என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரி உள்ளிட்ட நிலுவைக்காக சிறைப்பிடிக்கப்பட்ட 62 வாகனங்கள் மற்றும் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக அரசு வாகனமும் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 26-ந் தேதி காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விலை நிர்ணய குழுவினால் ஏலம் விடப்படும்.
ஏலம் விடப்படும் வாகனங்களின் விவரங்கள் உள்ளிட்டவைகளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வேலை நாட்களில் பார்வையிடலாம்.
உரிய கட்டணம் செலுத்தி ஒப்பந்த படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் வளையல் கடை நடத்தி வருபவர் சித்ரா. இவரது கடைக்கு அ.தி.மு.க.வின் மகளிர் அணி நகர இணை செயலளர் திலகவதி வந்தார். அப்போது அவர் மாமூல் கேட்டதாக தெரிகிறது.
ஆனால் சித்ரா பணம் கொடுக்க மறுத்தார். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த இருவரும் நடுரோட்டில் கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
பெண்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து சித்ரா சிவகாஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க. பிரமுகர் திலகவதியை கைது செய்தனர். மாமூல் கேட்டு கொடுக்காததால் வளையல் கடை பெண் வியாபாரியை அ.தி.மு.க. பெண் பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்துக் உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார்.
அப்போது பால்நெல்லூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு கலெக்டர் ஆர்த்தி சென்றார். அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை ஆய்வு செய்தார். மேலும் குழந்தைகளிடம் பேசி அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்று அங்குள்ள ஊழியர்களுக்கு கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தினார்.
இதேபோல் தத்தனூர் ஊராட்சியில் ரூ.11 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், ரூ.17 லட்சம் மதிப்பிலான மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள், முழு சுகாதார திட்டத்தில் கட்டப்பட்ட தனிநபர் கழிவறைகள், குண்டு பெரும்பேடு ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பில் தோண்டப்பட்டிருந்த திறந்தவெளி கிணறு, அரசு பள்ளி சுற்றுச்சுவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் பன்ரூட்டி ஊராட்சியில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் ஆகியவற்றை கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்து பணிகள் குறித்த விவரம் மற்றும் பணிகளின் தரம் ஆகியவற்றை உறுதி செய்து நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, ஊரக வளர்ச்சி திட்ட முதன்மை செயற்பொறியாளர் அருண் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
திருவான்மியூர்:
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானாத்தூர் கரிக்காட்டுக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் அரவிந்த். இவரது நண்பர் சுடலை முத்து. சாப்ட்வேர் என்ஜினீயர்களான இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
கானாத்தூர் போலீஸ் நிலையம் எதிரே சென்ற போது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது. அப்போது அந்த வழியாக சென்ற போலீஸ்காரர் வீரமணி மீதும் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
இவர்களில் சுடலைமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸ்காரர் வீரமணி, வாலிபர் அரவிந்த் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக கானாத்தூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்தது எப்படி? என்பது தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்போரூர் அடுத்த வெங்கூரில் நடந்த வழிப்பறி வழக்கில் பழைய குற்றவாளியான கரும்பாக்கம், ராயல்பத்து கிராமம், முத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் (39) என்பவரை போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில் திருப்போரூர் அருகே பதுங்கி இருந்த முருகனை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது திடீரென முருகன் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார்.
இதில் தவறி விழுந்ததில் முருகனின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
போரூர்:
மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி (வயது50). இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர்.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாலதண்டாயுதபாணி கடந்த 7 ஆண்டுகளாக ராஜலட்சுமியை பிரிந்து சகோதரர் குமாருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந் தேதி பாலதண்டாயுதபாணி மாயமானார். அவரை மனைவி ராஜலட்சுமி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாயமான தனது அண்ணன் பாலதண்டாயுதபாணியை கண்டுபிடித்து தருமாறு தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் அவரது சகோதரர் குமார் புகார் அளித்தார்.
மேலும் மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
அப்போது பாலதண்டாயுதபாணியை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பாலதண்டாயுதபாணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் ராஜ லட்சுமி, கணவர் பாலதண்டாயுதபாணியுடன் சென்னை, மதுரவாயலில் தங்கி இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து தல்லாகுளம் போலீசார் மதுரவாயல் எம்.ஜி சக்கரபாணி தெருவில் உள்ள ராஜலட்சுமியின் வீட்டிற்கு நேற்று இரவு வந்தனர். அங்குள்ள அறையில் பாலதண்டாயுதபாணி இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் பாலதண்டாயுதபாணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பாலதண்டாயுதபாணி எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. போலீசார் வரும் நேரத்தில் அவர் இறந்து கிடந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் மதுரவாயல் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து ராஜலட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்போது ராஜலட்சுமி கூறும்போது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர் பாலதண்டாயுதபாணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தோம். சிகிச்சை முடிந்து காலையில்தான் “டிஸ்சார்ஜ்” செய்து அழைத்து வந்தோம். இந்த நிலையில் கணவர் உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்துவிட்டார் என்று கூறிஉள்ளார்.
ஆட்கொணர்வு மனுவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட வேண்டிய பாலதண்டாயுதபாணி மர்மமாக உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜலட்சுமி, தனது கணவர் பாலதண்டாயுதபாணியை சென்னைக்கு அழைத்து வந்தது ஏன்? எப்படி அழைத்து வந்தார்? அவருக்கு உதவியவர்கள் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுகளுக்கு பின்னர் விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் விமான பயணிகளின் எண்ணிக்கை தற்போது 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
உள்நாட்டு விமான நிலையத்தில் 328 விமானங்களில் சுமார் 40 ஆயிரம் வருகை, புறப்பாடு பயணிகளும், 74 சர்வதேச விமானங்களில் சுமா£ 11 ஆயிரம் வருகை, புறப்பாடு பயணிகள் என மொத்தம் 51 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.
இனிவரும் நாட்களில் வெளிநாடு, உள்நாட்டு விமானங்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. எனவே அடுத்த சில நாட்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை தடுத்து நிறுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் தேவ அருள்பிரகாசம் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆட்டோ ஒன்றை கயிறு கட்டி ஊர்வலமாக இழுத்து வந்தனர். மேலும் கேஸ் சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்தும் ஒப்பாரி வைத்தும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வக்கீல் பொற்செழியன், தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் முத்துக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் பூவிழி, நகர ஒருங்கிணைப்பாளர் சாமுவேல், நகர செயலாளர்கள் ராமானுஜம், ஆதிசாலமன், திருநீர்மலை தமிழரசன் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பட்டுச்சேலை உலகப் புகழ்பெற்றது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமானோர் பட்டுச் சேலை வாங்குவதற்கு காஞ்சிபுரம் வந்து செல்வார்கள்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்டு நெசவுத்தொழிலை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் காஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள் விற்பனை ஆண்டுதோறும் ரூ.500 கோடிக்கு மேல் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பட்டுச் சேலைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை சுமார் 40 சதவீதம் வரை தற்போது உயர்ந்து இருப்பது நெசவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கோறா (சாயம் ஏற்றப் படாத நூல்) ஒரு கிலோ ரூ.4,500-ல் இருந்து ரூ.7 ஆயிரம் வரையும், ஒரு கிராம் பட்டு நூல் ரூ.5-ல் இருந்து ரூ.9 ஆகவும், மார்க் எனப்படும் 242 கிராம் எடை கொண்ட சரிகை ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரமாக உயர்ந்து இருக்கிறது.
இந்த விலை உயர்வு காரணமாக காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலைகள் விலை 20 சதவீதம் வரை அதிகரித்து உள்ளன. இதன் காரணமாக பட்டுச்சேலைகள் விற்பனை பாதிக்கப்படுவதுடன், நெசவாளர்களுக்கான வேலை வாய்ப்புகளும் குறையத் தொடங்கி உள்ளன.
ஏற்கனவே வறுமையில் வாடும் நெசவாளர்கள் இந்த விலை உயர்வால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருப்பதாக கவலையுடன் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து காஞ்சிபுரத்தில் பட்டுசேலை விற்பனையாளர் மோகன் ராஜ் என்பவர் கூறியதாவது:-
பட்டுசேலை உற்பத்தி மூலப்பொருட்களான கோறா, பட்டு நூல் , சரிகை தற்போது கடும் விலை உயர்வு அடைந்து விற்கப் படுகிறது. இதன் காரணமாக பட்டு சேலைகளின் விலை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளது.
இந்த விலையேற்றத்தின் காரணமாக நெசவாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. ஏற்கனவே நெசவுத் தொழில் நலிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த விலையேற்றத்தின் காரணமாக நெசவுத் தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலந்தூர்:
கொரோனா நோய் தொற்று பரவல் தற்போது குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வந்ததால் வெளி நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மட்டும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. உள்நாட்டு விமான சேவைகள் வழக்கம் போல் நடந்து வந்தது.
இதற்கிடையே நோய் தொற்று பரவல் கட்டுப் பாட்டுக்குள் வந்ததையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 27-ந்தேதி முதல் வெளிநாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்தும் வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன.
கடந்த சில நாட்களாக சென்னையில் இருந்து விமானங்களில் பயணம் செய்யும் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. இதேபோல் குவைத், சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இதையடுத்து சென்னையில் இருந்து இயக்கப்படும் வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று 68 வெளிநாட்டு விமான சேவைகள் நடைபெறுகின்றன.
வரும் நாட்களில் வெளி நாட்டு பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் உள் நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் சென்னை விமான நிலையம் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.
மாங்காடு காவல் நிலைய பகுதியில் ஏரியா தாதா போட்டியில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு மாங்காடு கங்கை அம்மன் கோயில் தெரு பெரிய கொளுத்துவாஞ்சேரி பகுதியில் வசிக்கும் குரு (எ) குருமூர்த்தி தரப்பும், வீரா தரப்பும் முன்விரோதம் காரணமாக கல், கட்டை கொண்டு அடித்து மோதினர். இதில் குரு மூர்த்தி கத்தியால் வெட்டியதில் வீரா படுகாயம் அடைந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடம் சென்ற மாங்காடு காவல் நிலைய ரோந்து வாகனத்தை கல் மற்றும் கட்டையால் தாக்கி சேதப்படுத்திய நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று ஆவடி மாவட்ட காவல் ஆணையாளர் உத்தரவுபடி குரு (எ) குரு மூர்த்தி (விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்) மற்றும் பரத்வாஜ் (இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது 2017-18-ம் ஆண்டில் 1,05,455 ஹெக்டேர் விவசாய நிலங்கள் இருந்தன.
இவற்றில் ஒரு ஹெக்டேர் விவசாய நிலத்தில் 2 போகம் சாகுபடி செய்யப் பட்டால் சாகுபடி பயிர் பரப்பு 2 ஹெக்டேராகவும், 3 போகம் சாகுபடி செய்யப்பட்டால் 3 ஹெக்டேராகவும் கணக்கிடப்படுகிறது. இதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நிலங்களில் 1,24,593 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி நடைபெற்றது.
இந்த சதுப்பு நிலங்களின் மதிப்பு 2018-19-ம் ஆண்டில் 96,169 ஹெக்டேராக குறைந்தது. பயிர் சாகுபடி செய்யப்பட்ட பரப்பளவும் 1,08,986 ஹெக்டேராக குறைந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2019-20-ம் ஆண்டில் விவசாய சாகுபடி நிலங்களின் பரப்பு 36,766 ஹெக்டேராக இருந்தது. இந்த நிலங்களில் 48,145 ஹெக்டேர் அளவுக்கு பயிர் சாகுபடி செய்யப்பட்டது.
நெல் சொர்ணவாரி பருவத்தில் 4,421 ஹெக்டேரும், சம்பா பருவத்தில் 15,284 ஹெக்டேரும், நவரை பருவத்தில் 18,786 ஹெக்டேரும் சாகுபடி செய்யப்பட்டன.
ஏரிகள் மூலம் 22,867 ஹெக்டேர் விவசாய நிலங்களும், கிணறுகள் மூலம் 9,200 ஹெக்டேர் விவசாய நிலங்களும், ஆழ்துளை கிணறுகள் மூலம் 6,480 ஹெக்டேர் விவசாய நிலங்களும் பயன் பெற்றன.
மழையை எதிர்நோக்கும் மானாவாரி நிலங்களிலும் விவசாய பயிர்கள் பயிரிடப்பட்டன. கடந்த 2021-22-ம் ஆண்டில் விவசாய நிலங்களின் பரப்பு 39,048 ஹெக்டேராக அதிகரித்தது.
இந்த நிலையில் தற்போதைய நிதி ஆண்டில் நெல் சொர்ணாவாரி பருவத்தில் 6,774 ஹெக்டேரும், சம்பா பருவத்தில் 15,316 ஹெக்டேரும், நவரை பருவத்தில் 25,748 ஹெக்டேரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக 57,365 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு சாகுபடி பரப்பை ஒப்பிடும்போது 9,180 ஹெக்டேர் அதிகமாகும். இந்த ஆண்டில் ஏரிப்பாசனம் மூலம் 22,867 ஹெக்டேர் விவசாய நிலங்களும், ஆழ்துளை கிணற்றின் மூலம் 6,480 ஹெக்டேர் விவசாய நிலங்களும், கிணறுகள் மூலம் 9,200 ஹெக்டேர் விவசாய நிலங்களும் பயன்பெற்றன.
இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓடும் பாலாறு, செய்யாற்றில் தடுப்பணைகளை அதிகப்படுத்த வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் விவசாயத்துக்கு மேலும் புத்துயிர் கொடுக்க முடியும் என்று விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன.






