என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு வைராபாளையம் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு வைராபாளையம் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு வைராபாளையம் காவிரி ஆற்றில் இன்று நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து கிடந்தன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மீன்கள் இறந்து கிடந்ததை  பார்க்க திரண்டனர்.

    தற்போது காவிரி ஆற்றில் குறைவான அளவே தண்ணீர் செல்வதால் கரையோர பகுதியில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் காவிரி ஆற்றில் ஏராளமான சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. அதேபோல் சாயத் தொழிற்சாலை கழிவுகளும் ஆங்காங்கே கலப்பதால் மாசு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர். 

    இந்நிலையில் இன்று மீன்கள்  செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ஈரோடு மார்க்கெட்டுக்கு புது மஞ்சள் வரத்து தொடங்கியுள்ளதால் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மார்க்கெட்டுக்கு புது மஞ்சள் வரத்து தொடங்கியுள்ளதால் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கட்டுப்பாட்டில் 2 மஞ்சள் மார்க்கெட்டுகளும், கூட்டுறவு சங்கம் கட்டுப்பாட்டில் 2 மஞ்சள் மார்க்கெட்களும் செயல்பட்டு வருகின்றது. இது தவிர சேலம் கூட்டுறவு சங்கம் சார்பில் தனியாக ஒரு மஞ்சள் மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் சரிவில் இருந்து வந்த மஞ்சள் விலையானது கடந்தாண்டு மெல்ல உயர்ந்து குவிண்டால் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையாகி வருகின்றது. ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள் அறுவடை செய்யும் பணி தொடங்கி உள்ளது.

    இதையடுத்து அறுவடை செய்யப்பட்ட மஞ்சள் பாலீஸ் செய்யப்பட்டு மார்க்கெட்டுகளுக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவரத்தொடங்கி உள்ளனர். ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று முதல் புது மஞ்சள் வரத்து தொடங்கியதையடுத்து ஒரு குவிண்டால் புது மஞ்சள் ரூ.7029 முதல் ரூ.8569 வரையிலும், கிழங்கு குவிண்டால் ரூ.6859 முதல் ரூ.8331 வரையிலும் விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர்.

    வழக்கமாக மார்க்கெட்டுகளுக்கு புது மஞ்சள் வரத்து தொடங்கினால் பழைய மஞ்சள் விலையானது சற்று குறையத்தொடங்குவது வாடிக்கையாகும். ஆனால் இந்தாண்டு பழைய மஞ்சள் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்றும், வரும் நாட்களில் முழு அளவில் புதிய மஞ்சள் வரத்து இருக்கும் பட்சத்தில் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

    நம்பியூர் அருகே 3 ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    நம்பியூர்:

    நம்பியூர் அருகே 3 ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    நம்பியூர் காந்திபுரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் கன்னியம்மாள் (65). இவர் தனது வீட்டின் அருகே பட்டி அமைத்து 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    நேற்றுமாலை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு சென்றார். இரவில் இந்த பட்டிக்குள் புகுந்த ஒரு மர்ம விலங்கு அங்கு இருந்த 3 ஆட்டுக்குட்டிகளை அடித்து கொன்றது. மேலும் ஒரு குட்டியின் உடலை பாதியாக துண்டித்து எடுத்து சென்றுவிட்டது. 

    இன்றுகாலை வீட்டில் இருந்து வெளியே வந்த கன்னியம்மாள் பட்டிக்கு சென்று பார்த்தார். அப்போது ஆட்டுபட்டி முழுவதும் ரத்தக்கறையாக இருப்பதையும், 3 ஆடுகள் இறந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி தெரியவந்ததும் அக்கம்பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். மேலும் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலாவும் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். 

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:&

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் 29 கோழிகளை மர்ம விலங்கு அடித்து கொன்றது. இந்த நிலையில் தற்போது 3 ஆடுகளை அடித்து கொன்றுள்ளது. ஆடு, கோழிகளை அடித்து கொன்றது சிறுத்தையாக இருக்கலாம் என்று அச்சப்படுகிறோம்.
     
    இதனால் இரவில் வெளியே நடமாட முடியாமல் அச்சம் அடைந்துள்ளோம். எனவே வனத்துறையினர் கண்காணிப்பு கேமிரா பொருத்தி அந்த விலங்கு என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 25.87 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 25.87 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட 2-ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2-ம் அலை உச்சத்தின் போது தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 1700 வரை பதிவானது. முன் களப்பணியாளர்கள், குழந்தைகள் வாலிபர்கள், முதியவர்கள் என அனைவரையும் வயது பேதமின்றி தாக்கியது.

    இதையடுத்து பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர், மாநகராட்சி ஆகியவை ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர். 

    இதன்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியும் வகையில் கொரோனா பரிசோதனை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்டது. 2-ம் அலையின் போது பாதிப்பு அதிகரித்து வந்ததால் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

    தினசரி பரிசோதனை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட வர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப வீட்டு தனிமையிலேயோ, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன் காரணமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் விரைவாக குணம் அடைந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் 3-ம் அலையில் மீண்டும்  கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வந்தது. இதைத்தொடர்ந்து முதலில் 2ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொண்டு வந்த நிலையில் பின்னர் அது படிப்படியாக 4ஆயிரமாக உயர்ந்தது.

    அதன் பின்னர் 4,800 ஆக அதிகரித்தது. இதன் பயனாக தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 25லட்சத்து 87 ஆயிரத்து 727 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    மொடக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மாடு பலி, 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மாடு பலி, 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    சிவகிரி அடுத்த மோளப்பாளையம் நால்ரோடு பகுதியை சேர்ந்த ரவி (41). அதேபகுதி கந்தசாமிபாளையம் வடக்கு வீதியை சேர்ந்த சேகர் (50) ஆகிய 2 பேரும் வீடு கட்டும் பணிக்காக மணல் வாங்கும் வேலை விசயமாக மோட்டார்சைக்கிளில்  மொடக்குறிச்சி சென்றனர்.
     
    பின்னர் வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மொடக்குறிச்சி அருகே  ஈரோடு-முத்தூர் மெயின்ரோடு அய்யகவுண்டம்பாளையம் நாவிதன் காடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று சாலையில் சென்று கொண்டிருந்த மாடு ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும்  தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.  உடனே அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
     
    விபத்தில் மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஈரோட்டில் வேலை செய்யும் இடத்தில் கட்டிட பொருட்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் வேலை செய்யும் இடத்தில் கட்டிட பொருட்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டம் அய்யன்காளி தெருவை சேர்ந்தவர் காளிதாசன் (வயது 38).  இவர் சொந்தமாக ஈரோடு 16 ரோடு, சின்னமாரியம்மன் கோவில் பின்புறம் கட்டிட வேலை எடுத்து நடத்தி வருகிறார்.  

    அதேஇடத்தில் குடோனும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீரப்பன்சத்திரம் முல்லை தெருவை  சேர்ந்த அழகேசன் (20)  என்பவர் காளிதாசன் குடோனில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அழகேசன் குடோனில் இருந்து ஒரு பையுடன் வேகமாக வெளியே சென்றார். அப்போது அங்கு காளி தாசன் வந்தார். அவரை பார்த்ததும் அழகேசன் தப்பி ஓட முயன்றார்.  காளிதாசன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அழகேசனை மடக்கி பிடித்தார்.

    அப்போது அந்த பையில் டிரில்லிங் மிஷின், கட்டிங் மெஷின் இருந்தது. இதுகுறித்து அழகேசனிடம் கேட்டபோது எனக்கு சம்பளம் போதவில்லை என்பதால் இங்குள்ள பொருட்களை திருடி அதை விற்று செலவு செய்யலாம் என எண்ணி கள்ளசாவி போட்டு பொருட்களை திருடினேன் என்று கூறினார்.

    இதையடுத்து அழகேசனை வீரப்பன்சத்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகேசனை கைது செய்தனர்.
    ஈரோட்டில் அபராதம் விதிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் முககவசம் அணியாமல் வருபவர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
    ஈரோடு:

    ஈரோட்டில் அபராதம் விதிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் முககவசம் அணியாமல் வருபவர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இதைபெரும்பாலானோர் கடைப்பிடிக்கவில்லை. முககவசம் அணியாமல் வெளியே வந்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர், போலீசார் ஒன்றிணைந்து முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து வந்தனர்.  

    இந்நிலையில் கொரோனா 3-ம் அலை வேகம் எடுத்ததால் அரசு முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டது. ஈரோடு மாவட்டத்தில் இதற்கான ரசீது புக் தாமதமாக வந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்து முககவசம் அணியாமல் வருபவர்கள், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

    இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மீண்டும் முககவசம் அணிந்து வந்தனர். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இதனால் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக போலீசார், வருவாய் துறையினர் சென்றுவிட்டதால் மாவட்டத்தில் அபராதம் விதிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

    இதனால் மீண்டும் முககவசம் அணியாமல் பொதுமக்கள் வெளியே வருவதை காணமுடிகிறது. குறிப்பாக பெண்கள் வீட்டிலிருந்து கடைத்தெருவில் உள்ள கடைக்கு செல்லும் போது முககவசம் அணிந்து செல்வதில்லை. அவர்களுடன் குழந்தைகளையும் முககவசம் அணியாமல் அழைத்து செல்கின்றனர். 

    இதேப்போல் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் பெரும்பாலும் முககவசம் அணிந்து வருவதில்லை. பொதுஇடங்களிலும் சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. இதுபோன்ற அலட்சிய போக்கால் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதைகருத்தில் கொண்டு மீண்டும் அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொடுமுடி புதுமாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    கொடுமுடி:

    கொடுமுடி புதுமாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கொடுமுடி புதுமாரியம்மன் கோவில் பொங்கல், குண்டம் இறங்கும் திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சாட்டி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக  விரதம் இருந்து வந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். கோவிலின் தலைமை பூசாரி, வேல் பூசாரி, கம்ப பூசாரி ஆகியோர் தலைமையில் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் இரவு 7 மணியளவில் தலைமை பூசாரிகள் முதலாவதாக குண்டத்தில் இறங்க தொடர்ந்து விரதம் இருந்து வந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ச்சியாக இன்றுமதியம் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு படையலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை மாலை கம்பம் பிடுங்கி ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4-ந் தேதி மஞ்சள் நீராட்டுடன் பொங்கல் திருவிழா முடிவடைகிறது.
    சென்னிமலையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    சென்னிமலை:

    சென்னிமலையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    கர்நாடக மாநிலம், பெல்லாரி அடுத்துள்ள குருகோடு பகுதியில்  இருந்து 25டன் நெல்மூட்டைகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி காங்கேயம் நோக்கி சென்றது.
    லாரியை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்துள்ள முத்தம்பட்டியை சேர்ந்த மணிவாசகம் (37) என்பவர் ஓட்டிவந்தார். அவருடன் மாற்று டிரைவரான கோவிந்தராஜ் (40) என்பவரும் வந்தார்.

    இன்றுஅதிகாலை 1.30மணி அளவில் லாரி சென்னிமலை வடக்கு ராஜ வீதியில் இருந்து கிழக்கு ராஜவீதிக்கு திரும்பியது. அப்போது நிலை தடுமாறிய லாரி கவிழ்ந்து விபத்தானது. அதிகாலை நேரம் என்பதால் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

    இந்த விபத்தில் கோவிந்தராஜ்க்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த லாரி இன்னும் ஒரு அடி தூரம் சென்று விழுந்த இருந்தால் சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திரதிருதேர் பெரியசேதம் ஆகிஇருக்கும். 

    தற்போது தேரின் பாதுகாப்பு கூண்டு மட்டும் சேதம் ஆகிவிட்டது. அதில் இரும்பு ஆங்கிள் இருந்ததால் தேர் தப்பித்தது. சம்பவ இடத்திற்கு உடனடியாக கோவில் பணியாளர்கள் விரைந்து வந்தனர். போலீசாரும் விரைந்தனர். 

    லாரி உரிமையாளர் சிவராஜ் என்பவர் நேரில் வந்தார். அவர் சென்னிமலை முருகன் கோவில் பங்குனி திருத்தேரின் கூண்டு சேதமடைந்த பகுதியினை தனது சொந்த செலவில் சரிசெய்து தர சம்மதம் தெரிவித்தார். இதனால் சென்னிமலை முருகன் கோவில் பணியாளர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர்.

    இந்த இடத்தில் கடந்த 2016-ம் வருடத்தில்  பருத்தி பஞ்சு ஏற்றி கொண்டு வந்த 4 லாரிகள் விபத்தானது. இதேபோல் 2017-ம் ஆண்டு மூன்று விபத்துகளும், 2018-ம் ஆண்டு ஒரு விபத்தும், 2019, 2020, 2021 ஆகிய வருடங்களில் இந்த இடத்தில் விபத்து இல்லை. தற்போது 2022-ம் வருடம் விபத்து நடந்துள்ளது. 

    இந்த குறுகிய வளைவில் அதிக பாரத்துடன் வரும் லாரிகள் திடீர் என திரும்ப முடியாமல் திரும்பி உடனடியாக பிரேக் போடுவதால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி விடுகிறது. இதுவரை இந்த இடத்தில் நடந்த எந்த விபத்திலும் ஏதும் உயிர்சேதம் இல்லை.

    இந்த  இடத்தில் இப்படி அடிக்கடி இதேபோல் லாரி கவிழ்வது தொடர்கிறது. அடிக்கடி செல்லும் வழக்கமான டிரைவர்கள் லாரி ஓட்டினால் விபத்து நடப்பது இல்லை. புதிய டிரைவர் வந்தால் இதுபோல் லாரியினை கவிழ்ப்பது மற்றும் தேர்நிலை மீது மோதி சேதம் ஏற்படுத்துவதும் வாடிக்கை ஆகிவிட்டது. 

    இந்த விபத்துடன் இதுவரை ஒன்பது விபத்து ஒரேமாதிரி நடந்துள்ளது. இனியாவது  விபத்தினை தடுக்க இந்த இடத்தில் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது வடக்கு ராஜ வீதியில் வேகத்தினை கட்டுப்படுத்த ரப்பர் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பெருந்துறை அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    அரியலூர் மாவட்டம் பூண்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவரது மனைவி சகாயச்செல்வி (25). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வினில்குமார் (4) என்ற மகனும், மாளவிகா (1) என்ற மகளும் இருந்தனர்.

    பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுபுதூர் பகுதியில் ரமேஷ் தனது குடும்பத்துடன் தங்கி வசித்து வருகிறார். ரமேஷ் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சகாயச் செல்வி 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ரமேஷ் குடும்ப செலவுக்கு சரியாக பணம் தருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் கணவன- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ரமேஷ், சகாயச் செல்வியை திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து ரமேஷ் திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். கணவர் திட்டியதால் மன வருத்தத்தில் இருந்த சகாயச்செல்வி தனது குழந்தைகள் வினில்குமார், மாளவிகா ஆயோரை அழைத்து கொண்டு வீட்டு அருகே உள்ள கிணற்று பகுதிக்கு சென்றார்.

    60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தனது 2 குழந்தைகளை வீசி விட்டு சகாயச்செல்வியும் குதித்தார். இதில் 2 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். ஆனால் சகாயச் செல்வி தட்டுதடுமாறி கிணற்றின் படிகட்டுகளை பிடித்து உயிர் தப்பினார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் கிணற்றில் இறங்கி காயங்களுடன் மயங்கி கிடந்த சகாயச்செல்வியை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் வினில்குமார், மாளவிகா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சகாயச் செல்வியை போலீசார் கைது செய்து கோவை பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு அருகே சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாக தனியார் நிறுவன சூப்பர்வைசரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு அடுத்த சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சஞ்சய் ( வயது 25). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமி பின்னால் சஞ்சய் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து என்னுடன் பேச வேண்டும் என தொந்தரவு செய்துள்ளார்.

    இதேபோல் அந்த சிறுமியின் செல்போனுக்கு அடிக்கடி குறுஞ்செய்தி செய்தும் தொந்தரவு செய்துள்ளார்.

    இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக சிறுமியின் பெற்றோர் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுமிக்கு சஞ்சய் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து சஞ்சை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
    சத்தியமங்கலத்தில் இன்று அதிகாலை சுவரில் துளைபோட்டு நகை கடையில் 3 வாலிபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் சாலையில் ஏராளமான நகை கடைகள், துணி கடைகள் செயல்பட்டு வருகின்றன. எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும் இந்த சாலையில் ஆள் நடமாட்டமும் அதிக அளவில் இருக்கும்.

    இந்த பகுதியில் பத்ரிநாதன் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இந்த கடையில் வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையின் உரிமையாளர் கடையை பூட்டி விட்டு சென்றார்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் 3 வாலிபர்கள் நகை கடையில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அங்கு வந்துள்ளனர். அவர்கள் நகை கடையின் பக்கவாட்டு சுவரில் டிரில்லர் மூலம் துளை போட்டு கொண்டிருந்தனர்.

    டிரில்லர் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது நகை கடையில் 3 வாலிபர்கள் துளை போட்டு கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் திருடன் திருடன் என சத்தம் போட்டனர்.

    இதையடுத்து மர்ம நபர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் இதுகுறித்து நகை கடையின் உரிமையாளர் பத்ரிநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். மேலும் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது நகை கடையின் பக்கவாட்டு சுவரில் ஒரு ஆள் உள்ளே செல்லும் அளவுக்கு துளை போடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் வெளியே வந்ததால் நகை கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் தப்பியது தெரிய வந்தது.

    மேலும் கொள்ளை முயற்சி நடந்த நகை கடையில் காவலாளி நியமிக்கப்படவில்லை. ஆனால் கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் பொருத்தப்பட்டு இருந்தது. அந்த கேமராக்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது 3 வாலிபர்கள் கொள்ளையடிக்க வந்தது பதிவாகி இருந்தது. மேலும் அவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

    கொள்ளை முயற்சி நடந்த நகை கடைக்கு துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    போலீசார் அந்த பகுதி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி கொள்ளையர்கள் எந்த வழியாக தப்பி சென்றனர் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    ×