என் மலர்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் மறைந்த பேறிஞர் அண்ணாவின் நினைவு இல்லம் உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தனது தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்கினார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு மு.க.ஸ்டாலின் இன்று முதல் முறையாக சின்ன காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு வந்தார்.
அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் வீட்டில் உள்ள அவரது புகைப்படங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்தில் வாழ்த்து பெற வேண்டும் என்று கருதிக்கொண்டு இருந்தேன். அதற்கான வாய்ப்பு எனக்கு இன்றைக்கு கிடைத்தது. எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எங்களை ஆளாக்கிய, கழகத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்துக்கு வருகை தந்து அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து நான் மரியாதை செலுத்தினேன்.
அவருடைய இல்லத்திற்கு வந்திருக்கும் இந்த நேரத்தில் குறிப்பேடு புத்தகத்தில் கூட நான் எழுதி இருக்கிறேன். மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று என்ற அறிவுரையை அவர் தம்பிமார்களுக்கு எப்போதும் வழங்கிக் கொண்டு இருக்கக்கூடியவர். அதை நினைவுப்படுத்தி குறிப்பேடு புத்தகத்தில் அதை எழுதி வைத்து அவர் தந்த அறிவுரைப்படி இன்று இந்த ஆட்சி பீடு நடைபோடும் என்று உறுதியோடு நான் எழுதி இருக்கிறேன்.
கேள்வி:- ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அவரது பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகம் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதுபோல அரசு திட்டங்களுக்கு அண்ணா பெயர் வைக்கப்படுமா?
பதில்:- நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும் போது நீங்கள் எதிர்பார்ப்பதை போல அந்த செய்திகள் எல்லாம் அதிலே வரும் என்றார்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அதைத்தொடர்ந்து விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது சென்னையை சோ்ந்த ஜெய்னுலாப்தீன் (வயது 60) என்பவரை நிறுத்தி விசாரித்தனர்.
அதில், முன்னுக்கு பின் முரணாக அவர் பேசியதால் சந்தேகத்தின் பேரில் உடைமைகளை சோதனை செய்தனர். அதில், எதுவும் சிக்காததால், தனியறைக்கு அழைத்து சென்று ஆடையை சோதனை செய்த போது, பேண்ட்டில் ரகசிய அறை வைத்து தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். அவரிடமிருந்து ரூ.19 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள 465 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜெய்னுலாப்தீனிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). இவருக்கு பிரியா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவருக்கு காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பம் நயப்பாக்கம் பகுதியில் சொகுசு பங்களா உள்ளது.
இந்த நிலையில், ரவிச்சந்திரன் மனைவி பிரியாவுக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. அதனால் அவரை தனிமைப்படுத்தி கொள்ள மனைவியை சென்னையில் விட்டு தனது 2 மகள்களையும் அழைத்து கொண்டு மேவலூர் குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தங்கி உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ரவிச்சந்திரன் மற்றும் அவரது இரண்டு மகள்களுடன் தூங்கி கொண்டு இருந்தபோது, மர்ம நபர்கள் இவரது வீட்டின் மாடி வழியாக ஏறி வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த விலையுயர்ந்த 3 எல்.இ.டி. டிவி, ஒரு லேப்டாப், வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த விலை உயர்ந்த ஆடி வகை சொகுசு கார் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இதையடுத்து காலையில் எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டில் பொருட்களை திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். ரவிச்சந்திரன் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாததால் போலீசார் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. கொள்ளை போன சொகுசு காரில் ஜி.பி.எஸ்.பொருத்தப்பட்டு இருந்ததால், அதை வைத்து கொள்ளையர்கள் திருவண்ணாமலையில் உள்ள வெண்பாக்கத்தில் பதுங்கி இருப்பதை அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
இதையடுத்து அங்கு வீட்டில் பதுங்கி இருந்த ஏ.சி.மெக்கானிக் விஜயசந்திரன் (21), லோகேஷ் (22), பிரவீன்குமார் (24), செங்கல்பட்டு மாவட்டம் கொள்ளம் பேடு அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (22) ஆகிய 4 பேரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், கடந்த ஏப்ரல் மாதம் ரவிச்சந்திரனின் சொகுசு பங்களாவில் புதிய ஏ.சி.பொருத்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விஜயசந்திரன் வந்துள்ளார். வீட்டை நோட்டாமிட்ட விஜயசந்திரன் தனது கூட்டாளிகளுடன் கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து அழைத்து வந்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளைச்சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள லேப்டாப், 3 எல்.இ.டி. டி.வி. மற்றும் ஆடி கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.






