என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • சென்னையில் இருந்து, இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
    • விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    ஆலந்தூர்:

    பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார்(32). இவர் மீது பஞ்சாப் மாநிலம் லூதியானா போலீசில், பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ வழக்கு கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

    ஆனால் அவர் போலீசிடம் சிக்காமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லவும் முயன்று வந்தார்.

    இதையடுத்து தினேஷ் குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். இதுபற்றி அனைத்து சர்வதேச விமானநிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து, இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பாலியல் குற்றவழக்கில் தலைமறைவாக இருந்த தினேஷ் குமார் இலங்கைக்கு செல்வதற்காக விமானத்தில் பயணிக்க வந்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் தினேஷ்குமாரின் பயணத்தை ரத்து செய்து கைது செய்தனர். இதுபற்றி பஞ்சாப் மாநில போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.

    • வங்கி கணக்கை செல்போனில் சரவணன் சரி பார்த்த போதுதான், தான் ரூ.50 ஆயிரத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்துவிட்டு வந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
    • நேர்மையாக நடந்து கொண்ட உணவு டெலிவரி நிறுவன ஊழியர்களை வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

    ஆலந்தூர்:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் சரவணன் (வயது 24). இவர், கடந்த 8-ந் தேதி மாலை வேளச்சேரி தண்டீஸ்வரத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் தனது வங்கி கணக்கில் பணம் செலுத்த சென்றார்.

    அப்போது செல்போன் அழைப்பு வந்ததால் தன்னிடம் இருந்த ரூ.50 ஆயிரத்தை ஏ.டி.எம். எந்திரத்தின் மீது வைத்து விட்டு செல்போனில் பேசியபடியே ஞாபகம் இல்லாமல் வீட்டுக்கு சென்று விட்டார்.

    சிறிது நேரத்தில் அதே ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வந்த உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவன ஊழியர்கள் கார்த்திகேயன், மாசிலாமணி ஆகியோர் ஏ.டி.எம்., எந்திரத்தில் சரவணன் விட்டுச்சென்ற ரூ.50 ஆயிரத்தை எடுத்து நேர்மையுடன் வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சந்திர மோகனிடம் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையில் வங்கி கணக்கை செல்போனில் சரவணன் சரி பார்த்த போதுதான், தான் ரூ.50 ஆயிரத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்துவிட்டு வந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஏ.டி.எம். மையத்துக்கு சென்று அங்கிருந்த காவலாளியிடம் விசாரித்தார். அப்போது வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் பணம் உள்ளது தெரிய வந்தது. பின்னர் போலீஸ் நிலையம் சென்று பணத்தை பெற்றுக் கொண்டார்.

    நேர்மையாக நடந்து கொண்ட உணவு டெலிவரி நிறுவன ஊழியர்கள் கார்த்திக்கேயன், மாசிலாமணி ஆகியோரை வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

    • மர்ம நபர் குணசுந்தரி அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் தாலிகொத்து போன்றவற்றை பறித்துகொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் மூதாட்டியிடம் 7 பவுன் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டது. அப்போது அவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

    காஞ்சிபுரம் வேளிங்கப்பட்டரை அருகே உள்ள சிங்கபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி குணசுந்தரி (வயது 60). இவர் மற்றொரு மூதாட்டியுடன் தனது உறவினரின் குழந்தை பிறந்த நாள் விழாவுக்காக கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் அவர்களை நோட்டமிட்டபடி பின் தொடர்ந்து வந்தார்.

    இந்த நிலையில் ஆள்நடமாட்டம் குறைந்த பகுதியில் இவர்கள் சென்றதை சாதகமாக்கி கொண்ட அந்த மர்ம நபர் குணசுந்தரி அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் தாலிகொத்து போன்றவற்றை பறித்துகொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டார்.

    அந்த மர்ம நபர் நகை பறிப்பில் ஈடுபட்டபோது தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து அந்த நபரை தேடி வருகின்றனர்.

    • முன்பெல்லாம் போட்டித் தேர்வர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை.
    • உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் பலரும் கஷ்டப்படாமல் முன்னுக்கு வந்து விடவில்லை.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 முதல்நிலைத் தேர்வில் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக பயின்று 69 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

    இவர்களுக்கு முதன்மைத் தேர்விற்கான பயிற்சிக்கையேடு வழங்கும் விழா நடந்தது. வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநர் ஆர்.அருணகிரி தலைமை தாங்கினார். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் நிர்மலாதேவி, பயிற்சியாளர்கள் ஏ.பொன்வேல், எம்.புவனேசுவரி, என்.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக உதவியாளர் எம்.அசோக் வரவேற்று பேசினார். விழாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளரும், சப்-கலெக்டருமான புண்ணியகோட்டி பயிற்சிக்கையேடுகளை வழங்கி பேசியதாவது:-

    முன்பெல்லாம் போட்டித் தேர்வர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை. ஆனால் இப்போது வேலைவாய்ப்பு அலுவலகமே அனைத்தையும் இலவசமாக கற்றுத் தந்து பலருக்கும் அரசு வேலை பெற்றுத்தருவது பாராட்டுக் குரியது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்விலும் வெற்றி பெறுவதோடு நின்று விடாமல் தொடர்ந்து ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு தேர்வு எழுதி வெற்றி பெறுங்கள்.விடாமுயற்சியே பலரின் வாழ்க்கையில் வெற்றியின் ரகசியமாக இருந்திருக்கிறது. உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் பலரும் கஷ்டப்படாமல் முன்னுக்கு வந்து விடவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரெயில், பஸ்களில் முன்பதிவு முடிந்து விட்டதால் பலர் கார்களில் செல்கின்றனர்.
    • விமானங்களில் சாதாரண நாட்களில் உள்ள கட்டணத்தை விட பல மடங்கு உயர்ந்து இருந்தது.

    மீனம்பாக்கம் :

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். ரெயில், பஸ்களில் முன்பதிவு முடிந்து விட்டதால் பலர் கார்களில் செல்கின்றனர்.

    இதனால் அதிக நேரம், போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் தற்போது விரைவாக சொந்த ஊருக்கு செல்ல பலர் விமான பயணத்தை நாடுகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளது. ஆனாலும் கட்டண உயர்வு பற்றி கவலைப்படாமல் சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாட பலர் விமானங்களில் பயணம் செய்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலையில் இருந்தே பலர் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல தொடங்கிவிட்டனர். இதனால் அதிக கட்டணம் கொடுக்க முன் வந்தாலும் விமானங்களில் டிக்கெட்டுகள் நிரம்பி விட்டதால் சீட் இ்ல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊர் செல்ல பயணிகள் பெரும் ஏமாற்றமும், கவலையும் அடைந்தனர்.

    சென்னையில் இருந்து மதுரைக்கு தினமும் 6 விமானங்களும், தூத்துக்குடிக்கு 3 விமானங்களும், திருச்சிக்கு 4 விமானங்களும், கோவைக்கு 6 விமானங்களும் இயக்கப்படுகிறது. இந்த விமானங்கள் சிலவற்றில் நேற்று டிக்கெட்டுகள் முழுவதும் நிரம்பி விட்டன. சில விமானங்களில் ஒரு சில டிக்கெட்டுகள் மட்டும் இருந்தன. இந்த விமானங்களில் சாதாரண நாட்களில் உள்ள கட்டணத்தை விட பல மடங்கு உயர்ந்து இருந்தது.

    பயணிகள் கூட்டத்தை சமாளிப்பதற்காக சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மதுரைக்கு 3 விமானங்களும், தூத்துக்குடிக்கு 2 விமானங்களும், திருச்சிக்கு 2 விமானங்களும் இயக்கப்படுகிறது.

    இந்த விமானங்களிலும் இன்று(சனிக்கிழமை) பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் நிரம்பி விட்டன. ஒரு சில விமானங்களில் மட்டும் சில இருக்கைகள் உள்ளன. இந்த விமானங்களில் சென்னையில் இருந்து செல்லும் வழக்கமான கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சென்னை விமான நிலையத்தில் பண்டிகை காலங்களில் விமான டிக்கெட்டுகளை கடைசி நேரத்தில் எடுக்க முயற்சிப்பதால் கட்டணங்கள் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் விமான நிறுவனங்கள் கூடுதலாக விமானங்களை இயக்குவதால் விமானத்தில் சீட் இல்லை என்ற நிலை ஏற்படாது.

    கடந்த தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலங்களில் மதுரை, தூத்துக்குடி, கோவை, திருவனந்தபுரம், கொச்சி, மும்பை உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் கூடுதல் விமான சேவைகளை இயக்கினார்கள்.

    ஆனால் இந்த முறை விமான நிறுவனங்கள் கூடுதல் விமான சேவைகளை இயக்கவில்லை. அதற்கு பதிலாக, பெங்களூரு வழியாக சுற்று வழித்தடத்தில் இயக்குகின்றனர். இதனால் பயண நேரம் அதிகமாவதுடன், டிக்கெட் கட்டணமும் பல மடங்கு அதிகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

    • சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமாக இருந்த 2 பைகளையும் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர்.
    • டப்பாக்களில் வன உயிரினங்கள் இருந்தது தெரியவந்தது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு தாய்லாந்தில் இருந்து பயணிகள் விமானம் வந்தது.

    அதில் வந்த பயணிகள் தங்களது பைகளை குறிப்பிட்ட இடத்தில் இருந்து எடுத்து சென்றனர். ஆனால் அந்த இடத்தில் இருந்த 2 பெரிய பைகளை மட்டும் நீண்ட நேரம் யாரும் எடுக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமாக இருந்த 2 பைகளையும் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர். அதில் இருந்த டப்பாக்களில் வன உயிரினங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து பையை பிரித்து பார்த்த போது அதில் அரியவகை 3 சிறிய குரங்குகள், 45 சிறிய மலைப் பாம்புகள், 2 நட்சத்திர ஆமைகள், 8 மண்ணுளிப் பாம்புகள், வெள்ளை முள்ளம்பன்றி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அனைத்து வனஉயிரினங்களும் நல்ல ஆரோக்கியமாக இருந்தது. இதையடுத்து விலங்குகள் அனைத்தையும் அதிகாரிகள் மீட்டு சென்னையில் உள்ள விலங்கு தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அந்த உயிரினங்கள் அனைத்தும் தாய்லாந்து நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

    தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த போது அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து மர்ம கும்பல் பையில் இருந்த விலங்குகளை விமான நிலை யத்திலேயே விட்டு சென்று இருப்பது தெரியவந்தது.

    • காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பவம் நடந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி 10 பேரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பல்லவன் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஏனாத்தூர் பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவர் வசிப்பதும் ஒரே பகுதி என்பதால் அவர்கள் நெருங்கி பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் காதலர்கள் இருவரும் நேற்று இரவு செவிலிமேடு அருகே உள்ள குண்டு குளம் வயல்வெளி பகுதியில் தனியாக நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் திடீரென காதல் ஜோடியிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனை கண்டித்த காதலனை அவர்கள் தாக்கினர். மேலும் கல்லூரி மாணவியை கத்தியை காட்டி மிரட்டி காதலன் கண்முன்பே 4 வாலிபர்களும் கூட்டு பலாத்காரம் செய்தனர்.

    பின்னர் அந்த கும்பல் இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று காதல் ஜோடியை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியும், மாணவனும் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரித்தனர்.

    அப்போதுதான் 4 பேர் கும்பலால் மாணவி சீரழிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து மாணவியை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி 10 பேரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழக கவர்னர் சட்டமன்றத்தில் எப்படி செயல்பட்டார் என்பதை பற்றி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து சொல்லிவிட்டு வந்துள்ளோம்.
    • நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசியதின் தொடர்ச்சியாக, கவர்னர் ரவி டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறோம்.

    ஆலந்தூர்:

    தமிழக சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையின் போது நடந்த நிகழ்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் கொண்ட குழுவினர் அளித்தனர். பின்னர் அவர்கள் சென்னை திரும்பினர்.

    சென்னை விமான நிலையத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக கவர்னர் சட்டமன்றத்தில் எப்படி செயல்பட்டார் என்பதை பற்றி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து சொல்லிவிட்டு வந்துள்ளோம்.

    கவர்னர் ரவி டெல்லி செல்ல இருப்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசியதின் தொடர்ச்சியாக, கவர்னர் ரவி டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறோம்.

    ஜனாதிபதியிடம் நாங்கள் என்ன பேசினோம் என்பதை முழுமையாக தெரிவிக்க முடியாது. நாங்கள் என்ன பேசினோம் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பொது இடத்தில் பகிரங்கமாக கூற முடியாது.

    சமூகநீதி குறித்து நாங்கள் 100 ஆண்டு காலமாக செய்து வருகிறோம். சமூகநீதி பற்றி பேசும்போது, அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.

    சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், உச்சநீதி மன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற்றால் சேது சமுத்திர திட்டம் வந்துவிடும். எனவே முதலில் அவர்கள் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு வந்து, அது பற்றி பேசட்டும். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் பா.ஜ.க.வுக்கு உண்மையில் இருக்குமேயானால், முதலில் அவர்கள் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும்.

    திராவிடமாடல் என்பது இலக்கியம், இதிகாசம் ஆகியவற்றில் இருக்கிறது. இதுபற்றி எல்லாம் புரியாதவர்கள் ஏதாவது பேசுவார்கள், உளறுவார்கள். அவர்களுடைய உளறல்களுக்கெல்லாம் நான் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காஞ்சிபுரம் பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் கொள்ளையர்களும் தங்களது கைவரிசை பாணியை மாற்றி போலீசாருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர்.

    கூட்ட நெரிசலின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனையே கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நகை, செல்போன் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரத்தில் கூட்டம் அதிகமாக காணப்படும் சூப்பர் மார்க்கெட் கடையில் கொள்ளையர்கள் நூதன முறையில் செல்போன் திருடும் காட்சி பதிவாகி உள்ளது.

    காஞ்சிபுரம் நகரில் செயல்படும் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களுக்கான பணம் செலுத்த சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் வரிசையில் நின்றார்.

    அப்போது அருகில் வரும் மர்மவாலிபர் ஒருவர் ரமேசின் அருகில் வந்து நிற்கிறார். பின்னர் காலியான சிறிய பிளாஸ்டிக் பையை கையை மறைக்கும் வகையில் வைத்து நூதன முறையில் ரமேசின் சட்டைபையில் இருந்து செல்போன் மற்றும் ரூ.2500 ரொக்கம் ஆகியவற்றை திருடி தப்பி சென்றுவிட்டார்.

    இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. அந்த கொள்ளையனுக்கு கூட்டாளியாக வேறு ஒருவரும் வந்து உள்ளார். அவர் கடையில் நிற்கும் வாடிக்கையாளர்களில் யாரிடம் திருடுவது என்பதை நோட்டமிட்டு தெரிவிக்கிறார்.

    இந்த வீடியோகாட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கண்காணிப்பு கேமிரா காட்சியை ஆய்வு செய்து கொள்ளையர்கள்குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவியை திட்டிய ஆசிரியையிடமும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
    • ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர் ரஜினி. அரசு பஸ்சில் டிரைவராக உள்ளார். இவரது மனைவி லதா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2-வது மகள் கனிஷ்கா (வயது 16). காஞ்சிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து உள்ளார். அவர் வரலாறு பாடப்பிரிவு எடுத்து இருந்தார்.

    மாணவி கனிஷ்காவுக்கு ஆங்கிலப்பாடம் படிப்பதில் சிரமம் இருந்தது. தன்னால் ஆங்கிலம் சரியாக படிக்க முடியவில்லையே என்று தொடர்ந்து மன வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.

    இது பற்றி அவர் அடிக்கடி தனது தோழிகளிடம் தெரிவித்து வருத்தம் அடைந்தார்.

    இந்த நிலையில் வகுப்பில் இருந்தபோது ஆங்கில பாடத்தை சரிவர படிக்கவில்லை என்று ஆசிரியை ஒருவர் மாணவி கனிஷ்காவை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அவளிடம் பெற்றோரையும் பள்ளிக்கு அழைத்து வரும்படி தெரிவித்தார்.

    மற்ற மாணவிகளின் முன்பு ஆசிரியை கடுமையாக நடந்ததால் மாணவி கனிஷ்கா மிகவும் மனவேதனை அடைந்தார்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் கனிஷ்கா வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. ஏற்கனவே மனமுடைந்து இருந்த கனிஷ்கா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிறிது நேரம் கழித்து தாய் லதா வீட்டுக்கு வந்தபோது மகள் கனிஷ்கா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அலறி துடித்தார்.

    இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது மாணவி கனிஷ்கா தனது டைரியில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றினர். அதில் அவர் எழுதி இருப்பதாவது:-

    பள்ளியில் இன்று ஆசிரியை திட்டி விட்டார்கள். நான் எந்த தவறும் செய்யாமல் இருக்கும் போது எல்லாம் என்னை திட்டுகிறார்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கும் திட்டுகின்றனர்.

    நாளை தந்தையை அழைத்து வரும்படி ஆசிரியை கூறி உள்ளார். எப்பவும் நான் நியாயமாக இருந்தாலும் அநியாயம் தான் நடக்கிறது.

    கடவுளே இல்லை. எனக்கு ஒருமுறை கூட நல்லது நடக்கவில்லை. எப்பவும் பார்த்ததில்லை. தேர்வில் 'பிட்' அடித்தவர்கள் மட்டும் தான் நல்ல மதிப்பெண் எடுக்கிறார்கள். எப்பவும் படித்து எழுதும் எனக்கு மதிப்பெண்ணில் ஒருமுறை கூட 'குட்' போட்டதில்லை. நான் ஒருமுறை கூட குட் வாங்கியது இல்லை.

    லாரி வண்டியின் மீது சைக்கிளை விட முயன்றும் ஒரு முறை கூட என்னால் சாக முடியவில்லை. எனக்கு உயிருடன் இருக்க பிடிக்கவில்லை.

    அம்மா... என்னை நல்ல ஆங்கில பள்ளியில் சேர்த்து இருந்தால் எனக்கும் மற்றவர்கள் போல் ஆங்கிலம் வந்திருக்கும் அல்லவா....

    எல்லோர் முன்பும் இதுபோல் கேட்டு இருப்பார்களா? எனக்கு ஆங்கிலம் வராதா? எனக்கு சத்தியமா வாழ பிடிக்கவில்லை. சின்ன வயதில் இருந்து ஆங்கிலம் வந்து இருந்தால் இவ்வளவு கஷ்டப்படாமல் இருந்திருப்பேன்.

    வரவர என்னை எனக்கே பிடிக்கவில்லை அம்மா... என்னை ஏன் ஆங்கில பள்ளியில் சேர்க்கவில்லை. நான் சந்தோஷமாக இல்லை. அக்காள், தங்கை நன்றாக படிக்கிறார்கள். என்னால்தான் படிக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் உருக்கமாக எழுதி உள்ளார்.

    மாணவி கனிஷ்காவின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாணவியை திட்டிய ஆசிரியையிடமும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பயண கட்டணம் அதிகம் என்றாலும், குறைந்த நேர பயணம் என்பதால் விமான பயணத்தை தேர்வு செய்து வருகின்றனர்.
    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளது.

    ஆலந்தூர்:

    பொங்கல் பண்டிகை விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் சகஜ நிலை மீண்டும் திரும்பி விட்டதால் பொங்கல் விழாவை கொண்டாட மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட, வெளியூர் பயணிகள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னையில் இருந்து செல்ல இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆம்னி பஸ், ரெயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே நிரம்பி விட்டன.

    இதனால் தற்போது பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் சொந்த ஊருக்கு விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். பயண கட்டணம் அதிகம் என்றாலும், குறைந்த நேர பயணம் என்பதால் விமான பயணத்தை தேர்வு செய்து வருகின்றனர்.

    இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய ஊருக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை இன்று முதல் அதிகரித்து உள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடு செல்லும் பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடமைகளை சோதனை செய்து அனுப்ப வேண்டும். மத்திய தொழிற் படை பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள், குடியுரிமை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் என பல சோதனை முடிந்த பின்பு தான் உள்ளே செல்ல முடியும்.

    இன்று ஒரே நாளில் தங்கள் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலாவுக்கும் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சோதனைகளை முடித்து உள்ளே சென்றனர். இதனால் வெளிநாடு மற்றும் உள்நாட்டு நிலையத்தின் நுழைவாயில்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சென்றனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணமும் பல மடங்கு உயர்ந்து உள்ளது. சென்னை-மதுரைக்கு இன்று விமான கட்டணம் ரூ.12ஆயிரத்து 500, தூத்துக்குடி-ரூ.10 ஆயிரம், திருச்சி-ரூ.11ஆயிரத்து 500, கோவை-ரூ.11 ஆயிரத்து 500 ஆக உள்ளது. இதே போல் நாளை பயணம் செய்ய இதைவிட கூடுதலாக ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்திலேயே சிறந்த மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகிறார்கள்.
    • ஜல்லிக்கட்டை 10 ஆயிரம் பேர் பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆலந்தூர்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் இடையில் தடை ஏற்பட்ட நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையால் தற்போது தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    ஜல்லிக்கட்டு என்றாலே அனைவருக்கும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் தான் நினைவுக்கு வரும். இதுதவிர சில கிராமங்களிலும் நடத்தப்படுகிறது.

    ஆனால் தலைநகர் சென்னையில் நடத்தப்படவே இல்லை. ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற காரணமாக அமைந்ததே தலைநகர் சென்னையில் உள்ள மெரினாவில் நடந்த தன்னெழுச்சி போராட்டம்தான். எனவே சென்னையிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்து வந்தது.

    அதற்கு பதில் அளிக்கும் வகையில் வருகிற மார்ச் மாதம் 5-ந்தேதி சென்னை படப்பையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.

    இதுதொடர்பாக தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் முறையாக சென்னை அடுத்த படப்பை கரசங்கால் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதி மக்களின் நீண்ட கால ஏக்கம் தீரும் வகையில் நடத்த உள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் பெயரில் ஒரு காளை உள்பட சிறந்த 501 காளைகள் இடம் பெற உள்ளன.

    தமிழகத்திலேயே சிறந்த மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகிறார்கள். மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. போட்டியில் முதல் இடம் பெறும் காளையின் உரிமையாளருக்கு காரும், மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    ஜல்லிக்கட்டை 10 ஆயிரம் பேர் பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பே இதற்கான பணிகள் தொடங்கி விட்டது. இன்னும் 2 மாதங்கள் இருப்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க தலைவர் ராஜேஷ், ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், முன்னாள் கவுன்சிலர் பி.குணாளன் ஆகியோர் இருந்தனர்.

    ×