search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள்- கலெக்டர் தகவல்
    X

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள்- கலெக்டர் தகவல்

    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியாக பேச்சுப் போட்டிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
    • பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) அன்றும் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) அன்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியாக பேச்சுப் போட்டிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    இந்த போட்டியானது பள்ளி மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் ஒரு மணிக்கும் தொடங்க உள்ளது.

    கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் கல்லூரிக்கு 2 பேர் வீதம் அந்தந்த கல்லூரிகளின் முதல்வரே தெரிவு செய்தும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பள்ளிகளின் தலைமையாசிரியர்களே ஒரு பள்ளிக்கு ஒருவர் வீதம் தெரிவு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 1. தாய் மண்ணுக்கு பெயர் சூட்டிய தனயன், 2. மாணவர்க்கு அண்ணா, 3. அண்ணாவின் மேடைத்தமிழ், 4. அண்ணா வழியில் அயராது உழைப்போம் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகளும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, 1. பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், 2. பேரறிஞர் அண்ணாவின் சமுதாய சிந்தனைகள், 3. அண்ணாவின் தமிழ்வளம், 4. அண்ணாவின் அடிச்சுவட்டில், 5. தம்பி! மக்களிடம் செல் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

    மேலும், தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு, 1. தொண்டு செய்து பழுத்த பழம், 2. தந்தை பெரியாரும் தமிழ் சமுதாயமும், 3. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், 4. தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், 5. தந்தை பெரியாரும் பெண் விடுதலையும் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகளும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, 1. தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், 2. தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், 3. பெண் ஏன் அடிமையானாள்?, 4. இனிவரும் உலகம், 5. சமுதாய விஞ்ஞானி பெரியார், 6. உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

    இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன.

    இதேபோன்று பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன.

    மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இதில் கல்லூரி மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×