என் மலர்tooltip icon

    கடலூர்

    ராமநத்தம் அருகே டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1½ லட்சம் திருடிய மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ராமநத்தம்:

    கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே உள்ள செங்கமேடு பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 47). இவர் ராமநத்தம் அருகே பெரங்கியத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு 8 மணி அளவில் வேலை முடிந்ததும், கடையில் வசூலான ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 630 ரூபாயை, பையில் வைத்துக் கொண்டு கடையை பூட்டினார். பின்னர் அவர் கடையின் அருகில் நிறுத்தியிருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் ஒயர் அறுந்து கிடந்ததால், பிரசன்னா பணம் இருந்த பையை மோட்டார் சைக்கிள் பெட்டியின் மீது வைத்து விட்டு, சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர், மோட்டார் சைக்கிள் பெட்டியின் மீது வைத்திருந்த பணத்தை திருடினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரசன்னா, திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர். இதுகுறித்த புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா, ராமநத்தம் இன்ஸ்பெக்டர் ஜெயகீர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் பணத்தை திருடி விட்டு தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    வடலூர் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை போனது. மேலும் 2 வீடுகளில் திருட முயற்சி நடந்துள்ளது.
    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் ராகவேந்திரா சிட்டி 5-வது தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 52). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு, நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சிவகுமார் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் வைக்கப்பட்டிருந்த 28 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

    இதேபோல் 8-வது தெருவில் வசித்து வரும் ஞானப்பிரகாசம் மனைவி அந்தோணிமேரி(65) என்பவருடைய வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ.12 ஆயிரம் ரொக்கத்தையும் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த 2 வீடுகளிலும் கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.

    மேலும் என்.எல்.சி. ஆபீசர் நகரில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி மனைவி சாந்தா என்பவருடைய வீடு மற்றும் அதே தெருவில் வசித்து வரும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சக்கரவர்த்தி ஆகியோரது வீடுகளிலும் மர்மநபர்கள் திருட முயன்றனர். அப்போது அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால், மர்மநபர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

    இந்த சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் கொள்ளை நடந்த வீடுகள் மற்றும் திருட்டு முயற்சி நடந்த வீடுகளை பார்வையிட்டு, அங்கு பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் இதுகுறித்த தனித்தனி புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவு அடுத்தடுத்து 4 வீடுகளில் நடைபெற்ற கொள்ளை, திருட்டு முயற்சி சம்பவங்களால் வடலூர் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
    கடந்த 1 வாரமாக இந்த பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் வெள்ளாற்று தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்துள்ள சவுந்திரசோழபுரம்- அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை இணைக்கும் வெள்ளாற்று தரைப்பாலம் உள்ளது.

    அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் கோட்டைக்காடு, ஆதனக்குறிச்சி, பாசிகுளம், முள்ளுக்குறிச்சி உட்பட சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். வெள்ளாற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் முடிவடையாமல் உள்ளதால் அருகில் உள்ள தரைப்பாலத்தை 2 மாவட்ட மக்களும் பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 1 வாரமாக இந்த பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் வெள்ளாற்று தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

    இதனால் 2 மாவட்டத்தையும் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 கிராம மக்களும் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.

    இதே போல் செம்பேரி-தெத்தேரி இடையே வெள்ளாற்றின் குறுக்கே உள்ள செம்மண் சாலையும் துண்டிக்கபட்டது. இதனால் கடலூர் -அரியலூர் மாவட்ட கிராம மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். 

    முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் ரமேஷ் எம்.பி.யிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு 1 நாள் அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
    கடலூர்:

    கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தராசு (வயது 55). பா.ம.க. பிரமுகர். தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்தார்

    கடந்த மாதம் 19-ந் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் இறந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 9-ந்தேதி அதிகாலை கடலூர் எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லாப்பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ரமேஷ் எம்.பி. தவிர மற்ற 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    தி.மு.க. எம்.பி. ரமேஷ்

    இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி பண்ருட்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டு 1-ல் ரமேஷ் எம்.பி. சரணடைந்தார். சரண் அடைந்த ரமேஷ் எம்.பி.யை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ரமேசுக்கு நடத்தபட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யபட்டது.

    இந்த நிலையில் கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று ரமேஷ் எம்.பி.யை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணை நீதிபதி பிரபாகரன் தலைமையில் நடந்தது. ரமேஷ் எம்.பி. தரப்பில் வக்கீல்கள் சிவராஜ், கதிர்வேலன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரமேஷ் எம்.பியை தங்கள் வசம் எடுத்து 2 நாட்கள் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பிரபாகரன், இந்த வழக்கு தொடர்பாக ரமேஷ் எம்.பி.யிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு 1 நாள் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.


    கானூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கானூர் கிராமத்தை சேர்ந்தவர் அமலநாதன் (வயது 55) தொழிலாளி. இவர் அதே பகுதியில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை, அரசு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு ஏற்றி செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் அடிப்பகுதியில் அமலநாதன் படுத்து தூங்கியதாக தெரிகிறது.

    இதுபற்றி அறியாத டிரைவர் லாரியை இயக்கினார். இதில் லாரியின் அடியில் படுத்து தூங்கிய அமலநாதன், பின்பக்க சக்கரத்தில் சிக்கி, உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார், விரைந்து வந்து, பலியான அமலநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜரான கடலூர் எம்.பி ரமேஷுக்கு 2 நாட்கள் நீதிமன்ற விதிக்கப்பட்டுள்ளது.
    பண்ருட்டி:

    பா.ம.க. பிரமுகர் கோவிந்தராசுவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததையடுத்து அவரது மர்ம மரணம் கொலை வழக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாற்றினர்.

    இந்நிலையில் கடலூர் எம்.பி. ரமேஷ் இன்று காலை பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு 2 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி கற்பகவள்ளி உத்தரவிட்டார். 
    பா.ம.க. பிரமுகர் கோவிந்தராசுவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததையடுத்து அவரது மர்ம மரணம் கொலை வழக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாற்றினர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல் மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராசு (வயது 55). பா.ம.க. பிரமுகர்.

    இவர் பணிக்கன் குப்பத்தில் உள்ள கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்தார். கடந்த மாதம் 19-ந் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் இறந்தார். இதனை தொடர்ந்து கோவிந்த ராசுவின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் கோவிந்தராசுவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கோவிந்த ராசுவின் மர்ம மரணம் வழக்கை கொலை வழக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாற்றினர்.

     கைது

    இது தொடர்பாக கடலூர் எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லாப்பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ரமேஷ் எம்.பி. தவிர மற்ற 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்பதாக ரமேஷ் எம்.பி. கூறியிருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை பண்ருட்டி நீதிமன்றத்தில் ரமேஷ் எம்.பி. சரணடைந்தார்.


    இதையும் படியுங்கள்...அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள்: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
    கடலூர் மாவட்டத்தில் 63 ஆயிரத்து 625 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 63 ஆயிரத்து 625 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 861 பேர் பலியான நிலையில், 62 ஆயிரத்து 437 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 22 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிதம்பரத்தை சேர்ந்த 54 வயதுடைய பெண்ணும், 58 வயதான நபரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த பெண் உள்பட 2 பேரும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கடலூர் முதுநகரில் காபியில் விஷம் கலந்து குடித்த தாய், மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் ஏணிக்காரன் தோட்டம் புதுசுனாமி நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி அம்மு(வயது 43). இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சம்பவத்தன்று அம்முவும், அவருடைய மகள் நரேஷனியும்(16) காபியில் விஷம் கலந்து குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தாய், மகளை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரும் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தாய், மகள் இருவரும் எதற்காக காபியில் விஷம் கலந்து குடித்தனர் என்பது குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் அருகே ரெட்டிச்சாவடி, திருப்பணாம்பக்கம், தூக்கணாம்பாக்கம், வெள்ளப்பாக்கம், நெல்லிக்குப்பம், உச்சிமேடு, கீழ்குமாரமங்கலம், விநாயகபுரம், குமரப்பன் ரெட்டிசாவடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கடலூர் பகுதியில் இடி-மின்னலுடன் பெய்த தொடர் மழையால் உச்சிமேடு, கீழ்குமாரமங்கலம், விநாயகபுரம், குமரப்பன் ரெட்டிசாவடி ஆகிய கிராமங்களில் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த நெய்பயிர்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கி அழுகின. ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. இதனால் என்னை போன்ற பல விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.
    நெய்வேலி கைலாசநாதர் கோவில் பூட்டை உடைத்து சாமி சிலைகள் திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி நகரம் வட்டம் 21 பகுதியில் சிவகாமி அம்மையார் உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை வழக்கம்போல் அதேபகுதியை சேர்ந்த கோவில் ஊழியர் ரமேஷ் என்பவர் கோவில் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது கருவறை கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷ் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட 7 கிலோ எடை கொண்ட சிவகாமி அம்மையார் சிலை, 6 கிலோ எடை கொண்ட நந்தி மீது அமர்ந்திருந்த சிவன், பார்வதி சிலை மற்றும் 4 தங்க காசுகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் யாரோ? திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிந்து, கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் மற்றும் தங்க காசுகளை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கோவில் பூட்டை உடைத்து சாமி சிலைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மின்னல் தாக்கியதில், பலியான ஆடுகளை பார்வையிட்ட கால்நடை மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் வருவாய்த்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்து புதைத்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ஸ்ரீமுஷ்ணம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சின்னத்துரை மனைவி இன்பவள்ளிக்கு சொந்தமான 8 ஆடுகளும், தென்பாதி பகுதியை சேர்ந்த ராசமாணிக்கம் மகன் ஆறுமுகத்துக்கு சொந்தமான 5 ஆடுகளும் வீட்டின் அருகே மேய்ச்சலில் இருந்தது. அப்போது மின்னல் தாக்கியதில் மேய்ந்து கொண்டிருந்த 13 ஆடுகளும் பலியானது.

    இதுபற்றி தகவல் அறிந்த கால்நடை மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மின்னல் தாக்கியதில், செத்த ஆடுகளை பார்வையிட்டதோடு, உடற்கூறு ஆய்வு செய்து, புதைத்தனர்.
    ×