என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு வெளியே விட்டு சென்று பின்பு திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடப்பட்டிருந்தது.
    • காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.


    காஞ்சிபுரத்தில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் வெளியே விட்டு செல்லப்படும் இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு திருடி செல்லும் சம்பவம் அரங்கேறி வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 44-வது வார்டு வேதாச்சலம் நகர் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு வெளியே விட்டு சென்று பின்பு திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அங்கு இருக்கக்கூடிய சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்த போது 2 இளைஞர்கள் அப்பகுதியை நோட்டமிட்டு சென்று வந்துள்ளனர்.

    பின்னர் வீட்டுக்கு வெளியே விடப்பட்ட மோட்டார் சைக்கிள் வாகனத்தை திருடி செல்லும் சி.சி.டி.வி. காட்சி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. தொடரும் இருசக்கர வாகன திருட்டால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உடனுக்குடன் குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறையில் அடைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு.
    • கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்று மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவலர் அரங்கத்தில் நிறைவு செய்தனர்.

    இந்நிகழ்ச்சியை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    • கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு-செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.
    • பொது மக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு- செலவு கணக்குகளை வைக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் குடியரசு தினமான வருகிற 26-ந்தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும். மேலும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் மற்றும் இதர திட்டம் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.

    கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு-செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும். பொது மக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு- செலவு கணக்குகளை வைக்க வேண்டும்.

    குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும். குறிப்பாக அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்ற வேண்டும். தேசிய கொடியை ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றுவதை தடுக்கும் வகையில் செயல்பட்டால் அவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிராம ஊராட்சிகளில் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை இருந்தால் காஞ்சிபுரம் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள 044-27237175, 740 260 6005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் நாளை புதன்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையிலும் மற்றும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் புதன்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட உள்ளனர்.
    • தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிப்பது மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மாமல்லபுரம்:

    ஜி20 கூட்டமைப்பு நாடுகளுக்கு இந்தியா தலைமை வகித்து உள்ளது. இதைத் தொடர்ந்து ஜி 20 மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டின் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதன்படி வருகிற 31-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் (பிப்ரவரி 1-ந் தேதி), 2-ந் தேதி ஆகிய 3 நாட்கள் சென்னையில் உள்ள தாஜ்கோரமண்டல் மற்றும் கன்னிமாரா நட்சத்திர விடுதிகள், கிண்டி ஐ.டி.சி. சோழா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட உள்ளனர்.

    அவர்களுக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிப்பது மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பா டுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் செய்யப்பட்டு உள்ள வரவேற்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். அப்போது வெளி நாட்டினரை வரவேற்க எந்தந்த இடத்தில் கலைநிகழ்ச்சி குழுவினர் இருக்க வேண்டும். பாதுகாப்பு குறித்து ஆேலாசனை வழங்கினார். அப்போது சென்னை வட்ட தொல்லி யல்துறை கண் காணிப்பாளர் காளிமுத்து, கோட்டாட்சியர் சஜ்ஜீவனா, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
    • விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஆலந்தூர்:

    இந்தியாவின் 74-வது சுதந்திரதின விழா வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

    இந்த குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக, உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

    சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை நேற்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி, பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனா். அதைப்போல் வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனா்.

    விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குறிப்பாக விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

    விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதைப்போல் விமான நிலையத்திற்கு உள்ளே செல்வதற்கான பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அப்பகுதியில் ஏற்கனவே உள்ள கண்காணிப்பு கேமராக்களுடன் தற்போது கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை அமைத்து, விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

    இதைப்போல் விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை, விமானங்களில் ஏறும் இடத்தில் பயணிகளுக்கு, பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக பயணிகள் கைகளில் எடுத்து வரும் கைப்பைகளை சோதிக்கின்றனா். பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பாா்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்குப் பின்னரே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனா்.

    விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள், பயணிகளை அறிவுறுத்தி உள்ளனா்.

    சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 30-ந் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும், தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு, வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான, 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என்றும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனா்.

    • கடந்த மாதம் மார்கழி என்பதால் வியாபாரம் சற்று மந்த நிலையிலேயே காணப்பட்டது.
    • காஞ்சிபுரத்தில் தற்போது தினமும் பல லட்சம் ரூபாய்க்கு பட்டுச்சேலை விற்பனை ஜோராக நடக்கிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் என்றாலே பட்டுச்சேலை தான் நினைவுக்கு வரும். சுபகாரியங்களுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் காஞ்சிபுரத்திற்கு வந்து செல்வார்கள்.

    கடந்த மாதம் சுபமுகூர்த்த தினங்கள் இல்லை என்பதால் காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை விற்பனை குறைந்து இருந்தது. கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது தை மாதம் பிறந்ததை தொடர்ந்து சுப மூகூர்த்த தினங்கள் அதிக அளவில் வருகின்றன. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு பட்டுச்சேலை எடுக்க காஞ்சிபுரத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    வெளியூர்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து குவிந்து வருவதால் பட்டுச்சேலை விற்பனை கடைகள் அதிகம் உள்ள காஞ்சிபுரம் காந்திரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    அனைத்து கடைகளிலும் விற்பனை களை கட்டுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். காஞ்சிபுரத்தில் தற்போது தினமும் பல லட்சம் ரூபாய்க்கு பட்டுச்சேலை விற்பனை ஜோராக நடக்கிறது.

    இதற்கிடையே பட்டுச்சேலை கடைகளுக்கு வரும் வாகனங்களை நிறுத்த உரிய பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரம் நிறுத்தப்படுகிறது. இதனால் காஞ்சிபுரம், காந்திரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகனங்களை நிறுத்த உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் காஞ்சிபுரம் நகர மக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது:-

    கடந்த மாதம் மார்கழி என்பதால் வியாபாரம் சற்று மந்த நிலையிலேயே காணப்பட்டது. தற்போது தை மாதம் தொடங்கி உள்ள நிலையில் பட்டு சேலைகள் அமோகமாக விற்பனையாகும். தை மாதம் மட்டும் அறிஞர் அண்ணா பட்டுக்கூட்டுறவு சொசைட்டியில் சுமார் 6 கோடி ரூபாய்க்கு சேலைகள் விற்பனையாகும். முகூர்த்த புடவைகளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அவர்கள் வசதிக்கு ஏற்றார் போல் வாங்கி செல்கின்றனர். அதிக அளவில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையிலான முகூர்த்த புடவைகள் விற்பனையாகின்றன.

    காஞ்சிபுரத்தில் சுமார் ரூ.100 கோடி வரை பட்டுச்சேலைகள் இந்த தை மாதம் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

    பட்டுச்சேலைகளுக்கு காந்தி ரோட்டில் அதிக அளவில் அரசு சொசைட்டிகள் மற்றும் தனியார் கடைகள் உள்ளன. முக்கிய முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் சேலை வாங்க கார்கள் மற்றும் வாகனங்களில் வருவதால் காந்தி ரோடு பகுதியில் மிகுந்த நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் குணசுந்தரி அணிந்து இருந்த தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காந்தி நகர் பகுதியில் கடந்த 15-ந்தேதி சிங்கபெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மனைவி குணசுந்தரி பிறந்த நாள் விழாவுக்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் குணசுந்தரி அணிந்து இருந்த தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து அவரது கணவர் பாலகிருஷ்ணன் காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் குற்றவாளியை விரைந்து பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் வழிகாட்டுதலில் தாலுகா இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் தலைமையில் எஸ்.துளசி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் நாகராஜ், மதிவாணன் ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    மேலும் அந்த பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் காஞ்சிபுரத்தை அடுத்த திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து தங்க நகை மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். குற்றவாளியை காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

    • குற்றவாளிகள் 568 நபர்களில் இதுவரை 120 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 234 நபர்களை சிறையில் அடைத்தும் மொத்தம் 779 நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் கூறுகையில்:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்து தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் குற்றவாளிகளின் நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதமான விசாரணை மூலம் முடித்து குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல்செய்து கோர்ட்டு விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் கடந்த ஓராண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கொலை, கொலை முயற்சி மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 568 நபர்களில் இதுவரை 120 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    49 நபர்கள் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்தும், 343 நபர்கள் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் ஓராண்டு நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டும், பிணையத்தை மீறி குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 26 நபர்களை ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 234 நபர்களை சிறையில் அடைத்தும் மொத்தம் 779 நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • மொத்தம் 3 பெண் பயணிகளிடம் இருந்து ரூ.53 லட்சம் மதிப்புள்ள 1029 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்தக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து 192 கிராம் தங்கம் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் இலங்கையின் கொழும்புவில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு வெவ்வேறு விமானங்களில் பயணம் செய்த 2 பெண் பயணிகளிடம் இருந்து 837 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மொத்தம் 3 பெண் பயணிகளிடம் இருந்து ரூ.53 லட்சம் மதிப்புள்ள 1029 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் கடத்தல் தொடர்பாக 3 பெண் பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிங்கப்பெருமாள் கோவில் தெற்கு மாட வீதி பகுதியை சேர்ந்தவர் குணசுந்தரி.
    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென குணசுந்தரி கழுத்தில் இருந்த 12 பவுன் நகையை பறித்தான்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், சிங்கப்பெருமாள் கோவில் தெற்கு மாட வீதி பகுதியை சேர்ந்தவர் குணசுந்தரி (60). இவர் தங்கையின் பேரனின் முதலாவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் மற்றொரு பெண்ணுடன் பேசியபடி வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென குணசுந்தரி கழுத்தில் இருந்த 12 பவுன் நகையை பறித்தான். இதில் குணசுந்தரி சில அடிதூரம் தாண்டி கீழே விழுந்தார். பின்னர் கொள்ளையன் நகையுடன் தப்பி சென்று விட்டான். கீழே விழுந்ததில் குணசுந்தரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    • உயிருக்கு போராடிய பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • மோதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவை சேர்ந்தவர் பிரபாகர்(39). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே என்.ஜி.ஓ. காலனியில் உள்ள விளையாட்டு திடலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதனை காண பிரபாகர் சென்று இருந்தார். அப்போது ஏற்கனவே முன்விரோதத்தில் இருந்த கும்பல் திடீரென பிரபாகரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேர் கும்பல் பிரபாகரனை சுற்றி வளைத்து கை, முகம், கழுத்து, தொடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பிரபாகரன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். இதனை கண்டு பொங்கல் விழாவை காண வந்திருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய பிரபாகரனை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அதேபகுதியை சேர்ந்த 4 பேரை தேடிவருகிறார்கள்.

    ×