என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரத்தில் டயர் கடைக்கு பின்னால் பல ஆண்டுகளாக மறைந்து இருந்த பழமையான கோவில்- அமைச்சர் ஆய்வு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், காமராஜர் சாலையில் டயர் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் பின்பகுதியில் பழமையான கோவில் காணப்படுகிறது.
சுற்றிலும் கட்டிடங்கள் மற்றும் கடைகள் இருந்ததால் இந்த கோவில் பற்றி யாருக்கும் தெரியவில்லை.
இந்த நிலையில் டயர் கடைக்கு பின்னால் உள்ள கோவில் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியது. கடைக்கு பின்னால் பல ஆண்டுகளாக மறைந்து இருந்த கோவில் குறித்து அறிந்து காஞ்சிபுரம் நகர மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
இதையடுத்து அந்த பகுதிக்கு சென்று ஏராளமானோர் பார்வையிட்டனர். அப்போது டயர் கடை நடத்தி வருபவர் இந்த இடம் தனக்கு சொந்தமானது என்று தெரிவித்து வந்தார்.
இதற்கிடையே நேற்று இரவு அமைச்சர் சேகர்பாபு இந்த கோவிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் பல 100 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்துள்ள கோயில் ஒன்று உள்ளது.வருவாய்த்துறையினரின் ஏடுகளில் கல்மடம் என பதிவாகி இருக்கிறது. இக்கோயில் தொடர்பாக நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் நடந்துள்ளன. இக்கோயிலானது தனிப்பட்ட நபருக்குரியதா அல்லது லிங்கா யச் சமுதாயத்தினருக்கு சொந்தமானதா என அவர்கள் தரும் ஆவணங்களைப் பார்த்து முடிவு செய்யப்படும்.
நீதிமன்ற உத்தரவுகளும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதையும் அறநிலையத்துறை சட்டப்பிரிவு ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து கண்காணிக்கும்.
தற்போது ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படும் இந்த இடத்தை அவர்களே வைத்துக் கொள்வதா அல்லது அவர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு கொடுத்தால் அதை அனைவரும் வந்து வழிபடும் படியாக சிறந்த கோயிலாக மாற்றுவதா என்பதை ஆவணங்களைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.1200 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பில் இருந்த சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. 129 ஏக்கர் நிலம் தன்வசப்படுத்தப்பட்டுள்ளது. அறநிலையத்துறை ஆக்கிரமிப்புகள் எதுவாக இருந்தாலும் பாரபட்சமின்றி அகற்றப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், அறநிலையத்துறை இணை ஆணையர் பொன்.ஜெயராமன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.






