என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    அரியலூர்:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு காரணமாக கோவில்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. பின்னர் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வருமானமுள்ள கோவில்கள் மட்டும் அரசு அறிவிப்பின்படி திறக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளித்து அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி 5 மாதங்களுக்கு பின் கோவில்கள் நேற்று பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டன. இதில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் கோதண்டராமசாமி கோவில், ஆலந்துறையார் கோவில், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில், திருமழபாடி வைத்தியநாத சுவாமி உள்ளிட்ட அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன. பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு திருநீறு, குங்குமம் ஆகியவற்றை தட்டில் வைத்திருந்தனர். அதில் இருந்து அவற்றை பக்தர்கள் எடுத்து கொண்டனர்.

    மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் நேற்று பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணியாத பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் முக கவசம் வழங்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக கோவில் பிரகார நடைபாதையில் சுண்ணாம்பு கொண்டு வட்டமிட்டு பக்தர்கள் நிற்க வைக்கப்பட்டு, ஒருவர் பின் ஒருவராக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    இதேபோல் கோவிலுக்கு வரும் பக்தர்களின் முகவரியை குறித்து வைத்துக்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்த பிறகே தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 5 மாதங்களுக்குப் பிறகு வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த மாவட்ட பகுதியில் உள்ள அனைத்து வழிப்பாட்டு தலங்களும் நேற்று திறக்கப்பட்டன.
    ஆண்டிமடம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிலுவைச்சேரி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சன்னாசி (வயது 75). கூலித்தொழிலாளியான இவர் ஆண்டிமடத்துக்கு உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சிலம்பூர் ரோட்டிலிருந்து ஆண்டிமடம்-விருத்தாச்சலம் மெயின் ரோட்டில் வரும்போது, சன்னாசியின் காலணி கீழே விழுந்தது.

    இதனையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி காலணியை எடுக்க முயன்றபோது, தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் புழுதிக்குடி கீழத் தெருவை சேர்ந்த மகாராஜன் (64) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சன்னாசி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சன்னாசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கீழே விழுந்ததில் மகாராஜனும் காயம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊரடங்கால் கடன்சுமை அதிகரித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் விளாங்குடி அருகே உள்ள காத்தான்குடிகாடு கிராமத்தில் உள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் காமராஜ்(வயது 35). இவருக்கும் கோவில்சீமை கிராமத்தை சேர்ந்த சவுந்தரியாவுக்கும்(28) கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து 4 வயதில் யாழினி என்ற பெண் குழந்தை உள்ளது. காமராஜ் கோயம்புத்தூரில் சொந்தமாக பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கால் சொந்த ஊரான காத்தான்குடிகாடு கிராமத்திற்கு காமராஜ் வந்தார்.

    இதையடுத்து அவர் வி.கைகாட்டி பகுதியில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக வியாபாரம் இல்லாததால், கடையில் வருமானமின்றி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிலரிடம் காமராஜ் கடன் வாங்கியிருந்தார். கடன் சுமை அதிகரித்த நிலையில், மேலும் சிலரிடம் காமராஜ் கடன் கேட்டபோது, யாரும் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தை எப்படி நடத்தப்போகிறோம் என்ற மனவேதனையில் அவர் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பருத்தி செடிக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) காமராஜ் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் காமராஜை மீட்டு சிகிச்சைக்காக விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட காமராஜை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் காமராஜின் மனைவி சவுந்தரியா புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    திருமானூர் அருகே பெண்ணை கொன்றவர் கைது செய்யப்பட்டார். அவர் குடிபோதையில் கொன்றதாக போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழப்பழுவூர் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் மலர்கொடி (வயது 49). இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் அவரை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் மலர்கொடியை அரியலூர் மாவட்டம் கோவில்சீமை கிராமத்தை சேர்ந்த வீரமுத்து மகன் விஜயபாஸ்கர் (39) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், குடிபோதையில் இருந்த போது, மலர்கொடியின் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றேன். அப்போது, அவர் தடுக்க முயன்றதால் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டேன் என தெரிவித்தார்.

    கைது செய்யப்பட்ட விஜயபாஸ்கர் மீது மலர்கொடியை கொலை செய்த வழக்கு மட்டுமின்றி, கொள்ளை, கொலை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் விஜயபாஸ்கரை அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    உடையார்பாளையம் கிராவல் மண் கடத்தியவரை கைது செய்த போலீசார் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.
    உடையார்பாளையம்:

    உடையார்பாளையம் பகுதியில் நேற்று காலை தாசில்தார் கலைவாணன், ஜெயங்கொண்டம் மண்டல துணை தாசில்தார் ஜானகிராமன், உடையார்பாளையம் வருவாய் ஆய்வாளர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் மகாராஜன் ஆகியோர் மணல் திருட்டு நடக்கிறதா? என்று சோதனை மேற்கொண்டனர். 

    அப்போது செந்துறை அருகே இரும்புலிக்குறிச்சி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த ஜோதிமணியின் மகன் ராமராஜன்(வயது 32), உடையார்பாளையம் பெரிய ஏரி அருகே டிராக்டரில் கிராவல் மண் கடத்தி வந்தது, அதிகாரிகளுக்கு தெரியவந்தது. 

    இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராமராஜனையும், டிராக்டரையும் உடையார்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமராஜனை கைது செய்தனர்.

    அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் 31 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்.

    அரியலூர்:

    அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தன் விருப்ப நிதியிலிருந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் ரத்னா தலைமையில் நடைபெற்றது. அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு தூய்மை பாரத திட்டத்தின் கீழ் 67 ஊராட்சிகளுக்கு மின்கலம் மூலம் இயக்கப்படும் மூன்று சக்கர குப்பைவண்டிகள் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டிலும், மகளிர் திட்டம் சார்பில் வேளாண் இயந்திரவாடகை மையம் அமைத்திட நான்குஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நான்கு கூட்டமைப்புகளுக்கும் மொத்தம் ரூ.40 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்களும் வழங்கினார்.

    தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 நபர்களுக்குரூ.2,92, 500 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களையும், 7 நபர்களுக்கு ரூ.53,200 மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்களும், ரூ.45,000 மதிப்புள்ளநவீன செயற்கைகை ஒரு நபருக்கும், 10 நபர்களுக்கு ரூ.57,500மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், 8 நபர்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களின் கீழ் ரூ.1,45,000மதிப்பிலான காசோலைகளை 31 பயனாளிகளுக்கு ரூ.5,93,200 மதிப்பிலும் என மொத்தம் ரூ.2.71 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    ஜெயங்கொண்டத்தில், திருச்சி-சிதம்பரம் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் திருச்சி-சிதம்பரம் சாலையில் எதிர் எதிரே அமைந்துள்ள 2 பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் பெட்ரோல், டீசல் நிரப்ப வந்து செல்கின்றன. இதே சாலையில் சினிமா தியேட்டர், மருத்துவமனை, வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், ஓட்டல்கள், வாகனம் பழுது நீக்கும் கடைகள், பள்ளிகள் உள்ளன. இங்கு செல்லவும், கும்பகோணம், குறுக்கு ரோடு, மீன்சுருட்டி, சேத்தியாத்தோப்பு, கடலூர், வடலூர், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவும் இலகுரக வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இதே சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் நகராட்சியில் பணிபுரியும் டிரைவர், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், வாலிபர்கள் பலர் இந்த இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளனர். ஜெயங்கொண்டம் கிளை தெருவை சேர்ந்த முதியவர் ஒருவர் இந்த இடத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    மேலும், இந்த சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிக வேகத்துடன் சென்று வருவதால் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

    ஆகவே, இந்த சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    உடையார்பாளையம் அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் மற்றும் போலீசார் நேற்று இடையார் சாலை, தத்தனூர்குடிகாடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்(வயது 25), இடையார் கிராமத்தை சேர்ந்த மணி(28), தத்தனூர்குடிகாடு கிராமத்தை சேர்ந்த அன்புமணி(50) ஆகியோர் அப்பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 55 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    பயிர் கடன் பெற்ற விவசாயிகள் வங்கிகளிலும், கடன்பெறாத விவசாயிகள் அரசின் பொது சேவை மையங்களிலும் ஆன்லைன் மூலம் பிரீமிய தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் இயற்கை சீற்றங்களால் வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு பயிர்களில் ஏற்படும் சேதாரங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையில் தோட்டக்கலை துறை மூலம் பயிர் காப்பீடு செய்ய இலக்கு பெறப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஏக்கருக்கு முறையே ரூ.3,157 மற்றும் ரூ.1,457 என பிரீமியமாக செலுத்த வேண்டும்.

    பயிர் காப்பீடு செய்ய வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும். பயிர் கடன் பெற்ற விவசாயிகள் வங்கிகளிலும், கடன்பெறாத விவசாயிகள் அரசின் பொது சேவை மையங்களிலும் ஆன்லைன் மூலம் பிரீமிய தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
    ஜெயங்கொண்டத்தில் முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி தரைக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட இறைச்சி, மீன், பூக்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு, வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    உலகத்தில் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கடந்த மாதத்தை போலவே இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், விதிமுறைகளை மீறி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விருத்தாசலம் ரோடு, சிதம்பரம் ரோடு, அம்பேத்கர் நகர் மற்றும் செந்துறை சாலைகளில் மீன், இறைச்சி, டீ, பூ விற்பனை நடைபெற்றது. இது பற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறச்செல்வி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நகர்ப்புற பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சிதம்பரம் சாலை மற்றும் விருத்தாசலம் சாலைகளில் சிலர் தரைக்கடைகள் வைத்து மீன் மற்றும் இறைச்சி, டீ, பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். முழு ஊரடங்கு பற்றி விளக்கமாக கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தப்பட்டும், அரசு உத்தரவை மதிக்காமல் முழு ஊரடங்கன்று விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்தது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியது போன்றவற்றுக்காக கடைகளில் இருந்த ஆட்டு இறைச்சி, மீன்கள், டீ கேன்கள், பூக்கள், மாலைகள் போன்றவற்றை பறிமுதல் செய்து, வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இதேபோல் நகர் முழுவதும் 26 கடைகளுக்கு ரூ.10 ஆயிரத்து 600 அபராதமாக விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டது. மேலும் இதுபோல் விதிமுறைகளை மீறாமல், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றி அரசு உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், நடேசன், தமிழரசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பாண்டியன், தம்பிசிவம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ- மாணவிகள் உயர் கல்வி பயில்வதற்கான கல்விக்கடன் பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தொழில் கடன், தனிநபர் கடன், சுயஉதவிக்குழுக்களுக்கான சிறுகடன் மற்றும் கறவைமாடு வாங்க கடனுதவி பெற விரும்புபவர்கள் மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ- மாணவிகள் உயர் கல்வி பயில்வதற்கான கல்விக்கடன் பெற விரும்புபவர்கள் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம் தென்னூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள டாப்செட்கோ மற்றும் டாம்கோ லோன் மேளாவில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம்.

    கடன் பெற பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிக பிற்படுத்தப்பட்டோர் அல்லது சிறுபான்மையின மக்களாக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 60-க்குள் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூ.81 ஆயிரம், நகர்ப்புறமாயின் ரூ.ஒரு லட்சத்து 3 ஆயிரத்திற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். மேலும், ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும்.

    கடன் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், சாதிச் சான்றிதழ் அல்லது பள்ளி மாற்றுச் சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் திட்ட தொழில் அறிக்கை ஆகியவை இணைக்கப்பட வேண்டும். மேலும், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்களில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    திருமானூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள பாளையபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் அபிநயா (வயது 24). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு நடைபெற்ற போதிலும் தொடர்ந்து அங்கு வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான பாளையபாடிக்கு வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். இதைபார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியில்சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன்இன்றி இறந்தார். 

    இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அபிநயாவுக்கு தனியார் மென் பொருள் பணியாற்றியபோது, வேலைப்பளு அதிகமாக இருந்ததாக தெரிகிறது. அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×