என் மலர்
காஞ்சிபுரம்
- உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து தீடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய திறந்த வெளி நிலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் தனியார் அடுக்குமாடி கட்டுமான நிறுவனம் ஒன்று சுற்று சுவர் அமைத்து சொந்தம் கொண்டாடுவதாக கூறி அங்கு அமைக்கப்பட்டு இருந்த சுற்றுச்சுவரை நேற்று பொதுமக்கள் இடித்துள்ளனர்.
பின்னர் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து தீடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,
சாலையில் நடுவே மரம், இரும்பு கம்பங்களை போட்டு சாலையிலேயே அமர்ந்தும் படுத்தும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் இச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா, உதவி கமிஷனர் ரவிக்குமார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- நிர்மலா சீதாராமன் பேட்டரி கார் மூலம் காமாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தை வலம் வந்தார்.
- மத்திய நிதி மந்திரி வருகையையொட்டி சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
காஞ்சிபுரம்:
வண்டலூர் பகுதியில் உள்ள இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். பின்னர் அவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அவருக்கு அறநிலையத் துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் தாமரை மலர்கள், வஸ்திரங்கள் மற்றும் பழங்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார்.
கோவில் நிர்வாகம் சார்பில் காமாட்சி அம்மனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஏலக்காய், முந்திரி பொருட்களான மாலை அவருக்கு அணி விக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நிர்மலா சீதாராமன் பேட்டரி கார் மூலம் காமாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தை வலம் வந்தார். அவர் காமாட்சி அம்மன் கோவிலில் சுமார் 20 நிமிடங்கள் சாமி தரிசனம் செய்தார்.
மத்திய நிதி மந்திரி வருகையையொட்டி சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
- காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை திருவேகம்பன் நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராணி.
- மதுபோதை தகராறில் அண்ணனை தம்பியே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை திருவேகம்பன் நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராணி. இவர் சி.எஸ்.ஐ. பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்து விட்டார்.
இவர்களது மகன்கள் வின்சென்ட் (வயது21), ஷெர்லி ஜான்(19). இவர்களில் மூத்த மகன் வின்சென்ட், பச்சையப்பன் கல்லூரியில் பி.எஸ்.சி. விலங்கியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். ஷெர்லி ஜான் பச்சையப்பன் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
தந்தையின் மறைவுக்கு பிறகு ஷெர்லி ஜான் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு மது போதையில் அவர் வழக்கம் போல் வீட்டுக்கு வந்தார்.
இதனை தாய் செல்வ ராணியும், அண்ணன் வின்சென்ட்டும் கண்டித்தனர். இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஷெர்லி ஜான், தாய் செல்வ ராணியை தாக்கியதாக தெரிகிறது.
இதனால் கோபம் அடைந்த வின்சென்ட், தம்பி ஷெர்லி ஜானை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த ஷெர்லி ஜான் சமையல் அறையில் இருந்த காய்கள் நறுக்கும் கத்தியை எடுத்து வந்து அண்ணன் வின்சென்ட்டை சரமாரியாக குத்தினார்.
மார்பில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த வின்சென்ட் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சிறிது நேரத்தில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்டு தாய் செல்வராணி அதிர்ச்சி அடைந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது கல்லூரி மாணவர் வின்சென்ட் தம்பியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிந்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வின்சென்ட்டின் உடலை மீட்டு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக ஷெர்லி ஜானை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மதுபோதை தகராறில் அண்ணனை தம்பியே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே பெரிய அருங்கால் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத் (வயது 48). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து தொழில் செய்துவருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இவர் தனது வீட்டை பூட்டி கொண்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 26 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம், வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து சம்பத் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுவாஞ்சேரி போலீசார் வந்து பெரிய அருங்கால் கிராமத்தில் விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தீபாவளி பட்டாசு விற்க உரிமம் பெற விண்ணப்பிக்கும்போது ஆவணங்களை தவறாமல் சமர்பிக்க வேண்டும்.
- உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற ஆவணங்களுடன் வருகிற 30-ந் தேதி வரை இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்கும்போது ஆவணங்களை தவறாமல் சமர்பிக்க வேண்டும்.
உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது.
- 15 வயதில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம்:
கொரோனா தொற்றை தடுப்பதற்காக 15 வயதில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாளை (11-ந்தேதி) காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 1,059 மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
- பாபுவை கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக பாபுவை 93 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தியுள்ளார். அதையொட்டி காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட காஞ்சிபுரம் சதாவரத்தை சேர்ந்த பாபு என்ற லொட்டை பாபு (வயது 26) நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. மூலமாக ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாபுவை கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக பாபுவை 93 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியாக பேச்சுப் போட்டிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
- பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) அன்றும் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) அன்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியாக பேச்சுப் போட்டிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியானது பள்ளி மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் ஒரு மணிக்கும் தொடங்க உள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் கல்லூரிக்கு 2 பேர் வீதம் அந்தந்த கல்லூரிகளின் முதல்வரே தெரிவு செய்தும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பள்ளிகளின் தலைமையாசிரியர்களே ஒரு பள்ளிக்கு ஒருவர் வீதம் தெரிவு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 1. தாய் மண்ணுக்கு பெயர் சூட்டிய தனயன், 2. மாணவர்க்கு அண்ணா, 3. அண்ணாவின் மேடைத்தமிழ், 4. அண்ணா வழியில் அயராது உழைப்போம் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகளும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, 1. பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், 2. பேரறிஞர் அண்ணாவின் சமுதாய சிந்தனைகள், 3. அண்ணாவின் தமிழ்வளம், 4. அண்ணாவின் அடிச்சுவட்டில், 5. தம்பி! மக்களிடம் செல் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
மேலும், தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு, 1. தொண்டு செய்து பழுத்த பழம், 2. தந்தை பெரியாரும் தமிழ் சமுதாயமும், 3. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், 4. தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், 5. தந்தை பெரியாரும் பெண் விடுதலையும் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகளும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, 1. தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், 2. தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், 3. பெண் ஏன் அடிமையானாள்?, 4. இனிவரும் உலகம், 5. சமுதாய விஞ்ஞானி பெரியார், 6. உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன.
இதேபோன்று பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன.
மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.
இதில் கல்லூரி மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான மனை கட்டிடம் பெரியகாஞ்சிபுரம் ஜவஹர்லால் தெருவில் 2,486 சதுர அடி பரப்பளவில் உள்ளது
- காஞ்சிபுரம் கோட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான மனை கட்டிடம் பெரியகாஞ்சிபுரம் ஜவஹர்லால் தெருவில் 2,486 சதுர அடி பரப்பளவில் உள்ளது. இந்த சொத்திற்கு ரூ.28 லட்சம் வரை வாடகை செலுத்தாமல் பிரசாந்த் மற்றும் நந்தகுமார் ஆகியோர் சட்ட அனுமதியின்றி ஆக்கிரமித்தும், அனுபவித்தும் வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக காஞ்சிபுரம் கோட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கினை விசாரித்த இணை ஆணையர் உரிய கால அவகாசம் கொடுத்தும் வாடகை நிலுவைத்தொகையை செலுத்த தவறியதால் ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தினை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்து கோவில் வசம் ஒப்படைக்குமாறு கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இணை ஆணையர் உத்தரவைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துரெத்தினவேலு, ஆய்வாளர் பிரித்திகா, கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், ஸ்ரீதர் ஆகியோர் போலீசார், வருவாய்த்துறை, மின்வாரிய அதிகாரிகளுடன் சென்று ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் சொத்தை ஒப்படைத்துள்ளனர்.
- டிரைவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் புல்லட் தீபக்கை சிவகாஞ்சி போலீசார் கைது செய்தனர்.
- அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ் நிலையத்திற்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் தாம்பரம் நோக்கி செல்லும் அரசு பஸ் வந்தது. டிரைவர் சுரேஷ்பாபு பஸ்சை ஓட்டினார்.
பஸ் நிலையம் எதிரே எதிர் திசையில் ஆட்டோவை நிறுத்தி அதில் வந்த பயணிகளை ஆட்டோ டிரைவர் புல்லட் தீபக் என்பவர் இறக்கிவிட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் சுரேஷ் பாபு, ஆட்டோ டிரைவர் தீபக்கிடம் கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த தீபக் ஆட்டோவை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டார். மேலும் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து டிரைவர் சுரேஷ்பாபுவை தாக்கினார். இதனை தடுக்க முயன்ற மற்றொரு அரசு பஸ்சின் டிரைவர் தனஞ்செயன், கண்டக்டர் கணேஷ் ஆகியோரையும் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை ஓட்டாமல் அங்கேயே நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அரசு பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் டிரைவர், கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பஸ் டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
தாக்குதலில் காயம் அடைந்த டிரைவர் சுரேஷ்பாபு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் காயம் அடைந்த தனஞ்செயன், கணேஷ் ஆகிய இருவரும் முதல் உதவி சிகிச்சை பெற்று மீண்டும் பணிக்கு சென்றனர்.
இதற்கிடையே டிரைவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் புல்லட் தீபக்கை சிவகாஞ்சி போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
இந்த திடீர் போராட்டத்தால் காஞ்சிபுரத்தில் சுமார் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்ப்பட்டது. காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம், திருப்பதி, வேலூர், செங்கல்பட்டு, சென்னை, செய்யாறு மார்க்கமாக செல்கின்ற அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- தற்கொலை செய்த மாணவி லஷ்ணா ஸ்வேதா பிளஸ்-2 வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் இருந்தார்.
- மாணவி லஷ்ணா ஸ்வேதா, ஆசிரியை அமுதாவுக்கு ஒரே மகள் ஆவார்.
திருநின்றவூர்:
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நீட் தேர்வால் மாணவ-மாணவிகளின் தற்கொலை சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில் திருமுல்லைவாயலை சேர்ந்த ஆசிரியையின் மகள் ஒருவர் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து இருப்பது மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருமுல்லைவாயல் அடுத்த சோழபுரம், இந்திரா நகரில் வசித்து வருபவர் அமுதா. இவர் ஆவடி அருகே பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் லஷ்ணா ஸ்வேதா (வயது 19). கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடித்து இருந்தார். இவர் டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக 'நீட்' தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை 3-வது முறையாக லஷ்ணா ஸ்வேதா எழுதினார். எப்படியும் தேர்ச்சி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் லஷ்ணா ஸ்வேதா தற்போதும் தேர்ச்சி பெறவில்லை. 3-வது முறையாக நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் லஷ்ணா ஸ்வேதா மிகவும் மனம் உடைந்தார். இதுபற்றி அவர் கவலையுடன் தனது தாய் அமுதாவிடம் கூறினார்.
இதையடுத்து மகள் லஷ்ணா ஸ்வேதாவுக்கு அமுதா ஆறுதல் கூறினார். அடுத்த நீட் தேர்வில் பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானப்படுத்தினார். எனினும் நீட் தேர்வு தோல்வியால் மாணவி லஷ்ணா ஸ்வேதா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
நேற்று இரவு வழக்கம்போல் தாயும், மகளும் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினர். நள்ளிரவு ஒரு மணியளவில் எழுந்த மாணவி லஷ்ணா ஸ்வேதா திடீரென அறையில் உள் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
அதிகாலை 3.30 மணியளவில் தாய் அமுதா எழுந்து பார்த்தபோது மகள் லஷ்ணா ஸ்வேதா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகளின் உடலை பார்த்து அவர் கதறி துடித்தார்.
இது குறித்து திருமுல்லைவாயில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவி லஷ்ணா ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்த மாணவி லஷ்ணா ஸ்வேதா பிளஸ்-2 வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் இருந்தார். இதையடுத்து அவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் தொடர்பாக ஆன்லைனில் படித்து முடித்து உள்ளார்.
எப்படியும் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்த அவர் 3 முறையும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இதனால் மனவேதனையில் இருந்த மாணவி லஷ்ணா ஸ்வேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
மாணவி லஷ்ணா ஸ்வேதா, ஆசிரியை அமுதாவுக்கு ஒரே மகள் ஆவார். அமுதா கணவரை பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வந்தார். மகளின் தற்கொலையால் அவரை டாக்டராக்கும் நம்பிக்கையில் இருந்த அமுதா நிலை குலைந்து போய் உள்ளார்.
தமிழகத்தில் நீ்ட் தேர்வு மேலும் ஒரு மாணவியை காவு வாங்கி உள்ளது.
- முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
- வரும் 14-ந்தேதி காலை 7 மணிக்கு செங்கல்பட்டு, திருப்போரூர் கூட்ரோடு போலீஸ் பூத் அருகில் தொடங்கி திருக்கழுகுன்றம் வரை சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம்:
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டில் 14-ந்தேதியன்று சைக்கிள் போட்டி நடைபெறவுள்ளது. இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்குமாறு இரு மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் போட்டி குறித்து மாவட்ட கலெக்டர் ஆ.ர. ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. வரும் 14-ந்தேதி காலை 7 மணிக்கு செங்கல்பட்டு, திருப்போரூர் கூட்ரோடு போலீஸ் பூத் அருகில் தொடங்கி திருக்கழுகுன்றம் வரை இந்தப் போட்டி நடைபெற உள்ளது.
இதில் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ, மாணவியர்களுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. மாணவியர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. மாணவியர்களுக்கு 15 கி.மீ. தூரமும் போட்டி நடத்தப்பட உள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ - மாணவியர்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். வருகிற 13-ந்தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 வீதமும், 4 முதல் 10 இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250-ம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். 14-ந்தேதி போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு போட்டி நடத்தப்படும் இடத்துக்கு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 74017 03481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் நடக்கவுள்ள சைக்கிள் போட்டி குறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சியில் சைக்கிள் போட்டி வருகிற 15-ந்தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு காஞ்சிபுரம், பழைய ரெயில் நிலையம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. கல்லறை அருகில் தொடங்கி வையாவூர் சாலை வழியாக கரூர் வரை நடைபெறும்.
இதில் பங்கேற்கவுள்ள மாணவ-மாணவிகள் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து சான்றிதழ் பெற்று வர வேண்டும். வருகிற 14-ந் தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7401703481 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






