என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 9 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது, 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 9 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது, 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியது.

    மேலும் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றும் வேகமாக பரவி வருவதால்  அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன்படி கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதேபோல் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் இரவுநேர ஊரடங்கில் தடையை மீறி வெளியே சுற்றுபவர்களை  கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள 14 முக்கிய சோதனை சாவடிகளில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

    இரவுநேர ஊரடங்கு என்றாலும் அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் நேற்று இரவு வழக்கம்போல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாநகர் பகுதியில் நேற்று தடையை மீறி சுற்றியதால் 9 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது.

    மேலும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தெரிவித்தார்.
    ஈரோடு மாவட்டத்தில் 88.01 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட சுகாதார துணை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 88.01 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட சுகாதார துணை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    இத்துடன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றும் பரவி வருகிறது.

    இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப் பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 15-18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையான 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 பேரில், 18வயதுக்கு மேற்பட் டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100பேரும், 15-18 வயதுக்கு உட்பட்டவர்கள் 1 லட்சத்து 4ஆயிரத்து 106பேர் உள்ளனர்.

    இவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

    மேலும் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமும் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை முதல் தவணை தடுப்பூசி  88.01 சதவீதம் பேர், அதாவது 15 லட்சத்து 94 ஆயிரத்து 270 பேரும், 2-ம் தவணை தடுப்பூசி 63.03 சதவீதம் பேர் அதாவது 11 லட்சத்து 35 ஆயிரத்து 61 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக   மாவட்ட சுகாதார துணை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்தார்.
    கொடுமுடி அருகே தொழிலாளி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் பொருட்கள் எரிந்து சேதமானது.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகே தொழிலாளி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் பொருட்கள் எரிந்து சேதமானது. 

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கொளாநல்லியை சேர்ந்தவர் ரமேஷ்.

    இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் இரவு ரமேஷ் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தாருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள கோவிலில் இருந்து புறப்படு வதற்காக தயாராகி கொண்டிருந்தனர்.

    அப்போது ரமேஷ் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் சிறிது நேரத்தில் ரமேஷ் வீடுமுழுவதும் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    இது குறித்து ரமேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், டி.வி., துணிகள், பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.

    வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் மின்கசிவு காரணமாக விபத்து நடந்ததா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
    ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகமானதால் விலை குறைந்தது.
    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகமானதால் விலை குறைந்தது.

    ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் கொரோனா  தாக்கம் காரணமாக தற்காலிகமாக  ஈரோடு வ.உ.சி.பூங்கா பகுதியில் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

    இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இதேபோல் 100-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் உள்ளன.

    இரவு முழுவதும் மொத்த வியாபாரமும், காலையில் சில்லரை வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    அந்தியூர், தாளவாடி, பர்கூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மதுரை போன்ற பகுதியில்  இருந்து காய்கறிகள் அதிக அளவில் வருகிறது.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற பகுதிகளில் இருந்தும் காய்கள் வரத்தாகி வருகிறது.

    இங்கு காய்கறிகள்  மற்ற இடங்களை விட குறைந்த விலையில் விற்கப்படுவதால் மார்க்கெட்டில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  

    கடந்த சில நாட்களாக பல்வேறு காரணமாக நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்தது.

    இதன் காரணமாக காய்கறிகள் விலை தாறுமாறாக எகிறியது. குறிப்பாக தக்காளி, முருங்கைக்காய், கத்திரிக்காய், கேரட், பீன்ஸ் போன்ற காய்கறி விலை தாறுமாறாக ஏறியது.

    இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிகவும் உடைந்து வந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும்  வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறி விலை சரியத்தொடங்கியுள்ளது.

    கடந்த சில நாட்களாக கிலோ ரூ.100-க்கு விற்று வந்த கத்திரிக்காய் இன்று ஒரு கிலோ ரூ.50 ஆக குறைந்து விற்கப்பட்டு வருகிறது.

    இதுபோல் மற்ற காய்கறிகளும் கிலோவுக்கு ரூ.10 முதல் 20 ரூபாய் வரை குறைந்துள்ளது.

    இன்று வ.உ.சி. மார்க்கெட்டில்  விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    வெண்டைக்காய்-60, முள்ளங்கி -20, பீர்க்கங் காய்-50, பாவைக்காய்-50, சுரைக்காய்-20, முட்டைக் கோஸ்-40 முதல் 45 வரை, புடலங்காய்-30, கேரட்-90, பீட்ரூட்-80, கருப்பு அவரை-80, முருங்கைக்காய்-250 முதல் 300 வரை, காளிபிளவர்-30, உருளைக்கிழங்கு-30, சின்னவெங்காயம்-60, பெரிய வெங்காயம்-40, தக்காளி-30 முதல் 40 வரை விற்கப்பட்டது.
    கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி இன்று புளியம்பட்டி- பவானிசாகர் ரோட்டில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    புஞ்சைபுளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில் உள்ளது தாசம்பாளையம் கிராமம். இக்கிராம பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு தொட்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி இன்று காலை 7 மணி அளவில் புளியம்பட்டி- பவானிசாகர் ரோட்டில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் மற்றும் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் உங்கள் குடிநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் புளியம்பட்டி- பவானிசாகர் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கோபிசெட்டிபாளையம் அருகே 11-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கெட்டிசெவியூரை சேர்ந்தவர் மனோஜ் (வயது 27). லாரி டிரைவர். மனோஜ் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

    பின்னர் அடிக்கடி அந்த மாணவியை சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் மாணவியின் பெற்றோர்கள் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மனோஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    டி.என்.பாளையம் அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூர் அருகே உள்ள கரளயம் பகுதியை சேர்ந்தவர்கள் பாட்டப்பன் (வயது61) மற்றும் மணிகண்டன் (30). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் கரளயத்தில் இருந்து இரட்டிப்பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டினார். அவருக்கு பின்னால் பாட்டப்பன் உட்கார்ந்திருந்தார். கடம்பூரை அடுத்த பவளக்குட்டை பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறியதில், 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாட்டப்பன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    கோபி செட்டிபாளையம் அருகே குண்டம் விழாவையொட்டி இன்று காலை அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    கோபி:

    கோபி செட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் சிறப்பாக நடைபெறும்.

    கொரோனா பரவல் காரணமாக கட்டுபாடுகளுடன் இந்த ஆண்டு திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த 30-ந் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி இன்று காலை அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கோபி செட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    வரும் 12-ந் தேதி பெண்கள் மாவிளக்கு எடுத்து வருகிறார்கள். மேலும் மக்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கிறார்கள்.

    விழாவையொட்டி பக்தர்கள் விறகுகளை காணிக்கையாக வழங்கினர். இதனால் கோவில் வளாகத்தில் விறகுகள் குவிந்து வருகிறது. 12-ந் தேதி இரவு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து குண்டம் வளர்க்கப்படுகிறது.

    தொடர்ந்து வரும் 13-ந் தேதி காலை 5 மணிக்கு குண்டம் விழா நடக்கிறது. இதில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு குண்டம் இறங்க அனுமதி இல்லை.

    பூசாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் மட்டும் குண்டம் இறங்குகிறார்கள். இதையடுத்து கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் தேரோட்டம் மற்றும் மலர் பல்லுக்கு ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. 
    417 மூட்டை ரே‌ஷன் அரிசியை பதுக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள தனியார் அரிசி ஆலை உரிமையாளர், பவானியை சேர்ந்த ராஜேஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    ஈரோடு:

    பெருந்துறையில் ரே‌ஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு, அங்குள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வன் தலைமையில் போலீசார் பெருந்துறை பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு தனியார் அரிசி ஆலையில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அரிசி ஆலை உரிமையாளர் உள்பட 7 பேர் ரே‌ஷன் அரிசியை கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்ததும், இந்த அரிசியை வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து ரே‌ஷன் அரிசியை பதுக்கி வைத்ததாக சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் தெற்கு வீதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 32), தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பத்ரஹள்ளி பூச்சூரை சேர்ந்த பாலுவின் மகன் அஜித்குமார் (25), பென்னாகரம் செல்லம்பூண்டி தாசனூரை சேர்ந்த செல்வராஜ் (40), அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி (40), பெருந்துறை அருகே வாவிக்கடை பிச்சாண்டம்பாளையம் கணபதிநகரை சேர்ந்த சென்னியப்பன் (39) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 417 மூட்டைகளில் இருந்த 20 ஆயிரத்து 850 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான 5 பேரும் ஈரோடு 3-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தனியார் அரிசி ஆலை உரிமையாளர், பவானியை சேர்ந்த ராஜேஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் கடைகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் பதிவு பெற்ற 9,100 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து கடைகளும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடி காணப்பட்டது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான ஜவுளிக் கடைகள், தொழில் சார்ந்த நிறுவனங்கள் ஆகியவையும் அடைக்கப்பட்டிருந்தன. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் வியாபாரிகள் அதிக அளவில் பொருட்களை கடன் வாங்கி வைத்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பு வியாபாரிகளுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

    ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில் வார விடுமுறை நாட்களிலும் பண்டிகை காலத்திலும் விற்பனை அதிகமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட வியாபாரம் அதிகமாக இருக்கும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். இதற்காக பருத்தித் துணிகள் சிறுவர் சிறுமியர் பேன்சி ரக துணிகள், காட்டன் புடவைகள், காட்டன் உடைகள் என பல லட்சம் ரூபாய் அளவுக்கு துணிகளைக் கொள்முதல் செய்து கடையில் வைத்து இருந்தனர்.

    ஆனால் முழு ஊரடங்கால் நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 700 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் ஒரு கடைக்கு 10 ஆயிரம் ரூபாய் என்ற வகையில் நேற்று ஒரு நாள் ரூ. 7 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.

    இதைப்போல் பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் கடைகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் பதிவு பெற்ற 9,100 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் சில்லரை விற்பனையில் ரூ.10 கோடியும், மொத்த விற்பனையில் ரூ .10 கோடியும் என ரூ.20 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இது தவிர நூற்றுக்கணக்கான சாலையோர கடைகள் அடைக்கப்பட்டதால் கடும் இழப்பு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 9 ஆயிரம் முன் களப்பணியாளர்கள், 6 ஆயிரம் சுகாதாரதுறை பணியாளர்கள், 9 ஆயிரம் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உடையவர்கள் என மொத்தம் 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.
    ஈரோடு:

    இந்தியாவில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து உள்ளதால் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை தடுப்பூசி போடும் பணிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் முதல் கட்டமாக இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு 273 நாட்கள் (9 மாதங்கள்) முடிந்தவர்களில் முன் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உடையவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க .ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் 9 ஆயிரம் முன் களப்பணியாளர்கள், 6 ஆயிரம் சுகாதாரதுறை பணியாளர்கள், 9 ஆயிரம் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உடையவர்கள் என மொத்தம் 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முன்கள பணியாளர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஏற்கனவே கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகியவற்றில் எந்த தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டார்களோ அதையே அவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக போடப்பட்டது.

    தடுப்பூசி போட வந்தவர்கள் செல்போன் மற்றும் ஆதார் அட்டையை காண்பித்தனர். கோவின் செயலியில் சரி பார்த்த பின்பு பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி போடப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 63 பேர் பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. 3 மாதங்களுக்குப் பிறகு கடந்த 2 தினங்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 103 ஆக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 131 ஆக அதிகரித்தது.

    இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக தினசரி பாதிப்பு 149 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 63 பேர் பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளனர்.

    இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 75 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 712 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 578 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ×