என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது.
    • மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் ரூ.54 லட்சத்து 37 ஆயிரத்து 13 ரொக்கமாகவும், 374 கிராம் தங்கம், 753 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக வரப்பெற்றது.

    மாங்காடு:

    இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடந்த 2022-2023-ம் ஆண்டு சட்டமன்ற மானிய கோரிக்கையில், "இதர மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்பட தமிழக கோவில்களில் இருந்து இதர மாநில கோவில்களுக்கு வஸ்திர மரியாதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் ஏற்கனவே சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது. தற்போது, காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் வைகுண்ட பெருமாள் எம்பார் சாமி கோவிலில் இருந்து பரிவட்ட மரியாதை, மாலை ஆகியவை கர்நாடக மாநிலம் மேல்கோட்டை, செல்வ நாராயண பெருமாள் கோவிலுக்கு வழங்கி வஸ்திர மரியாதை செய்யப்பட்டது. இதேபோல் மாங்காடு, காமாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டது.

    கோவில் பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் மணலி ஆர்.சீனிவாசன், துணை ஆணையர்-செயல் அலுவலர் பெ.க.கவெனிதா மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆணையர் ஆ.முத்துரத்தினவேலு மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.54 லட்சத்து 37 ஆயிரத்து 13 ரொக்கமாகவும், 374 கிராம் தங்கம், 753 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வரப்பெற்றது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஈசூர் வள்ளிபுரம், மற்றும் வயலூர் தடுப்பணை நிரம்பி உள்ளது.
    • காஞ்சிபுரம்- செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து உள்ளது. இதனால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    காஞ்சிபுரம்- செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பெருநகர் அருகே செய்யாற்றில் அமைந்துள்ள அனுமன் தண்டலம் தடுப்பணை, வெங்கச்சேரி ஆகிய 2 தடுப்பணைகளும் நிரம்பி உள்ளது.

    இதேபோல் வேகவதி ஆறு, செய்யாறு, பாலாறு என மூன்றும் சங்கமிக்கும் பழையசீவரம் பகுதியில் அமைந்துள்ள உள்ளவூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஈசூர் வள்ளிபுரம், மற்றும் வயலூர் தடுப்பணை நிரம்பி உள்ளது. இந்த 5 தடுப்பணைகளும் நிரம்பியதன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    தடுப்பணைகளை கண்காணிக்க காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை ஆகியோர் அடங்கிய 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் நீர் வரத்தை கண்காணித்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்- செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. தொடர்மழை காரணமாக 39 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    40 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 149 ஏரிகள் 50சதவீதத்துக்கு மேலும் நிரம்பி உள்ளன. 338 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும், 343 ஏரிகள் 25 சதவீதத்துக்கு கீழ் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • உபரி நீர் திறந்துவிடுவதை ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி பார்வையிட்டார்
    • புழல் ஏரியில் இருந்து பாதுகாப்பு கருதி 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் உபரி நீர் திறக்கப்பட்டது. உபரி நீர் திறந்துவிடுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். முதல்கட்டமாக ஏரியில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தொடர் மழை காரணமாக, புழல் ஏரியில் இருந்தும், பாதுகாப்பு கருதி 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    • தொடர் மழையின் காரணமாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பாலாறு அணைக்கட்டு நிரம்பி உள்ளது.
    • ஏரியின் மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீரில் சிறுவர்கள் உற்சாக குளியல் போட்டு செல்கிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    தொடர் மழையின் காரணமாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பாலாறு அணைக்கட்டு நிரம்பி உள்ளது. அங்கிருந்து வரும் உபரி நீரால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான தாமல் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து. இதனால் தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதையடுத்து ஏரியின் 3 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தாமல் ஏரியின் முழு கொள்ளளவான 18 அடி முழுவதுமாக நிரம்பி மதகுகள் வழியாக நீர் வெளியேறி வருவதால் சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். ஏரியின் மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீரில் சிறுவர்கள் உற்சாக குளியல் போட்டு செல்கிறார்கள்.

    • காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
    • 143 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 326 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும், 373 ஏரிகள் 25 சதவீதத்துக்கு கீழும் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பலத்த மழை கெட்டி வருகிறது. காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்குகிறது.

    இதனால் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏரிகளுக்கு நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 31 ஏரிகள் முழு கொள்ளவை எட்டி உள்ளது.

    37 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி உள்ளன. 143 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 326 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும், 373 ஏரிகள் 25 சதவீதத்துக்கு கீழும் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பாலங்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டப்படி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
    • நீளமான இந்த இணைப்பு பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின் சென்னை விமான நிலையத்தில் விமானங்களில் ஏறி, இறங்கும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் பன்னாட்டு நவீன முனையத்தில் விமானங்களில் பயணிகள் ஏறி செல்லவும், இறங்குவதற்காகவும் 'பேசன்ஞ்சா் போா்டிங் பிரிட்ஜ்' என்ற 15 நிரந்தர இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பேசஞ்சா் போா்டிங் பிரிட்ஜ் விமான நிலையத்தின் நுழைவு பகுதியிலிருந்து நேரடியாக விமானத்தின் வாசலுக்கு செல்லும் விதமாக அமைக்கப்படுகின்றன. இந்த 15 பாலங்களில் 7 பாலங்கள் 47 மீட்டா்கள் நீளமுடையவையாகவும், 7 பாலங்கள் 32 மீட்டரில் இருந்து 40 மீட்டா்கள் கொண்டதாகவும், மற்றொரு பாலம் 32 மீட்டா் நீளம் உடையதாகவும் அமைய உள்ளது. முதல் கட்டத்தில் 47 மீட்டா் நீளமுடைய 7 பாலங்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன.

    மேலும், இந்த நவீன இணைப்பு பாலத்தில் நகரும் பாலங்கள் இரண்டு அமைகின்றன. அதில் அதிக நீளமுடைய 47 மீட்டா் கொண்ட 7 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அந்த 7 பாலங்களும் வரும் டிசம்பர் மாதம் பயணிகளின் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

    மற்ற 8 பாலங்கள் அடுத்த 2-வது கட்டத்தில் கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. இந்த பாலங்கள் 'மேக் இன் இந்தியா' திட்டப்படி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதை போன்ற நவீன பாலங்கள் இந்தியாவில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்படுகின்றன. நீளமான இந்த இணைப்பு பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின் சென்னை விமான நிலையத்தில் விமானங்களில் ஏறி, இறங்கும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
    • 40 ஏரிகள் 76 சதவீதமும், 122 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பி காணப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஏரிகளை பொதுப்பணித்து றையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. இதில் 17 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. 40 ஏரிகள் 76 சதவீதமும், 122 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பி காணப்படுகிறது. மீதமுள்ள 329 ஏரிகள் 25 சதவீத கொள்ளளவை எட்டி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பருவ மழையையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் 21 மண்டலங்களாக‌ பிரிக்கப்பட்டு வருவாய்த்துறை, மின்சாரம், காவல்துறை, தீயணைப்பு துறை என 11 துறையை சேர்ந்தவர்கள் அடங்கிய 21குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அந்தந்த பகுதிகளிலேயே பருவ மழை வரை தங்கி பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.

    • கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் ஷர்ட்டர்கள், மதகுகள், மின் மோட்டார்கள் அனைத்தும் பராமரிக்கும் பணி நடைபெற்று வந்தது.
    • தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் புதிதாக வண்ணம் தீட்டி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

    குன்றத்தூர்:

    பருவ மழை தொடங்க உள்ள நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கும். அவ்வாறு ஏரியில் நீர் நிரம்பும் நிலையில் உபரி நீர் திறப்பது வழக்கம் இதனால் கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் ஷர்ட்டர்கள், மதகுகள், மின் மோட்டார்கள் அனைத்தும் பராமரிக்கும் பணி நடைபெற்று வந்தது.

    இதையடுத்து கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளுக்கு புதிதாக வண்ணம் பூசி புதுப்பிக்கும் பனி நடந்து வந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மற்றும் 19 கண் மதகுகள், நீர் வெளியேற்றும் ஷர்ட்டர்கள், மின் மோட்டார்கள், ஏரி கரையின் சுவர்கள் போன்றவற்றில் வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

    வண்ணம் பூசும் பணி முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் புதிதாக வண்ணம் தீட்டி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. மேலும் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிக்காக மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மதகுகளின் ஷர்ட்டர்கள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டால் நேரடியாக அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில் கால்வாய்களும் ஆங்காங்கே தூர் வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.29 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 675 மில்லியன் கன அடியாகவும், சென்னை குடி நீருக்காக தினமும் 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து மழை பெய்தாலும் 23 அடி வரை செம்பரம்பாக்கம் ஏரியின் அளவை வைத்து கண்காணித்து அதன் பிறகு உபரி நீரை வெளியேற்றுவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் புதிய வண்ணங்கள் பூசி புதுப்பொலிவுடன் உபரி நீரை வெளியேற்றுவதற்கு தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கொள்ளை கும்பல் கடப்பாரையால் வங்கியின் பின்பக்க சுவரை துளையிட்டு உடைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
    • கொள்ளை திட்டத்தை கைவிட்டு கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் இந்தியன் வங்கி உள்ளது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் வங்கி கணக்கு வைத்து உள்ளனர். நகையையும் அடமானம் வைத்து பணம் பெற்று வருகின்றனர்.

    இந்த வங்கியில் கரும்பாக்கம், அண்ணா நகரை சேர்ந்த ஆபேல் (65) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் வங்கி திறக்கப்படவில்லை. ஆபேல் வழக்கம் போல் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் இருந்தார்.

    நள்ளிரவு 2 மணியளவில் முகமூடி அணிந்து 4 பேர் கும்பல் திடீரென அங்கு வந்தனர். அவர்கள் காவலாளி ஆபேலை சரமாரியாக தாக்கினர். அவரை சத்தம் போடக்கூடாது என்று மிரட்டல் விடுத்து கைகளை கட்டினர். பின்னர் காவலாளி ஆபேலை அருகில் உள்ள கழிவறையில் அடைத்தனர்.

    இதைத்தொடர்ந்து கொள்ளை கும்பல் கடப்பாரையால் வங்கியின் பின்பக்க சுவரை துளையிட்டு உடைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

    இதனால் கொள்ளை திட்டத்தை கைவிட்டு கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இன்று அதிகாலை அவ்வழியே பொதுமக்கள் சென்றபோது காவலாளி ஆபேலின் முனகல் சத்தம் கேட்டு அங்கு சென்றனர்.

    அப்போது தான் கொள்ளை கும்பல் ஆபேலை கழிவறையில் கட்டிப்போட்டு வங்கியில் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சாலவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் தாக்கியதில் காவலாளி ஆபேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது.

    அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வங்கியின் அருகே வீடுகள் இல்லாததால் கொள்ளையர்கள் காவலாளியை தாக்கிய போது யாருக்கும் தெரியவில்லை. கொள்ளையர்களின் திட்டம் பலிக்காததால் வங்கியில் இருந்த பல லட்சம் பணம், நகை தப்பியது.

    கொள்ளையர்கள் சுவரில் துளைபோட முயன்ற போது ஆட்கள் நடமாட்டத்தை கண்டு தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து கொள்ளையில் ஈடுபட முயன்ற கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை முயற்சி நடந்த வங்கியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பார்வையிட்டார்.

    மோப்பநாய் வங்கியில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் ஓடி நின்று விட்டது. எனவே அங்கிருந்து கொள்ளை கும்பல் வாகனத்தில் தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பத்மாவதி அணிந்து இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
    • விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், கோபால் சாமி தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் பத்மாவதி. இவர் ராஜாஜி மார்க்கெட் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மர்ம வாலிபர் பத்மாவதியிடம் பேச்சு கொடுத்தார். திடீரென அவன் பத்மாவதி அணிந்து இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

    இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். மீன் வியாபாரி. இவர் நேற்று அதிகாலை "டிரை சைக்கிளில்" வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 3பேர் கும்பல் கத்தியால் வெட்டி பணம் பறிக்க முயன்றனர் ஆனால் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் திரண்டதால் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த சீனிவாசனுக்கு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மதுரவாயல் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தப்பி ஓடிய நெற்குன்றம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்கிற திருட்டு விக்கி (21) என்பவனை கைது செய்தனர்.

    அவன் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளிகளான சாமுவேல், நிஷாந்த் ஆகிய இருவரையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • நரேஷ் உடலில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசபட்டு மயங்கி கிடந்தார்.
    • நரேசை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சுங்குவார்சத்திரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் நரேஷ் (வயது 14). இவர் மொளச்சூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று சக நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு வீட்டில் பழுது பார்க்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அங்கு மின்சார கம்பி அறுந்து கீழே விழுந்து இருந்தது. நரேஷ் அதை கவனிக்காமல் மிதித்ததாக கூறப்படுகிறது.

    இதில் நரேஷ் உடலில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசபட்டு மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நரேசை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் நரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்து வரும் உரிமையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பரிசுகளை வழங்கி, மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்கள்.
    • ஊராட்சி மன்ற தலைவர்கள் இலுபப்பட்டு சுகுணா தேவேந்திரன், சிங்காடிவாக்கம் சுரேஷ், அத்திவாக்கம் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாம் வாலாஜாபாத் ஒன்றியம் இலுப்பப்பட்டு கிராம ஊராட்சியில் நடைபெற்றது.

    வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே. தேவேந்திரன் தலைமையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. க.செல்வம் முன்னிலையில் நடைபெற்ற கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாமில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

    சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்து வரும் உரிமையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பரிசுகளை வழங்கி, மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்கள். இதில் காஞ்சிபுரம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ஜெயந்தி மேற்பார்வையில் நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜலட்சுமி குஜராஜ், ஒன்றிய குழு துணை தலைவர் பி.சேகர், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பிஎம்.பாபு, ஒன்றிய கவுன்சிலர்கள் உலகநாதன், லோகு தாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் இலுபப்பட்டு சுகுணா தேவேந்திரன், சிங்காடிவாக்கம் சுரேஷ், அத்திவாக்கம் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×