 6 மணிக்கு கொச்சி சென்றடைகிறது. மாலை 6:15 மணிக்கு கொச்சியிலிருந்து புறப்படும் விமானம் இரவு 7:15 மணிக்கு சென்னை வந்தடையும்.
சென்னை கொச்சி இடையே இதுவரை தினமும் 4 புறப்பாடு, 4 வருகை, தினமும் 8 விமான சேவைகள் உள்ளன. இனிமேல் இது 10 விமான சேவைகளாக அதிகரிக்கப்படுகிறது.
இதேபோல் சென்னையில் இருந்து மைசூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மட்டும் ஒரு புறப்பாடு, ஒரு வருகை இரு சேவைகளை இயக்கி வருகிறது. சென்னை-மைசூரு, மைசூரு-சென்னை இடையே பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், தற்போது அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் புதிதாக சென்னை-மைசூரு-சென்னை இடையே விமான சேவைகளை தொடங்கி உள்ளது.
வாரத்தில் 3 நாட்கள் இந்த சேவைகள் இயக்கப்படுகின்றன. ஞாயிறு, புதன், மற்றும் வெள்ளி ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. காலை 9:25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 11 மணிக்கு மைசூரு சென்றடைகிறது. பின்பு மைசூரில் இருந்து காலை 11:30 க்கு அதே விமானம் புறப்பட்டு பகல் ஒரு மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேருகிறது. இந்த விமானம் ஏ.டி.ஆர் எனப்படும் சிறிய ரக விமானம் ஆகும். 74 பயணிகள் வரை இதில் பயணிக்கலாம். இதில் சலுகை கட்டணமாக ஒரு வழி பயணத்திற்கு ரூ.4,678 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரித்துள்ளது பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கிடையே சென்னையில் இருந்து மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது.
சென்னையில் இருந்து மும்பைக்கு-ரூ.9ஆயிரம், பெங்களூரு-ரூ.6.500, டெல்லி-ரூ.9500, கொல்கத்தா-ரூ.8 ஆயிரம் கட்டணமாக உள்ளது.
இதேபோல் சென்னையில் இருந்து மதுரை, கோவை, தூத்துக்குடிக்கு ரூ.6 ஆயிரம் வரை விமான கட்டணமாக இருக்கிறது.
- குன்றத்தூர், நால்ரோடு ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ஜெகதீசன்.
- குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பூந்தமல்லி:
குன்றத்தூர், நால்ரோடு ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ஜெகதீசன் (வயது17). கோவூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று மாலை அவர் தனது நண்பர்களுடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாத ஜெகதீசன் கரையில் உள்ள படியில் அமர்ந்து குளித்து கொண்டு இருந்தார். அப்போது அவரை அவரது நண்பர்கள் நீச்சல் அடித்து குளிக்கும்படி ஆழமான பகுதிக்கு அழைத்தனர்.
அப்போது ஜெகதீசன் தண்ணீரில் மூழ்கினார். உடன் குளித்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் குன்றத் தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் வரைந்து வந்து ஏரியில் மூழ்கிய ஜெகதீசனை தேடி வந்தனர். இந்த நிலையில் ஜெகதீசன் இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நீச்சல் தெரியாமல் ஜெகதீசனை ஏரியில் மூழ்கும் காட்சியை விபரீதம் அறியாமல் கரையில் இருந்த நண்பர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.






