என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பால், வெண்ணெய், நெய் போன்றவற்றைக் குழந்தைகளுக்குத் தவிர்ப்பது சரியா? சரியில்லை என்றால், எந்த அளவு தர வேண்டும்? எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும்? என்று பார்க்கலாம்.
    குழந்தைப் பருவத்தில் புறங்கையில் வழிய வழிய வெண்ணெய் சாப்பிட்ட தலைமுறைதான், இன்றைக்கு முப்பதுகளில் இருக்கிறது. பருப்பு சாதத்திலும் வற்றல்குழம்பு சாதத்திலும் உருக்கிய நெய்யைத் தளரவிட்டு, கையும் வாயும் மணக்க மணக்கச் சாப்பிட்டவர்களும் மேலே சொன்ன தலைமுறைதான். இடையில் ஏற்பட்ட கொழுப்புப் பயத்தில், வெண்ணெயையும் நெய்யையும் சாப்பிடுவதை அவர்கள் நிறுத்தியதோடு, அடுத்தத் தலைமுறைக்கும் இவற்றைத் தருவதை நிறுத்திவிட்டார்கள். சில வீடுகளில், பாலையும் நிறுத்திவிட்டார்கள். இப்படிப் பால், வெண்ணெய், நெய் போன்றவற்றைக் குழந்தைகளுக்குத் தவிர்ப்பது சரியா? சரியில்லை என்றால், எந்த அளவு தர வேண்டும்? எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும்? என்று பார்க்கலாம்.

    ''ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்கும், வளர்ந்த பிள்ளைகளுக்கும் பால், வெண்ணெய், நெய் மூன்றையும் கட்டாயம் கொடுக்கவேண்டும். ஏனென்றால், வளரும் மற்றும் பதின் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்குத் தேவையான புரதம் மற்றும் கொழுப்பு, இந்த மூன்று உணவுப் பொருள்களில் தாராளமாக இருக்கின்றன. புரதம், குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும் கொழுப்பு, ரத்த நாளங்கள் போன்ற நுண்ணுறுப்புகளின் வளர்ச்சிக்கும் தேவை.

    டாக்டர் வேலாயுதம்சிலர், வெண்ணெய் மற்றும் நெய்யைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், உடற்பருமனாகிவிடுவார்களோ என அச்சப்படுகிறார்கள். உண்மை என்ன தெரியுமா? ஓட்டமும் விளையாட்டுமாக இருக்கும் குழந்தைகளுக்கு இந்த மூன்றையும் செரிமானம் செய்யும் அளவுக்கு ஜீரண சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும். இதனால், வெண்ணெயிலும் நெய்யிலும் இருக்கும் புரதமும் கொழுப்பும் எனர்ஜியாக மாறி, பிள்ளைகளைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். வெண்ணெயும் நெய்யும் குழந்தைகளை குண்டாக்கிவிடும் என்றே பயமே தேவையில்லை.

    நம் ஊரில் வெயில் காலம்தான் நீண்டதாக இருக்கிறது. இதனால், குழந்தைகள் உடல் சூட்டால் கஷ்டப்படுவார்கள். சித்த மருத்துவத்தின்படி, வெண்ணெய் நம் உடலை குளிர்ச்சிப்படுத்தக்கூடியது. இதில், சர்க்கரையைக் கொட்டி, க்ரீமாக மாற்றி கேக்குடன் சாப்பிடும்போதுதான் கேடு தரும் உணவாக மாறிவிடுகிறது. நெய்யில் இருக்கும் கொழுப்பு, மாரடைப்பை ஏற்படுத்தும். அதனால், குழந்தைப் பருவத்திலேயே அவாய்டு செய்துவிடலாம் என நிறைய அம்மாக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். உண்மை தெரிந்தால், பிள்ளைகளுடன் சேர்ந்து அம்மாக்களும் உணவில் சேர்த்துக்கொள்வார்கள். நெய்யில் இருக்கும் கொழுப்பானது, ரத்த நாளங்களின் உள்சுவர்களில் படியாத தன்மையைக்கொண்டது. அப்புறம் எப்படி ரத்தநாளங்களின் உள்சுவரை சுருக்கி, ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும்?

    நெய்யைச் சாப்பிடுவதற்கு ஒரு நடைமுறை இருக்கிறது. வெண்ணெயைக் காய்ச்சும்போது, முருங்கையிலையைப் போட்டுக் காய்ச்சுவார்கள். முருங்கையிலையில் இருக்கும் பைட்டோ கெமிக்கல்ஸ், நெய்யில் இருக்கும் கொழுப்பு மூலக்கூறுகளை தனித்தனியே பிரித்துவிடும். சுடு சாதத்தில் போட்டுப் பிசையும்போதும், தோசையைச் சுற்றிலும் விடும்போதும் நெய்யானது உருகி, மறுபடியும் அதன் கொழுப்பு மூலக்கூறுகள் தனித்தனியாக பிரிய ஆரம்பிக்கும். இந்த முறையில் நெய்யை உங்கள் குழந்தைகளுக்குத் தினமும் ஒரு டீஸ்பூன் அளவுக்குக் கொடுத்துவந்தால், அவர்களின் உடம்பு, தேவையான சத்துக்களை உணவுகளிலிருந்து பெற்று வலுவாக மாறும். ஜீரணத் தொந்தரவுகள் வராது, மந்தமும் ஏற்படாது.

    நெய்க்கு இன்னொரு நல்லத்தன்மையும் இருக்கிறது. குழந்தைகளின் சின்னச் சின்ன எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் இடையில் நல்ல லூப்ரிகேஷனை ஏற்படுத்தும். பெண்களுக்கும் கை, கால் மற்றும் கழுத்து எலும்புகளில் முப்பதுகளிலேயே வரக்கூடிய ஸ்பான்டிலிட்டிஸ் பிரச்னைகளைத் தடுக்கும்.

    நார்மலான உடல்வாகுகொண்ட பெண்கள், நாளொன்றுக்கு 10 மில்லிகிராம் நெய் எடுத்துக்கொள்ளலாம். 5 முதல் 15 வயதுக்குள்ளான குழந்தைகள் என்றால், தினமும் 25 கிராம் எடுத்துக்கொள்ளலாம். வெண்ணையையும் இதே அளவில் வாரத்துக்கு இரண்டு நாள்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளும் சரி, பெண்களும் சரி, இரண்டு கப் பால் தினமும் சாப்பிடலாம். ஆனால், வெள்ளைச் சர்க்கரை கூடவே கூடாது. அதற்குப் பதில் பனங்கற்கண்டும் மஞ்சள்தூளும் சேர்த்துத் தர வேண்டும். இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு பால், நெய் இரண்டும் தரலாம். வெண்ணெய் மட்டும் கூடாது. செரிமானம் ஆகாது'' என்கிற மருத்துவர் வேலாயுதம், வெண்ணெயையும் நெய்யையும் வாங்கியதில் இருந்து எவ்வளவு நாள்கள் வைத்துப் பயன்படுத்தலாம் என்பதுப் பற்றியும் சொன்னார் .

    ''வெண்ணெயோ, நெய்யோ அதை உருவாக்கியதில் இருந்து 3 மாதங்கள் வரை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அதன்பிறகு அவற்றில் இருக்கிற நல்லத்தன்மைக் குறைய ஆரம்பித்து விடும் என்பதால், குழந்தைகளுக்கு அஜீரணம் ஏற்படுத்தி விடும். லேசான மஞ்சள் நிறத்துடன் இருக்கிற வெண்ணெயும், மஞ்சள் நிறத்துடன் மணல் மணலாக இருக்கிற நெய்யும்தான் பசு வெண்ணெய் மற்றும் பசு நெய். இதுவே குழந்தைகளுக்கு ஏற்றதும்கூட.''
    இணையதளத்தில் குழந்தைகளை கவரும் மின் புத்தகங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் அவர்களுக்கு பிடித்தமான கதை புத்தகங்களை தேர்ந்தெடுத்து கொடுத்து, வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்.
    குடும்ப அங்கத்தினர்கள் பெரும்பாலான நேரத்தை செல்போன், கணினியில் செலவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதனை கட்டுப்படுத்த புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை பின்பற்றவேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

    தற்போது பெரும்பாலான குழந்தைகள் தொலைக்காட்சி, செல்போனில் பொழுதை போக்குவதற்கே ஆர்வம் காட்டுகின்றன. அத்தகைய குழந்தைகளிடம் கவனச் சிதறல், சோம்பல், மந்தநிலை, பிடிவாதம், பொறுப்பின்மை போன்றவை உருவாகிவிடுகின்றன. அவைகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வாசிப்பு பழக்கம் கைகொடுக்கும்.

    வாசிப்பு என்பது வெறும் தகவல்களை தெரிந்து கொள்வது மட்டும் அல்ல. அறிவை வளர்த்துக்கொள்ளவும் உதவும். சத்தமாக வாசிப்பது பேச்சாற்றலை தூண்ட உதவும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எட்டு மாதத்திலேயே குழந்தைக்கு பயிற்சி அளிக்கலாம். குழந்தை புரிந்து கொள்ள தொடங்கியதும் அதன் முன்பு சத்தமாக பேச வேண்டும். அந்த சத்தத்தை குழந்தைகள் உற்று கவனிக்கும். புத்தகங்களில் இருக்கும் கதைகளை சத்தமாக வாசித்து சொல்லலாம். புலி, சிங்கம் போன்ற எல்லா கதைகளுமே குழந்தைகளை ஈர்க்கும்.

    உதாரணமாக, விசித்திரமான கதைகள் குழந்தைளுக்கு ரொம்ப படிக்கும். அதனை விரும்பி கேட்பார்கள். அதில் இடம் பெறும் கதாபாத்திரங்களை எளிதான மனதில் பதிய வைத்துவிடுவார்கள். அவற்றின் பெயர்களை உச்சரித்து சொல்லிக்கொடுத்தால் சட்டென்று புரிந்துகொள்வார்கள். அவற்றின் உருவமும் மனதில் எளிதில் பதிந்துவிடும். கதை சொல்லி முடித்ததும் புத்தகத்தில் இருக்கும் படக்காட்சிகளை அப்படியே வரைவதற்கு பயிற்சி கொடுக்கலாம். அப்படி வரையும்போது கதையில் இடம் பெறும் சம்பவங்களை மீண்டும் விளக்கி சொல்லலாம். அதன் மூலம் கதை கேட்கும் ஆர்வமும், அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களை வரைந்து பார்க்கும் ஆர்வமும் மேலிடும்.

    குழந்தைகள் புதிய கதைகளை தேடுவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். பிரிண்டிங் செய்யப்பட்ட புத்தகங்களைத்தான் படிக்க வேண்டும் என்றில்லை. அதனை படிப்பதற்கு ஆர்வம் குறைவாக இருந்தால் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தும் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க செய்யலாம். இணையதளத்தில் குழந்தைகளை கவரும் மின் புத்தகங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் அவர்களுக்கு பிடித்தமான கதை புத்தகங்களை தேர்ந்தெடுத்து கொடுத்து, வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்.
    தூக்கத்தில் கனவு பயம் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், சோர்வு, களைப்பு, ஏதேனும் நோய்க்கு மருந்து சாப்பிடுவது போன்றவை பொதுவான காரணங்களாகும்.
    இரவில் தூங்கும்போது கனவு காண்பது இயல்பானது. குழந்தைகளும் இரவு தூக்கத்தில் கனவு காண்பார்கள். அவர்களை பயமுறுத்தும் கனவுகள் என்றால் அலறி எழுந்து அழுவார்கள். இப்படிப்பட்ட சம்பவம் எப்போதாவது நிகழ்ந்தால் பிரச்சினையில்லை. அடிக்கடி குழந்தைகள் இதுபோன்று விழித்து அலறினால் அதனை கவனித்து தீர்வு காணவேண்டும்.

    இத்தகைய குழந்தைகளிடம் இரவில் அழுததற்கான காரணத்தை கேட்டால் பதிலளிக்க மாட்டார்கள். ஏன்என்றால் அந்த கனவே அவர்களின் நினைவில் இருக்காது. இரவு தூக்கத்தில் கனவு பயம் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், சோர்வு, களைப்பு, ஏதேனும் நோய்க்கு மருந்து சாப்பிடுவது போன்றவை பொதுவான காரணங்களாகும். காய்ச்சல் அல்லது உடலில் அதிக வெப்பநிலை, மூளையின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவது, சரியாக தூங்க முடியாமல் அவதிப்படுவது போன்றவையும் காரணமாக அமையலாம்.

    காய்ச்சல் காரணமாக மூளையில் ஏற்படும் பாதிப்புகளும் பயத்தை உருவாக்கலாம். இரவில் தூங்கும்போது திடீரென்று சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுவதும் தூக்கத்தை கலைத்து பயத்தை உண்டாக்கலாம். அதிக வெளிச்சம், இரைச்சல் போன்ற சூழல்களும் குழந்தைகளின் தூக்கத்தை பாதிக்கும்.

    தூக்கத்தில் நடப்பது, தூங்கும்போது வேகமாக சுவாசிப்பது, அதிகப்படியான வியர்வை வெளிப்படுவது, கை, கால்களை ஆக்ரோஷமாக அசைப்பது, வித்தியாசமான சுபாவங்களை வெளிப்படுத்துவது, பயத்தில் உறைந்து போவது போன்ற அறிகுறிகளை குழந்தைகள் வெளிப்படுத்தினால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் தூக்கத்தில் காணும் கனவால் பயந்துபோய் எழுந்தாலும் உடனேயே மீண்டும் தூங்கிவிடுவார்கள்.

    அப்படி தூக்கம் வராவிட்டால் மனக்குழப்பம் அடைவார்கள். மீண்டும் தூங்குவதற்கு முயற்சிப்பார்கள். அப்போது அவர்களை எழுப்ப முயற்சிக்க வேண்டாம். பயத்தில் எழுந்து அலறிக்கொண்டிருந்தால் அவர்களை ஆசுவாசப்படுத்தலாம். அவர்களை அரவணைத்து தலைமுடியை கோதிவிட்டு தூங்க வைக்கலாம். பெற்றோர் அருகாமையில்தான் இருக்கிறார்கள் என்ற உணர்வு அவர்களுக்குள் தோன்றும். பாதுகாப்பாக இருப்பதாக உணர்வார்கள்.

    தூங்க செல்வதற்கு முன்பு சிறுநீர் கழிக்கும் வழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள். அது தூக்கத்தில் எழும் வழக்கத்தை தவிர்க்க உதவும். சாப்பிடாமல் குழந்தையை தூங்கவும் அனுமதிக்கக்கூடாது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு குழந்தைகளுக்கு ஏதாவதொரு கதை சொல்லுங்கள். அது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக இருக்க வேண்டும். அந்த மகிழ்ச்சியிலே ஆழ்ந்து தூங்கிவிடுவார்கள்.
    கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தில் குழந்தைகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனாவின் பாதிப்பிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகளை பற்றி இங்கே பார்ப்போம்
    கொரோனா தொற்று ஏற்படுத்தும் பாதிப்புகளை பற்றிய செய்திகள் நமக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது மூன்றாம் அலை தாக்கக்கூடும் என வல்லுநர்கள் எச்சரித்திருக்கிறார்கள். கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தில் குழந்தைகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனாவின் பாதிப்பிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகளை பற்றி இங்கே பார்ப்போம்

    குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும். கொரோனா தொற்றின் பாதிப்பு குறையும் வரை நண்பர்கள், உளவினர்களின் வீடுகளுக்கு அனுப்புவதை தவிர்க்கலாம். தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியே செல்ல நேரிட்டால் பெரியவர்களின் துணையோடு அழைத்து செல்ல வேண்டும். தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் போன்ற பழக்க வழக்கங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    குழந்தைகளை தினமும் இரண்டுவேளை குளிக்க வைப்பது அவசியமானது. கண்களை கசக்குவது, மூக்கை சொறிவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும்.

    காலையிலும், மாலையிலும் இளம் சூரிய வெளிச்சத்தில் 30 நிமிடங்களாவது இருக்கும்படி செய்ய வேண்டும்.

    வீட்டை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறைகளை தினமும் தூய்மை செய்ய வேண்டும்.

    பெரியவர்கள் தங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யாமல் குழந்தைகளை தொடக்கூடாது. சளி, இருமல், இருப்பவர்கள் குழந்தைகளை முத்தமிடுதல் கூடாது.

    படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
    குழந்தைகளை ஒருநாளுக்கு மூன்று முறை. மிதமான சுடுநீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க பழக்கப்படுத்த வேண்டும்.

    புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக கொடுக்க வேண்டும். ஒருநாளுக்கு இரண்டு முட்டைகளை சாப்பிட கொடுக்கலாம். பச்சைப்பயறு, கருப்பு கொண்டைக்கடலை, ராஜ்மா, பட்டாணி போன்றவற்றில் சுண்டல் செய்து கொடுக்கலாம்.

    பழங்கள், காய்கறிகள், கீரைகள், உலர்பழங்கள், பருப்புகள் விதைகளை தினமும் உணவில் சேர்த்து வரலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி அதிகம் உள்ள எலுமிச்சை , நெல்லிக்காய் போன்றவற்றை தினமும் கொடுக்கலாம்.

    பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், வெளியில் வாங்கிய உணவுகளையும் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. சத்துள்ள உணவுகளை வீட்டிலேயே சமைத்து கொடுக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, கண்கள், கன்னங்களில் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை  அணுக வேண்டும்.

    கிருமி நாசினி, உடலின் வெப்பத்தை அளவிடும் வெப்பமானி (தெர்மோமீட்டர்) உடலின் ஆக்சிஜன் அளவை தெரிந்து கொள்ள உதவும். ஆக்சிமீட்டர் போன்றவைகளை வீட்டில் வாங்கி வைத்திருப்பது நல்லது.
    ஆரம்பக்கட்டத்திலேயே இந்த வழிமுறையை கையாண்டால் பொய் பேசும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துவிடலாம். பொய் சொல்வது என்னென்ன பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்கி புரிய வைக்க வேண்டும்.
    பெற்றோரின் நடவடிக்கைகள், சுபாவங்களை பின்பற்றித்தான் குழந்தைகள் வளரும். அவர்களின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு இன்றியமையாதது. சில பெற்றோர் குழந்தைகளை தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதற்கு பழக்கப்படுத்திவிடுவார்கள்.

    நெருங்கிய உறவினர்கள் தங்களை பற்றி குழந்தைகளிடம் ஏதேனும் விசாரித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதற்கு ஏதுவாக குழந்தைகளை பேசுவதற்கு கற்றுக்கொடுப்பார்கள். அதுதான் குழந்தைகள் பொய் சொல்ல கற்றுக்கொள்ளும் பிறப்பிடமாக அமைந்துவிடுகிறது. நாளடைவில் மற்றவர்களிடம் மட்டுமின்றி பெற்றோர்களிடமும் சூழலுக்கு தக்கபடி பொய் பேசுவதற்கு குழந்தைகள் பழகிவிடுவார்கள். அதற்கு பெற்றோர் இடம் கொடுக்கக்கூடாது. குழந்தைகள் பொய் சொல்கிறார்கள் என்பதை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்துவிட்டால் அந்த பழக்கத்தில் இருந்து எளிதாக மீட்டுவிடலாம்.

    குழந்தைகள் பொய் சொல்லும்போது சம்பந்தப்பட்டவர்களின் கண்களை நேரடியாக பார்த்து பேச மாட்டார்கள். இதுதான் பொய் பேச தொடங்கும் ஆரம்பக்கட்டமாகும். அதனை கவனத்தில் கொள்ளாமல் விட்டால் வளர ஆரம்பித்ததும், கண்களை பார்த்தே பயமின்றி பொய் சொல்ல பழகிவிடுவார்கள். ஆதலால் குழந்தைகள் பேசும்போது அவர்களின் கண்களை பெற்றோர் உற்றுநோக்கி கவனிக்க வேண்டும். அப்போது எளிதாக அவர்கள் பொய் பேசுவதை கண்டுபிடித்துவிடலாம். ஆரம்பக்கட்டத்திலேயே இந்த வழிமுறையை கையாண்டால் பொய் பேசும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துவிடலாம். பொய் சொல்வது என்னென்ன பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்கி புரிய வைக்க வேண்டும்.

    அத்துடன் என்ன காரணத்திற்காக குழந்தைகள் பொய் சொல்கிறார்கள் என்பதையும் கண்டறிந்து, மீண்டும் அதுபோல் தவறு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளின் உடல் மொழியை வைத்துகூட அவர்கள் பொய் சொல்வதை கண்டறிந்துவிடலாம். அப்படி பொய் பேசும்போது வழக்கமான உடல் மொழியில் இருந்து அவர்களின் செயல்பாடு முற்றிலும் மாறிப்போய்விடும். சம்பந்தம் இல்லாமல் உடலை அசைத்து செய்த தவறை நியாயப்படுத்த முயற்சிப்பார்கள். ஏற்கனவே சொன்ன விஷயத்தையே, பயன்படுத்திய சொற்களையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தால் அதுவும் பொய் சொல்வதன் வெளிப்பாடாகும். மூக்கு அல்லது தலையை சொறிந்த நிலையில் பேசுவதும் கூட பொய் சொல்வதற்கான அறிகுறிகளாகும்.

    சொன்ன விஷயத்தையே திரும்ப திரும்ப சொல்வதிலும் முரண்பாடான கருத்தை முன்வைப்பார்கள். முன்பு சொன்ன விஷயத்தை நினைவில் வைத்திருக்காமல் வாய்க்கு வந்தபடி பேசவும் செய்வார்கள். ‘நாம் பொய்தான் சொல்கிறோம்’ என்ற உண்மையை ஒப்புக்கொள்வதற்கு முன்வர மாட்டார்கள். அவர்களின் மனதுக்கு அது கஷ்டமாக தெரியும். தன்னை தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற உள்ளுணர்வுதான் பொய்யை நியாயப்படுத்த முயற்சிக்கும்.

    குழந்தைகள் இதுநாள் வரை உபயோகிக்காத சைகைகளை திடீரென பயன்படுத்தினால் அதுவும் பொய் கூறுவதற்கான அறிகுறியாக அமைந்திருக்கும். வழக்கத்தைவிட கண்கள் சட்டென்று சுழலும். திருதிருவென்று முழிப்பார்கள். அதனை உற்றுநோக்கினால் புன்னகையை வெளிப்படுத்தி சமாளிப்பார்கள். குறும்பாக சிரிக்கவும் செய்வார்கள். இவற்றை கொண்டே பொய் சொல்கிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம். சிலரிடம் பொய் சொல்லும்போது பதற்றம் எட்டிப்பார்க்கும். மன குழப்பமும் உண்டாகும். அது அவர்களின் செயல்பாடுகளில் வெளிப்படும். துறுதுறுவென்று இருக்கும் குழந்தைகள் வழக்கத்தைவிட அமைதியாக இருந்தால் ஏதேனும் தவறு செய்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அதனை சமாளிக்க பொய் சொல்வதற்கு முயற்சிப்பார்கள். அதனை புரிந்து கொண்டு பெற்றோர் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
    முந்தானையால் குழந்தையை பொதிந்துகட்டி இணைத்ததற்கு பதில் இப்போது புதிய முறையில் பாதுகாப்பாக பொருத்திக்கொள்கிறார்கள். அதற்கு ‘பேபி வியரிங்’ என்று பெயர்.
    இளந்தாய்மார்கள் தங்கள் குழந்தையையும் நெஞ்சோடு இணைத்து கட்டிக்கொண்டு, இருசக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு வேகமாக செல்வதை இப்போது நகர சாலைகளில் ஆங்காங்கே காணமுடிகிறது. முன்பெல்லாம் கிராமங்களில் விவசாய வேலைகளுக்கு செல்லும் பெண்களும், கட்டுமான வேலைகளுக்கு செல்லும் பெண்களும் தங்கள் கை குழந்தைகளை லாவகமாக முந்தானையில் இணைத்து நெஞ்சோடு சேர்த்து கட்டிக்கொண்டு நடந்துபோவார்கள். இப்போது அது நாகரிகமான முறையில் நகரங்களில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. முந்தானையால் குழந்தையை பொதிந்துகட்டி இணைத்ததற்கு பதில் இப்போது புதிய முறையில் பாதுகாப்பாக பொருத்திக்கொள்கிறார்கள். அதற்கு ‘பேபி வியரிங்’ என்று பெயர். இது பயணச் சூழலுக்கு தகுந்தபடி தாயையும்- குழந்தையையும் நெஞ்சோடு நெஞ்சாய் இணைத்து பாதுகாப்பு அளிக்கிறது.

    நவீன காலச் சூழலில் இப்படிப்பட்ட ‘கங்காரு தாய்மார்கள்’ உருவாகுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. வேலை தேடி நிறைய பேர் இப்போதும் பெருநகரங்களில் குவிந்துகொண்டிருக்கிறார்கள். சொந்த ஊர்களில் திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டாலும், வேலை பார்க்கும் இடத்தில்தான் அவர்கள் குடும்ப வாழ்க்கையை தொடங்கவேண்டியதிருக்கிறது. அவர்கள் தனிக்குடித்தனம் அமைக்கும்போது நகர வாழ்க்கையை ஓரளவாவது நல்லவிதமாக நகர்த்தவேண்டும் என்றால், கணவன்- மனைவி இருவருமே வெளியே சென்று வேலை பார்க்க வேண்டிய சூழலுக்கு உள்ளாகிறார்கள்.

    அப்படிப்பட்ட பெண்கள் தாய்மையடைந்து குழந்தை பெற்றுக்கொள்ளும்போது அவர்கள் குழந்தையையும் கவனிக்கவேண்டும். வெளி வேலைகளையும் செய்தாகவேண்டும். அப்போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அவர்கள் இப்படி கங்காரு தாய்மார்களாக மாறவேண்டியதிருக்கிறது. வெளியே போகும்போது மட்டுமின்றி வீட்டில் தனியாளாக நின்று வேலைபார்க்கும்போதும் பெண்கள் இந்த பேபி வியரிங்கை பயன் படுத்துகிறார்கள். அதில் அமர்ந்திருக்கும் குழந்தைகள் தாயின் முழுமையான அருகாமை தனக்கு கிடைத்திருப்பதை உணர்ந்து அப்படியே தூங்கிவிடுகிறார்கள் அல்லது விழித்திருந்து வேலைபார்க்கிறார்கள். தாயாரால் பயணிப்பது, வேலைபார்ப்பது, ஷாப்பிங் செல்வது போன்ற அனைத்திற்கும் இது சவுகரியமாக இருக்கிறது. ஆனால் இதிலும் கவனிக்கத் தகுந்த சில விஷயங்கள் இருக்கின்றன. அதை சரியாக செயல்படு்த்தாவிட்டால் தாய்க்கும், குழந்தைகளுக்கும் ஆரோக்கிய பிரச்சினைகள் உருவாகும். பேபி வியரிங்ஸ்சில் முக்கியமாக மூன்று வகைகள் உள்ளன.

    பேபி வியரிங் ஸ்லிங்குகள்: தாயின் ஒரு தோளையும், உடலையும் சேர்த்துக்கட்டி அதற்குள் குழந்தையைவைக்கும் துணி இதில் முக்கியமானது. இதில் பேடு அமைப்பும் இருக்கிறது. பேடு இல்லாமல் துணிபோன்ற அமைப்பு கொண்டதாகவும் இருக்கிறது. நீளத்தை கூட்டவோ, குறைக்கவோ வசதியான ரிங் அமைப்புகளும் இதில் உள்ளன. பேபி வியரிங் ராப்ஸ்: இரண்டு தோள்கள் மற்றும் உடலோடு சுற்றிக்கட்டும் முறை இது. சவுகரியமானது. செலவு குறைந்தது. கேரியர்ஸ்: இது மிக மென்மையான பொருட்களால் குழந்தைகளுக்கு ஏற்ற விதத்தில் தயாரிக்கப்படுகிறது. குழந்தைக்கு இருக்கும் வசதி, ஸ்ட்ராப்புகள், குழந்தைக்கு பாதுகாப்பளிக்கும் பக்கிள்கள் போன்றவை இதில் இருக்கின்றன. குழந்தையை அதிக நேரம் தாயால் கைகளிலோ, இடுப்பிலோ தூக்கிவைக்க முடியாதபோது இதனை பயன்படுத்துவதே பொருத்தமாக இருக்கும்.

    இவைகளை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. குழந்தை மூச்சுவிடுவதற்கு எந்த விதத்திலும் சிரமம் ஏற்படாத அளவுக்கு இதில் உட்காரவைக்கவேண்டும். குழந்தையின் முகவாய் பகுதி தாயின் மார்போடு போய் அழுந்தும்படி உட்காரவைக்கப்பட்டிருந்தால் குழந்தை மூச்சுவிட சிரமப்படும். பேபி கேரியரின் மேற்பகுதி குழந்தையின் முகத்தில் படக்கூடாது. எப்போதும் குழந்தையின் முகவாய் சற்று மேல்நோக்கி இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். குழந்தையின் காது அம்மாவின் மார்பில் சாய்ந் திருக்கும்படி உட்காரவைக்கவேண்டும்.

    இதனை பயன்படுத்தி குழந்தையோடு வெளியே செல்வதற்கு முன்பு, வீட்டில் வைத்தே இதனை உபயோகித்து பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். படுக்கை போன்ற எதையாவது கீழே விரித்து அதில் நடந்தபடி ஒத்திகைப் பார்க்கவேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் குழந்தை கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு. பாதுகாப்பாக பயன்படுத்த தெரிந்த பின்பு அதனை அணிந்துகொண்டு முதலில் அருகில் உள்ள கடைகளுக்கு செல்லவேண் டும். அடுத்து படிப்படியாக தூரத்தை அதிகரிக்கவேண்டும். குழந்தையை முன்னோக்கி உட்காரவைக்கும் விதத்திலானவற்றை தவிர்ப்பது நல்லது. அதில் இருக்கும்போது அதிக நேரம் குழந்தை கால்களை முன்னோக்கி வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் குழந்தைக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் உருவாகும்.

    குழந்தையும், தாயும் முகத்தோடு முகம் பார்க்கும் விதத்திலான பேபி வியரிங் சிறந்தது. குழந்தை இருக்கும் இடம் தாழ்ந்தும் போய்விடக் கூடாது. குழந்தையின் பின்பகுதி இருக்கும் இடம் அகலமாகவும் இருக்கவேண்டும். அகலம் குறைந்திருந்தால் குழந்தையின் இடுப்பில் பிறழ்வு ஏற்படும் நிலை உருவாகும். பேபி வியரிங் வாங்க வேண்டும் என்று தீர்மானித்துவிடும்போதே அது பற்றி உங்கள் குழந்தைக்கான டாக்டரிடம் கலந்துபேசி, அவர் கூறும் ஆலோசனை களையும் கேட்டுக்கொள்ளுங்கள். வாங்கும்போது குழந்தையையும் தூக்கிச் சென்று உட்காரவைத்துப் பார்த்து குழந்தைக்கும்-தாய்க்கும் அது பொருத்தமாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

    பேபி வியரிங் அணிந்து செல்லும்போது அவ்வப்போது ஒருகையால் குழந்தையை தாங்கி சற்று தூக்கிவிடும் பழக்கத்தை தாய்மார்கள் ஏற் படுத்திக்கொள்ளவேண்டும். குழந்தை நன்றாக மூச்சுவிடு வதையும், அது எந்த வித நெருக்கடியும் இன்றி உட்கார்ந்திருப்பதையும் கவனித்துக்கொள்ளவேண்டும். இதில் ஏற்படும் ெபரிய பிரச்சினை குழந்தைக்கு நன்றாக வியர்க்கும். அதனால் அதன் உடல் எளிதாக சூடாகிவிடும். அந்த அவஸ்தையை தாங்கிக்கொள்ள முடியாத குழந்தைகள் அழத் தொடங்கிவிடும். அதனால் பேபி வியரிங்கை பயன்படுத்தும்போது குழந்தைகளுக்கு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவியுங்கள். சிலர் நெஞ்சோடு குழந்தை ரொம்பவும் நெருக்கமாக இருப்பதுதான் பாதுகாப்பு என்று கருதி, இறுக்கி கட்டிவிடுவார்கள். அது குழந்தைக்கு அவஸ்தையை கொடுப்பதோடு, அடுத்தடுத்த நாட்களில் குழந்தையின் முதுகெலும்பிற்கும் பாதிப்பை உருவாக்கிவிடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    பயணங்களிலும், ஷாப்பிங் செல்லும்போதும் குழந்தைகளுக்கு பேபி வியரிங் நல்லதுதான் என்றாலும் குறைப்பிரவசத்தில் பிறந்த குழந்தைகளையும், நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளையும் அதில் உட்காரவைக்காமல் இருப்பது நல்லது. பேபி வியரிங் பயன்படுத்தும்போது தாயின் மார்போடு குழந்தை சேர்ந்திருப்பதால் குழந்தையிடம் ஏற்படும் சின்னச்சின்ன சலனங்களையும் தாயால் கண்டறிய முடியும். தாயிடம் கண்ணுக்கு கண் பார்ப்பதால் அது பாதுகாப்பு உணர்வோடு அழாமல், தொல்லைதராமல் அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டிருக்கும்.

    பேபி வியரிங்கில் குழந்தை உட்கார்ந்திருக்கும்போது தாய்க்கு அது சுமையாகத்தான் இருக்கும். அப்போது தாய் தனது ஒவ்வொரு செயலையும் மிக கவனமாக செய்யவேண்டும். அவள் தடுமாறி கீழே விழும் சூழ்நிலை உருவானால் குழந்தைக்கும் பலத்த அடிபடும். அதனால் பேபி வியரிங் பயன்படுத்தும்போது தாய் மிகுந்த கவனத்துடன் கையாளவேண்டும். அதிலும் இரு சக்கர வாகன பயணத்தில் மிக அதிக கவனம் தேவைப்படும். குழந்தையின் பருவம், உடல் எடை போன்றவைகளை கருத்தில்கொண்டு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுங்கள்.
    90 சதவிகித குழந்தைகள் பெற்றோரின் விருப்ப பாடங்களையே, படிக்கிறார்கள். ஒருசில பெற்றோர் தங்களது நிறைவேறாத கல்வி ஆசைகளை எல்லாம் குழந்தைகள் மீது திணிப்பது உண்டு.
    இக்காலத்து குழந்தைகள் ரொம்பவும் ஸ்மார்ட். 10 வயதிற்குள்ளாகவே ஏதாவது ஒருதுறையில் சாதித்துவிடுகிறார்கள். குறிப்பாக கணினி, மென்பொருள் துறையில் அவர்களது ஈடுபாடு நம்பமுடியாத அளவில் இருக்கிறது. கணினி மொழிகளை வெகு சுலபமாக புரிந்து கொள்கிறார்கள். அனுபவசாலிகளை விடவும், வித்தியாசமாக சிந்திக்கிறார்கள்.

    ஒவ்வொரு வயதிலும், குழந்தைகள் குறிப்பிட்ட திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, 5-ம் வகுப்பு மாணவனுக்கு நேர மேலாண்மை, பக்குவமாய் பேசுதல், ஒழுக்கமாக உணவு சாப்பிடும் பழக்கம், விவாத கருத்தை உள்வாங்கும் திறன், முறையான பேச்சுபயிற்சி போன்ற திறன்களும், நல்ல பழக்கங்களும் இருக்க வேண்டும். அதுவே மேல்நிலைப் பள்ளி மாணவன் என்றால் மொழி அறிவு, தலைமை பண்பு, வழிநடத்தும் திறன், பிறரது கருத்துகளுக்கு செவிக்கொடுத்தல்... இப்படிப்பட்ட திறன்களை பெற்றிருக்கவேண்டும்.

    90 சதவிகித குழந்தைகள் பெற்றோரின் விருப்ப பாடங்களையே, படிக்கிறார்கள். குழந்தைகளின் வாழக்கையே, அவர்கள் படிக்கும் படிப்பில்தான் இருக்கிறது. அதனால் அவர்கள் விரும்பிய படிப்பை படிக்கட்டும். ஒருசில பெற்றோர் தங்களது நிறைவேறாத கல்வி ஆசைகளை எல்லாம் குழந்தைகள் மீது திணிப்பது உண்டு. அதை மட்டும் செய்துவிடாதீர்கள். அவர்களை அவர்களாகவே படிக்கவிடுங்கள். வளரவிடுங்கள்.
    குழந்தைகள் செய்யும் சேட்டைகள், குறும்புகள், தவறுகள் அனைத்திற்கும் பெற்றோர் பதிலளிக்க வேண்டும். எது சரி, எது தவறு என்பதை விளக்கி புரியவைக்க வேண்டும். இந்த வயது குழந்தைகளிடம் சொல்லக்கூடாத விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
    குழந்தை பருவத்திற்கும், டீன் ஏஜ் பருவத்திற்கும் இடைப்பட்ட வயது கொண்ட குழந்தைகளை வளர்ப்பது பெற்றோருக்கு சவாலான விஷயமாக இருக்கும். ‘ரெண்டுங்கெட்டான் வயது’ எனப்படும் இந்த பருவத்தில் அமைதியாகவே இருக்க மாட்டார்கள். ஏதாவது சேட்டை செய்து கொண்டிருப்பார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுப்பார்கள். சில பெற்றோர் குழந்தைகளின் செயல்பாடுகளை சமாளிக்க முடியாமல் சட்டென்று கோபம் கொள்வார்கள். அது தவறானது. இந்த வயதில் குழந்தைகளிடம் இயல்பாக வெளிப்படும் சுபாவம் இது. அதனை கட்டுப்படுத்த முயற்சிப்பது அவர்களின் குணாதிசயத்தையும், ஆளுமை திறனையும் பாதிப்புக்குள்ளாகிவிடும். குழந்தைகள் செய்யும் சேட்டைகள், குறும்புகள், தவறுகள் அனைத்திற்கும் பெற்றோர் பதிலளிக்க வேண்டும். எது சரி, எது தவறு என்பதை விளக்கி புரியவைக்க வேண்டும். இந்த வயது குழந்தைகளிடம் சொல்லக்கூடாத விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    * இந்த வயதில் குழந்தைகளிடம் போதிய முதிர்ச்சி இருக்காது. குழந்தை சுபாவத்தில் இருந்து மீண்டு வந்திருக்கமாட்டார்கள். அதனால் அவர்களை குழந்தையாகவே வழிநடத்த வேண்டும். அடம் பிடிக்கும் சுபாவம் அதிகமாகவே எட்டிப்பார்க்கும். தங்களுக்கு பிடித்தமானதை கேட்டு அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள். அந்த சமயத்தில் பெற்றோர் கடுமை காட்டக்கூடாது. அப்படி செய்தால் சட்டென்று கோபம் கொண்டு அறைக்குள் சென்று விடுவார்கள். தனிமையில் இருந்துவிட்டு போகட்டும் என்று அப்படியே விட்டுவிடக்கூடாது. அது அவர்களின் குணாதிசயத்தை மாற்றிவிடும். மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எதற்கெடுத்தாலும் அடம்பிடிக்க தொடங்கி விடுவார்கள். அவர்களை அரவணைத்து வழிநடத்தி செல்ல வேண்டும்.

    * குழந்தைகள் சேட்டை செய்யும்போதெல்லாம் ‘அடி வாங்கப்போறே’ என்று அதட்டுவதும், அடிப்பதும் கூடாது. அன்பாக எடுத்துச்சொல்லி புரியவைக்க வேண்டும். கடுமை காட்டுவது குழந்தைகள் மனதில் தவறான புரிதலை ஏற்படுத்திவிடும். பெற்றோர் தங்களை வெறுப்பதாக நினைத்து தனிமையில் இருக்க பழகிவிடுவார்கள். அதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது.

    * தனது சகோதரன், சகோதரியுடன் சண்டை போடும் சுபாவம் இந்த பருவத்தில் அதிகரிக்கும். எதற்கெடுத்தாலும் சண்டை போடுவார்கள். அப்போது யாராவது ஒருவர் கடுமையாக திட்டிவிட்டால் சட்டென்று மனமுடைந்து போய்விடுவார்கள். அழவும் செய்வார்கள். தாங்கள் செய்யும் தவறுகள், முயலாமை, அச்சம் என குழந்தைகள் அழுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதற்காக ‘அழுமூஞ்சு. எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருக்கிறாய்’ என்று கூறி திட்டக்கூடாது. அழுவது நல்ல பழக்கமல்ல என்று கூறி அதில் இருந்து மீண்டு வருவதற்கு பெற்றோர் தைரியமும், தன்னம்பிக்கையும் அளிக்க வேண்டும்.

    * ‘நீ எதற்கும் பிரயோஜனம் இல்லாதவன், கையாலாகாதவன்’ என்பது போன்ற வார்த்தைகளை கூறுவதை தவிர்த்துவிட வேண்டும். அவை அவர்களின் தன்னம்பிக்கையை சிதைத்து விடும். ‘தாங்கள் எதற்குமே உதவாத நபர்’ என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். இந்த வயதில் குழந்தைகள் தவறுகள் செய்வது, தோல்வி அடைவது எல்லாம் சகஜம். அதில் இருந்து மீண்டு வருவதற்கு பெற்றோர்கள்தான் பக்கபலமாக இருக்க வேண்டும்.

    * தங்களது சகோதரன், சகோதரியுடனோ, மற்ற குழந்தை களுடனோ எதற்கெடுத்தாலும் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். அது அவர்களுடைய சுய மரியாதைக்கு பங்கம் விளைவித்துவிடும்.

    * இந்த பருவத்தில் குழந்தைகள் சுறுதுறுவென்று இருப்பார்கள். ‘அதை செய்யாதே. இதை செய்யாதே’ என்று கடிவாளம் போடக்கூடாது. எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தால் அதுதான் தவறானது. அது அவர்களின் தனித்திறனையும், ஆளுமைத்திறனையும் பாதித்துவிடும். அவர்கள் செய்யும் செயல்களில் இருக்கும் நல்லவை, கெட்டவைகளை விளக்கி புரியவைக்க வேண்டும்.
    குழந்தைப் பேறு, பெற்றோருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், கூடுதல் கடமைகளையும் கொடுக்கிறது. அதனால் தூக்கத்தை மறந்து, குழந்தைகளை கவனிக்கவேண்டி உள்ளது.
    குழந்தை பிறப்பது தாய்க்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கிறதோ அதே அளவிற்கு அன்பு தொல்லையாகவும் மாறிவிடுகிறது. இரவில் கண்விழித்து குழந்தையை பராமரிப்பது, அழும் குழந்தையை அமைதிப்படுத்தி தூங்கவைப்பது, நேரம் பார்க்காமல் பசியாற்றுவது என குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனிப்பதால், தாயின் ஓய்வு நேரம் குறைந்துவிடும். குறிப்பாக முதல் குழந்தையை பெற்ற பெண்களுக்கு நிம்மதியான தூக்கம் என்பது கேள்விக்குறியாக மாறிவிடும். இதுதொடர்பாக, இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பல உண்மைகள் தெரியவந்துள்ளன.

    கர்ப்ப காலத்தில் நிம்மதியாக ஓய்வெடுக்கும் பெண்கள், குழந்தை பிறந்ததும் பரபரப்பாக மாறிவிடுகிறார்களாம். குறிப்பாக முதல் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களுக்கு, குழந்தை பிறந்ததில் இருந்து அடுத்த 6 ஆண்டுகளுக்கு, நிம்மதியான தூக்கம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களிலேயே, பெண்கள் ஒருமணிநேர தூக்கத்தையும், தந்தை 15 நிமிட தூக்கத்தையும் இழந்துவிடுகிறார்கள். கிடைக்கும் ஓய்வுநேரங்களிலும், தாயால் நிம்மதியாக தூங்கமுடிவதில்லை. இதுதொடர்பாக இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தின் உளவியல்துறையை சேர்ந்தவர்கள் 4,659 பெற்றோர்களிடம் 7 ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள்.

    ‘‘குழந்தைப் பேறு, பெற்றோருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், கூடுதல் கடமைகளையும் கொடுக்கிறது. அதனால் தூக்கத்தை மறந்து, குழந்தைகளை கவனிக்கவேண்டி உள்ளது. இந்த விஷயத்தில் ஆண்களை விட, பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில் குழந்தை பராமரிப்பில் பெண்களின் பங்கு அதிகமாக இருப்பதால், அவர்களின் தூக்கம் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக நிம்மதியான தூக்கம் கிடைப்பதில்லை’’ என்கிறார், உளவியல் ஆராய்ச்சியாளர் சகாரி லிமோலா.

    தாய்மார்களின் தூக்கத்திற்கும், அவர்கள் சாப்பிடும் உணவிற்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். காரமான மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடக்கூடாது. வெளி உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைத்து சாப்பிடுவதே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. தினமும் தவறாமல் ஒரு டம்ளர் பால் பருக வேண்டும். தூக்கத்தை தூண்டும் ஆற்றல் பாலுக்கு இருக்கிறது. அதிலிருக்கும் செரோடோனின் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்யும்.
    ஒரே குழந்தை என்பதால் அவர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் இருக்கக்கூடாது. குழந்தை செய்யும் தவறுகளை நல்ல முறையில் சுட்டிக்காட்டி அறிவுரை கூறி திருத்த வேண்டும்.
    மாறிவரும் வாழ்க்கை முறைகள் பொருளாதார நெருக்கடி, நேரமின்னைம போன்ற காரணங்களால் பல பெற்றோர்கள், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று ஒரு குழந்தையோடு நிறுத்தி கொள்கின்றனர். இரண்டு, மூன்று குழந்தைகளை பெற்று வளர்ப்பதை காட்டிலும் ஒற்றை குழந்தையை வளர்ப்பதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. ஒரு சில விஷயங்களை கவனத்தில் கொண்டு வழி நடத்தினால் சிரமங்களை தவிர்த்து மகிழ்ச்சியாக வாழலாம். அதற்கான ஆலோசனைகளை இங்கே பர்ர்ககலாம்.

    தனிமையை தவிர்த்தல்

    ஒற்றை குழந்தைகள் தனிமையை அதிகமாக உணர்வார்கள். தனியாக வளர்வதால் மற்றவர்களிடம் சகஜமாக பழகுவதற்கு தயங்குவார்கள். அவர்களிடம் பெற்றோர்கள் தோழமை உணர்வோடு பழக வேண்டும். எல்லா விஷயங்களையும் பெற்றோரிடம் அவர்கள் மனம் விட்டு பேசும் அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும்.

    சமூக நடத்தை மற்றும் பகிர்தல்

    பொது இடங்களில் மற்றவர்களுடன் நட்பாக பழகுவது, வயதில் மூத்தவர்களை மதித்து நடப்பது, தம்மிடம் இருப்பதை இல்லாதவருடன் பகிர்ந்து கொள்வது போன்ற பண்புகளை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்.

    தவறை சுட்டிக்காட்டுதல்

    ஒரே குழந்தை என்பதால் அவர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் இருக்கக்கூடாது. குழந்தை செய்யும் தவறுகளை நல்ல முறையில் சுட்டிக்காட்டி அறிவுரை கூறி திருத்த  வேண்டும்.

    மன்னிப்பு கேட்கப்பழகுதல்

    ஏதேனும் தவறு செய்தால், செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் பழக்கத்தை கற்று கொடுக்க வேண்டும். தவறு செய்து விட்டால் பெரியவர், சிறியவர் போன்ற பேதங்களை பார்க்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். இது குழந்தையிடம் தனி மனித ஓழுக்கத்தை மேம்படுத்தும்.

    சுதந்திரம்

    ஒரே குழந்தை என்பதால் கைக்குள்ளேயே வைத்து வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். தனியாக சிந்திக்கவும், செயல்படவும் அனுமதிக்க வேண்டும். அவர்களுடைய ஆர்வத்தை தெரிந்து கொண்டு அதை நோக்கி நல்ல முறையில் வழி நடத்த வேண்டும்.

    பணத்தின் மதிப்பை உணர்த்துதல்

    குழந்தை கேட்கும் அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தேவை அறிந்து பொருள் வாங்குதல், குடும்ப பொருளாதார நிலை, கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கும் சூழல் என பொருளாதார ரீதியான அனைத்து விஷயங்களையும் சிறு வயதிலிருந்தே புரிய வைக்க வேண்டும்.

    சூழலை ஏற்றுக்கொள்ளும் பழக்கத்தை உருவாக்குதல்

    ஒரே குழந்தை என்பதற்காக கல்வி, உணவு, உடை போன்றவற்றுக்காக அதிகமாக செலவு செய்து ஆடம்பர வாழ்க்கை முறைக்கு பழக்கக்கூடாது. எல்லா சூழ்நிலைகளிலும் சீரான வாழ்க்கை வாழ்வதற்கு கற்றுத்தர வேண்டும்.
    குழந்தைகளின் உடல் திறனுக்கேற்ப பயிற்சிகளை செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். கடினமான பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது.
    குழந்தைகளை பாதுகாக்கும் வழிகாட்டுதல்கள்கொரோனா 3-வது அலை குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்று பலர் பரிந்துரைத்தாலும், இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் (ஐ.ஏ.பி) எனப்படும் குழந்தைகளுக்கான மருத்துவ சங்கம் இதனை மறுத்துள்ளது. ‘பெரியவர்கள் மற்றும் வயதான நபர்களைப் போலவே குழந்தைகளுக்கும் இந்த வைரஸ் தொற்றுநோயை உருவாக்கக்கூடியது. ஆனால் கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும் மூன்றாவது அலை குழந்தைகளை பிரத்யேகமாக பாதிக்கும் என்பது சாத்தியமில்லாதது’ என்றும் கூறி உள்ளது.

    இருப்பினும் சமீபத்திய மாதங்களில் உருமாறிக்கொண்டிருக்கும் வைரஸின் போக்கை கணிப்பது மருத்துவ நிபுணர்களுக்கு சவாலானதாக இருக்கிறது.அதனால் வைரசிடம் இருந்து குழந்தைகளை தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதுதான் நல்லது. ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய ஆயுஷ் அமைச்சகம் குழந்தைகளை தாக்குவதற்கு சாத்தியமான கொரோனா அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளது. குழந்தைகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சாராம்சங்கள் குறித்து பார்ப்போம்.

    தூங்கும் நேரம்: குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு போதுமான நேரம் தூங்க வேண்டும். தூங்கும் நேரம் வயதுக்கேற்ப மாறுபடும்.

    1 வயதுக்கும் குறைவான குழந்தைகள்:

    12 முதல் 16 மணி நேரம்

    1- 2 வயது :

    11 முதல் 14 மணி நேரம்

    3- 5 வயது:

    10 முதல் 13 மணி நேரம்

    6- 12 வயது:

    9 முதல் 12 மணி நேரம்

    டீன் ஏஜ் வயது:

    8 முதல் 10 மணி நேரம்

    குழந்தைகளில் யாருக்கு அதிக ஆபத்து ஏற்படக்கூடும்?

    கொரோனா வைரஸ் தொற்று பொதுவாக குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஒருவேளை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருந்தால் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் உடல் பருமன், டைப்-1 நீரிழிவு நோய், நாள்பட்ட இதய நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டுடன் இணை நோய் பாதிப்பு கொண்ட குழந்தை களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

    குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகள் எப்படிப்பட்டதாக அமைந்திருக்கும்?

    4-5 நாட்கள் தொடர்ந்து நீடிக்கும் காய்ச்சல், சாப் பிடும் அளவு குறைந்து போகுதல், ஆக்சிஜன் செறிவு 95 சதவீதத்திற்கும் கீழ் குறைதல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைவது, சிறுநீர் கழிப்பதில் சிரமம், வழக்கமான சுறுசுறுப்பு இல்லாமல் சோம்பலுடன் காட்சியளித்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி, அடி வயிற்றில் வலி, கண்கள் சிவத்தல், உடலில் சொறி, எரிச்சல் ஏற்படுவது, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது. இந்த கொடிய வைரசிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்கான சிறந்த அணுகுமுறையே வருமுன் காப்பது, சுகாதாரத்தை பின்பற்றுவதுதான் என்று வழிகாட்டுதல் நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மாற்றங்கள்:

    ஆயுஷ் அமைச்சக வழிகாட்டுதல்களின்படி, குழந்தை நோயை எதிர்த்துப் போராட உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதற்காக யோகா, தியானம், பிராணயாமா மற்றும் பிற பயிற்சிகளை செய்யலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அதேவேளையில் குழந்தைகளின் உடல் திறனுக்கேற்ப பயிற்சிகளை செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். கடினமான பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது.

    குழந்தைகள் சாப்பிடும் உணவுகள் எளிதில் ஜீரணமாக வேண்டும். அத்தகைய உணவுகளை தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும். அவை அனைத்து சத்துக்களையும் கொண்ட சமச்சீர் உணவாகவும் அமைந்திருக்க வேண்டும்.

    தினசரி வழக்கத்தில் கல்வி, பொழுதுபோக்கு, குடும்பத்துடன் செலவிடும் நேரம், விளையாடும் நேரம் ஆகியவற்றை வரையறை செய்து கொள்ள வேண்டும். முக கவசம் அணிதல், கை, கால்களை தூய்மையாக வைத்திருத்தல், அடிக்கடி சோப், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்ற செயல்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். உணவு, தூக்கம், முன்னெச்செரிக்கை நடவடிக்கை மூன்றையும் முறையாக பின்பற்றுவதும் நோய் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை தற்காத்துக்கொள்ள உதவி புரியும்.
    பள்ளி சென்று படித்தால் மாணவர்கள், ஆசிரியரின் கண்காணிப்பில் இருப்பார்கள். ஆன்-லைன் வகுப்பில் அதற்கு வழியில்லை. பெற்றோரின் கவனத்தின் கீழ்தான், பிள்ளைகள் கல்வி கற்றாக வேண்டும் என்ற நிலை இருக்கிறது.
    கொரோனாவின் 2-வது அலையும் கிட்டத்தட்ட முடிவை எட்டியிருக்கிறது. இந்தக் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் ஆன்-லைன் வாயிலாக அனைத்து வகுப்புகளுக்கும் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி சென்று படித்தால் மாணவர்கள், ஆசிரியரின் கண்காணிப்பில் இருப்பார்கள். ஆன்-லைன் வகுப்பில் அதற்கு வழியில்லை. பெற்றோரின் கவனத்தின் கீழ்தான், பிள்ளைகள் கல்வி கற்றாக வேண்டும் என்ற நிலை இருக்கிறது. எனவே பெற்றோர்களும் இங்கே சில விஷயங்களை நினைவில் நிறுத்த வேண்டியதிருக்கிறது. அதுபற்றி பார்ப்போம்.

    * ஆன்-லைன் மூலம் பிள்ளைகள், பாடங்களைப் படிக்கும் போது, கவனித்துப் பார்க்கிறார்களா? என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

    * ஆசிரியர்களுடன், பெற்றோர்கள் அடிக்கடி பேசி, பிள்ளைகள் சரியாக ஆன்-லைன் வகுப்பை கவனிக்கிறார்களா? என்பது பற்றி கேட்டுக் தெரிந்துகொள்ளலாம்.

    * பிள்ளைகள் ஆன்-லைன் வகுப்பில் இருக்கும்போது, அதற்கு தகுந்த அமைதியை வீட்டில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளை படிக்க சொல்லிவிட்டு தொலைக்காட்சி பார்ப்பது, வீட்டில் உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பது போன்ற விஷயங்கள், பிள்ளைகளின் படிப்பு மீதான கவனத்தை சிதறடிக்கும்.

    * ஒவ்வொரு நாளும் எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என்பதை பட்டியலிட்டு, அதற்கு ஏற்ற வகையில் அவர்களை படிக்க வைக்க வேண்டும். பிள்ளைகளை அன்புடன் அரவணைத்து சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியம்.

    * படிப்பு நேரம் முடிந்தபிறகு, அவர்கள் விளையாடுவதற்கும் கொஞ்சம் அனுமதிக்க வேண்டும். வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பது அவர்களுக்கும் மன இறுக்கத்தை உண்டாக்கக்கூடும்.

    மேற்கண்ட குறிப்புகளை கடைப்பிடித்து வந்தாலே, உங்கள் பிள்ளைகள் படிப்பில் சிறந்த நிலையை அடைவார்கள்.
    ×