என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையின் காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • கடல் சீற்றம் அதிகமிருந்த போதிலும் அதை பற்றி யாரும் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் கடலில் குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாடு, உள்நாடு பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் ஞாயிற்றுகிழமை மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையின் காரணமாக நேற்று மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கிருஷ்ண மண்டபம், மகிஷாசூரமர்த்தினி மண்டபம், பழைய கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன பகுதிகள் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது. பலர் புராதன சின்னங்கள் குடும்பம், குடும்பமாக நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    அதேபோல் மாமல்லபுரம் கடற்கரையிலும் இதமான சூழல், ரம்மியமான காற்று வீசியதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் நேற்று திரண்டு வந்து பொழுதை கழித்தனர். கடல் சீற்றம் அதிகமிருந்த போதிலும் அதை பற்றி யாரும் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் கடலில் குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் உள்ள கிழக்கு ராஜ வீதி, கோவளம் சாலை, கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, மேற்கு ராஜ வீதி போன்ற முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தினர். பிறகு நகருக்குள் சுற்றுலா பயணிகளுடன் வந்த கார், வேன், பஸ் போன்ற 800-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்று மாமல்லபுரம் நகரை விட்டு வெளியே சென்றன.

    • கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு தகவல் கிடைத்தது.
    • கடந்த 9 மாதங்களாக சென்னை வேளச்சேரி பாரதி நகர் கோதாவரி தெருவில் நைஜீரிய பெண் தங்கி உள்ளார்.

    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின்பேரில் மதுவிலக்கு உதவி கமிஷனர் ரவிச்சந்திரன், பள்ளிக்கரணை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் கானத்தூர் சுங்கச்சாவடி அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கிய வெளிநாட்டு பெண் ஒருவர் அங்கிருந்த நபரிடம் ஏதோ ஒரு சிறு பொட்டலத்தை கொடுப்பதை கண்ட போலீசார், அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அந்த பெண், நைஜீரியா நாட்டை சேர்ந்த ஆன்யனி மோனிகா (வயது 30) என தெரியவந்தது.

    இவர், கடந்த 9 மாதங்களாக சென்னை வேளச்சேரி பாரதி நகர் கோதாவரி தெருவில் தங்கி உள்ளார். தனது சகோதரரின் புற்றுநோய் சிகிச்சைக்காக நைஜீரியாவில் இருந்து மும்பையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு வந்தார். வந்த இடத்தில் வேலை எதுவும் இல்லாததால் செலவுக்கு பணம் தேவைப்பட்டது. அப்போது ஒருவர், கொக்கைன் போதை பொருளை சென்னையில் விற்பனை செய்து கொடுத்தால் பணம் தருவதாக கூறியதால், சென்னையில் தங்கி போதை பொருள் விற்பனை செய்தது தெரிந்தது.

    ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்துக்கு வாங்கி வந்து ரூ.5 ஆயிரத்துக்கு விற்பதாகவும் கூறினார். அவரிடம் இருந்த கைப்பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் தலா ஒரு கிராம் வீதம் 72 சிறு கொக்கைன் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றுடன், கொக்கைன் விற்ற ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் ஆகும்.

    இது குறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு நைஜீரியா நாட்டு பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திறம்பட செயல்பட்டு கொக்கைன் போதை பொருளை கைப்பற்றி, நைஜீரிய நாட்டு பெண்ணை கைது செய்த தனிப்படை போலீசாரை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார்.

    • குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி, ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்.
    • குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி, ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 35). இவருடைய மனைவி நிவேதா (30). இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் ஆவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.

    நேற்று மாலை வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மொத்தம் 7 கிராமங்களில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
    • பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 1159 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.

    சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    ஏகனாபுரம் கிராமமக்கள் இன்று 67-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் காந்தி ஜெயந்தியையொட்டி பரபரப்பான சூழ்நிலையில் இன்று ஏகனாபுரத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    ஊராட்சி தலைவர் சுமதி தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் கோபி, ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ஜெயகாந்தன் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆவேசம் அடைந்த கிராமமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் விமான நிலையம் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அங்கிருந்த கிராம மக்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    அந்த தீர்மானத்தில், "ஏகனாபுரம் ஊராட்சியில் வர இருக்கின்ற பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்ப்பது எங்கள் கிராமத்தின் நோக்கம் அல்ல. அதே நேரத்தில் எங்கள் கிராமத்தில் குயிருப்பு பகுதிகளையும் விவசாய நிலங்களையும், நீர் நிலைகளையும் வாழ்வாதாரத்தை அழித்து விட்டு எங்களை அப்புறப்படுத்துகின்ற இந்த பசுமை விமான நிலைய திட்டத்தை இந்த கிராம சபை கூட்டத்தின் மூலமாக எங்கள் கிராம பகுதிக்கு முழுமையாக வேண்டாம் என்று ஏகமனதாக எதிர்க்கின்றோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

    கிராம சபை கூட்டத்தில் பெண்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் மேலேறி, நெல்வாய், வளத்தூர், பரந்தூர், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் புதிதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றினர். மொத்தம் 7 கிராமங்களில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 526 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார்.

    கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளின் வரவு செலவு அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதேபோல் கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் தலைவர் ரமேஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, பட்டா வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் தெரிவித்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.

    • கடந்த ஒரு வாரத்தில் ஆட்டோக்கள், விதிமுறைகளை மீறிய கனரக வாகனங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து அதற்கு அபராதம் விதிக்கப்பட்டதில் சுமார் ரூபாய் 3 லட்சம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
    • ஆட்டோ டிரைவர்கள் வரவழைக்கப்பட்டு அதற்கு உரிய அபராதத்தை செலுத்த அறிவுறுத்திய பிறகு ஆட்டோ டிரைவர்கள் அபராதம் செலுத்தினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கிய காரணமாக ஆட்டோக்கள் செயல்படுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள். இதையடுத்து கலெக்டர் ஆர்த்தி அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் ஆட்டோக்களின் உரிமம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் 60-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உரிமம் தகுதி சான்று, இன்சூரன்ஸ் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றாதது தெரியவந்தது. அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டன.

    பின்னர் ஆட்டோ டிரைவர்கள் வரவழைக்கப்பட்டு அதற்கு உரிய அபராதத்தை செலுத்த அறிவுறுத்திய பிறகு ஆட்டோ டிரைவர்கள் அபராதம் செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து இன்று மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், அபராதம் செலுத்திய ஆட்டோ டிரைவர்களுக்கு அரசு விதிகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும், மறுமுறை வாகனம் பிடிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நெரிசலான பகுதி என்பதால் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும், பயணிகளிடம் கனிவாக நடந்து கொண்டு மாவட்டத்திற்கு நற்பெயரை கொண்டு வர வேண்டும் என அறிவுரை வழங்கி 24 ஆட்டோ டிரைவர்களின் ஆட்டோக்களை அவர்களிடம் ஒப்படைத்தார். கடந்த ஒரு வாரத்தில் ஆட்டோக்கள், விதிமுறைகளை மீறிய கனரக வாகனங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து அதற்கு அபராதம் விதிக்கப்பட்டதில் சுமார் ரூபாய் 3 லட்சம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

    • ஒப்பந்த ஊழியர் ராம்குமார் என்பவர் வைத்திருந்த கிளினிங் மாப் கம்பு மீது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் சச்சின் குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • ஒப்பந்த ஊழியரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியை விமான நிலைய ஒப்பந்த பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். அப்போது ஒப்பந்த ஊழியர் ராம்குமார் என்பவர் வைத்திருந்த 'கிளினிங் மாப்' கம்பு மீது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் சச்சின் குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    ஒப்பந்த ஊழியரிடம் இருந்த மாப்பை வாங்கி கழற்றி பார்த்தார். அதில் மாப்பின் கைப்பிடி குழாய்க்குள் இருந்து 10 பாக்கெட்டுகள் வெளியே வந்து விழுந்தன. அதனை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.78 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 811 கிராம் தங்க பசை இருந்தது. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா், தங்கப்பசை, ஒப்பந்த ஊழியருடன் மாப்பையும் கைப்பற்றி உயா் அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா்.

    மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தி விட்டு சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். சுங்க இலாகா அதிகாரிகள், ஒப்பந்த ஊழியரிடம் தங்கம் எப்படி வந்தது? வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த ஆசாமி, அதனை விமான நிலைய ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்து மாப்புக்குள் மறைத்து வைத்து வெளியே கொண்டு செல்ல முயன்றிருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக ஒப்பந்த ஊழியரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    • பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கம், வைரம், வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • திருட்டு சம்பவம் தொடர்பாக கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள அக்கரை சி.கிளப் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் அபர் ஜிந்தால் (வயது 39). டாக்டரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான டெல்லி அருகே உள்ள நொய்டாவுக்கு சென்றுவிட்டார்.

    பின்னர் நேற்று சென்னைக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 100 கவுண்ட்டா்கள் முதல் கட்டமாகவும், 40 கவுண்ட்டா்கள் 2-ம் கட்டமாகவும் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.
    • புதிய கவுண்ட்டர்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடக்கிறது.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் விமான சேவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அதற்கு ஏற்ற வகையில் விமான நிலையத்தை விரிவுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி ரூ.2,400 கோடியில் 2.36 லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய முனையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பணிகள் முடிந்து இந்த ஆண்டு டிசம்பா் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய அதிநவீன ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

    சென்னை விமான நிலையத்தின் தற்போதைய முனையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு சோதனைகள், செக்-இன் கவுண்ட்டா்கள் 64 மட்டுமே உள்ளன. புதிய முனையத்தில் 140 செக்-இன் கவுண்ட்டா்கள் அமைக்கப்படுகின்றன. இதில் 100 கவுண்ட்டா்கள் முதல் கட்டமாகவும், 40 கவுண்ட்டா்கள் 2-ம் கட்டமாகவும் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.

    இந்தநிலையில் புதிய கவுண்ட்டர்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடக்கிறது. அனைத்து கவுண்ட்டா்களுக்கும் காவி நிற வர்ணம் பூசப்படுகிறது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் பயணிகளை கவரும் வகையில் புதிய வா்ணம் பூசப்படுகிறது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வணிக நிறுவனங்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
    • விமான நிறுவனங்களுக்கு பினாங்கு மாநிலம் கட்டண சலுகை வழங்கும்.

    ஆலந்தூர்:

    மலேசியாவின் பினாங்கு நகரில் பொழுது போக்கு மற்றும் வணிக நிகழ்ச்சிக்காக சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க மலேசியா திட்டமிட்டு உள்ளது.

    இதையொட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து பினாங்கு நகருக்கு நேரடி விமானங்களை இயக்க தயாராக இருக்கும் விமான நிறுவனங்களுடன் பினாங்கு சுற்றுலாத் துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    சென்னை-பினாங்கு இடையே நேரடி விமான சேவைக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பினாங்கு சுற்றுலாத் துறை மற்றும் படப்பாற்றல் பொருளாதாரத்திற்கான மாநில செயற்குழு உறுப்பினர் கூறும்போது, "தமிழகம் மற்றும் மலேசியா இடையே பாரம்பரிய உறவு உள்ளது. இதனால் குறிப்பாக சென்னையில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர வாய்ப்பு உள்ளது" என்றார்.

    பினாங்கை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும் போது, "பினாங்கு நகர் வணிக நிகழ்ச்சிக்கான மையமாக திகழ்கிறது. வணிக நிறுவனங்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

    சென்னை-பினாங்கு இடையே நேரடி விமான சேவை தொடங்குவதற்கு முயற்சி செய்து வருகிறோம். இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து நேரடி விமானங்களை இயக்க தயாராக இருக்கும் விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதற்கு தயாராக இருக்கும் விமான நிறுவனங்களுக்கு பினாங்கு மாநிலம் கட்டண சலுகை வழங்கும்.

    சென்னையில் இருந்து கோலாலம்பூர் வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர். அதனால் கோலாலம்பூர் வழியாக பினாங்கு மாநிலத்திற்கு வரும் பயணிகளுக்கு விமான சீட்டுகள் கிடைப்பதில்லை. இதனால் கோலாலம்பூரில் இருந்து பினாங்கிற்கு செல்லும் பயணிகள் ஒரு மணியில் இருந்து 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்றார்.

    • குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், அவரது மகள் சந்தியா, மற்றும் ஆமோத்குமார் ஆகியோர் பலியானார்கள்.
    • வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் இன்று அதிகாலை கியாஸ் குடோனுக்கு வந்து ஆய்வு செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கத்தில் உள்ள கியாஸ்குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உடல் கருகினர். இதில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், அவரது மகள் சந்தியா, மற்றும் ஆமோத்குமார் ஆகியோர் பலியானார்கள். மேலும் 9 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று இரவு கியாஸ் ஏஜென்சி அலுவலர்கள் முன்னிலையில் குடோனில் இருந்த அனைத்து சிலிண்டர்களும் வெளியே கொண்டு செல்லப்பட்டது. இதில் ஏராளமான கியாஸ் சிலிண்டர்கள் தீயில் கருகி இருந்தன.

    இந்த நிலையில் வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் இன்று அதிகாலை கியாஸ் குடோனுக்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் குடோனுக்கு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த நிறுவனத்தின் கியாஸ் உரிமம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் தீயணைப்பு, வருவாய்த்துறை, தடயவியல் துறை உள்ளிட்ட 5 துறையைச் சேர்ந்த குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.

    • செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கியாஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் இன்று காலை இறந்தார்.
    • கியாஸ் குடோன் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது.

    காஞ்சிபுரம்:

    ஒரகடம் அடுத்த தேவேரியம் பாக்கத்தில் உள்ள தனியார் கியாஸ் குடோனில் நேற்று முன்தினம் மாலை பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த சிலிண்டர்கள் வெடித்து அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது.

    இந்த விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் (வயது 51), அவரது மகள்கள் சந்தியா (21), பூஜா, நிவேதா, பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஆமோத்குமார் (25), குணால், சக்திவேல், அருண், கோகுல், தமிழரசன் உள்பட 12 பேர் உடல் கருகினர்.

    அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஆமோத்குமார், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சந்தியா ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    இதற்கிடையே செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கியாஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் இன்று காலை இறந்தார்.

    இதனால் கியாஸ் குடோன் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது.

    மேலும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 4 பேரும் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். கியாஸ் குடோன் தீ விபத்து தொடர்பாக பலியான கியாஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், ஊராட்சி தலைவர் அஜய் உள்பட 5 பேர் மீது ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • குடிநீர் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய நீர்த்தேக்கங்கள் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
    • புதிய நீர்த்தேக்கம் 1,200 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.56 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் 5 ஏரிகள் மற்றும் வீராணம் ஏரியை சேர்த்து 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடி, அதாவது 13.22 டி.எம்.சி. நீர் சேமிக்க முடியும். சென்னை மாநகரின் மக்கள் தொகை 1 கோடியே 15 லட்சத்தை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. இவர்களுக்கு தினசரி 992 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் முழுமையான அளவு குடிநீரை ஏரிகளால் எல்லா ஆண்டுகளும் வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது.

    சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு குடிநீர் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாடுகளுக்காக 22 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. இது 2035-ம் ஆண்டுகளில் 32 டி.எம்.சி.யாக உயரும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. குடிநீர் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய நீர்த்தேக்கங்கள் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

    சென்னையின் பெருகி வரும் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள ஒரத்தூரில் புதிய நீர்த்தேக்கத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளில் இறங்கி உள்ளது. குறிப்பாக ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் குளங்கள் மேம்படுத்தப்பட்டு 500 மில்லியன் கனஅடி அதாவது அரை டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்படுகிறது.

    இந்த புதிய நீர்த்தேக்கம் 1,200 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.56 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதற்கு தேவையான நிலம் முழுமையாக கையகப்படுத்தும் பணி முடிந்ததும் பணிகள் தொடங்கும். வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியுடன் நிலத்தை கையகப்படுத்தும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து வந்தபோது, கொரோனா தொற்று பரவல் காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, நிலம் கையகப்படுத்தும் பணி மீண்டும் தொடங்கப்பட்டு 70 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    ஓரிரு வாரங்களில் நிலம் கையப்படுத்தும் பணி நிறைவடைந்துவிடும். அதன்பிறகு முழுமையான கட்டுமானம் நடத்தப்பட்டு அடுத்த ஆண்டுக்குள் புதிய நீர்த்தேக்கம் தயாராகிவிடும். புதிய நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு தண்ணீர் வழங்க 25 கிலோ மீட்டருக்கு குழாய் பதிக்க திட்டமிட்டுள்ளது.

    மேற்கண்ட தகவல்களை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×