என் மலர்
கடலூர்
சிதம்பரம் மாரியப்பா நகரைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவரது மகன் பாண்டியன் (வயது 61). இவர் சொந்தமாக அச்சகம் ஒன்றை நடத்தி வந்தார்.
சம்பவத்தன்று பாண்டியன் சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் எதிரில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த அரசு பஸ் பாண்டியனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பாண்டியின் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் பின் சக்கரம் பாண்டியன் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த பாண்டியன் அண்ணாமலை பல்கலைக்கழக அச்சகத்தில் பைண்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
பண்ருட்டி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (60) விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் 2 ஏக்கரில் பன்னீர் கரும்பு பயிரிட்டு இருந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி இந்த பன்னீர் கரும்புகளை அறுவடை செய்து 4 லாரிகளில் சென்னைக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றார்.
ஊரடங்கு மற்றும் பல்வேறு காரணங்களால் கரும்பு எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை. இதனால் அவருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. மனவருத்தத்தில் இருந்து வந்த கிருஷ்ணமூர்த்தி தனது நிலத்தில் உள்ள மோட்டார் கொட்டகையில் பயிருக்கு அடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த விஷத்தை குடித்தார்.
இதனால் மயக்கமடைந்த அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டுவந்தனர். வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சமேதா ஆகியோர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் ‘ஒமைக்ரான்’ கொரோனா வைரஸ் அச்சுறுத்தும் சூழலில் பொதுமக்கள் அதிகமான அளவில் கூடும் இடங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகையால் பொதுமக்கள் கூட்டம் கூடாமல், அவசியமில்லாமல் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் ஜவுளி கடை முதல் பெட்டிக்கடை உள்ளிட்ட அனைத்து கடை உரிமையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
தங்கள் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடைகளை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை பொதுமக்கள் பின்பற்றும் பொருட்டு அபராதத் தொகை 200 ரூபாயிலிருந்து ரூ.500 ஆக உயர்த்தி தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணிவதன் மூலம் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். இரண்டாவது தவணை தடுப்பூசி போடாத நபர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நாளில் தேவையின்றி சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்த 81 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 9 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இது தவிர நோய் பரவலை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசமும் வழங்கி வருகின்றனர். இருப்பினும் இதை மீறியும் முக கவசம் அணியாமல் சிலர் சுற்றித்திரிந்து வருகின்றனர். அவர்களிடம் அபராத தொகை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 742 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 400 அபராதம் வசூல் செய்யப்பட்டது. கடந்த 1-ந்தேதி முதல் இதுவரை முக கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 14 ஆயிரத்து 529 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.29 லட்சத்து 19 ஆயிரம் அபராத தொகையை வசூல் செய்தனர்.
விருத்தாசலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, முக கவசம் அணியாமல் இருந்ததற்காக 2 வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம், 14 கடைகளுக்கு தலா ரூ. 500, 17 தனிநபர்களுக்கு ரூ. 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
விருத்தாசலத்தில் உள்ள 33 வார்டுகளிலும் 94 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் வீதிகளை மீண்டும் தகரங்களை கொண்டு அடைத்து வருகின்றனர்.
விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட ஜங்ஷன் ரோடு, வி.என்.ஆர். நகர் செல்லும் வழி, ஆலடி ரோடு, தெற்கு பெரியார் நகர், டிரைவர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
இதனால் நகராட்சி ஆணையாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உத்தரவின்பேரில் அந்த பகுதிகளுக்கு செல்லும் பாதை அனைத்தும் தகரத்தால் அடைக்கப்பட்டு வெளிநபர்கள் யாரும் அந்த பகுதிகளுக்குள் செல்லமுடியாதபடி தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாலசந்தர், சுகாதார ஆய்வாளர் ராஜா மற்றும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கையில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் எச்சரிக்கை விடுத்து வருகின்றது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 353 பேருக்கு கொரோனா பரவல் அசுர வேகத்தில் உயர்ந்து வந்த நிலையில், நேற்று கடலூர் மாவட்டத்தில் 305 பேர்களுக்கு தொற்று பரவல் இருந்து வந்தது. இதன் காரணமாக நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் புதுநகர், திருப்பாதிரிப்புலியூர், வேப்பூர், அண்ணாமலை நகர், சேத்தியாதோப்பு, திட்டக்குடி, விருத்தாசலம், சிதம்பரம் மற்றும் ஆயுதப்படை போலீஸ் என கடந்த 2 நாட்களில் 15 போலீசார் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொரோனா தொற்று பரவல் உள்ளதா? என்பதனை பரிசோதனை செய்தனர்.
இதில் கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், தலைமை எழுத்தர் முகிலன் மற்றும் அந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த 15 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் அவர்களை சார்ந்த பலருக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளதா? என்பதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் போலீசார் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், அனைத்து போலீசாரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கடலூர்:
தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான், கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த வெள்ளி, சனி, ஞாயிறு வழிபாட்டுத்தலங்கள் மூடுவது, பஸ், தியேட்டர், ஓட்டல்கள், சலூன் கடைகள், நகைக் டைகள், துணிக்கடைகளில் 50 சதவீதம் பொதுமக்கள் அனுமதிக்க வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்பட்டு உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நபருக்கு கொரோனா இருந்து வந்த நிலையில் நேற்று 308 பேருக்கு கொரோனா தொற்று பரவும் ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் எந்தவித அரசு உத்தரவை பின்பற்றாமல் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் மீன்கள் வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் அவரவர்களுக்கு தேவையான மீன்கள் மற்றும் இறைச்சிக் கடைகளில் இறைச்சிகள் போன்றவற்றை வாங்கி சென்றனர். இந்த நிலையில் நாளை 17 ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு உத்தரவு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று அதிகாலை முதல் கடலூர் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போட்டிபோட்டுக்கொண்டு மீன் வாங்கி சென்றதைக் காண முடிந்தது.
அப்போது முன்பு இருந்தது போல் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் எந்தவித அரசு கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் வழக்கம்போல் பொதுமக்கள் செயல்பட்டது கடலூர் மாவட்டத்தில் தொற்று நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் நிலவி உள்ளது.
இது மட்டுமின்றி பொதுமக்கள் மீன் வாங்குவதில் மிக உன்னிப்பாக இருந்ததால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்கள் போக்கில் இருந்து மாறாமல் அலட்சியமாக இருந்து வந்ததை காண முடிந்தது.
இந்த நிலையில் கூட்டம் அதிகமாக சேராமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பெருமளவிலான கெடுபிடிகள் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தொற்று நோய் பரவல் முழுவதுமாக குறைப்பதற்கு ஏதுவாக அமையும்.
ஆகையால் பொதுமக்கள் சமூக நலனில் அக்கறைகொண்டு தொற்று நோய் பரவல் ஏற்படாதவாறு செயல்படுவதற்கு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள எம்.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் தாமரைசெல்வன் இவர் நேற்று முன்தினம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பகண்டை அணைக்கட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
தகவல் அறிந்ததும் பண்ருட்டி,நெல்லிக்குப்பம் பகுதியிலிருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 நாட்களாக பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலையில் கரையில் ஒதுங்கிய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாட்டுபொங்கல் தினமான இன்று விவசாயிகளின் நண்பனான மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தடவி, பலவண்ண கயிறுகளை அணிவிப்பர். அப்போது, பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு படையலிட்டு வழிபாடு நடத்துவர். இதற்காக மாடுகளுக்கு தேவையான பல வண்ண கயிறுகள், மணிகள் விற்பனை பண்ருட்டியில் அமோகமாக நேற்று நடந்தது.
பண்ருட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் ஆர்வமுடன் கயிறு, மணி, வர்ணம் ஆகியவைகளை வாங்கி சென்றனர்.






