என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 தடுப்பணைகள் நிரம்பியது
- செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஈசூர் வள்ளிபுரம், மற்றும் வயலூர் தடுப்பணை நிரம்பி உள்ளது.
- காஞ்சிபுரம்- செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து உள்ளது. இதனால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
காஞ்சிபுரம்- செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பெருநகர் அருகே செய்யாற்றில் அமைந்துள்ள அனுமன் தண்டலம் தடுப்பணை, வெங்கச்சேரி ஆகிய 2 தடுப்பணைகளும் நிரம்பி உள்ளது.
இதேபோல் வேகவதி ஆறு, செய்யாறு, பாலாறு என மூன்றும் சங்கமிக்கும் பழையசீவரம் பகுதியில் அமைந்துள்ள உள்ளவூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஈசூர் வள்ளிபுரம், மற்றும் வயலூர் தடுப்பணை நிரம்பி உள்ளது. இந்த 5 தடுப்பணைகளும் நிரம்பியதன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தடுப்பணைகளை கண்காணிக்க காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை ஆகியோர் அடங்கிய 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் நீர் வரத்தை கண்காணித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம்- செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. தொடர்மழை காரணமாக 39 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
40 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 149 ஏரிகள் 50சதவீதத்துக்கு மேலும் நிரம்பி உள்ளன. 338 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும், 343 ஏரிகள் 25 சதவீதத்துக்கு கீழ் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.






