என் மலர்tooltip icon

    ஜார்கண்ட்

    • ஜார்க்கண்டில் 8 பஸ்கள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தது.
    • அப்போது பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள கட்கர்கா பகுதியில் தனியார் பஸ் நிறுத்துமிடம் உள்ளது. தொலைதூரங்களுக்குச் செல்லும் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு வருகின்றன.

    இங்கு நிறுத்தப்பட்டிருந்த சில பஸ்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதில் 4 பஸ்கள் முற்றிலும் சேதமடைந்தன. மற்றொரு பஸ் பாதியளவு சேதம் அடைந்தது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சுமார் 100 மீ. தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் 4 பஸ்கள் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தன. இதில் அந்த பஸ்கள் முற்றிலும் நாசமாயின.

    தகவலறிந்து அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து 4 வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பஸ்கள் தீப்பிடித்தபோது அவற்றில் பயணிகள் யாரும் இல்லாததால் இச்சம்பவத்தில் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    8 பஸ்கள் முற்றிலும் தீக்கிரையான சம்பவம் ராஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தின் பின்னணியில் சதி இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.

    • நிலக்கரி சுரங்கம் இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது.
    • இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தின் பவ்ரா கோலியரி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கம் இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் 3 பேர் பலியானதாகவும், மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழு விரைந்துள்ளது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என போலீசார் தெரிவித்தனர்.

    • கேட் மீது டிராக்டர் மோதியதும் டிரைவர் கீழே இறங்கி தப்பிச் சென்றுவிட்டார்.
    • ரெயில்வே கிராசிங்கில் பணியாற்றிய கேட் மேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    பொகோரோ:

    ஜார்க்கண்ட் மாநிலம் பொகோரா மாவட்டம், போஜுதிஹ் ரெயில் நிலையம் அருகே சந்தால்டிஹ் ரெயில்வே கிராசிங் உள்ளது. நேற்று மாலையில் அந்த வழித்தடத்தில் டெல்லி-புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இதனால் ரெயில்வே கிராசிங் மூடப்பட்டது. ரெயில் வந்துகொண்டிருந்தசமயத்தில், அந்த கிராசிங்கின் கேட்டில் ஒரு டிராக்டர் திடீரென மோதியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் ரெயில் டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்து ரெயிலை நிறுத்தினார். இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    ரெயில்வே கேட் மீது டிராக்டர் மோதியதும் டிரைவர் கீழே இறங்கி தப்பிச் சென்றுவிட்டார். அந்த டிராக்டர், ரெயில்வே அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில்வே கிராசிங்கில் பணியாற்றிய கேட் மேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து நிகழ்ந்து சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பகா நகர் பஜார் ரெயில் நிலையத்துக்கு முன்பு பிரதான ரெயில் பாதையில் செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் சென்று சரக்கு ரெயில் மீது மோதியது. இதன் காரணமான தடம்புரண்ட ரெயில் பெட்டிகள், அருகில் இருந்த தண்டவாளத்தில் சிதறி விழ, அந்த பாதையில் வந்த மற்றொரு விரைவு ரெயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

    இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ரெயில்கள் மோதலுக்கு மனித தவறு காரணமா? அல்லது சிக்னல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

    • ஜார்கண்டில் நாளை வரை இருக்கும் ஜனாதிபதி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
    • திரவுபதி முர்மு 2015-21-ம் ஆண்டுகளில் ஜார்கண்டில் கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ராஞ்சி :

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று ஜார்கண்ட் சென்றார். இதற்காக திேயாகர் விமான நிலையத்தில் சென்று இறங்கிய அவரை மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    பின்னர் அவர் அங்குள்ள பாபா பைத்யநாதர் கோவிலுக்கு சென்றார். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான இந்த புகழ்பெற்ற கோவிலில், வேத மந்திரங்கள் முழங்க முர்மு சிறப்பு வழிபாடு நடத்தினார்.

    முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் வாரியம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. முர்முவின் வருகையை முன்னிட்டு கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    ஜார்கண்டில் நாளை வரை இருக்கும் ஜனாதிபதி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக தலைநகர் ராஞ்சியில் நேற்று மாலையில் ஐகோர்ட்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார்.

    ரூ.550 கோடியில் 165 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த ஐகோர்ட்டு வளாகம் நாட்டின் மிகப்பெரிய ஐகோர்ட்டு வளாகங்களில் ஒன்றாகும்.

    இதற்காக தியோகரில் இருந்து ராஞ்சி சென்றடைந்த திரவுபதி முர்முவை, அங்குள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில், மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் அங்கிருந்து பிர்சா சவுக் சென்ற ஜனாதிபதி, அங்கு பழங்குடியின தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன் தியாகி ஆல்பர்ட் எக்காவுக்கும் அஞ்சலி செலுத்தினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (வியாழக்கிழமை) குன்றி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக மத்திய பழங்குடி நலத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெண்கள் மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார். அத்துடன் ராஞ்சி ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவிலும் மாலையில் பங்கேற்கிறார்.

    ஜனாதிபதியாக 2-வது முறையாக ஜார்கண்ட் சென்றுள்ள திரவுபதி முர்முவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகின்றன. அவர் கடந்த 2015-21-ம் ஆண்டுகளில் ஜார்கண்டில் கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதாக பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
    • உறவினர்கள் அடித்து உதைத்து அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்.

    ராஞ்சி:

    தாங்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்ததால் 24 வயது பழங்குடி இன பெண்ணை உறவினர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்த சம்பவம் ஜார்க்கண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    அம்மாநிலத்தில் உள்ள பலமு அருகே ஜோகிடிஹ் கிராமத்தை சேர்ந்த 24 வயது பழங்குடி இன இளம் பெண்ணின் பெற்றோர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர்.

    இதையடுத்து அந்த பெண் தனது சகோதரர் மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர். இதற்காக ஒரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர். ஆனால் இந்த திருமணத்துக்கு இளம் பெண் மறுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் தாங்கள் பார்த்த மாப்பிள்ளையை தான் நீ திருமணம் செய்யவேண்டும் என வற்புறுத்தினார்கள். ஆனாலும் அந்த பெண் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

    இதையடுத்து அவரை உறவினர்கள் அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். தொடர்ந்து அவர்கள் தினமும் கொடுமைபடுத்தி வந்ததால் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் ஒருவர் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.

    இதையறிந்த அவரது சகோதரர்கள் அவரை மீட்டு மீண்டும் தங்களது கிராமத்துக்கு அழைத்து வந்தனர். அந்த பெண் வேறு யாரையாவது காதலிக்கலாம் என்றும் அதனால் திருமணத்துக்கு மறுக்கிறார் என்றும் அந்த கிராம மக்கள் கூறினார்கள். இதையடுத்து அந்த பெண் ஊர்பஞ்சாயத்து முன்பு நிறுத்தப்பட்டார்.

    அவரிடம் உன் காதலன் யார்? அவன் பெயரை சொல். எதற்காக திருமணம் வேண்டாம் என சொல்கிறாய் என பஞ்சாயத்தார் கேட்டனர்.

    ஆனால் இதற்கு எதுவும் பதில் அளிக்காமல் பஞ்சாயத்து முன்பு அந்த பெண் அமைதியாக நின்றார். இதனால் ஊரை விட்டு அவர் ஒதுக்கி வைக்கப்படுவதாக பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன் பிறகு அவரது உறவினர்கள் செய்த செயல் தான் மிகவும் கொடூரமானது. அந்த பெண்ணின் தலையை மொட்டையடித்து கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

    இதனால் அந்த பெண் ஊரார் மத்தியில் கூனி குறுகி போனார். அவரை உறவினர்கள் அடித்து உதைத்து அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்.

    அதன்பிறகு அங்குள்ள இலுப்பை மரத்தில் கட்டி வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இரவு முழுவதும் அந்த பெண் சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் ஆள் நடமாட்டம் அற்ற காட்டுப்பகுதிக்குள் தவித்தார்.

    சத்தம் போட்டால் உதவிக்கு யாரும் வராத அடர்ந்த காட்டுப்பகுதி அது. இந்த சூழ்நிலையில் காலை நேரம் காட்டுக்குள் சிலர் ஆடு, மாடு மேய்க்க சென்றனர். அவர்கள் இளம்பெண் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் கைகளில் கட்டப்பட்டு இருந்த கயிறை அவிழ்த்துவிட்டனர்.

    இது பற்றி உள்ளூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டனர். மிகவும் சோர்வாக இருந்த அவரை அங்குள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மருத்துவ பரிசோதனையில் அந்த பெண்ணின் உடலில் மர்ம உறுப்பு உள்பட பல இடங்களில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. இதனால் அப்பெண் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பாதுகாப்பு படை வீரர்களும், போலீசாரும் நடத்திய என்கவுண்டரில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ராஞ்சி:

    சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அட்டூழியம் அதிகமாக இருக்கிறது. நக்சலைட்டுகளை ஒழிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர்.

    பாதுகாப்பு படை வீரர்களும், போலீசாரும் நடத்திய என்கவுண்டரில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் 2 பேரது தலைக்கு தலா ரூ.25 லட்சமும், 2 பேருக்கு தலா ரூ.5 லட்சமும் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

    • ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 கிராமங்களில் மாடுகளுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளித்து ஓய்வு வழங்கப்படுகிறது.
    • விடுமுறை நாளில் மாடுகளிடம் வேலை வாங்கினால் அது பாவமாக கருதப்படுகிறது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் மாடுகளுக்கு வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை விடப்படுகிறது. இந்த நடைமுறை 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு காரணமும் உள்ளது.

    மாடுகளை தொடர்ந்து நாள்தோறும் வேலை வாங்குவதால் அவை சோர்வடைகின்றன. அப்படி தினமும் வேலை வாங்கப்பட்ட காளை மாடு ஒன்று வயலில் உழுது கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்து இறந்தது.

    மாடுகளுக்கு ஓய்வு கொடுக்காமல் வேலை வாங்குவதால் தான் இப்படியொரு சம்பவம் நடந்து விட்டதாக கருதி அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பசுமாடு, காளை மாடு, எருமை மாடுகளுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு கொடுத்தனர்.

    இந்த பழக்கம் பக்கத்து கிராமங்களுக்கும் பரவியது. தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 கிராமங்களில் மாடுகளுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளித்து ஓய்வு வழங்கப்படுகிறது.

    அன்று மாடுகளிடம் எந்த வேலையும் வாங்குவதில்லை. குறிப்பாக பசுக்கள், எருமைகளிடம் பால் கூட கறப்பதில்லை. இந்த பழக்கம் 24 கிராமங்களில் உள்ள அனைவராலும் கடைபிடிக்கப்படுகிறது.

    விடுமுறை நாளில் மாடுகளிடம் வேலை வாங்கினால் அது பாவமாக கருதப்படுகிறது. இந்த கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர் வியாழக்கிழமை தோறும் மாடுகளுக்கு விடுமுறை அளிக்கிறார்கள். மற்றவர்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாடுகளிடம் வேலை வாங்குவதில்லை.

    இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், "மாடுகளுக்கு வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை கொடுத்து ஓய்வு வழங்குவதால் அவை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளன. இது காலம் காலமாக நடைமுறையில் உள்ளது. மாடு வளர்ப்போர் அனைவருமே இதை பின்பற்றி வருகிறார்கள்" என்றனர்.

    • புறப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டது.
    • விமானம் மோதியபோது வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.

    பாட்னா:

    ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் கிளைடர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு வீட்டில் மோதியது. இந்த விபத்தில் விமானி மற்றும் ஒரு பயணி காயம் அடைந்தனர்.

    விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டது. இது நகரை சுற்றிப் பார்க்க பயன்படும் விமானம் என்பதால் அதில் விமானியும், ஒரு பயணியும் மட்டுமே அனுமதிக்கப்பட்டி ருந்தனர்.

    விமானம் மோதியபோது வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.

    • குஜராத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காங்கிரசார் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
    • ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்ததற்கு பாஜகதான் பொறுப்பு என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டினர்.

    ராஞ்சி:

    மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்துடன், அவர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரசார் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விவகாரம் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்ததற்கு பாஜகதான் பொறுப்பு என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.

    காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்களும் குரல் எழுப்பி, அவையின் மையப்பகுதிக்கு வந்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

    • ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்து வருகிறது.
    • ரெங்கரஹட்டி கிராமத்தில் சோதனை நடத்தி மாவோயிஸ்டு குழுவினர் கமாண்டர் ஜுடு கோடா, பிரிசிங் என்ற சோட்டா கோடா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்து வருகிறது. அவர்களை பிடித்து போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஜார்க்கண்ட் மேற்கு பகுதியில் உள்ள சிங்பூம் மாவட்டத்தில் சில மாவோயிஸ்டுகள் தங்களது கமாண்டருக்கு வெடிமருந்துகளை வழங்க செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பாரிபோகாரி கிராமத்தில் சோதனை நடத்தி கிஷுன் ஹெம்ப்ராம் என்ற மாவோயிஸ்டை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடமிருந்து டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான மாவோயிஸ்டு கொடுத்த தகவலின்பேரில் டோண்டோ போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேலும் மூன்று மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ரெங்கரஹட்டி கிராமத்தில் சோதனை நடத்தி மாவோயிஸ்டு குழுவினர் கமாண்டர் ஜுடு கோடா, பிரிசிங் என்ற சோட்டா கோடா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கடந்த 12-ந்தேதி சிறுகீகிர் கிராமத்தில் சாலை கட்டுமானப் பணியில் ஈடுபட்ட வாகனங்களுக்கு தீ வைத்ததை ஒப்புக் கொண்டனர். இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் தும்ஹாகா வனப்பகுதியில் நடந்த என்கவுண்டரிலும், 2021, 2022-ம் ஆகிய ஆண்டுகளில் நடந்த என்கவுண்டரிலும் தப்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சதார் மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
    • கால்நடை பராமரிப்புத் துறையினர், பறவைகள் இறந்து கிடப்பதைக் கண்டால், தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பிப்ரவரி 2ம் தேதி பண்ணையில் பறவைகள் இறக்கத் தொடங்கியதை அடுத்து, அதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

    இதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு நடத்தும் கோழி பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் எதிரொலியால், பொகாரோ மாவட்டத்தில் உள்ள பண்ணையில் கோழிகள் மற்றும் வாத்துகள் உள்பட கிட்டத்தட்ட 4,000 பறவைகளை கொன்று அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    லோஹாஞ்சலில் உள்ள பண்ணையில் புரதம் நிறைந்த கோழி இனமான கடக்நாத் இனத்தில் பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், 800 பறவைகள் இறந்ததாகவும், 103 பறவைகள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து, ராஞ்சியில் உள்ள கால்நடை சுகாதாரம் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிபின் பிஹாரி மஹ்தா கூறுகையில், "பண்ணையின் ஒரு கி.மீ., சுற்றளவில் பாதிக்கப்பட்ட பகுதியில் கோழிகள் மற்றும் வாத்துகள் உட்பட மொத்தம் 3,856 பறவைகளை அழிக்கும் பணி நேற்று மாலை தொடங்கியது. இந்த நடவடிக்கை நீண்ட நேரம் எடுக்கும் என்பதால், ஞாயிற்றுக்கிழமையும் அழிப்பு பணி தொடரும்.

    கோழிகள் மற்றும் வாத்துகளை அழிக்கும் நபர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

    மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே பண்ணையிலிருந்து 1 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகளை பாதிக்கப்பட்ட மண்டலமாகவும், 10 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகள் கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் கோழி மற்றும் வாத்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாநிலம் உஷார் நிலையில் இருப்பதாக கூடுதல் தலைமைச் செயலாளர் (சுகாதாரம்) அருண்குமார் சிங் முன்னதாக தெரிவித்தார்.

    மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளை கண்காணிக்கவும், பெரிய பண்ணைகளில் கோழி, வாத்து மாதிரிகளை எடுக்கவும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் மாதிரிகளை சேகரிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சதார் மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

    கடுமையான மேல் முதுகுவலி, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சளி மற்றும் சளியில் இரத்தம் ஆகியவை மனிதர்களிடையே நோய்த்தொற்றின் அறிகுறிகளாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கால்நடை பராமரிப்புத் துறையினர், பறவைகள் இறந்து கிடப்பதைக் கண்டால், தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

    • காங்கிரஸ் தலைவர் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
    • இச்சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கரில் காங்கிரஸ் தலைவர் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காங்கிரஸ் தலைவர் பிட்கா பவாரி என்பவர் பார்ககோன் எம்எல்ஏ அம்பா பிரசாத்தின் உதவியாளராக இருந்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று மாலை சவுந்தா பஸ்தியில் உள்ள பெட்ரோல் பங்கில் பவாரி இருந்தபோது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் அவர்மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதன்பின் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

    துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த பவாரி உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்திற்கு எம்எல்ஏ அம்பா பிரசாத், முன்னாள் அமைச்சர் யோகேந்திர ஷா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

    ×