என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஜானகி ராமன் பழுதை நீக்க முயற்சி மேற்கொண்டு இருந்தார்.
    • வழிப்பறிக்கு பயன்படுத்திய உயர்தர பைக், ஜானகி ராமனின் செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

    காஞ்சிபுரம்:

    சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த வெள்ள கேட் பகுதியில் எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனம் ஒன்று பழுதடைந்தது.

    இதனால் சர்வீஸ் சாலையில் வைத்து உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஜானகி ராமன் பழுதை நீக்க முயற்சி மேற்கொண்டு இருந்தார்.

    அப்போது பைக்கில் வந்த 3 இளைஞர்கள் ஜானகிராமனிடம் பட்டாக் கத்தியை காண்பித்து மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.2,500 ரொக்கம் ஆகியவற்றை வழிப்பறி செய்து விட்டு 3 பேரும் தப்பி ஓடினார்கள். அவர்கள் தப்பி செல்லும்போது மோட்டார்சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த வாலிபரை ஜானகிராமன் பிடித்து இழுக்க முயற்சித்தார். அப்போது அந்த இளைஞரின் செல்போன் கீழே விழுந்து விட்டது. அதை கவனிக்காமல் வழிப்பறி செய்த 3 இளைஞர்களும் பைக்கில் ஏறி தப்பினர்.

    காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா காவல் ஆய்வாளர் பேஸில் பிரேம் ஆனந்த், உதவி ஆய்வாளர் துளசி ஆகியோர் மர்ம நபர்கள் தவறவிட்ட செல்போனை கைப்பற்றி அதன் மூலம் தப்பி ஓடிய மர்ம நபர்களின் செல்போன்களை டிராக் செய்தனர்.

    அதேபோல் கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்து அவர்கள் 3 பேரும் ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளூர் பகுதியில் உள்ள பாலாற்று படுகையில் பதுங்கி இருப்பதை கண்டறிந்து அவர்களைப் பிடிக்க முன்றனர்.

    3 இளைஞர்களும் கழனி, ஏரி, ஆறு போன்றவற்றில் குதித்து தப்ப முயன்ற போதும் காவல்துறையினர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் விடாப்பிடியாக சினிமா படத்தில் வருவது போல விரட்டி சென்று 3 பேரையும் கைது செய்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட 3 பேரில் படுநெல்லி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவன் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது என்பது, அதே போல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வசிக்கும் மணிகண்டன் (24), அர்ஜுனா (25) ஆகியோர் மீது 10-க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் உள்ளது என்பதும் தெரிய வந்தது.

    மேலும் இவர்கள் வழிப்பறிக்கு பயன்படுத்திய உயர்தர பைக், ஜானகி ராமனின் செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினர். இவர்களை கைது செய்ய போலீசார் எடுத்த முயற்சிகள் அனைத்தும் சினிமா படத்தில் வருவது போன்று விறுவிறுப்பாக இருந்தது என அப்பகுதி விவசாய மக்கள் கூறுகின்றனர்.

    • பொதுமக்கள் போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல் செல்ல முக்கிய சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகரில் பொதுமக்கள் போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல் செல்ல முக்கிய சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த நடைபாதைகள் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் நடந்து செல்ல வழி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதனால் காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதே போல் கச்சபேஸ்வரர் கோவில் அருகே உள்ள நடைபாதையும் பேனர் வைப்பது, நடைபாைத கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பால் நிறைந்து இருந்தன.

    இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

    கடந்த சில வாரங்களாக காமாட்சி அம்மன் கோவில் அருகே இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக புகழ்பெற்ற கைலாசநாதர் ஆலயம் செல்லும் புத்தேரி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது

    இந்த நிலையில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகே உள்ள பகுதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.

    மேலும் நகரை சுற்றிலும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களும் அகற்றப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம் நகரில் மேற்கொள்ளப்படும் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். நடைபாதைகளை ஆக்கிரமித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • புதியதாக நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டது.
    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி குறித்து அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட உத்திரமேரூர், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி குறித்து அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, குழந்தைகள் நலத்திட்ட இயக்குனர் கவிதா, முதன்மை கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டது.

    • பிரபல நிதி நிறுவனங்கள் பொதுமக்கள் செலுத்திய பணத்தை சுருட்டி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
    • மோசடி நிதி நிறுவனங்களை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்ட பிரபல நிதி நிறுவனங்கள் பொதுமக்கள் செலுத்திய பணத்தை சுருட்டி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    இந்த பணத்தை பொதுமக்களிடம் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும், மோசடி நிதி நிறுவனங்களை கண்டித்தும் காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசும்போது, 'பணம் பறித்த நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் இருந்து பணத்தைப் பெற்று அப்பாவி பொதுமக்களிடம் அரசு திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என்றார்.

    இதில், மாநகர தலைவர் சுகுமார், மாநிலத் துணைத்தலைவர் இ.எஸ்.எஸ். ராமன், மாநில துணை பொது செயலாளர் விடியல் சேகர், மாநில நிர்வாகிகள் ஸ்ரீகாந்த், சங்கர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் விஷார், கார்த்தி, ஜி.கே. கஜா, சசிகுமார், மாடசாமி, யுவகுமார், யுவராஜ் ,ரஜினி, சுதர்சன் பாஸ்கர், சசிகுமார், தென்னவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் பாலாஜி.
    • அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ரவிகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் பாலாஜி (வயது20). தனியார் ஆன்லைன் டெலிவரி ஊழியர்.

    இவர் நேற்று இரவு பணி முடிந்து போரூர் - கிண்டி டிரங்க் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    ராமாபுரம் அருகே வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கான்கிரீட் கலவை ஏற்றி சென்ற லாரியை கோபால் முந்தி செல்ல முயன்றார்.

    அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென கோபால் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறிய அவர் கான்கிரீட் கலவை லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கமலாதேவி மற்றும் போலீசார் கோபாலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ரவிகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இதுவரை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெற்று வந்தது.
    • வரும் 27ம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம், ஒவ்வொரு மாதத்திலும் இரண்டாவது மற்றும் நான்காவது செவ்வாய்க்கிழமைகளில் அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை நடைபெற்று வந்தது.

    27-9-2022 அன்று அஞ்சுகம் திருமண மண்டபத்தில் வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் அன்றைய முகாம் மட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல், நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-5 ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் இடத்தில் குறித்த நேரத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றி முககவசம் அணிந்து கலந்துகொண்டு, தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி.
    • இதுவரை 8053 பேர் மட்டுமே (92 சதவீதம்) கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்கள சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் என மொத்தம் 8739 பேர் உள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசி (கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு) செலுத்தி கொண்ட பயனாளிகள் 26 வாரங்களுக்கு பிறகு இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.

    இதுவரை 8053 பேர் மட்டுமே (92 சதவீதம்) தடுப்பூசி செலுத்தி உள்ளனர். கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும்.

    எனவே நாளை (25-ந் தேதி) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 1059 மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பரிந்துரைக்கப்பட்ட 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளும் மற்றும் இதுவரை போடாத முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    பணமோசடி வழக்கில் தேடப்பட்ட நிக்மத் அலி வந்திருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து மும்பை போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

    ஆலந்தூர்:

    மும்பையை சோ்ந்தவர் நிக்மத் அலி.தொழில் அதிபர். இவா் மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை போலீசார தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று காலை சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளுடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பணமோசடி வழக்கில் தேடப்பட்ட நிக்மத் அலி வந்திருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து மும்பை போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

    • வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் தங்க நகை, கால் கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆயகொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுதர்சனம். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியில் உள்ள தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று வழக்கம் போல சுதர்சனம் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி ஜானகி அதே பகுதியில் ஒரு துக்க நிகழ்வுக்காக வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். திருப்பி வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவுக்கான பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் தங்க நகை, கால் கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் ஜானகி புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை தடயங்களை சேகரித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • தமிழகம் முழுவதும் தற்போது இன்புளூயன்சா வைரஸ் காயச்சல் பரவி வருகிறது.
    • உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் பொதுமக்கள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    தமிழகம் முழுவதும் தற்போது இன்புளூயன்சா வைரஸ் காயச்சல் பரவி வருகிறது.குறிப்பாக இந்த வகை வைரஸ் காய்ச்சல் குழந்தைகளைஅதிகளவில் பாதிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வைரஸ் காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதன்காரணமாக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் அதிக அளவில் சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர்.

    உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் பொதுமக்கள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    தற்போதைய நிலவரப்படி காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் புற நோயாளிகள் பிரிவில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என 250 பேரும், உள் நோயாளிகள் பிரிவில் 250 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாளுக்கு நாள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த படி உள்ளது. இதன் காரணமாக ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் நோயாளிகள் நிரம்பிய நிலை காணப்படுகிறது.

    காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம் வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது.
    • வாக்காளர்கள் தாமாகவே முன்வந்து படிவம் 6பி-யை பூர்த்தி செய்து முகாம் அலுவலர்களிடம் நேரில் சமர்ப்பிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    வாக்காளர்கள் தாமாகவே முன்வந்து படிவம் 6பி-யை பூர்த்தி செய்து முகாம் அலுவலர்களிடம் நேரில் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 19-ந்தேதி துபாயில் இருந்து சென்னை திரும்புவதாக மனைவி காவியாவிடம் மணிகண்டன் தெரிவித்து இருந்தார்.
    • மணிகண்டன் வீட்டுக்கு வரவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் அருகே உள்ள கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவரது மனைவி காவியா. கேட்டரிங் டெக்னாலஜி படித்துள்ள மணிகண்டன் துபாயில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் கடந்த 19-ந்தேதி துபாயில் இருந்து சென்னை திரும்புவதாக மனைவி காவியாவிடம் தெரிவித்து இருந்தார். ஆனால் மணிகண்டன் வீட்டுக்கு வரவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து காவியா, சென்னை விமான நிலையத்தில் விசாரித்தபோது, கணவர் மணிகண்டன் துபாயில் இருந்து திரும்பி வந்திருப்பதும், விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருப்பதும் தெரிந்தது.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான மணிகண்டனை தேடிவருகிறார்கள்.

    ×