என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் கொள்முதல் மையங்களில் இடைத்தரகர் தலையீடு தெரிய வந்தால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை
    X

    நெல் கொள்முதல் மையங்களில் இடைத்தரகர் தலையீடு தெரிய வந்தால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை

    • அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் தலையீடு இருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.
    • இடைத்தரகர்கள் தலையீடு தெரியவந்தால் போலீசார் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவரை பருவத்தில் நெல் சாகுபடி 69,820 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை தொடங்கி நடந்து வருகிறது.

    விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக 103 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் என மொத்தம் 123 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு 4027.240 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் தலையீடு இருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இதனால் நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

    இதுபோன்று இடைத்தரகர்கள் தலையீடு தெரியவந்தால் போலீசார் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×