என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி:

    வங்க கடலில் உருவான புரெவி புயல் காரணமாக கடலோர மாவட்டமான கடலூர் பகுதியில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நேற்று விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக கடலூர் நகர் பகுதியில் உள்ள கூத்தப்பாக்கம், பாதிரி குப்பம், செம்மண்டலம், குண்டுஉப்பலவாடி, கடலூர் முதுநகர் உள்ளிட்ட பகுதியில் மழைநீர் சாலைகளில் ஆறாக ஓடியது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகர் பகுதியில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக பண்ருட்டி அருகே கீழிருப்பு, மதுராபெரியகாட்டுப் பாளையத்தை சேர்ந்த தனமயில் இறந்து போனார்.

    இவர் தனது ஓடு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.

    இதேபோல் பண்ருட்டி அருகே நத்தம்காலனி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் சஞ்சனா வீட்டின் சுவர் இடிந்து பலியானார்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் பண்ருட்டி பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து வருகிறது. இதனால் அங்குள்ளவர்கள் தவித்து வருகின்றனர்.
    பெருமாள் ஏரி திறப்பால் அகரம், பூண்டியாங்குப்பம், பெரியபட்டு உள்பட 23 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    பண்ருட்டி:

    கடலூரை அடுத்த ஆலப்பாக்கம் அருகே பெருமாள் ஏரி உள்ளது. தொடர் மழை காரணமாக இந்த ஏரி முழு கொள்ளளவான 6½ அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் 9,800 கனஅடி உபரிநீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    இதன் காரணமாக ஆதிநாராயணபுரம், திருச்சோபுரம், ஆலப்பாக்கம், அகரம், பூண்டியாங்குப்பம், பெரியபட்டு உள்பட 23 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இந்த கிராமங்களை எந்த நேரத்திலும் வெள்ளம் சூழ்ந்து விடும் அபாய நிலை உள்ளதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையிலான மீட்பு குழுவினர் அதிரடி நட வடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    புரெவி புயலால் தொடரும் கனமழை காரணமாக சிதம்பரத்தில் 34 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
    கடலூர்:

    வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடிப்பதால் மிக கனமழை தொடர வாய்ப்பு உள்ளது.

    புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34  செ.மீ., பரங்கிப்பேட்டையில் 26 செ.மீ., காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடியில் 25 செ.மீ., பேச்சியார்தோப்பு 20, புவனகிரி 19 செ.மீ., கொத்தவாச்சேரியில் 33 செ.மீ., லால்பேட்டையில் 29 செ.மீ. மழை பதிவானது.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 22 செ.மீ., குடவாசலில் 21 செ.மீ., நன்னிலத்தில் 14 செ.மீ., வலங்கைமானில் 13 செ.மீ. மழை பதிவானது.

    மயிலாடுதுறை கொள்ளிடத்தில் 33 செ.மீ., சீர்காழி 19 செ.மீ., தரங்கம்பாடியில் 5 செ.மீ. மழை பதிவானது.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 20 செ.மீ., தங்கச்சிமடத்தில் 8 செ.மீ., பாம்பனில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    கரூர் மாவட்டத்தில் பாலவிடுதி 5 செ.மீ., மயிலம்பட்டி 4 செ.மீ., கிருஷ்ணாபுரம், மாயனூர், அரவக்குறிச்சியில் தலா 2 செ.மீ. மழை பதிவானது.

    அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் 11 செ.மீ., திருமானூர் 9.7 செ.மீ., செந்துறை 9.5 செ.மீ., அரியலூரில் 7.4 செ.மீ. மழை பதிவானது.

    பெரம்பலூர், மன்னார்குடியில் தலா 10 செ.மீ., உத்திரமேரூரில் 7 செ.மீ., காஞ்சிபுரத்தில் 4 செ.மீ., ஸ்ரீபெரும்புதூரில் 3 செ.மீ. மழை பதிவானது.

    திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை, ஜீரோ பாயிண்ட்டில் தலா 11 செ.மீ., சோழவரத்தில் 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
    வேப்பூரில் மினிலாரி மோதி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பூர்:

    வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அபுசாலி (வயது 30). இரவது மனைவி சரிபா (27). மகன் முகமது ரியாஸ்(8). அபுசாலி நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் அடரியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வேப்பூர் கூட்டு ரோடு பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக அவர்களுக்கு பின்னால் வந்த மினிலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனளிக்காமல் அபுசாலி, முகமது ரியாஸ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சரிபாவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருத்தாசலம் அருகே தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த சின்ன கண்டியங்குப்பத்தை சேர்ந்தவர் அரசன் (வயது 67). இவரது மனைவி பானுமதி (55). இவர்களுக்கு ஜோதிமுருகன் (35) என்கிற மகன் உள்ளார். 

    இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த 27-ந்தேதி பானுமதி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால் ஜோதிமுருகன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அம்மா இறந்த துக்கம் தாங்காமல் நேற்று மாலை ஜோதிமுருகன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் அருகே மனைவியை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் வண்டிப்பாளையம் சுரேஷ்நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34). தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி (35). இவர் கடலூரில் உள்ள பிரபல தனியார் மின்சாதன பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

    இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று விஜயலட்சுமியை சுரேஷ் ஆபாசமாக திட்டி, தாக்கியதோடு, உனது பெற்றோரிடம் இருந்து நகை, பணம் வாங்கிவர கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. 

    இது பற்றி விஜயலட்சுமி கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுடர்மதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

    கடலூரில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய செயலாளர் அய்யாதுரை, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

    இதில் மக்கள் அதிகாரம் கடலூர் ஒருங்கிணைப்பாளர் நந்தா, வட்டார செயலாளர் ரவி, ஆனந்தி, புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் மணியரசன் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். 

    முன்னதாக அவர்கள் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி புதுடெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்தும், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    விருத்தாசலம் அருகே மணிமுக்தாற்றில் கட்ட இருந்த தடுப்பணை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த பெருந்துறை -பவழங்குடி கிராமங்களுக்கு இடையே மணிமுக்தாறு பாய்ந்தோடுகிறது. இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் ரூ.11 கோடி செலவில் பொதுப்பணித்துறை சார்பில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டது. இந்நிலையில் பெருந்துறை -தே.பவழங்குடி இடையே அமைக்கப்பட இருந்த தடுப்பணை கட்டும் திட்டத்தை மாற்றி கோட்டுமுளை அருகே மணிமுக்தாற்றில் தடுப்பணை கட்ட அதிகாரிகள் முடிவு செய்து இருப்பதாக பெருந்துறை கிராம மக்களிடையே தகவல் பரவியது.

    இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் லலிதா சந்திரசேகர் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர் பாக்யராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அய்யாயிரம், குணசேகர், கருணாநிதி, தமிழரசன், பூமாலை உள்ளிட்ட பலர் விருத்தாசலம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு திரண்டு வந்து, முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிராம மக்களை சமாதானம் செய்தனர். அப்போது அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் கிராம மக்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதி அளித்தனர். இதையேற்ற கிராம மக்கள், பெருந்துறை மணிமுக்தாற்றில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பகுதியில் தடுப்பணை கட்டாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று கூறி அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை இறந்த சோகத்தில் கடலூர் முதுநகரில் பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் கள்ளசெட்டி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ராகவி (வயது 25), என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். இவரது தந்தை ராஜேந்திரன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது தாயார் சித்ரா பிரான்ஸ் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். ராகவி அவரது உறவினரான கடலூர் முதுநகரை சேர்ந்த ராமலிங்கம் என்பவருடைய பாதுகாப்பில் வசித்து வந்தார். ராகவி என்ஜினீயரிங் படிக்கும்போது, தன்னுடன் படித்த புதுச்சேரியை சேர்ந்த சங்கேஷ் என்பவரை காதலித்து வந்தார். இதையறிந்த இருவருடைய குடும்பத்தினரும் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, கடந்த மாதம் நிச்சயதார்த்தம் செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சங்கேஷ் உடல்நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தார்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராகவி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராகவி உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை உயிரிழந்த சோகத்தில் பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    ஸ்ரீமுஷ்ணம்:

    வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மிககன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது.

    கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுநகர், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், வண்டி பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று காலைமுதல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக் கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் களம் போல் தேங்கிநின்றது.

    மழையின் காரணமாக காலைநேரத்திலும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். பாத சாரிகள் மழையில் நனைந்த படியும், குடை பிடித்த படியும் சென்றதை காண முடிந்தது.

    ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுபட்டார பகுதி களான தேத்தாம்பட்டு, ஸ்ரீநெடுஞ்சேரி, சாத்தமங்களம், குணமங்களம், சுத்துகுறிச்சி, பாளையங்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 4 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு இரவு முழுவதும் பெய்து கொண்டே இருந்தது.

    இதனால் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள வியாசமணி தெரு, எம்.ஜி.ஆர்.நகர், மலைமேடு, பாணக்கார தெரு பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர்புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் சரியாக தூர்வாராபடாமல் இருப்பதால் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் இரவில் வீடுகளில் தூங்க முடியாமல் கடும் அவதியடைந்தோம்.

    வடிகால் வாய்க்காள்களை தூர்வாரவேண்டும் என்று சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகளுடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் பெண்ணாடம் சுற்றுவட்டாரபகுதிகளில் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடிய விடிய தொடர் மழை காரணமாக பெண்ணாடத்தில் கடை வீதி மற்றும் பஸ் நிலையம் திட்டக்குடி விருத் தாசலம் சாலையில் பொதுமக்கள் இன்றி வெறிச் சோடி காணப்பட்டது.

    தினந்தோறும் காலை 7 மணிக்கு வணிகர்கள் தங்களது வணிக நிறுவன ங்களை திறப்பது வழக்கம் மழை காரணமாக 8 மணியாகியும் யாரும் கடைகளை திறக்க வில்லை. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தேங்கிய மழை நீரை அகற்ற வராததால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை பொதுமக்களே சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    வீராணம் ஏரி நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கரையோர பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக திருமண மண்டபங்கள், முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடந்த 2 நாட்களாக காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது.

    இன்று காலை ஏரியின் நீர்மட்டம் 45.90 அடியாக இருந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி வடவாறில் இருந்து ஏரிக்கு வரும் நீர் குறைக்கப்பட்டு 51 கனஅடி நீர்மட்டுமே வந்து கொண்டிருந்தது. தற்போது ஏரியின் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. ஏரியில் இருக்கும் தண்ணீரை வி.என்.எலஸ். மதகு வழியாக 90 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அரியலூர் மாவட்டம் செங்கால்ஓடையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று காலை வரை 41 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர் மழை காரணமாக நேற்று மதியம் அது 110 கனஅடி நீராக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி வடவாறில் இருந்து வரும் தண்ணீரின் அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர் மழை காரணமாக வடவாறுக்கும் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் வடவாறில் இருந்து இன்று மதியத்துக்கு மேல் 900 கனஅடி நீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட உள்ளது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயரக்கூடும். அதற்கேற்ப ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து வீராணம் ஏரியை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் மணல் மூட்டைகளை கொண்டு வீராணம் ஏரியின் கரையை பலப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அதேபோல் வீராணம் ஏரியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதி பொதுமக்களிடையே வீராணம் ஏரி நிரம்பி வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

    வீராணம் ஏரி நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கரையோர பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக திருமண மண்டபங்கள், முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

    தற்போது வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக ராட்சத குழாய் மூலம் 68 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    விருத்தாசலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் வேல்முருகன் (வயது 37) விவசாயி. இவருக்கு உஷா என்கிற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உஷா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் கார்கூடல் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வேல்முருகன் உஷாவை நேரில் சந்தித்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு உஷா மறுத்து விட்டார்.

    இதனால் மனமுடைந்த வேல்முருகன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், வேல்முருகன் உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×