என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.40 கோடி நிதி மோசடியில் 2 போலீசார் குடும்பத்துடன் கைது- ஏராளமான போலீசாரும் பணத்தை இழந்தனர்
    X

    ரூ.40 கோடி நிதி மோசடியில் 2 போலீசார் குடும்பத்துடன் கைது- ஏராளமான போலீசாரும் பணத்தை இழந்தனர்

    • ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிகம் லாபம் தருவதாக கூறி பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் அதிக பணத்தை வசூல் செய்தனர்.
    • மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி மரியச் செல்வி. இவர்களது மகன்கள் சகாய பாரத், ஆரோக்கிய அருண், இருதய ராஜ்.

    இவர்களில் சகாய பாரத் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். ஆரோக்கிய அருண் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து போலீசாக உள்ளார். இருதயராஜ் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் இவர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிகம் லாபம் தருவதாக கூறி பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் அதிக பணத்தை வசூல் செய்தனர். மேலும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வது, பெரும் நிறுவனங்களின் விற்பனை உரிமம் எடுப்பது, மற்றும் பணம் கட்டி ஆன்லைன் விளையாட்டிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதுவரை சுமார் ரூ.40 கோடி வரை பணம் வசூலித்ததாக தெரிகிறது.

    ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை கொடுக்காததால் பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கட்டிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்தனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலீஸ் சகோதரர்களான சகாயபாரத், ஆரோக்கிய அருண் ஆகியோர் குடும்பத்துடன் சேர்ந்து ரூ.40 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து ஜோசப், அவரது மனைவி மரிய செல்வி, ஆரோக்கிய அருண், அவரது மனைவி மகாலட்சுமி, இருதயராஜ், அவரது மனைவி ஜெயஸ்ரீ, சகாய பாரத் அவரது மனைவி சமியா உள்ளிட்ட8 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அதிக லாபம் தருவதாக ஆசை காட்டி நிதி மோசடி செய்த வழக்கில் போலீஸ் சகோதரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு அவர்களிடம் போலீசார் உட்பட ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்து இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×