என் மலர்
காஞ்சிபுரம்
- இருவரும் வீட்டை கேட்டதால் இருவரிடையே பாகப்பிரிவினை தகராறு இருந்து வந்தது.
- கொலைக்கான காரணம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்
திருகக்கழுக்குன்றத்தை அடுத்த கொத்திமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில் ஜிப்சி காலனி பகுதி உள்ளது. இந்த காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேஷ் (வயது 30). இவரது தம்பி சந்திரன் (27). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. அவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஒரே வீட்டில் கடந்த 15 வருடங்களாக கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள். அந்த வீட்டின் அருகே அரசு சார்பில் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 சென்ட் காலி நிலம் உள்ளது.
இந்த நிலையில் சந்திரன் தனிக்குடித்தனம் செல்ல விரும்பினார். இதற்காக சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து தனக்குரிய பங்கை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ஒத்துக்கொண்ட வெங்கடேஷ், தற்போது வசித்து வரும் வீட்டை தான் எடுத்துக்கொள்வதாகவும், 3 சென்ட் நிலத்தை நீ எடுத்துக்கொண்டு வீடு கட்டிக்கொள் என்றும் கூறினார்.
அதற்கு சந்திரன் ஒத்துக்கொள்ளவில்லை. வீட்டுடன் கூடிய இடம் தனக்கு வேண்டும். 3 சென்ட நிலத்தை நீ எடுத்துக்கொள் என்றார். இருவரும் வீட்டை கேட்டதால் இருவரிடையே பாகப்பிரிவினை தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு வெங்கடேசை, அவரது மனைவி விநாயகி, சந்திரன் அவரது மனைவி நந்தினி மற்றும் நண்பர்கள் 3 பேர் என அனைவரும் ஒன்றாக வீட்டில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது வெங்கடேசனுக்கும், சந்திரனுக்கும் பாகப்பிரி வினை தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து சந்திரனை அங்கிருந்து வெளியே அனுப்பு உள்ளனர்.
இதற்கிடையே மது போதையில் இருந்த சந்திரனுக்கு அண்ணன் மீதான ஆத்திரம் அடங்க வில்லை. வீட்டை தனக்கு தராத அண்ணனை கொலை செய்ய திட்டமிட்டார்.
இதற்காக சந்திரன் தனது வேட்டை துப்பாக்கிைய எடுத்துக்கொண்டு அதில் நண்பர் ஒருவரின் உதவியுடன் வெடிமருந்து மற்றும் பாஸ்பரஸ் குண்டுகளை நிரப்பினர்.
பின்னர் துப்பாக்கியுடன் தனது வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
விளக்கை போட்டால் அனைவரும் எழுந்து விடுவார்கள் என்பதால் சந்திரன் வெளிச்சத்திற்காக டார்ச் லைட்டை தனது தலையில் கட்டினார். பின்னர் மெதுவாக கதவை திறந்து வெங்கடேசை நோக்கி டார்ச் லைட் அடித்தார். பின்னர் வேட்டை துப்பாக்கியால் அவரது மார்பில் குறி பார்த்து சுட்டார்.
இதில் காயம் அடைந்த வெங்கடேஷ் எழுந்தார். துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டு அவரது மனைவி விநாயகியும் எழுந்தார். அப்போது அங்கு சந்திரன் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார்.
இதைபார்த்த விநாயகி கூச்சல் போட்டு அலறினார். வெங்கடேஷ் தம்பியிடம் இருந்து தப்பிக்க வீட்டில் இருந்து வெளியே ஓடினார். ஆனாலும் ஆத்திரம் அடைந்த சந்திரன், தப்பி ஓட முயன்ற வெங்கடேசனின் கழுத்து பகுதியில் சுட்டார். இதில் அவர் குண்டு பாய்ந்து இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சந்திரனை போலீசார் தேடினார்கள். அப்போது அவர் அந்த பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சந்திரனை கைது செய்தனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர் செந்தில் குமரன் ஆய்வு நடத்தினார். வெடிமருந்து உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்தார். கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். கொலைக்கான காரணம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பக்தர்கள் கற்பூர தீபாராதனைகள் காண்பித்து ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் தரிசனம் செய்தனர்.
- வழியெங்கும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.
பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கக்கூடியதும், உலக புகழ் பெற்றதுமான காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
அன்று முதல் சாமி காலை, இரவு என இரு வேளைகளிலும் பவழக்கால் சப்பரம், சிம்ம வாகனம், சூரியபிரபை, சந்திர்பிரபை, பூத வாகனம், தங்க மயில் வாகனம், நாக வாகனம், வெள்ளி இடப வாகனம், வெள்ளி அதிகார நந்தி சேவை, கைலாசபீட ராவண வாகனம் போன்ற வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் 6-ம் நாளான நேற்று காலை 63 நாயன்மார்கள் திருவிழாவையொட்டி ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்தில் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பாளுடன் எழுந்தருளி முன்னால் செல்ல, 63 நாயன்மார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து புடைச்சூழ பின் தொடர்ந்து வர மேளத்தாளங்கள் இசைக்க, வாத்தியங்கள் முழங்கிட நான்கு ராஜ வீதிகளில் சாமிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து கற்பூர தீபாராதனைகள் காண்பித்து பக்தி முழக்கமிட்டு பயபக்தியுடன் 63 நாயன்மார்களுடன் படைச்சூழ வந்த ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வேண்டி வணங்கி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். வழியெங்கும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.
- குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சந்தேகத்திற்கு இடமாக இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
- 1½ கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
குன்றத்தூர்:
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அருகே உள்ள குப்பைமேடு அருகே உள்ள சுடுகாட்டில் சிலர் அமர்ந்து மதுகுடித்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சந்தேகத்திற்கு இடமாக இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. 3 பேரையும் பிடித்து விசாரித்ததில் பிடிபட்டவர்கள் கூடுவாஞ்சேரியை சேர்ந்த பாலாஜி என்ற காக்கா பாலாஜி (24), யுவராஜ் (25), தாமோதர பெருமாள் (23) என்பது தெரியவந்தது.
இவர்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து இருசக்கர வாகனத்தில் வைத்து போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க சுடுகாட்டில் வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
- அ.தி.மு.க. பிரமுகர் நாகராஜூக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி செல்வகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.
- செல்வகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் நாகராஜை கொலை செய்தது தெரிய வந்தது.
ஸ்ரீபெரும்புதூர்,
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிளாய் கிராமம் தெருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 41).இவர் அ.தி.மு.க. கிளை செயலாளராகவும், டிராவல்ஸ் தொழிலும் செய்து வந்தார். கடந்த 24-ந் தேதி நாகராஜ் நண்பர்களுடன் மதுகுடிக்க சென்றபோது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் நாகராஜை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே செல்வக்குமார் உள்பட 4 பேரை கைது செய்து இருந்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ராமு, ரவி, சிலம்பரசன், மகாலட்சுமி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
கடந்த ஜனவரி மாதம் கிளாய் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களுக்கு பிறகு ஆடு வெட்டி கறி விருந்து நடைபெற்றது. அப்போது இந்த விருந்தில் அ.தி.மு.க. பிரமுகர் நாகராஜூக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி செல்வகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் பல முறை நாகராஜை தீர்த்துக்கட்ட முயற்சி செய்து உள்ளார். சம்பவத்தன்று நாகராஜ் மதுகுடிப்பதை அறிந்து செல்வக்குமார் தனது கூட்டாளிகளுடன் சென்று தீர்த்து கட்டி இருப்பது தெரியவந்தது. கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது.
- பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.31 லட்சத்து 66 ஆயிரத்து 363 ரொக்கம், 320 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி கிடைத்தது.
காஞ்சிபுரம்:
மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் உள்ள உண்டியல்கள் செயல் அலுவலர் கவெனிதா, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.
இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.31 லட்சத்து 66 ஆயிரத்து 363 ரொக்கம், 320 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி கிடைத்தது.
- மற்ற மாணவிகள் வந்த போது ஸ்வேதா தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசார் விரைந்து வந்து ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு வேலூரை சேர்ந்த வேலு என்பவரது மகள் ஸ்வேதா(வயது19) விடுதியில் தங்கி படித்து வந்தார்.
மாணவி ஸ்வேதா கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு உடன் தங்கி உள்ள மாணவிகள் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் விடுதி அறையில் தனியாக இருந்த மாணவி ஸ்வேதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்துக்கு பின்னர் மற்ற மாணவிகள் வந்த போது ஸ்வேதா தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினருக்கும், ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி ஸ்வேதாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. கல்லூரியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 150 பவுன் நகை, மற்றும் ரூ. 5 1/2 லட்சம்ரொக்கம், 5 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.
- கொள்ளையடித்த நகைகளை கிணற்றில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகே உள்ள கண்ணப்பன் தெருவில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. தொழில் அதிபர். இவர் ரங்கசாமி குளம் பகுதியில் சிமெண்ட், கம்பி, டைல்ஸ், பெயிண்ட், உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 13-ந்தேதி சுந்தரமூர்த்தி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றார். அவர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 150 பவுன் நகை, மற்றும் ரூ. 5 1/2 லட்சம்ரொக்கம், 5 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போய் இருந்தது. மர்ம கும்பல் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு நகை-பணத்தை அள்ளி சென்று இருந்தனர்.
இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த குணசேகரன், சென்னையை சேர்ந்த ராஜன், சிவவிநாயகம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
கொள்ளையடித்த நகைகளை அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே திருப்பணமூரில் சாலையோரம் உள்ள கிணற்றில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் தேடினர். அப்போது ஒரு பையில் 62 பவுன் நகையை மீட்டனர்.
மேலும் கைதான 3 பேரிடமும் மீதி நகை மற்றும் ரொக்கப்பணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நந்திவரம் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி.சாலையில் ரெயில் நிலைய ரோட்டில் நடைபெற்றது.
- ஏழைகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கூடுவாஞ்சேரி:
நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர தி.மு.க.சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நந்திவரம் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி.சாலையில் ரெயில் நிலைய ரோட்டில் நடை பெற்றது. நகர செயலாளரும், நகர் மன்ற தலைவருமான எம்.கே.டி.கார்த்திக் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் தலைமைக் கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா, அத்திப்பட்டு சாம்ராஜ், வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக நந்திவரம் கூடு வாஞ்சேரி நகர் மன்ற துணைத்தலைவர் வழக்க றிஞர் ஜி.கே.லோகநாதன் அனைவரையும் வரவேற்றார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் இரா.ஜிஜேந்திரன் ஜிஜி, காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.சந்தானம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், கே.பி.ஜார்ஜ், கே.பி.அச்சுதாஸ், எஸ்.அப்துல்காதர், டி.ராம மூர்த்தி, கவுன்சிலர் ஸ்ரீமதிராஜி, பா.ஹரி, கவுன்சிலர் பா.ரவி, என்.டில்லி, கவுன்சிலர் ஜெ.குமரவேல், கவுன்சிலர் டி.சதிஷ்குமார், ஜெ.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூடுவாஞ்சேரி நகர வார்டு செயலாளர்கள் கவுன்சிலர் எம்.நாகேஸ்வ ரன்,கவுன்சிலர் ர.விக்னேஷ், கே.பாஸ்கர்,மதனகோபால், ஒய்.ஜினோ,எஸ்.மதன்,பி.சதீஷ்,கே.ஏகாம்பரம்,வி.கே.ஏழுமலை,ஜி.மோகன்,எம்.கே.எஸ்.செந்தில், எம்.கே.பி.நரேஷ்பாபு, ஜி.எம்.கார்த்திக், எஸ்.முரளி, எஸ். ஜெகதீசன், டி.பிரகாஷ், எஸ்.பழனி வேல், ஆர்.கணேசன்,த.சீனி வாசன், என்.கோகுல நாதன், வி.சண்முகம்மற்றும் நந்திவரம் கூடுவாஞ்சேரி கவுன்சிலர்கள் அ.டில்லீஸ்வரி ஹரி,ஜெயந்திஅப்பு, எம்.நக்கீரன், எஸ்.சரஸ்வதி, திவ்யாசந்தோ ஷ்குமார், சசிகலாசெந்தில், அம்பிகாபழனி,ஸ்ரீமதிடில்லி,கவுசல்யாபிரகாஷ்,ஜெயந்திஜெகன்,நளினிமோகன், பரிமளா கணேசன், சுபாஷினி கோகுலநாதன் மற்றும் வழக்கறிஞர்கள் வி.மகாலிங்கம், ஜெயசாமு வேல், எம்.கே.டி.சரவணன், எம்.கே.பி.சதிஷ்கு மார்,ஆர்.தினேஷ்குமார், ஆர்.பத்ம நாபன்,பொன்.தசரதன், புண்ணியகோட்டி, ஏ.எ.ஸ்.தரணி,கே.பாலாஜி, வெங்கடேசன்,ஜெ.காளிஸ்வரன்,எஸ்.ராம்பிரசாத், பி.கணேசன், சந்திரசேகர் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- 3 சிறுவர்கள் கோயிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து சில்லரை காசுகள் ரூ.3664 -ஐ திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயற்சி செய்துள்ளனர்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் கச்சபேஸ்வரர் நகரில் உள்ள அண்ணா தெருவில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிகாலை 3 சிறுவர்கள் கோயிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து சில்லரை காசுகள் ரூ.3664 -ஐ திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயற்சி செய்துள்ளனர்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஒன்றுசேர்ந்து சிறுவர்களை கையும் களவுமாக பிடித்து, கோயில் பொறுப்பாளரான ஜோதிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜோதி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சிறுவர்களை ஒப்படைத்துவிட்டு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
- மினிலாரி மேம்பால தடுப்புச் சுவரின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த டிரைவர் சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் தாலுக்கா, இடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சின்ராஜ் மகன் சங்கர் (40). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மினிலாரியில் வேலூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது, காஞ்சிபுரம் அருகே அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி அருகில் மேம்பாலத்தின் மீது வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மினிலாரி மேம்பால தடுப்புச் சுவரின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த டிரைவர் சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் உயிரிழந்த டிரைவர் சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து உயிரிழந்த சங்கரின் தந்தை சின்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை அப்புறப்படுத்தாமல், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
- உயிர் பலி வாங்கும் முன்பு சாலை நடுவே உள்ள மின்கம்பங்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
உத்திரமேரூரில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் அங்காளம்மன் கோவில் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது.
மிகவும் குறுகலான அந்த இடத்தில் சாலையின் இருபுறமும் சுமார் 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை அப்புறப்படுத்தாமல், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மின்கம்பங்களும் பழமையான புளிய மரங்களும் சாலையின் நடுவே உள்ளது.
இதனால் இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது.
உயிர் பலி வாங்கும் முன்பு சாலை நடுவே உள்ள மின்கம்பங்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.
- தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை, அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகிறது.
மேலும், மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகிறது. இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது இந்த திட்டம் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணையவழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் நோக்கமானது, இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.
மேலும், இ-சேவை வலைத்தளத்திலிருந்து (www.tnesevai.tn.gov.in/www.tnega.tn.gov.in) இணையவழி சேவைகளை மக்களுக்கு வழங்கும் "அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் அடுத்த மாதம் 14-ந்தேதி இரவு வரை விண்ணப்பிக்கலாம். அவர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






