என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • இந்த காலத்தில் பிள்ளைகளுக்கு எதையும் தாங்கும் மனப்பக்குவம் இல்லை.
    • மனதளவில் மாணவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

    தன் மீதும், சக மனிதர்கள் மீதும், சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் இருக்கும் நம்பிக்கையை முற்றிலும் இழக்கும் ஒருவர்தான், தற்கொலை முடிவை எடுக்கிறார்.

    அந்தநேரத்தில் சக மனிதர்களும், சுற்றியுள்ள சமூகமும் சம்பந்தப்பட்ட நபருக்கு செவிசாய்க்கும் பட்சத்தில், உடனடியாக அவர் அந்த முடிவில் இருந்து மனம் மாறிவிடுகிறார். ஆனால் தற்போது நாம் வாழும் சமூகத்தில் அதற்கான வாய்ப்பு தாமதம் ஆவதாலே தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து விடுவதாக மனநல ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

    தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவர், அவரது நடவடிக்கைகள் மூலம் பல்வேறு வகைகளில் சுற்றியுள்ளவர்களிடம் அதை வெளிப்படுத்துவார். அதை நண்பர்களோ, உறவினர்களோ உடனே உணர்ந்து கொண்டால் அவர்களின் எண்ணங்களை மாற்றி நல்வழிப் படுத்திவிட முடியும். இன்றைய நாகரிக உலகில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவும் தற்கொலை சம்பவங்கள் அதிகரிப்புக்கு, அடித்தளமாக அமைந்து விடுகிறது.

    கடன் தொல்லை, வேலை கிடைக்கவில்லை, குடும்ப பிரச்சினை, திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் ஏமாற்றம், உடல்நிலை சரியில்லை, காதல் தோல்வி, போதை பழக்கத்துக்கு அடிமை, படிப்பில் சாதிக்க முடியாத நிலை, தேர்வுகளில் தோல்வி போன்றவைகளே பெரும்பாலான தற்கொலைகளுக்கு காரணங்களாக அமைகின்றன.

    ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பவர்களின் தற்கொலைகளும் தற்போது புதிதாக இணைந்து இருக்கின்றன.

    தற்கொலை செய்துகொள்வதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதும் வருத்தம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

    தற்கொலை செய்துகொள்ளும் நபர்கள் தங்களை மட்டும் காயப்படுத்திக்கொள்வதில்லை. மாறாக, அவர்களைச் சார்ந்த குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் ஏற்படும் துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் தவிப்பர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

    தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை காணமுடிகிறது.

    கடந்த 2020-ம் ஆண்டில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2021-ம் ஆண்டு அது ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 33 ஆக உயர்ந்து இருப்பதுடன், அதில் 18 வயதுக்குட்பட்ட இளவயதினர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் புள்ளிவிவரம் காட்டுகிறது.

    இந்தியாவில் ஒட்டுமொத்த தற்கொலை சம்பவங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது.

    தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2021-ம் ஆண்டில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். அவர்களில் 940 பேர் மாணவர் பருவத்தில் உள்ளவர்கள் என்பது வேதனையிலும் வேதனை.

    இது ஒரு புறம் இருக்க 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது, மேலும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அதில், 10 ஆயிரத்து 692 பேர் தற்கொலை செய்து கொண்டதில், 525 பேர் மாணவச் செல்வங்களாக இருக்கிறார்கள் என்பதைக் காணும்போது மேலும் மனவலியாக இருக்கிறது.

    மனநல ஆலோசனை

    மாணவச் சமுதாயத்தின் இதுபோன்ற தற்கொலை எண்ணங்களை தடுக்க என்னதான் செய்ய வேண்டும்? என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது.

    அந்த கேள்விக்கு பதிலாக, மனநல ஆலோசனைகள் வழங்குவதன் மூலம், அவர்களைத் தற்கொலை முடிவுகளில் இருந்து விடுவிக்க முடியும் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.

    பள்ளிகளில் மனநல ஆலோசனை வகுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டாலும், அது பெயர் அளவிலேயே இருக்கிறது. அதனை மீண்டும் முறைப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது எழுந்து இருக்கிறது.

    இதுபற்றி ஆசிரியர்கள், பெற்றோர், மனநல ஆலோசகரிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

    சர்வதேச வாழ்வியல் மற்றும் மனநல ஆலோசகர் பஜிலா ஆசாத் கூறுகையில், 'மனதளவில் மாணவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் ஆரம்பத்தில் இருந்தே வாழ்வியல் வகுப்புகள் நடத்தப்படுவது அவசியம். ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்கொள்வது எப்படி? தோல்வியை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? என்பது பற்றி தொடக்கத்திலேயே கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது எதையும் அவர்கள் கையாளுவதற்கு மாணவர்களால் முடியும். எதிர்நீச்சல் போடுவது எப்படி? என்பதை மாணவர்களுக்கு சொல்லித் தரவேண்டும். மனதளவில் மாணவர்கள் பலவீனமாக இருக்கிறார்கள். அதனால்தான் தற்கொலை முடிவுகளை உடனே எடுக்கிறார்கள். இதனைச் சரிசெய்ய வாழ்வியல், மனநல பாடங்களை சொல்லித்தருவது மிகவும் அவசியம். ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? என்று ஆராய்ச்சி செய்வதைவிட, மாணவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றும், மனதளவில் அதற்கு அவர்கள் தயாராவதற்கும் பயிற்சி அளிக்க வேண்டும். வாழ்வியல் பாடங்கள் சரியாக சொல்லிக்கொடுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மன அழுத்தம் என்ற வார்த்தையே வராது' என்றார்.

    மனநல வகுப்புகள்

    ஆதம்பாக்கத்தை சேர்ந்த இல்லத்தரசி சங்கீதா சிவானந்தன் கூறும்போது, 'இந்த காலத்தில் பிள்ளைகளுக்கு எதையும் தாங்கும் மனப்பக்குவம் இல்லை. எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறார்கள். தோல்வியே வெற்றிக்கு அடிப்படை கல் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. பத்திரிகைகளில் பார்த்தால் தேவையில்லாத அர்ப்ப காரியங்களுக்குக்கூட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. செல்போன் பேசுவதை கண்டித்தாலோ, அதை வாங்கித்தராவிட்டாலோ தற்கொலை எண்ணத்துக்கு போவது மிகுந்த கவலை அளிக்கிறது. அந்த காலங்களில் நன்னெறி வகுப்புகள் இருந்தன. பள்ளிக்கூட மாணவர்களை திருத்தி, நல்ல பாதையில் கொண்டு சென்றன. இப்போது அவர்களின் மனநலத்தையே மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், மனநல ஆசிரியர்கள் நியமிப்பதும், மன நல வகுப்புகள் நடத்துவதும் காலத்தின் கட்டாயம் ஆகும்' என்றார்.

    அவசியம்

    கல்வி செயற்பாட்டாளர் உமா கூறும்போது, 'மாணவர்கள் தற்கொலையில் முக்கிய பங்கு மாணவர்களிடம் பரவலாக பேசப்படும் காதல் என்ற வார்த்தைக்கு இருக்கிறது. அதைப் பற்றிய சரியான புரிதல் பிள்ளைகளுக்கு இருப்பது கிடையாது. இதனால் பல இடைநிற்றல்கள் கூட நடந்திருக்கின்றன. தேர்வு பயம், செல்போன் பயன்பாடு போன்ற காரணங்களினாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது தொடர்ந்து நடக்கும் சம்பவமாக இருக்கிறது. ஆசிரியர் பற்றாக்குறையால், அவர்களுக்கு இருக்கும் வேலைப்பளுவால், பிள்ளைகளின் மனநிலையை அவர்கள் கவனிப்பது என்பது குறைந்துவிட்டது. ஆனால் இந்த விஷயத்தில் கவனம் செலுத்துவது அவசியம். எனவே அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்காவது, தனியாக மனநல அறையை ஏற்படுத்தி ஆலோசனை வழங்கலாம். ஏற்கனவே மனநல ஆலோசனைகள் தொடர்பாக கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து, அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. மனநல வகுப்புகள் என்பது மாணவர்களுக்கு அவசியமான ஒன்றுதான்' என்றார்.

    தவறான செயல்

    ரேகா என்பவர் கூறுகையில், 'மாணவர்கள் தற்கொலையில் ஈடுபடுவது தவறான செயல். பெற்றோருக்கு மனதளவில் பெரிய கஷ்டத்தை கொடுத்துவிடுகிறார்கள். பெற்றோர் ஒவ்வொரு மாணவரின் படிப்புக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். அதனை பிள்ளைகள் மனதில் வைத்தால், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது. பெற்றோரும் மாணவர்களைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துவது தவறு. பிள்ளைகளுக்கு எப்போது படிக்க வேண்டும்? எப்போது விளையாட வேண்டும்? என்று தெரியும். பிள்ளைகள்-பெற்றோர் இடையே நட்புறவு இருக்கவேண்டும். பிள்ளைகள், பெற்றோரிடம் நண்பனாக எதையும் தெரிவிக்கவேண்டும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பிள்ளைகளுக்கு மனநல வகுப்புகளை நடத்தலாம். அது சிறந்ததாகதான் இருக்கும்' என்றார்.

    விழிப்புணர்வு

    தனியார் கல்லூரி மனநல ஆலோசகர் நபிசா ஜெடி கூறும்போது, 'பலதரப்பு பின்புலம் கொண்ட மாணவர்கள் கல்லூரிகளில் படிக்க வருகிறார்கள். அவர்களுக்கு மனநலம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது கட்டாயமான ஒன்றாக இருக்கிறது. மேலும் கல்லூரிகளில் மனநல வகுப்புகள் மாணவர்களுக்கு வாரத்துக்கு ஒரு முறை அல்லது 2 முறை நடத்தலாம். அதில் சிறந்த மனநல ஆலோசனை பயிற்சியாளர்களை கொண்டு வகுப்புகள் நடத்தலாம். இதனை விருப்பப் பாடமாக இல்லாமல், அனைத்து மாணவர்களுக்கும் ஒரு பொதுப்பாடமாக கொண்டு வரவேண்டும். இந்த வகுப்புகளை பள்ளி அளவில் இருந்தே கொண்டு வருவது அவசியமான ஒன்று. 9-ம் வகுப்பில் இருந்து இதற்கு என்று தனிப்பாடம் உருவாக்கி நடத்தி, அவர்களை எதையும் எதிர்கொள்ளும் மாணவர்களாகவும், எளிதில் கடந்து செல்லும் மாணவர்களாகவும் உருவாக்க வேண்டும்' என்றார்.

    • குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை நகம் வெட்டிவிடவும்.
    • வீட்டுக்குள் காலணி அணிந்து வருவதை அனுமதிக்காதிருக்கவும். 

    மனிதக் கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து வெளியேறும் குடற்புழுக்களும் அவற்றின் முட்டைகளும் மண்ணில் கலந்திருக்கும். குழந்தைகள் அதுபோன்ற இடங்களில் விளையாடும்போது, அவற்றை எதிர்பாராதவிதமாகத் தொட்டுவிட்டு, கைகழுவாமல் உணவு உண்ணும்போது, விரலை வாயில் வைக்கும்போது அவை உடலுக்குள் செல்லும். கொக்கிப்புழுவின் லார்வாக்கள் சருமத்தைத் துளைத்துக்கொண்டு உடலுக்குள் செல்லக்கூடியவை என்பதால், குறிப்பிட்ட இடங்களில் குழந்தைகள் காலணி அணியாமல் நடக்கும்போது பாதங்கள் வழி உள்செல்கின்றன.

    படைபோன்ற பிரச்னை ஏதுமின்றி ஒருவருக்குப் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டால், கொக்கிப்புழு பாதிப்பு இருக்க அதிக வாய்ப்புள்ளது. சுகாதாரமற்ற தண்ணீரைக் கொதிக்கவைக்காமல் அருந்துவது, காய்கறிகள், பழங்களைக் கழுவாமல் உண்பது, முழுமையாக வேகவைக்காத இறைச்சி மற்றும் உணவுகளைச் சாப்பிடுவது என இவையெல்லாம் புழுக்கள் உடலினுள் செல்ல வாய்ப்பளிக்கும். சுகாதாரமற்ற வீடு, அறை, படுக்கை, உள்ளாடைகள் இவையெல்லாம் குடற்புழுத்தொற்று பெருகக் காரணங்களாகும்.

    குடற்புழுப் பாதிப்பைத் தவிர்க்க முடியுமா?

    எளிமையான ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம் தவிர்க்கலாம். அவை...

    * கழிவறை சென்று வந்த பின்னரும் சாப்பிடுவதற்கு முன்னரும் சோப்/ஹேண்ட்வாஷ் பயன்படுத்திக் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

    * குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களைச் சுத்தமாகக் கழுவி, தேவைப்பட்டால் ஸ்டெரிலைஸ் செய்து பராமரிக்கவும்.

    * ஈரமான இடங்கள் தொற்றுக்கு அதிக வழிவகுக்கும் என்பதால் குழந்தைகளை உலர்வான தரைகளில், காலணி அணிந்து பாதுகாப்பாக விளையாட வலியுறுத்தவும்.

    * குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை நகம் வெட்டிவிடவும்.

    * பாதுகாப்பான கழிவறைப் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்கவும்.

    * வீட்டுக்குள் காலணி அணிந்து வருவதை அனுமதிக்காதிருக்கவும். 

    * மதிய உணவுக்குக் கொடுத்தனுப்பும் ஸ்பூனை லஞ்ச் பையில் போடாமல், தனியாக ஒரு டப்பாவில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.

    * விளையாட்டு மைதானம், தோட்டம் என எங்கு சென்றாலும் காலணி அணிய வலியுறுத்தவும்.

    • மருந்துகளை குழந்தைகளின் கைக்கெட்டும் தூரத்தில் வைக்ககூடாது.
    • பெற்றோர்களும், குழந்தை காப்பாளர்களும் இதனைப்பற்றி அறிவது அவசியம்.

    அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும் வீட்டு பொருட்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே பெற்றோர்களும், குழந்தை காப்பாளர்களும் இதனைப்பற்றி அறிவது அவசியம்.

    * குழந்தைகள் சமையலறையில் விளையாடுவதை முற்றிலும் தவிர்க்கவும். சூடான எண்ணெய், சூடான தண்ணீர், தீப்பட்டி போன்ற பொருட்களை கையாளுவதால் தீக்காயம் ஏற்படலாம். கூர்மையான கத்தி போன்ற பொருட்களை கையாளுவதால் காயம் ஏற்படலாம்.

    * மிக்ஸி, அயர்ன்பாக்ஸ், சுவிட்ச்போர்டு போன்ற பொருட்களை கையாளுவதால் காயம் ஏற்படலாம். போன்ற கருவிகளை பெற்றோர்கள் உபயோகிக்கும் போது கவனமாக இருக்கவும்.

    * மண்எண்ணெய், பெட்ரோல், பூச்சிக்கொல்லி போன்ற ஆபத்தான திரவியங்களை கை எட்டும் தூரத்திலோ, அல்லது குளிர்பானம் அருந்திவிட்டு காலியான பாட்டில்களிலோ ஊற்றி வைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இதனை குழந்தைகள் அறியாமல் குடிப்பதனால் பாதிப்பு ஏற்படலாம்.

    * நாணயங்கள், ஊசிவகைகள், பேட்டரி, ஆணி, ரசகற்பூரம், கண்ணாடி, போன்ற சிறிய அளவிலான பொருட்கள் மற்றும் குழந்தைகளின் உள்ளங்கை அளவில் அடங்கும் பொருட்களை கையாளக் கூடாது. இப்பொருட்களை விழுங்குவதால் தொண்டை மற்றும் குடல் பகுதியில் பாதிப்பு ஏற்படலாம்.

    * கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய்யை தற்செயலாக உட்கொண்டால் வலிப்பு ஏற்படலாம்.

    * வீட்டில் உபயோகிக்கும் அனைத்து மருந்துகளும் குழந்தைகளின் கைக்கெட்டும் தூரத்தில் வைக்ககூடாது. தற்செயலாக உட்கொண்டால் பாதிப்பு ஏற்படலாம்.

    * செல்போன் (கைபேசி) தொலைக்காட்சி, மடிக்கணினி அளவோடு உபயோகிக்க வேண்டும். செல்போன் அதிகமாக உபயோகிப்பதால் குழந்தைகளின் வளர்ச்சி மைல்கல்லில் பாதிப்பு ஏற்படலாம்.

    மேற்கண்ட வழிமுறைகளை பெற்றோர்கள் கவனத்தில் கொண்டு குழந்தைகளை பாதுகாப்பாக பராமரித்தால், அவற்றின் மூலம் வரும் விளைவுகளை முற்றிலும் தடுக்க முடியும்.

    டாக்டர்.என்.நரேஷ்குமார்

    • காலம்காலமாக விளையாடி வந்த விளையாட்டுகளை மறந்து வருகிறோம்.
    • விளையாட்டு உலகம் அவர்களுக்கு நிழல் யுத்தமாக மாறிவிட்டது.

    பாரம்பரியம் என்பது தொன்றுதொட்டு வருவது ஆகும். அதனை நாம் காக்க வேண்டும். பல ஆண்டுகளாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் பாரம்பரியத்தன்மை கொண்டதாக கருதப்படுகின்றன. அந்த பாரம்பரிய நிகழ்வு நடத்தப்படுவதன் உண்மையான அர்த்தம் என்ன என்று நமக்கு தெரியாத நிலையிலும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம். இந்த நிலையில் பாரம்பரிய நிகழ்வின் உண்மையான காரணம் அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

    அப்படி தெரிந்து கொண்டு பாரம்பரிய நிகழ்வை கொண்டாடுவது தான் சரியானதாக இருக்கும். அதோடு எதிர்கால தலைமுறைக்கும் சரியான வழியை காட்டியதாக இருக்கும். இதை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றி குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு காலமாற்றம் என்பது எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு வருகிறது. அதில் பல நேரங்களில் நாம் பலியாகி விடுகிறோம். எந்த காரணமும் இல்லாமல் நாகரிகம் என்ற பெயரில் பல நல்லவனவற்றை நாம் தொலைத்துவிட்டோம். அந்த வகையில் நாம் முதலில் தொலைத்தது நம்முடைய பாரம்பரிய உணவுகள் தான்.

    இதுதான் அனைத்து சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு காரணமாகி விட்டது. பாரம்பரிய உணவை விட்டதால் பல்வேறு நோய்களுக்கும், உடல் ஒவ்வாமைக்கும் ஆளாகி விட்டோம். இதனால் அந்த உணவை இழந்ததோடு, தற்போது வாங்க முடியாத அளவுக்கு அவற்றின் விலை உயர்ந்து விட்டது.

    அதோடு பாரம்பரிய தொழில்களில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக விடுவித்து கொண்டோம். இதனால் இன்று சுயதொழில் என்பதே வெகுவாக குறைந்து விட்டது. பெரும்பாலானோர் ஏதாவது ஒரு வேலைக்கு கூலிக்கு செல்பவர்களாகவே இருக்கிறோம். கைத்தொழில்கள் அழிந்து வருகின்றன. இதற்கு காரணம் அந்த கலைகளின் நுட்பங்களை அடுத்த தலைமுறைக்கு கற்றுத்தராததும், அதுகுறித்து முறையாக பதிவு செய்யாததும் காரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல் பாரம்பரிய ஆடைகளை விட்டு விட்டோம். அதோடு அந்த வகை ஆடை அணிபவர்களை மதிப்பு குறைந்தவர்களாக நாமே கருத தொடங்கிவிட்டோம். ஆனால் அதே ஆடைகளை பிறர் அணிந்தால் அவர்களை உயர்வாக மதிப்பிடும் முரண்பாடான மனநிலையும் நம்மிடையே இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

    காலம்காலமாக விளையாடி வந்த விளையாட்டுகளை மறந்து வருகிறோம். காரணம் அவற்றை குழந்தைகளுக்கு கற்றுத்தர மறுத்துவிட்டோம். இதனால் குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெற்று வந்த மகிழ்ச்சியை கொடுக்க தவறிவிட்டோம். இதனால் அவர்கள் செல்போனில் தங்கள் நேரத்தை செலவழித்து வருகிறார்கள்.

    சில சாதாரண பிரச்சினைகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். விளையாட்டு உலகம் அவர்களுக்கு நிழல் யுத்தமாக மாறிவிட்டது. தற்போது மேலும் ஒருபடி மேலே போய் வன்முறை மனநிலை நிறைந்த விளையாட்டாக மாறிவிட்டது. இளம் வயதிலேயே தவறான பாதைக்கு செல்ல நேரிடுகிறது.

    வீட்டில் பெரியவர்களுக்கு உரிய இடம் தர மறுத்து வருகிறோம். இதனால் வீட்டில் பழங்கால பொருட்களும் குப்பைக்கு போய் விட்டன. பாரம்பரிய சடங்குகளை மறந்து வருகிறோம். பெரியவர்களின் வழிகாட்டுதல்களை புறக்கணித்துவிட்டதன் காரணமாக பல்வேறு சுமைகளுக்கு ஆளாகி, அதை சுமக்கவும் தெரியாமல் நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறோம். எனவே பழையது, முடிந்துபோனது, வரவேற்பு இல்லாதது என்று ஒதுக்கி விடாமல் குழந்தைகளுக்கு பாரம்பரிய கலாசாரத்தில் நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு நாமும் கற்று கொள்ள வேண்டும்.

    இந்தியா என்பது பாரம்பரிய, பண்பாட்டுக் கூறுகளால் தான் வலுவாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. அதுவே தனி மனிதர்களை மட்டுமல்ல இந்திய பொருளாதாரத்தையும் யாரும் வீழ்த்தி விடாமல் காத்து வருகிறது என்பதை நாம் உணரவேண்டும்.

    • பலவகையான புழுக்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
    • பெரியவர்களைவிட குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.

    குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆரோக்கியக் கேடுகளில் முக்கியமானது குடற்புழுப் பிரச்னை. குழந்தைக்குப் பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படும்போது குடற்புழுப் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. ஆறு மாதங்கள் முதல் ஒரு வயது வரை அம்மாவின் கண்காணிப்பில் உணவு ஊட்டப்படும்போதும் குடற்புழுப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்காது. ஒரு வயதுக்குமேல் குழந்தைகள் மண்ணில் விளையாடுவது, கைகளை அசுத்தமான இடங்களில் வைத்துவிட்டு அதே கைகளை வாயில் வைப்பது, சுத்தமற்ற உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதுபோன்ற சுகாதார மின்மைப் பிரச்னைகளால் குழந்தைகள் குடற்புழுப் பிரச்னைக்கு ஆளாகிறார்கள்.

    குழந்தைகள், வளர்ந்தவர்களின் குடலில் நாடாப்புழு (Tape Worm), நூல் புழு (Thread Worm), கொக்கிப்புழு (Hook Worm), சாட்டைப்புழு (Whip worm), தட்டைப்புழு (Round Worm) எனப் பலவகையான புழுக்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம். இவை பெரியவர்களைவிட குழந்தைகளை அதிகம் பாதிக்கும். அளவிலும் வடிவத்திலும் வேறுபடும் இந்தப் புழுக்கள், பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை.

    வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, காற்று பிரியாமல் இருப்பது, உணவில் நாட்டமின்மை, எடைக்குறைவு, சத்துக்குறைவு, மஞ்சள்காமாலை போன்ற பாதிப்புகளை நாடாப்புழு ஏற்படுத்தும். உறக்கமின்மை, சிறுநீர்க் கழிக்கும்போது வலி போன்ற பிரச்னைகளை நூல்புழு ஏற்படுத்தும். கொக்கிப்புழு பாதிப்பு தீவிரமாகும்போது இருமல், மூச்சிரைப்பு, ரத்தச்சோகை, சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். கொக்கிப் புழுக்கள் ஆசனவாயைச் சுற்றி முட்டையிடும். அதனால் அங்கு குழந்தைகள் விரல்களால் சொறியும்போது, அந்த முட்டைகள் விரல் இடுக்குகள், விரல்களில் சேர்ந்துகொள்ளும். அந்த விரல்களால் புத்தகம், ரிமோட், தட்டு என்று எந்தெந்தப் பொருள்களை எல்லாம் தொடுகிறார்களோ, அங்கெல்லாம் இந்த முட்டைகள் பரவும். அந்தப் பொருள்களைத் தொடுபவர்களையும் தொற்றிக்கொள்ளும். குழந்தைகள் அந்த விரலை வாயில் வைக்க நேர்ந்தால், மிகவும் கெடுதல்களை விளைவிக்கும்.

    எளிமையான ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம் குடற்புழுப் பாதிப்பை தவிர்க்கலாம். அவை...

    * கழிவறை சென்று வந்த பின்னரும் சாப்பிடுவதற்கு முன்னரும் சோப்/ஹேண்ட்வாஷ் பயன்படுத்திக் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

    * குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களைச் சுத்தமாகக் கழுவி, தேவைப்பட்டால் ஸ்டெரிலைஸ் செய்து பராமரிக்கவும்.

    * ஈரமான இடங்கள் தொற்றுக்கு அதிக வழிவகுக்கும் என்பதால் குழந்தைகளை உலர்வான தரைகளில், காலணி அணிந்து பாதுகாப்பாக விளையாட வலியுறுத்தவும்.

    * குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை நகம் வெட்டிவிடவும்.

    * பாதுகாப்பான கழிவறைப் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்கவும்.

    * வீட்டுக்குள் காலணி அணிந்து வருவதை அனுமதிக்காதிருக்கவும். 

    * மதிய உணவுக்குக் கொடுத்தனுப்பும் ஸ்பூனை லஞ்ச் பையில் போடாமல், தனியாக ஒரு டப்பாவில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.

    * விளையாட்டு மைதானம், தோட்டம் என எங்கு சென்றாலும் காலணி அணிய வலியுறுத்தவும்.

    • நாய் இனங்களும் குழந்தைகளுடன், நட்பாக விளையாடக்கூடியவை.
    • குழந்தைகளுக்கு, எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்காது.
    • குழந்தைகளுடன் அதிகம் நட்புறவு காட்டும்.

    நாய்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானோருக்கு பிடித்தது, நன்கு புசு... புசு... என்று இருக்கும் நாய்கள் தான். குறிப்பாக இந்த மாதிரியான நாய்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் இந்த வகை நாய்களுக்கு ரோமமானது அதிகமாக இருக்கும். ஆகவே இவைகள் பார்ப்பதற்கு பொம்மை நாய்க் குட்டி போலவே இருப்பதால், அவற்றுடன் குழந்தைகள் நன்றாக விளையாடுவார்கள். அதேபோல கோல்டன் ரிட்ரைவர், லாப்ரடார், பூடில், சிஸ்டூ, கோமண்டர், கோம்பை... போன்ற நாய் இனங்களும் குழந்தைகளுடன், நட்பாக விளையாடக்கூடியவை. இவற்றால் குழந்தைகளுக்கு, எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்காது.

    குழந்தைகளுக்கு ஏற்ற, குழந்தைகளுடன் விளையாடக்கூடிய நாய் இனங்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா..!

    1. சிஸ்டூ (shiz tuz)

    இந்த வகை குட்டி நாய்கள்தான், குழந்தைகளின் செல்லப்பிராணி பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது. இவை அழகானவை. துறுதுறுவென இருப்பவை. பிடித்து விளையாடும் அளவிற்கு, முடிகள் வளர்வதால் குழந்தைகளின் சிகை அலங்கார விளையாட்டிற்கு ஏற்றவை. வீட்டில் வளர்ப்பது தொடங்கி, வாக்கிங் அழைத்துச் செல்வது, கடற்கரையில் விளை யாடுவது, வெளி இடங் களுக்கு சென்றால் கையோடு தூக்கிச் செல்வது... என எல்லா வகையிலும், இது 'பெஸ்ட் சாய்ஸ்'.

    விலை: ரூ.10 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது.

    2. பூடில் (poodle)

    இதுவும், குட்டியாக இருக்கும் நாய்தான். சிஸ்டூ அளவிற்கு பிரபலம் இல்லை என்றாலும், தமிழ்நாட்டின் நிறைய வீடுகளில் பூடில் வளர்கிறது. சிஸ்டூவின் செல்ல சேட்டைகள், எல்லாமும் இந்த பூடில் நாய் இனத்திலும் எதிர்பார்க்கலாம். குழந்தை களோடு விளையாடுவது, பாசம் காட்டுவது... என உயிருள்ள விளையாட்டு பொம்மை போல இது செயல்படும்.

    விலை: ரூ.40 ஆயிரத்தில் தொடங்குகிறது

    3. கோல்டன் ரிட்ரைவர் (Golden Retriever)

    இவை வெளிநாடுகளில், பெரும்பாலான குடும்பங்களில் வளர்க்கப்படும் வகை. குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரிடமும் சிறப்பாக விளையாடக்கூடியது. இந்த நாயின் ரோமங்களை வெட்டாமல் இருந்தால், இது மிகவும் அழகாக புசு... புசு.. என்று இருக்கும். இவை ரிட்ரைவர் வகையை சார்ந்தவை. அதாவது ஏதாவது ஒரு பொருளை தூக்கி எறிந்தால், அதை தேடி சென்று கவ்விக் கொண்டு வந்து நம்மிடமே சேர்த்துவிடும்.

    விலை: ரூ.15 ஆயிரத்தில் தொடங்குகிறது

    4. லாப்ரடார் (Labrador retriever)

    இது ரொம்பவும் கிளாசிக் நாய் இனம். குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான நாய் என்று சிந்தித்தாலே, இந்த லாப்ரடார் ரிட்ரைவர் வகைகள்தான், முதலில் நினைவில் தோன்றும். வெள்ளை, கருப்பு வண்ணங்களில் இவை பெரும்பாலான வீடுகளில் வளர்ந்து வருகிறது.

    விலை: ரூ. 7 ஆயிரத்தில் தொடங்குகிறது

    5. கோம்பை (kombai)

    இது நம் தமிழ்நாட்டின் அடையாளம். நாட்டு நாய்களில் இதுவும் ஒன்று. மற்ற எல்லா நாட்டு நாய்களை விடவும், இவை குழந்தைகளுடன் அதிகம் நட்புறவு காட்டும். பாசமாக பழகும். குழந்தைகள் மட்டுமல்ல, குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி, விசுவாசமாக இருக்கும்.

    விலை: ரூ.10 ஆயிரத்தில் தொடங்குகிறது

    • உணவை வீணாக்க வேண்டாம் என்று பொதுவாகச் சொல்வது தீர்வாகாது.
    • எந்த விஷயம் குறித்தும் அவர்களிடம் சின்னச்சின்ன கேள்விகள் எழுப்பலாம்.

    நம் குழந்தைகளின் பிஞ்சு மனதிலேயே நல்ல பழக்கங்களை விதைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு அவசியம். 

    அனுபவங்களின் வழியாகக் கற்றுக்கொள்பவையே குழந்தைகளின் கேரக்டரை வடிவமைக்கின்றன. பிறந்தது முதல் ஆறு வயது வரை மனதில் விதைக்கப்பட்ட விஷயங்களே வளர்ந்து, அவர்களை வாழ்க்கை முழுக்க வழிநடத்துகின்றன.

    இந்த வயதில் நாம் எதைச் சொன்னாலும், அவர்கள் எதிர்க் கேள்வியின்றி கேட்டுக்கொள்கிறார்கள். நாம் சொல்வது உண்மையாக இருக்கும் என்று நம்புகின்றனர்.

    * குழந்தைகளுக்கு முதலில் பழக்கப்பட வேண்டியது பல் துலக்குவதைப் பற்றியே. ஆரம்பத்தில் இதற்கென நேரம் ஒதுக்கி மெனக்கெட வேண்டும். நீங்கள் அவர்கள் முன் பல்லைத் தேய்த்துக் காட்டுங்கள். அதற்கு முன்பு நீங்கள் பல்தேய்க்கும் முறை சரிதானா என்பதை பல் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். நாம் சரியாகச் செய்தால்தான் குழந்தைகளுக்கும் அந்த முறை கைக்கூடும்.

    * எந்த விஷயத்தைச் சொல்லிக் கொடுக்கும்போதும் அதை எதற்காகச் செய்கிறோம். செய்யாவிட்டால் என்ன ஆகும் என்பதையும் விளக்கமாகச் சொல்லவும். குறிப்பாக, ஏன் இரண்டு வேளை குளிக்க வேண்டும், அப்படிக் குளிப்பதால் என்ன நன்மை என்பதைச் சொல்லலாம். குளிப்பதையே ரசனையான அனுபவமாக மாற்றலாம். குளித்த பிறகு மனமும் உடலும் அடையும் உற்சாகத்தைப் புரிந்துகொள்ளச் செய்யலாம்.

    * மிகச் சிறு வயதிலேயே தானாகச் சாப்பிடுவது, உடுத்துவது, தூங்குவது என எல்லாவற்றையும் திணிக்காமல் அவர்களிடம் அனுமதி கேட்கலாம். எந்த விஷயம் குறித்தும் அவர்களிடம் சின்னச்சின்ன கேள்விகள் எழுப்பலாம். அந்தக் கேள்விகளின் வழியாகவே, குழந்தைகளின் கற்றல் துவங்குகிறது. எந்த விஷயத்தையும் ஆர்வத்துடன் தெரிந்துகொள்ள இதுபோன்ற விஷயங்களைப் பெற்றோர் பழக்கப்படுத்தலாம்.

    * பெரும்பாலான வீடுகளில் காலையில் எழுவதும் பள்ளிக்குக் கிளம்புவதும் போர்க்கோலமாக இருக்கும். இது அவ்வளவு சிக்கலான விஷயமில்லை. தூங்கப்போகும் முன்பு, வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் அடுத்த நாள் வேலைகள், அதற்கான நேரத் திட்டமிடல் பற்றிப் பேச வேண்டும். பள்ளிக்குக் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் எனில், உங்கள் குழந்தை எந்த நேரத்தில் எழுந்து என்னென்ன வேலைகளை முடிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டால், எல்லோருக்குமே காலை நேரம் இனிமையாக மாறும்.

    * தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காலைக்கடன் கழிப்பதைப் பழக்கப்படுத்த வேண்டும். இதைச் செய்யாமல்விடுவதே பல நோய்களுக்குக் காரணம். காலை வேளையில் இதற்கான நேரமும் அவசியம். சிறுநீர் மற்றும் காலைக்கடன் கழிப்பதை அடக்குவதால், உடல் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து குழந்தைகளுக்குப் புரியும்படி சொல்லலாம். தினமும் குழந்தைகள் எழுந்ததும் மிதமான சூட்டில் சுடுநீர் கொடுத்து பத்து நிமிடம் கழித்துக் குளிக்க வைத்தால், காலைக் கடன் பிரச்னை என்பது இருக்கவே இருக்காது.

    * தும்மும்போதும், இருமும்போதும் கைக்குட்டை வைத்து வாயை மூடிக்கொள்ளப் பழக்க வேண்டும். குழந்தைகளின் இந்தச் செயல்களைப் பார்த்து, அந்தப் பழக்கம் இல்லாத பெரியவர்களும் மாறிக் கொள்வார்கள்.

    * விடுமுறை நாள்களில் வீடு, டாய்லெட் சுத்தம் செய்வது, தேவையற்ற பொருள்களைத் தேடிப்பிடித்துக் கழிப்பது போன்றவற்றையும் அவர்களுடன் இணைந்து செய்வது அவசியம். தனது இடத்தையும் தன்னையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர இது வாய்ப்பாக அமையும்.

    * உணவை வீணாக்க வேண்டாம் என்று பொதுவாகச் சொல்வது தீர்வாகாது. உணவு தயாரிக்கும்போது சின்னச் சின்ன வேலைகளிலும் குழந்தைகளின் பங்கு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். உணவு டைனிங் டேபிளுக்கு வருவதற்கு முன்பு அதற்காகச் செய்த உழைப்பைக் குழந்தைகள் புரிந்துகொள்ளச் செய்தால், உணவை வீணாக்கும் பழக்கம் மறைந்துவிடும்.

    • மாணவர்களின் ஆங்கில வாசிப்பு, கணிதம் பாடங்களில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
    • குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் நல்லதுதான்.

    கொரோனா நோய்த் தொற்று குறைந்தபோதிலும், அதனால் விளைந்த பாதிப்புகள் ஒவ்வொரு துறையிலும் மறைந்தே இருக்கத்தான் செய்கின்றன.

    தொழில், கல்வி, சுகாதாரத்தில் அதன் தாக்கம் பெரிய அளவில் இருந்து வருவதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறோம். அதில் இருந்து மீள மத்திய, மாநில அரசுகளும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

    கல்வியைப் பொறுத்த அளவில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    அதிலும் ஆரம்பக் கல்வியை தொடங்கும் மாணவர்களின் கல்வித் திறனே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை பல்வேறு தரப்பிலான ஆய்வு முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

    பல குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களில் அடிப்படைகூட தெரியாத நிலை இருப்பது வேதனை அளிப்பதாக அவைகள் சுட்டிக்காட்டுகின்றன.

    இதற்கு முக்கிய காரணம், கொரோனா காலத்தில் 19 மாதங்களாக நேரடி வகுப்புகள் நடத்த முடியாமல் போனதுதான். அதனால் 1-ம் வகுப்பு பாடங்கள் பற்றி முழுமையாக தெரியாமலேயே 2-ம் வகுப்பிற்கும், அதுபோல் 2-ம் வகுப்பைப் படிக்காமலே 3-ம் வகுப்புக்கும் குழந்தைகள் தாவி வந்திருக்கிறார்கள்.

    இதனால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியால் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வியின் பலன்களை குழந்தைகள் முழுமையாகப் பெறவில்லை.

    எண்ணும் எழுத்தும் திட்டம்

    இவ்வாறு கல்வியில் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் கற்றல் இடைவெளியைச் சீர்செய்வது, கல்வித்துறையின் மிக முக்கிய கடமையாக இருக்கிறது.

    அதற்காக உருவானதுதான், எண்ணும் எழுத்தும் திட்டம். 2022-23-ம் கல்வி ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை அரசு முன்னெடுக்க இருக்கிறது.

    எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.6.2022 அன்று திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு அந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்தது.

    அதை செயல்படுத்த, தனியாக ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் கையேடுகளும், பயிற்சி நூல்களும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.) மூலம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அரும்பு, மொட்டு, மலர்...

    குழந்தைகளின் கற்றல் இடைவெளியை அடையாளம் கண்டு அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி கற்பிக்கும் வகையில் அவர்கள், "அரும்பு, மொட்டு, மலர்" என்று 3 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள்.

    அரும்பு என்பது படிக்கத் தெரியாத குழந்தைகளையும், மொட்டு என்பது கொஞ்சம் படிக்கத் தெரிந்த குழந்தைகளையும், மலர் என்பது நன்கு படிக்கத் தெரிந்த குழந்தைகளையும் குறிக்கிறது.

    இதில் அரும்பு, மொட்டு வகையில் இருக்கும் குழந்தைகளை மலராக பூக்க வைக்க வேண்டும் என்பதே திட்டத்தின் ஒரே நோக்கம் ஆகும்.

    ஆடல், பாடல், கதை சொல்லல்...

    தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்களை கற்றுக் கொடுக்கும் போது, குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும், எழுத்தும் வகுப்பறையில் ஆடல், பாடல், கதை சொல்லல், வாசித்தல், செயல்பாடு, படைப்பு, பொம்மலாட்ட களங்கள் போன்ற நிகழ்வுகள் மூலம் அவர்களின் ஆர்வமும், ஈடுபாடும் ஊக்கப்படுத்தப்படுகின்றன.

    • பேஷன் தொடர்பான படிப்புகள் மாணவிகளை அதிகமாகவே ஈர்க்கின்றன.
    • படைப்பாற்றல், கற்பனைத்திறன் இவைதான் இப்படிப்புக்கு அடிப்படை தேவை.

    ஆடை வடிவமைப்பு என்பது அடிப்படையில் ஓர் அழகுக்கலை. இந்த பேஷன் டிசைனிங் விஷயத்தில் இளைஞர்கள், இளம்பெண்கள் கூடுதலாகவே கவனம் செலுத்துவார்கள். இதன் காரணமாக, தற்போது பேஷன் டிசைனிங், பேஷன் டெக்னாலஜி தொடர்பான படிப்புகளில் சேரும் ஆர்வம் இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பேஷன் தொடர்பான படிப்புகள் மாணவிகளை அதிகமாகவே ஈர்க்கின்றன.

    ஆரம்பத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் மட்டுமே இருந்து வந்த பேஷன் டிசைனிங் படிப்புகள் தற்போது இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் பிரபலமாகி வருகின்றன. படைப்பாற்றல், கற்பனைத்திறன் இவைதான் இப்படிப்புக்கு அடிப்படை தேவை. இவ்விரண்டு திறன்களும் இருந்தால் இத்துறையில் ஜொலிக்கலாம். நிறைய சாதிக்கலாம்.

    சாதாரணமாக, பேஷன் டிசைன் படிப்பில் பிளஸ் 2-வில் எந்த குரூப் படித்த மாணவர்களும் சேரலாம். ஆனால், பேஷன் டெக்னாலஜி படிப்பில், பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்தவர்கள் மட்டுமே சேர முடியும். பேஷன் டிசைன் என்றவுடன் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது 'நிப்ட்' என அழைக்கப்படும் தேசிய பேஷன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (National Institute of Fashion Technology) தான். சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் 'நிப்ட்' இயங்கி வருகிறது. சென்னை வளாகம் தரமணியில் அமைந்துள்ளது. இங்கு இளங்கலையில் டிசைனிங் தொடர்பான 4 ஆண்டு பட்டப்படிப்பும் (பி.டிசைன்), பேஷன் டெக்னாலஜி சம்பந்தமான பட்டப்படிப்பும் (பி.எப்.டெக்) வழங்கப்படுகிறது.

    டிசைனிங் படிப்பில் பேஷன் டிசைன், லெதர் டிசைன், அக்ஸெசரி டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், நிட்வேர் டிசைன், பேஷன் கம்யூனிகேஷன் ஆகிய 6 பாடப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 30 இடங்கள். இளங்கலை படிப்புகளில் பிளஸ் 2 முடித்தவர்கள், பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பை பூர்த்தி செய்தவர்கள் சேரலாம். வயது வரம்பு 23. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. மேற்படிப்பை பொறுத்தவரையில், எம்.டிசைன், எம்.எப்.எம். (பேஷன் மேனேஜ்மென்ட்), எம்.எப்.டெக் (பேஷன் டெக்னாலஜி) படிப்புகள் உள்ளன. முதல் இரு படிப்புகளில் எந்த பட்டதாரிகளும் சேரலாம். ஆனால், எம்.எப். டெக் படிப்புக்கு மட்டும் பி.எப். டெக் அல்லது பி.இ., பி.டெக் பட்டம் அவசியம். இதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.

    இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் சிறப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள்.

    நிப்ட் கல்வி நிறுவனத்தைப் போன்று, தமிழ்நாட்டில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேஷன் தொடர்பான பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவை தவிர பல தனியார் கல்வி நிறுவனங்களில் பேஷன் டிசைனிங், பேஷன் டெக்னாலஜி படிப்புகள் உள்ளன. இந்த இடங்கள் பொறியியல் படிப்பு பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.

    பேஷன் டிசைனிங் தொடர்பான படிப்புகள் 100 சதவீதம் உடனடி வேலைவாய்ப்பு நிறைந்தவை. தற்போது, சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் ஆடை அலங்காரத்துக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனவே, பேஷன் டிசைனர்களுக்கு இத்துறைகளில் உடனடி வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. தற்போது சர்வதேச அளவில் ஆடை நிறுவனங்கள், பேஷன் ஷோ நிகழ்ச்சிகள் வளர்ந்து வருகின்றன. இதுபோன்ற காரணங்களால், பேஷன் தொடர்பான படிப்பை முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விரிந்து பரந்து கிடக்கின்றன. அவர்கள் ஆடை அலங்கார நிபுணர் ஆகலாம். வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புவோருக்கு பேஷன் டிசைனிங் அருமையான படிப்பு.

    பொதுவாக, இப்படிப்பை முடிப்பவர்கள் பேஷன் டிசைனர், பேஷன் கோ-ஆர்டினேட்டர், ஸ்டைலிஸ்ட், காஸ்ட்யூம் டிசைனர், டெக்ஸ்டைல் டிசைனர் என பல்வேறு பொறுப்புகளில் பணியில் சேரலாம். மேலும் ஆயத்த ஆடை நிறுவனங்கள், ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் போன்றவற்றில் பேஷன் டிசைன் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. தனியார் துறையில் மட்டுமின்றி அரசு பணி வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை. மத்திய, மாநில அரசுகளில் கைத்தறி துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். நிறைய மேற்படிப்பு வாய்ப்புகளும் இருக்கின்றன. எம்.பி.ஏ. பேஷன் மேனேஜ்மென்ட், எம்.டிசைன் (மாஸ்டர் ஆப் டிசைன்), எம்.எப்.டெக் (பேஷன் டெக்னாலஜி) படிக்கலாம்.

    கலை, அறிவியல், தொழில்நுட்பம், மனித உணர்வுகள் ஆகியவை இணைந்த கலவைதான் பேஷன் டிசைனிங். நமது உடலின் இரண்டாவது தோல் என்று கூட இதை அழைக்கலாம். உலக அளவில் மட்டுமின்றி இந்தியாவிலும் பேஷன் டிசைனிங் துறையானது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இதனை, பி.எஸ்சி மற்றும் பி.டெக் படிப்பாக படிக்கலாம். சாதாரணமாக பி.எஸ்சி படிப்புக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.50 ஆயிரமும், பி.டெக். படிப்பு எனில் ரூ.2 லட்சம் வரையிலும் செலவாகும். அதிக செலவு நிறைந்த படிப்பு போல் தோன்றினாலும் இப்படிப்பை முடிப்பவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

    பேஷன் துறையிலும், ஜவுளித் துறையிலும் பணிவாய்ப்புகள் மிகுதி. பெரிய நிறுவனங்களில் அசிஸ்டென்ட் பையர், பேஷன் அசிஸ்டென்ட், பேஷன் கன்சல்டன்ட், புராஜெக்ட் லீடர், டெக் னிக்கல் லீட், குவாலிட்டி ஆடிட்டர், பிரான்ட் மேனேஜர், கன்டன்ட் டிசைனர், இன்போகிராபிக் டிசைனர், டேட்டா அனலிஸ்ட், ஜூனியர் ரிசர்ச் சயின்டிஸ்ட், மெட்டீரியல் மேனேஜர், அப்பரல் டிசைனர், புரடக்‌ஷன் பிளானர், பேட்டர்ன் என்ஜினீயர், 3-டி ஸிமுலேட்டர், பிளான்ட் லே-அவுட் டிசைனர்... இப்படி பலதரப்பட்ட பொறுப்புகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

    இத்துறையில் தொடக்க நிலையில் ரூ.40 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். ஐந்தாறு ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். நல்ல படைப்பாற்றலும், கற்பனை வளமும், தொழில்திறனும் இருந்தால் சம்பளம் இன்னும் அதிகமாக பெறலாம். எல்லாவற்றுக்கும் மேலாக சொந்தமாக தொழில் தொடங்கி மிகப்பெரிய தொழில்முனைவோர் ஆகலாம்.

    பேஷன் டிசைனிங் தொடர்பான படிப்புகள்

    100 சதவீதம் உடனடி வேலைவாய்ப்பு நிறைந்தவை. தற்போது, சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் ஆடை அலங்காரத்துக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனவே, பேஷன் டிசைனர்களுக்கு இத்துறைகளில் உடனடி வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

    • மாணவர்கள் செல்போனில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
    • குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும்.

    கோவை கே.ஐ.டி.- கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி துறை தலைவர் (இ.இ.இ.) பேராசிரியை மைதிலி கூறியதாவது:-

    பள்ளி படிப்பு முடிந்தது கல்லூரிக்குள் வரும் மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது. நல்ல வேலை கிடைக்குமா என்ற கவலையும் ஏற்படுகிறது. கல்லூரி படிப்பு தொடர்பாக பெற்றோர் தங்களின் விருப்பம் மற்றும் முடிவுகளை மாணவர்கள் மீது திணிக்க கூடாது. அதை தவிர்க்க வேண்டும்.

    மாணவர்கள் விரும்பும் படிப்பில் சேர முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். முதல் மதிப்பெண் எடுக்க வற்புறுத்துவதால் மாணவர்கள் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடும் நிலை உள்ளது.

    மதிப்பெண் அவசியம் என்றாலும் சாதனை படைப்பதற்கு தன்னம்பிக்கை, தனித்திறன்கள் மிகவும் முக்கியம். குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுப்பதோடு பெற்றோர் அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். குடும்பத்தின் நிலை தெரியும் வகையில் குழந்தைகளுக்கு வளர்க்க வேண்டும்.

    மாணவர்கள் செல்போனில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஆனால் தங்களின் மனஉணர்வுகளை நண்பர், உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் மனநிலை அறிந்து பெற்றோர் உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் சமமாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து அடிக்கடி சளி பிடிக்கும்.
    • குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுக்கலாம்.

    குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். சரியாக சாப்பிடவும் மாட்டார்கள். குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து அடிக்கடி சளி பிடிக்கும். ஆகவே குழந்தைகள் பசி எடுத்து சாப்பிட பஞ்ச தீபாக்கினி லேகியம் கால் முதல் அரை டீ ஸ்பூன் காலை, இரவு இருவேளை கொடுக்கவும். இது பசியை தூண்டும், நல்ல சீரணமுண்டாகும். அதுபோல, நெல்லிக்காய் லேகியம் அரை முதல் ஒரு டீஸ்பூன் காலை, இரவு கொடுக்க வேண்டும். இதிலுள்ள வைட்டமின் சி, கால்சியம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

    இவை தவிர பொதுவாக, திரிபலா சூரணம் குழந்தைகளுக்கு 200-500 மி.கி. அளவில் கொடுக்கலாம், இரவு வேளையில் கொடுப்பது நல்லது. இதனால் பக்க விளைவுகள் இல்லை. குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுக்கலாம். அன்றைக்கு வெந்நீரில் குளிக்க வைப்பது நல்லது.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • சில மாணவர்கள் போதையிலே பள்ளிக்கு சென்று வருகிறார்கள்
    • சில பாடல் வரிகள் மாணவர்களிடையே ஆபாச சிந்தனையை வளர்க்கின்றன.

    குடிப்பவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாக பார்க்கப்பட்டன.

    இப்போது அது ஒரு கவுரமாக மாறிவருகிறது என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதிலும் இளைய தலைமுறை அதில் சிக்கி தள்ளாடுவதை நினைக்கிறபோது வெட்கப்பட்டே தீரவேண்டும்.

    கல்வி நிறுவனங்கள் அமைந்து இருக்கும் இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவு இருக்கிறது.

    21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விதியாக இருக்கிறது.

    விதிகளும், உத்தரவுகளும் இருந்து என்ன பயன்? தொட்டுவிடும் தூரங்களில் கெட்டுப்போகும் சூழல்கள் கொட்டிக்கிடக்கிறபோது, அது இளைஞர்களை எளிதில் பற்றிக்கொள்கிறது.

    புத்தகங்கள் இருக்க வேண்டிய பைகளில் மதுப்பாட்டில்களையும், பேனாக்கள் பிடிக்க வேண்டிய கைகளில் சிகரெட்டுகளையும் பார்க்கிறபோது மனம் பதைபதைக்கிறது.

    வகுப்பறைகளிலும், கழிப்பறைகளிலும் மாணவ, மாணவிகள் குடித்துவிட்டு கூத்தடிப்பதும், அதை வலைத்தளங்களில் பரப்பிவிட்டு மகிழ்ச்சியில் திளைத்திருப்பதும் என்ன பண்போ? தெரியவில்லை.

    முன்பு எல்லாம் ஆசிரியர் அடித்தார் என்று பெற்றோர்களிடம் வந்து புகார் சொன்னால், ''நீ என்ன தவறு செய்தாய்?'' என்று கேட்பார்கள்.

    இப்போது வந்து சொன்னால், ''அவர் எப்படி என் பிள்ளையை அடிக்கலாம்?'' என்று பதிலுக்கு கேட்பார்கள்.

    இந்த மாற்றம்தான் இளைய சமூகத்தை இதுபோன்ற இழிநிலைக்கு இழுத்துப்போகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    தவறுக்கு ஆசிரியரிடம் அடிவாங்காத மாணவர்கள் பின்னாட்களில் சமூக குற்றங்கள் செய்து போலீசாரிடம் அடிவாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். போதைப்பொருட்கள் ஒழிப்பு வேட்டையில் தனிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். தேடுதல் வேட்டையில் போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    இருந்தாலும் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை.

    சென்னை மாநகரில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் பிடிபடும் குற்றவாளிகளில் 18 வயதுக்கு குறைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது.

    போதை பழக்கத்தால் தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களையும், சமூக விரோதச் செயல்களால் தடம் மாறிப்போகும் இளைய சமூகத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    இதுபற்றி சமூக நலன்களில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

    மனநல ஆலோசகர் சங்கமித்திரை:- சமுதாயத்தில் ஒரு குழந்தை நல்ல முறையில் வளர வேண்டும் என்பது முதலில் பெற்றோர் கையில்தான் இருக்கிறது. குழந்தைகள் வளரும் போது அறியாமல் செய்யும் தவறுகளை, ஏன் இப்படி செய்தாய்? என்று கண்டிக்க கூடாது. இனிமேல் இப்படி செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கி புரிய வைக்க வேண்டும்.

    கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் கல்வி அமலில் இருந்ததால் செல்போன் பற்றிய புரிதல் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே செல்போனில் நல்ல விஷயங்கள் எது? கெட்ட விஷயங்கள் எது? என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டும். பள்ளியில் வகுப்புகள் நடத்தும்போது மாணவர்கள் மத்தியில் நல்லொழுக்க பழக்கங்கள் குறித்து ஆசிரியர்கள் அவ்வப்போது எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க முடியும்.

    மாதவரம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியை சூடாமணி:- அந்த கால சினிமா காட்சிகளும், பாடல் வரிகளும் நல்ல சிந்தனைகளையும், கருத்துகளையும் புகட்டின. ஆனால் இந்த கால சினிமா காட்சிகள், மாணவர்களைத் தவறான பாதைக்கு அழைத்து செல்வது போன்று இருக்கிறது.

    சில பாடல் வரிகள் மாணவர்களிடையே ஆபாச சிந்தனையை வளர்க்கின்றன. தங்கள் மனம் கவர்ந்த கதாநாயகன் திரையில் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது, வில்லன்களை அடித்து உதைப்பது, அரிவாளை தூக்குவது என செய்யும் செயல்களை மாணவர்கள் சிலர் அப்படியே கடைபிடிக்கிறார்கள். இது சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும்.

    எனவே திரைப்படங்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் வன்முறையை தூண்டுவதற்கு நடிகர்கள் உறுதுணையாக இருக்கக்கூடாது. தாங்கள் நடிக்கும் திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துகள், சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

    வேளச்சேரி பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை சுமதி:- நாங்கள் எங்களது ஆசிரியர்கள், ஆசிரியைகளை மதித்தோம். அவர்களது அறிவுரைகளைக் காது கொடுத்துக்கேட்டோம். அவர்கள் சொல்படி நடந்தோம். இதனால் நாங்கள் இன்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கிறோம்.

    ஆனால் தற்போது உள்ள மாணவ-மாணவிகள் ஆசிரியர்களின் சொற்பேச்சைக் கேட்பது இல்லை. மதிக்காமல் அவமரியாதை செய்கிறார்கள். சீருடையில் மாணவர்கள், மாணவிகள் மது அருந்துவது கலாசார சீரழிவு. இந்த வீடியோ பதிவுகளை பார்க்கிற போது மனம் மிகுந்த வேதனை அடைகிறது.

    ஏழை-எளிய பெற்றோர்கள் நம் பிள்ளை நம்மைப்போன்று கஷ்டப்பட கூடாது. நன்கு படித்து சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று கனவு காண்கிறார்கள். இதை மாணவர்கள் உணர்ந்து நல்லொழுக்கங்களைக் கடைபிடித்து வாழ்வில் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும்.

    சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராமலிங்கம்:- தமிழகத்தில் போதைப்பழக்கம் மாணவ-மாணவிகள் மத்தியில் அதிகரித்து வருகிறது என்பதை பொறுத்தமட்டில் தமிழனாக ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம். அரசு, ஆசிரியர், பெற்றோர், சமூகம் என அனைத்து தரப்பும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் பள்ளி மாணவர்களுக்கு சர்வ சாதாரணமாக கிடைக்கின்றன. யாருமே கண்டுபிடிக்க முடியாதபடி சாக்லெட் போன்ற வடிவில் போதைப்பொருட்கள் கிடைக்கின்றன. இதனை மாணவர்கள் சர்வ சாதாரணமாக பகிர்ந்து கொள்கின்றனர். போதைப்பொருளை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு சொல்லி வருகின்ற அதே வேளையில் எப்படி போதை பொருட்கள் மாணவர்களுக்கு சர்வ சாதாரணமாக கிடைக்கிறது என்பதை பார்க்க வேண்டியது உள்ளது. டாஸ்மாக் கடைகளில் யார் வேண்டுமானாலும் மது வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு மதுபானம் வழங்கப்படாது, ஆதார் அட்டைக்கு குறிப்பிட்ட அளவில் மட்டுமே மதுபானம் வழங்குவது, டாஸ்மாக் செயல்படும் நேரத்தை குறைப்பது போன்ற கடுமையான விதிகளை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.

    தமிழ்நாடு 'டாஸ்மாக்' பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தனசேகரன்:- இன்றைய காலக் கட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைக் கலாசாரம் உருவாகி உள்ளது. குடிப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகி வருவது உண்மைதான். ஆனால் 'டாஸ்மாக்' கடைகளில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவது இல்லை. பள்ளி மாணவர்கள் 'டாஸ்மாக்' கடைகள் முன்பு நின்றுக்கொண்டிருக்கும் மதுபிரியர்களிடம் ரூ.5, ரூ.10 கூடுதல் விலை கொடுத்து எப்படியோ மதுபாட்டில்களை வாங்கி விடுகிறார்கள். அதேப்போன்று பார் ஊழியர்கள் மூலமாகவும் வாங்கி விடுகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன. சில மாணவர்கள் போதையிலே பள்ளிக்கு சென்று வருகிறார்கள் என்று வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    மாணவர்களுக்கு மதுப்பாட்டில்களை வாங்கித் தரும் நபர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொண்டு கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்தில் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமே தவிர, போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி தவறான பாதையில் சென்று வாழ்க்கையில் தடம் மாறி விடக்கூடாது என்பது சமூக ஆர்வலர்களின் அறிவுரையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றன.

    ×