என் மலர்
காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
- 40 ஏரிகள் 76 சதவீதமும், 122 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பி காணப்படுகிறது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஏரிகளை பொதுப்பணித்து றையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. இதில் 17 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. 40 ஏரிகள் 76 சதவீதமும், 122 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பி காணப்படுகிறது. மீதமுள்ள 329 ஏரிகள் 25 சதவீத கொள்ளளவை எட்டி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பருவ மழையையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் 21 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வருவாய்த்துறை, மின்சாரம், காவல்துறை, தீயணைப்பு துறை என 11 துறையை சேர்ந்தவர்கள் அடங்கிய 21குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அந்தந்த பகுதிகளிலேயே பருவ மழை வரை தங்கி பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.
- கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் ஷர்ட்டர்கள், மதகுகள், மின் மோட்டார்கள் அனைத்தும் பராமரிக்கும் பணி நடைபெற்று வந்தது.
- தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் புதிதாக வண்ணம் தீட்டி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
குன்றத்தூர்:
பருவ மழை தொடங்க உள்ள நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கும். அவ்வாறு ஏரியில் நீர் நிரம்பும் நிலையில் உபரி நீர் திறப்பது வழக்கம் இதனால் கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் ஷர்ட்டர்கள், மதகுகள், மின் மோட்டார்கள் அனைத்தும் பராமரிக்கும் பணி நடைபெற்று வந்தது.
இதையடுத்து கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளுக்கு புதிதாக வண்ணம் பூசி புதுப்பிக்கும் பனி நடந்து வந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மற்றும் 19 கண் மதகுகள், நீர் வெளியேற்றும் ஷர்ட்டர்கள், மின் மோட்டார்கள், ஏரி கரையின் சுவர்கள் போன்றவற்றில் வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
வண்ணம் பூசும் பணி முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் புதிதாக வண்ணம் தீட்டி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. மேலும் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிக்காக மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மதகுகளின் ஷர்ட்டர்கள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டால் நேரடியாக அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில் கால்வாய்களும் ஆங்காங்கே தூர் வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.29 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 675 மில்லியன் கன அடியாகவும், சென்னை குடி நீருக்காக தினமும் 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மழை பெய்தாலும் 23 அடி வரை செம்பரம்பாக்கம் ஏரியின் அளவை வைத்து கண்காணித்து அதன் பிறகு உபரி நீரை வெளியேற்றுவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் புதிய வண்ணங்கள் பூசி புதுப்பொலிவுடன் உபரி நீரை வெளியேற்றுவதற்கு தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கொள்ளை கும்பல் கடப்பாரையால் வங்கியின் பின்பக்க சுவரை துளையிட்டு உடைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
- கொள்ளை திட்டத்தை கைவிட்டு கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் இந்தியன் வங்கி உள்ளது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் வங்கி கணக்கு வைத்து உள்ளனர். நகையையும் அடமானம் வைத்து பணம் பெற்று வருகின்றனர்.
இந்த வங்கியில் கரும்பாக்கம், அண்ணா நகரை சேர்ந்த ஆபேல் (65) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் வங்கி திறக்கப்படவில்லை. ஆபேல் வழக்கம் போல் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் இருந்தார்.
நள்ளிரவு 2 மணியளவில் முகமூடி அணிந்து 4 பேர் கும்பல் திடீரென அங்கு வந்தனர். அவர்கள் காவலாளி ஆபேலை சரமாரியாக தாக்கினர். அவரை சத்தம் போடக்கூடாது என்று மிரட்டல் விடுத்து கைகளை கட்டினர். பின்னர் காவலாளி ஆபேலை அருகில் உள்ள கழிவறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து கொள்ளை கும்பல் கடப்பாரையால் வங்கியின் பின்பக்க சுவரை துளையிட்டு உடைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதனால் கொள்ளை திட்டத்தை கைவிட்டு கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இன்று அதிகாலை அவ்வழியே பொதுமக்கள் சென்றபோது காவலாளி ஆபேலின் முனகல் சத்தம் கேட்டு அங்கு சென்றனர்.
அப்போது தான் கொள்ளை கும்பல் ஆபேலை கழிவறையில் கட்டிப்போட்டு வங்கியில் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து சாலவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் தாக்கியதில் காவலாளி ஆபேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது.
அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வங்கியின் அருகே வீடுகள் இல்லாததால் கொள்ளையர்கள் காவலாளியை தாக்கிய போது யாருக்கும் தெரியவில்லை. கொள்ளையர்களின் திட்டம் பலிக்காததால் வங்கியில் இருந்த பல லட்சம் பணம், நகை தப்பியது.
கொள்ளையர்கள் சுவரில் துளைபோட முயன்ற போது ஆட்கள் நடமாட்டத்தை கண்டு தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து கொள்ளையில் ஈடுபட முயன்ற கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை முயற்சி நடந்த வங்கியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பார்வையிட்டார்.
மோப்பநாய் வங்கியில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் ஓடி நின்று விட்டது. எனவே அங்கிருந்து கொள்ளை கும்பல் வாகனத்தில் தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பத்மாவதி அணிந்து இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
- விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், கோபால் சாமி தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் பத்மாவதி. இவர் ராஜாஜி மார்க்கெட் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மர்ம வாலிபர் பத்மாவதியிடம் பேச்சு கொடுத்தார். திடீரென அவன் பத்மாவதி அணிந்து இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். மீன் வியாபாரி. இவர் நேற்று அதிகாலை "டிரை சைக்கிளில்" வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 3பேர் கும்பல் கத்தியால் வெட்டி பணம் பறிக்க முயன்றனர் ஆனால் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் திரண்டதால் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த சீனிவாசனுக்கு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மதுரவாயல் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தப்பி ஓடிய நெற்குன்றம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்கிற திருட்டு விக்கி (21) என்பவனை கைது செய்தனர்.
அவன் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளிகளான சாமுவேல், நிஷாந்த் ஆகிய இருவரையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- நரேஷ் உடலில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசபட்டு மயங்கி கிடந்தார்.
- நரேசை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சுங்குவார்சத்திரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் நரேஷ் (வயது 14). இவர் மொளச்சூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று சக நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு வீட்டில் பழுது பார்க்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அங்கு மின்சார கம்பி அறுந்து கீழே விழுந்து இருந்தது. நரேஷ் அதை கவனிக்காமல் மிதித்ததாக கூறப்படுகிறது.
இதில் நரேஷ் உடலில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசபட்டு மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நரேசை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் நரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்து வரும் உரிமையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பரிசுகளை வழங்கி, மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்கள்.
- ஊராட்சி மன்ற தலைவர்கள் இலுபப்பட்டு சுகுணா தேவேந்திரன், சிங்காடிவாக்கம் சுரேஷ், அத்திவாக்கம் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாம் வாலாஜாபாத் ஒன்றியம் இலுப்பப்பட்டு கிராம ஊராட்சியில் நடைபெற்றது.
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே. தேவேந்திரன் தலைமையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. க.செல்வம் முன்னிலையில் நடைபெற்ற கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாமில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.
சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்து வரும் உரிமையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பரிசுகளை வழங்கி, மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்கள். இதில் காஞ்சிபுரம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ஜெயந்தி மேற்பார்வையில் நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜலட்சுமி குஜராஜ், ஒன்றிய குழு துணை தலைவர் பி.சேகர், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பிஎம்.பாபு, ஒன்றிய கவுன்சிலர்கள் உலகநாதன், லோகு தாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் இலுபப்பட்டு சுகுணா தேவேந்திரன், சிங்காடிவாக்கம் சுரேஷ், அத்திவாக்கம் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அதிவேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் முருகன் மீது மோதியது.
- உயிரிழந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த கிளார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 64). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு குமரகோட்டம் முருகன் கோவில் அருகே மேற்கு ராஜ வீதியில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அதிவேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் முருகன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார். உயிரிழந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி லாரி டிரைவரான அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆனந்த் (27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.
- வருகிற 1-ந்தேதி வரை உற்சவம் நடைபெறுகிறது.
- தினமும் காலையில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்து வருகிறது.
காஞ்சீபுரம் ஸ்ரீயதோக் தகாரி பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஸ்ரீ பொய்கை ஆழ்வார் அவதார உற்சவம் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. வருகிற 1-ந்தேதி வரை உற்சவம் நடைபெறுகிறது.
இந்த விழாவையொட்டி தினமும் காலையில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்து வருகிறது. மாலையில் சுவாமி மற்றும் பொய்கை ஆழ்வார் வீதி உலா நடை பெறுகிறது. அதேபோல் நேற்று மாலையிலும் சுவாமி மற்றும் பொய்கையாழ்வார் வீதி உலா நடைபெற்றது.
வருகிற 1-ந்தேதி பொய்கை ஆழ்வாருக்கு காலையில் மங்களா சாசனம், பல்லக்கு உற்சவம் ஆகியவை நடக்கிறது. மாலையில் திருமஞ்சனமும், இரவு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.
- பொதுமக்களிடம் பட்டா மாற்றம் செய்ய ரூ.5000 முதல் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.
- தாசில்தார் மோகனை ஓரகடம் சிப்காட் தனி வட்டாட்சியர் பணிக்கு மாற்றம் செய்து கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பட்டா பெறுதல், பட்டா பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு நகர நிலவரித்திட்ட தாசில்தாரிடம் பொதுமக்கள் விண்ணப்பித்து வருகிறார்கள்.
அவ்வாறு விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் பட்டா மாற்றம் செய்ய ரூ.5000 முதல் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. சொத்தின் மதிப்புக்கு ஏற்றவாறு லஞ்சம் அதிக அளவில் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த அலுவலகத்துக்கு சென்ற தினேஷ், டில்லிபாபு ஆகிய இருவரிடம் அலுவலகத்தில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்கும் `ஆடியோ, வீடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து தாசில்தார் மோகன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம், கோட்டாட்சியர் கனிமொழி விசாரணை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக தாசில்தார் மோகனை ஓரகடம் சிப்காட் தனி வட்டாட்சியர் பணிக்கு மாற்றம் செய்து கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
அவரது பணியிடத்தில் இந்துமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 9 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
- திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்லும் செய்யாற்றில் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- அனுமன் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள பழமையான தடுப்பணையில் நீர் வழிந்து ஓடுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகும். பாலாறு, செய்யாறு, வேதவதி ஆறுகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்கிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்லும் செய்யாற்றில் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன் காரணமாக அனுமன் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள பழமையான தடுப்பணையில் நீர் வழிந்து ஓடுகிறது. இதே போன்று வேங்கசேரி தடுப்பணையும் முழு கொள்ளளவை எட்டி 2 ஷட்டர்கள் வழியாக திறக்கப்பட்டு ஆர்ப்பரித்து நீர் செல்கிறது.
பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த இரு தடுப்பணைகளும் நிரம்பி அதிக நீர் செல்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும்.
- கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும். இந்த கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சார்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கிராம சபையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆறுமுகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சீபுரம் குமரக்கோட்டத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆறுமுகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து,பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய், கிராம்பு மாலை, மற்றும் சாமந்திப்பூ, மல்லிகைப்பூ, மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சிறப்பு லட்சார்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து முருகப்பெருமான் மான் வாகனத்தில் எழுந்தருளி ராஜவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






