என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • ஸ்ரீநிவாஸ் போலீசிடம் சிக்காமல் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
    • ஐதராபாத்தில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஐதராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். இவர் மீது கடந்த 2021-ம் ஆண்டு வரதட்சனை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஸ்ரீநிவாஸ் போலீசிடம் சிக்காமல் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ஸ்ரீநிவாஸ் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த ஸ்ரீநிவாசை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். இதுபற்றி ஐதராபாத்தில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சிங்கப்பூர் விமானம் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • காந்திநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, உத்திரமேரூரில் இருந்து ஓரிக்கை நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மோதி மோதியது.
    • காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து பலியான தாய்-மகளின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை, பேராசிரியர் நகரை சேர்ந்தவர் பழனி. இவர் சென்னை தலைமை செயலகத்தில் நிதி துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யா (வயது40). இவர்களது இரட்டை குழந்தைகள் பூர்ணிமா, பூர்விகா (வயது4).

    இன்று அதிகாலை ஓரிக்கை அடுத்த மணி மண்டபம் பகுதியை சேர்ந்த உறவினரின் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பழனி தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    காந்திநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, உத்திரமேரூரில் இருந்து ஓரிக்கை நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மோதி மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய வித்யா, அவரது மகள் பூர்ணிமா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் பழனி, மற்றும் அவரது மற்றொரு மகள் பூர்விகா ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.

    விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவ்வழியே சென்றவர்கள் உயிருக்கு போராடிய பழனி, பூர்விகாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து பலியான தாய்-மகளின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் லாரியின் பதிவு எண்ணை வைத்து விபத்து ஏற்படுத்திய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன்.
    • ஆன்லைன் செயலி மூலம் ரூ.79 ஆயிரத்துக்கு கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி கடந்த 20-ந் தேதி ட்ரோன் கேமரா ஆர்டர் செய்துள்ளார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன் (வயது 35). ஏ.சி மெக்கானிக்கான இவர், தனது நண்பர் சுரேசுக்கு ட்ரோன் கேமரா தேவைப்பட்டதால் ஆன்லைனில் தேடியுள்ளார்.

    அப்போது ஆன்லைன் செயலி மூலம் ரூ.79 ஆயிரத்துக்கு கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி கடந்த 20-ந் தேதி ட்ரோன் கேமரா ஆர்டர் செய்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று வந்த கேமரா பார்சலை பிரித்து பார்த்தபோது, ரூ.100 ரூபாய் மதிப்புள்ள பொம்மை கார் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் டெலிவரி செய்தவரை தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் இது குறித்து ஆன்லைன் நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளனர். அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.

    • ஸ்ரீபெரும்புதூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
    • ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் பாடிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 26). இவர் பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சத்தியமூர்த்தி வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததால், மனைவி பிரியா அடிக்கடி கோபித்துக்கொண்டு தன் அம்மா வீட்டிற்கு செல்வது வழக்கம். அதேபோல் கடந்த வாரம் சத்தியமூர்த்தி குடித்துவிட்டு தகராறு செய்த நிலையில் கோபித்து கொண்டு பிரியா தன் குழந்தையோடு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இதனால் சத்தியமூர்த்தியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், நேற்று முன்தினம் இரவு தனது அறைக்கு சென்று திடீரென தூக்கில் தொங்கினார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை, மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சத்தியமூர்த்தி இறந்து விட்டதாக கூறினர். இதைத்தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வாடிக்கையாளர் வேண்டுகோளின்படி பட்டுச்சேலையில் பெருமாளின் திருமுகங்களையும், முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் மற்றும் லட்சுமி தேவியை வடிவமைக்க முடிவெடுத்தனர்.
    • குமரவேலு- கலையரசி தம்பதியினர் பெருமாளின் திருமுகம், ரெங்கநாதர் லட்சுமி தேவியுடன் இருப்பதை 8 நாட்களில் இரவு பகலாக வேலை பார்த்து அழகிய பட்டுச் சேலையை தயாரித்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், விளக்கொளி பெருமாள் கோவில் தோப்புத் தெருவில் வசிப்பவர் குமரவேலு. இவரது மனைவி கலையரசி.

    இவர்கள், வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை பட்டு சேலையில் வடிவமைத்து கைத்தறியில் நெசவு செய்து வழங்கி வருகின்றனர்.

    இவர்களிடம் சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், 3-வது ஆண்டாக திருமலை திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவில் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வித்தியாசமாக பட்டுச் சேலை தயாரித்து வழங்க கேட்டுக்கொண்டார்.

    வாடிக்கையாளர் வேண்டுகோளின்படி பட்டுச்சேலையில் பெருமாளின் திருமுகங்களையும், முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் மற்றும் லட்சுமி தேவியை வடிவமைக்க முடிவெடுத்தனர்.

    அதன்படி குமரவேலு- கலையரசி தம்பதியினர் பெருமாளின் திருமுகம், ரெங்கநாதர் லட்சுமி தேவியுடன் இருப்பதை 8 நாட்களில் இரவு பகலாக வேலை பார்த்து அழகிய பட்டுச் சேலையை தயாரித்து உள்ளனர்.

    தங்க ஜரிகை இழைகளால் நெசவு செய்யப்பட்ட இந்த பட்டுச்சேலை 21½ முழம் நீளத்தில், ஒரு கிலோ 386 கிராம் எடையில் உள்ளது. அதில் மொத்தம் 427 பெருமாளின் திருமுகங்களும், பார்டரில் 27 ஜோடி யானைகளும் உள்ளன. முந்தானையில் ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் படுத்திருக்கும் ரெங்கநாதரும், காலடியில் வீற்றிருக்கும் மகாலட்சுமியும், நாபியில் இருந்து வளரும் தாமரைப் பூவில் பிரம்மாவும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் உற்சவர் உருவமும் ஜரிகை இழைகளால் கலை நயத்துடன் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாளுக்கு வாடிக்கையாளரால் வழங்கப்படும் இந்த பட்டுச் சேலையை விரதம் இருந்து நெசவு செய்ததாக நெசவு தொழிலாளி குமரவேலு-கலையரசி தம்பதியினர் தெரிவித்து உள்ளனர்.

    • மேற்குவங்காள மாநிலம் துர்காபூரை சேர்ந்தவர் சேகர் ஹஸ்ரா.
    • தன் உயிரைக் காப்பாற்றிய சி.எஸ்.ஐ.எப் அதிகாரிகளுக்கு சேகர் ஹஸ்ரா நன்றியை தெரிவித்தார்.

    ஆலந்தூர்:

    மேற்குவங்காள மாநிலம் துர்காபூரை சேர்ந்தவர் சேகர் ஹஸ்ரா (69). இவர் இருதய நோயாளி. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தார்.

    அப்போது விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்து வெளியே செல்லும் போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். இதை கண்ட சி.எஸ்.ஐ.எப் வீரர்கள், தங்களுடைய மேல் அதிகாரிகளுக்கும் விமான நிலைய மருத்துவர்களுக்கும் தகவல் அளித்தனர்.

    டாக்டர்கள் அவருக்கு இருதய துடிப்பை மீண்டும் உயிர்த்தெழ செய்யும் சி.பி.ஆர். சிகிச்சை அளித்தனர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இருதய துடிப்பும் வெகுவாக குறைந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

    ஆனால் அங்கு இருந்த சி.எஸ்.ஐ.எப் அதிகாரிகள் எட்வின் சாம், வைகுண்டம் ஆகியோர் அந்த பயணியை காப்பாற்ற தொடர்ந்து அவருக்கு சி.பி.ஆர் சிகிச்சை அளித்தனர். இதில் அவருக்கு மீண்டும் சுய நினைவு திரும்பியது.

    இதையடுத்து அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது அவருடைய உடல் நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் தன் உயிரைக் காப்பாற்றிய சி.எஸ்.ஐ.எப் அதிகாரிகளுக்கு சேகர் ஹஸ்ரா நன்றியை தெரிவித்தார். அதுமட்டுமின்றி துரிதமாக செயல்பட்டு பயணி உயிரைக் காப்பாற்றிய சி.எஸ்.ஐ.எப் வீரர்களை ஐ.ஜி ஸ்ரீராம் உள்பட மேல் அதிகாரிகள் பாராட்டினர்.

    • உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஜானகி ராமன் பழுதை நீக்க முயற்சி மேற்கொண்டு இருந்தார்.
    • வழிப்பறிக்கு பயன்படுத்திய உயர்தர பைக், ஜானகி ராமனின் செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

    காஞ்சிபுரம்:

    சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த வெள்ள கேட் பகுதியில் எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனம் ஒன்று பழுதடைந்தது.

    இதனால் சர்வீஸ் சாலையில் வைத்து உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஜானகி ராமன் பழுதை நீக்க முயற்சி மேற்கொண்டு இருந்தார்.

    அப்போது பைக்கில் வந்த 3 இளைஞர்கள் ஜானகிராமனிடம் பட்டாக் கத்தியை காண்பித்து மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.2,500 ரொக்கம் ஆகியவற்றை வழிப்பறி செய்து விட்டு 3 பேரும் தப்பி ஓடினார்கள். அவர்கள் தப்பி செல்லும்போது மோட்டார்சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த வாலிபரை ஜானகிராமன் பிடித்து இழுக்க முயற்சித்தார். அப்போது அந்த இளைஞரின் செல்போன் கீழே விழுந்து விட்டது. அதை கவனிக்காமல் வழிப்பறி செய்த 3 இளைஞர்களும் பைக்கில் ஏறி தப்பினர்.

    காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா காவல் ஆய்வாளர் பேஸில் பிரேம் ஆனந்த், உதவி ஆய்வாளர் துளசி ஆகியோர் மர்ம நபர்கள் தவறவிட்ட செல்போனை கைப்பற்றி அதன் மூலம் தப்பி ஓடிய மர்ம நபர்களின் செல்போன்களை டிராக் செய்தனர்.

    அதேபோல் கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்து அவர்கள் 3 பேரும் ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளூர் பகுதியில் உள்ள பாலாற்று படுகையில் பதுங்கி இருப்பதை கண்டறிந்து அவர்களைப் பிடிக்க முன்றனர்.

    3 இளைஞர்களும் கழனி, ஏரி, ஆறு போன்றவற்றில் குதித்து தப்ப முயன்ற போதும் காவல்துறையினர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் விடாப்பிடியாக சினிமா படத்தில் வருவது போல விரட்டி சென்று 3 பேரையும் கைது செய்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட 3 பேரில் படுநெல்லி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவன் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது என்பது, அதே போல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வசிக்கும் மணிகண்டன் (24), அர்ஜுனா (25) ஆகியோர் மீது 10-க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் உள்ளது என்பதும் தெரிய வந்தது.

    மேலும் இவர்கள் வழிப்பறிக்கு பயன்படுத்திய உயர்தர பைக், ஜானகி ராமனின் செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினர். இவர்களை கைது செய்ய போலீசார் எடுத்த முயற்சிகள் அனைத்தும் சினிமா படத்தில் வருவது போன்று விறுவிறுப்பாக இருந்தது என அப்பகுதி விவசாய மக்கள் கூறுகின்றனர்.

    • பொதுமக்கள் போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல் செல்ல முக்கிய சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகரில் பொதுமக்கள் போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல் செல்ல முக்கிய சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த நடைபாதைகள் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் நடந்து செல்ல வழி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதனால் காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதே போல் கச்சபேஸ்வரர் கோவில் அருகே உள்ள நடைபாதையும் பேனர் வைப்பது, நடைபாைத கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பால் நிறைந்து இருந்தன.

    இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

    கடந்த சில வாரங்களாக காமாட்சி அம்மன் கோவில் அருகே இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக புகழ்பெற்ற கைலாசநாதர் ஆலயம் செல்லும் புத்தேரி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது

    இந்த நிலையில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகே உள்ள பகுதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.

    மேலும் நகரை சுற்றிலும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களும் அகற்றப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம் நகரில் மேற்கொள்ளப்படும் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். நடைபாதைகளை ஆக்கிரமித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • புதியதாக நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டது.
    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி குறித்து அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட உத்திரமேரூர், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி குறித்து அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, குழந்தைகள் நலத்திட்ட இயக்குனர் கவிதா, முதன்மை கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டது.

    • பிரபல நிதி நிறுவனங்கள் பொதுமக்கள் செலுத்திய பணத்தை சுருட்டி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
    • மோசடி நிதி நிறுவனங்களை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்ட பிரபல நிதி நிறுவனங்கள் பொதுமக்கள் செலுத்திய பணத்தை சுருட்டி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    இந்த பணத்தை பொதுமக்களிடம் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும், மோசடி நிதி நிறுவனங்களை கண்டித்தும் காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசும்போது, 'பணம் பறித்த நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் இருந்து பணத்தைப் பெற்று அப்பாவி பொதுமக்களிடம் அரசு திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என்றார்.

    இதில், மாநகர தலைவர் சுகுமார், மாநிலத் துணைத்தலைவர் இ.எஸ்.எஸ். ராமன், மாநில துணை பொது செயலாளர் விடியல் சேகர், மாநில நிர்வாகிகள் ஸ்ரீகாந்த், சங்கர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் விஷார், கார்த்தி, ஜி.கே. கஜா, சசிகுமார், மாடசாமி, யுவகுமார், யுவராஜ் ,ரஜினி, சுதர்சன் பாஸ்கர், சசிகுமார், தென்னவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் பாலாஜி.
    • அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ரவிகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் பாலாஜி (வயது20). தனியார் ஆன்லைன் டெலிவரி ஊழியர்.

    இவர் நேற்று இரவு பணி முடிந்து போரூர் - கிண்டி டிரங்க் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    ராமாபுரம் அருகே வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கான்கிரீட் கலவை ஏற்றி சென்ற லாரியை கோபால் முந்தி செல்ல முயன்றார்.

    அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென கோபால் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறிய அவர் கான்கிரீட் கலவை லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கமலாதேவி மற்றும் போலீசார் கோபாலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ரவிகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இதுவரை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெற்று வந்தது.
    • வரும் 27ம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம், ஒவ்வொரு மாதத்திலும் இரண்டாவது மற்றும் நான்காவது செவ்வாய்க்கிழமைகளில் அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை நடைபெற்று வந்தது.

    27-9-2022 அன்று அஞ்சுகம் திருமண மண்டபத்தில் வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் அன்றைய முகாம் மட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல், நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-5 ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் இடத்தில் குறித்த நேரத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றி முககவசம் அணிந்து கலந்துகொண்டு, தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×