என் மலர்
ஈரோடு
அந்தியூர்:
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு (கியாஸ்) உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
இதனை கண்டித்து பல மாநிலங்களில் எதிர்க் கட்சிகள் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றன.
மேலும் ஒரு சில இடங்களில் பொது மக்கள் விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து தங்களுடைய வேதனைகள், மனக் குமுறல்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் அப்பகுதி பொதுமக்கள் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த போஸ்டர் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த போஸ்டரில் 2014-ம் ஆண்டு சிலிண்டர் விலை ரூ.410 ஆக இருந்தது என்றும் தற்போது 2022-ம் ஆண்டு 980 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றும் கடுமையான விலை ஏற்றத்தால் எங்களை விட்டு வெகு தூரம் சென்ற உன்னை நினைத்து ஏங்கும் இல்லத்தரசிகள் என்று வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே புஞ்சைதுறையம் பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி (55), கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி, கர்நாடகா மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்ற மூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை. மூர்த்தியின் மகன்கள் கார்த்தி மற்றும் பிரபுகுமார் ஆகியோர் பல்வேறு இடங்களில் தந்தை மூர்த்தியை தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 31-ந் தேதி சத்தியமங்கலம் பஸ் நிலைய பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக கார்த்திக்குக்கு வாட்ஸ் அப்பில் தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து கார்த்திக் சத்தியமங்கலம் பஸ் நிலையம் சென்று பார்த்த போது, முகம் அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் இருந்தது. அந்த நபருடைய உருவம் அவரது தந்தையை போன்ற தோற்றத்துடன் இருந்ததால், இறந்து கிடந்தது தனது தந்தை தான் என கார்த்திக் முடிவு செய்தார்.
உடனே உடலை எடுத்துக்கொண்டு புஞ்சை துறையம்பாளையம் கொண்டு சென்று அந்த உடலை முறைப்படி சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தார். இந்நிலையில் மூர்த்தி திடீரென நேற்று இரவு உயிருடன் வீடு திரும்பினார்.
அவரை பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும் பின்னர் மகிழ்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் உடனடியாக மூர்த்தி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதனால் புஞ்சை துறையம்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது, அடக்கம் செய்யப்பட்ட அந்த நபர் யார்? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இதனால் அடக்கம் செய்யப்பட்ட அந்த நபரின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... இந்தியாவில் கடந்த 716 நாட்களில் இல்லாத அளவில் குறைந்த கொரோனா பாதிப்பு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலை கிராமம், குன்றி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி. நிறைமாத கர்ப்பிணியான சிவகாமிக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது.
இதனை அடுத்து அவரது உறவினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்சில் மருத்துவ குழுவினர் அங்கு வந்து சிவகாமியை ஆம்புலன்சில் அழைத்துக் கொண்டு பிரசவத்திற்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.சிவகாமி கணவரும் உடனிருந்தார்.
ஆம்புலன்ஸ் கெம்பநாயக்கன்பாளையம் அருகே வந்தபோது சிவகாமிக்கு பிரசவ வலி அதிகரித்தது.நிலைமையை புரிந்துகொண்ட கடம்பூர் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சிவகாமிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர். அப்போது சிவகாமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் அஜித் குமார் மற்றும் வாகன ஓட்டுனர் அரப்புலி சாமியை பொதுமக்கள் பாராட்டினர்.
ஈரோடு மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியதையொட்டி கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கிறது. இதனால் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து அனல் காற்று வீசி வருகிறது.
இதனால் பெரும்பாலான பொதுமக்கள் பகல் வேளையில் வெளியில் வர தயக்கம் காட்டி வருகிறார்கள். மேலும் முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மற்றும் பெண்களும் குடைபிடித்தபடியே சென்று வருகிறார்கள். மேலும் இளம்பெண்கள் தங்கள் துப்பட்டாவால் தலையை மூடி கொண்டே செல்கிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வருவதால் பொதுமக்கள் பலர் நீர் நிலைகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகிறார்கள்.
கொடிவேரி அணையில் பெரும்பாலும் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை வாய்க்காலில் பாசனத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மற்றும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் கொடிவேரி அணையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கொவேரி அணைக்கு வந்திருந்தனர்.
மேலும் ஈரோடு மாவட்ட மட்டுமின்றி கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்கள் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த உணவு வகைகளை அங்கேயே அமர்ந்து சாப்பிட்டனர்.
மேலும் பலர் அணையின் வெளி பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டனர். இதில் பலர் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்திருந்தனர். இதனால் அணை பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ரோட்டோரங்களில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.
இதனால் அணைப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் அணைக்கு வரும் பொதுமக்களிடம் பாதுகாப்பாக அணையில் குளிக்க வேண்டும் என வலியுறுத்தி கண்காணித்தனர்.
கொடிவேரி அணைக்கு கடந்த 2-ந் தேதி 4 ஆயிரத்து 217 பேர் வந்தனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அணைக்கு வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர். இதனால் 2-ந் தேதி ரூ.25 ஆயிரத்து 905 வசூலானது. நேற்று மட்டும் 54 ஆயிரத்து 345 ரூபாய வசூலானதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






