என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • சிறு குழந்தை ‘ஜங்க் புட்’ கலாசாரத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.
    • பழமாக சாப்பிடாத குழந்தைகளுக்கு புரூட் சாலட்டாக்கி கொடுங்கள்.

    ''ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, முறையான உணவு பழக்க வழக்கங்கள் அவசியம். ஆனால் அதை பின்பற்ற முடியாமல் பரபரப்பான வாழ்க்கைக்கு ஏற்ப, ஆரோக்கியம் இல்லாத வெற்றுணவுகளை (ஜங்க் புட்) அதிகம் உட்கொள்கிறோம். பெரியவர்கள் மட்டுமின்றி, சிறு குழந்தைகள் கூட, 'ஜங்க் புட்' கலாசாரத்தில் சிக்கி தவிக்கிறார்கள். இது, எதிர்கால சந்ததியினரின் உடல் ஆரோக்கியத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்'' என்று ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஜனனி சுப்புராஜ்.

    இளம் இயற்கை மருத்துவர், யோகா பயிற்றுனர், கர்ப்ப கால வழிநடத்துனர்... இப்படி பல்வேறு அடையாளங்களை கொண்டிருக்கும் ஜனனி, ஊட்டச்சத்து துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர். பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை மீட்டெடுத்தல், சமச்சீர் உணவு குறித்த விழிப்புணர்வுகளை வழங்குதல், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவு ஆலோசனை வழங்குதல்... என இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக, 'ஜங்க் புட்' உணவுகளுக்கு எதிரான இவரது விழிப்புணர்வு வீடியோக்கள், சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி இருக்கின்றன.

    அவரிடம், ஊட்டச்சத்து உணவுகள் பற்றியும், குழந்தைகளிடம் நிலவும் ஜங்க் புட் கலாசாரத்தை மாற்றுவது குறித்தும் சில கேள்விகளை முன்வைக்க, சூடாகவும், சுவையாகவும் பதிலளித்தார். அவை இதோ....

    * நாம் உண்ணும் உணவும், நடைமுறையில் இருக்கும் உணவு பழக்க வழக்கமும் சரியானதா?

    நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிய உணவு பழக்க வழக்கங்கள் சரியானதாகவும், ஆரோக்கிய வாழ்க்கைக்கு சிறப்பானதாகவும் இருந்தது. ஆனால், இப்போது உணவு குறித்த விழிப்புணர்வுகள் அதிகமாக இருந்தாலும், அவை அனைத்தும் குழப்பம் நிறைந்தவையாகவும், தவறான உணவு பழக்கவழக்கத்திற்கு பாதை அமைத்து கொடுப்பதாகவும் அமைந்திருக்கின்றன. சமூக வலைத்தளங்களில், உலா வரும் தகவல்களை காரணம்காட்டி, குறிப்பிட்ட சத்து அடங்கிய உணவுகளை ஒட்டுமொத்தமாக ஒதுக்குவதும், 'டயட்' என்ற பெயரில், ஒருசில உணவுகளை மட்டுமே உட்கொள்வதும் என தவறான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கிறோம். சிலருக்கு, சாப்பிடுவதுகூட மன அழுத்தமான விஷயமாக மாறியிருக்கிறது. உடல் எடை அதிகரித்துவிடக்கூடாது என்ற கவலையிலேயே பலரும் உணவு உட்கொள்கிறார்கள். இது மன அமைதியை சீர்குலைத்து, ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கிறது.

    * உணவு பழக்க வழக்கங்களில் என்னென்ன தவறுகள் செய்கிறோம்?

    மேற்கத்திய உணவு கலாசாரத்தினால் நம் மண்ணுக்கும், மரபுக்கும் தொடர்பில்லாத உணவு வகைகளையும், பழம் மற்றும் காய்கறி வகைகளையும் உட்கொள்வது, மிகப்பெரிய தவறு. மேலும் நம் முன்னோர்களின் உணவு பழக்கத்தில் இருந்து மாறுபட்டு, விருப்பத்திற்கு ஏற்ப உணவு சமைத்து உண்பதும், தவறான செயல்பாடுகள். உதாரணத்திற்கு, தயிரில் ஊறவைத்த பழைய சோறும், ஆவியில் அவித்து எடுத்த இட்லியும், கூழ் வகைகளும்தான் தமிழ்நாட்டின் பாரம்பரிய 'பிரேக் பாஸ்ட்'. ஆனால் இன்று எண்ணெய்யில் சுட்டு எடுத்த தோசை, பூரி, நூடுல்ஸ் ஏன்...? புரோட்டா, பிரியாணி கூட நவீன கால 'பிரேக் பாஸ்ட்' வகைகளில் இணைந்திருக்கின்றன.

    அதேபோல, நம் முன்னோர்கள் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாகவே இரவு உணவை உண்டு முடித்துவிடுவார்கள். ஆனால் இன்று, நள்ளிரவு 2 மணிக்கு கூட பிரியாணி உண்ணும் பழக்கம் டீன்-ஏஜ் வயதினருக்கு உண்டு.

    * 'ஜங்க் புட்' உணவு பழக்கம், சிறு குழந்தைகள் வரை வேரூன்றி இருக்கிறதே. அவை எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும்?

    வீட்டில் சமைக்கப்படாமல் கடைகளில் வாங்கி சுவைக்கப்படும் பாக்கெட் மற்றும் பாட்டில் உணவு பொருட்களைதான் ஜங்க் புட் என்கிறோம். ஒருசில துரித உணவுகளும், ஜங்க் புட் பட்டியலில் வரும். பெரும்பாலான பாக்கெட் உணவுகளில், கார்போஹைட்ரேட் மற்றும் அளவிற்கு அதிகமான சர்க்கரை நிறைந்திருக்கிறது. இவை இரண்டுமே, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றன. கண்ணை கவரும் வண்ணங்களில், குழந்தைகளின் ஆசையை தூண்டும்படியாகவே ஜங்க் புட் உணவுகளும் விளம்பரம் செய்யப்படுகின்றன. குழந்தைகளே விரும்பி கேட்டாலும், அதை மெல்ல மெல்ல குறைத்துவிடுங்கள். இல்லையேல், வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிக் சிண்ட்ரம்), அதிக உடல் பருமன் (ஒபிசிட்டி) மற்றும் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

    * குழந்தைகளுக்கு, ஆரோக்கியமான உணவு வழங்குவது எப்படி?

    குழந்தைகளுக்காக இந்த வாரம் என்ன சமைக்க இருக்கிறோம், என்னென்ன காய்கறிகளை பயன்படுத்த இருக்கிறோம்... என்ற திட்டமிடல் இருந்தாலே போதும், ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கிய உணவுகளை சமைக்க ஆரம்பித்துவிடுவீர்கள். மேலும் குழந்தைகள், ஒருகுறிப்பிட்ட பழம், காய்கறிகளை உண்ண மறுத்தால், அதை வேறுவிதமாக சமைத்து கொடுங்கள். பழமாக சாப்பிடாத குழந்தைகளுக்கு புரூட் சாலட்டாக்கி கொடுங்கள். காய்கறிகளை கூட்டு, பொரியல் ஆக சமைத்து கொடுக்கலாம். இல்லையேல், ஜூஸ் ஆக மாற்றி பருக கொடுக்கலாம். குழந்தைகளுக்கு வண்ணமயமான உணவு பிடிக்கும் என்பதால், பலதரப்பட்ட வண்ணங்களில் உணவு படைக்கலாம்.

    * குழந்தைகளிடம் இருக்கும் ஜங்க் புட் உணவு பழக்கத்தை எப்படி மாற்றுவது?

    தடாலடியாக மாற்றிவிட முடியாது என்றாலும், நல்ல பழக்கத்தை கற்றுக்கொடுத்து, ஜங்க் உணவு பழக்கத்தை குறைக்கலாம். குழந்தைகள் விரும்பும் ஜங்க் உணவுகளுக்கு மாற்றான ஆரோக்கிய உணவு எது என்பதையும், அவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு எது என்பதையும் கண்டறிந்து... ஜங்க் உணவுகளுக்கு மாற்றாக, அதை உண்ண கொடுங்கள். முக்கியமாக, காய்கறி, பழம், பயிறு வகைகளை சாப்பிட பழக்கினாலே, ஜங்க் உணவு பழக்கம் குறைந்துவிடும்.

    * ஆரோக்கியமாக வாழ என்னென்ன செய்ய வேண்டும்?

    நேரத்திற்கு உணவு உண்ணுங்கள். மண்ணுக்கும், மரபுக்கும் தொடர்புடைய உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள். அந்தந்த பருவ காலத்தில் விளையும் காய்கறிகளையும், பழங்களையும் கட்டாயம் உட்கொள்ளுங்கள். முடிந்தவரை, எல்லாவற்றையும் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இது பிடிக்காது, அது பிடிக்காது என உணவுகளை ஒட்டுமொத்தமாக ஒதுக்காதீர்கள். பிடிக்காத உணவுகளையும் அளவாக சேர்த்து கொள்ளுங்கள். நிதானமாக உணவு உட்கொள்ளுங்கள்.

    * குழந்தைகளுக்கு, இந்த கோடை காலத்தில் என்னென்ன உணவுகளை தவிர்க்கலாம்? எதை கொடுக்கலாம்?

    இன்ஸ்டென்ட் மிக்ஸ் என்ற பெயரில் வரும் குளிர்பான பொடி, குளுக்கோஸ் என்ற மாயத்தோற்றத்தில் இருக்கும் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே குளிர்பானங்களை தயாரியுங்கள். லெமன் ஜூஸ்ஸில் தொடங்கி, உயர் ரக பழங்கள் வரை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஜூஸ் தயாரிக்கலாம். வீட்டில் தயிர் தயாரித்து அதில் சர்க்கரை கலந்து லஸ்ஸியாக பருக கொடுக்கலாம். இல்லையேல், தயிருடன் உலர் திராட்சை கலந்து கொடுக்கலாம். இஞ்சி, சீரகம், கொத்தமல்லி சேர்த்து மோர் தயாரித்து கொடுக்கலாம். சர்பத், கோல்ட் காபி... என வீட்டிலேயே கோடை உணவுகளை செய்து அசத்தலாம்.

    • நம்முடைய தமிழ்நாட்டில் பல்வேறு கல்வி முறைகள் இருக்கின்றன.
    • நிறைய பெற்றோர் தங்களின் குழந்தைகள் மூலமாக கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள்.

    முன்பை விட, இப்போது பள்ளிகள் அதிகமாகிவிட்டது. புதுப்புது கல்வி முறைகளும், பாடத்திட்டங்களும் தமிழகத்திற்குள் புகுந்துவிட்டன. இந்நிலையில், குழந்தைகளை புதிதாக பள்ளியில் சேர்க்க இருக்கும் பெற்றோர்களின் மனதில் எழும் இயல்பான சில கேள்விகளுக்கு, மருத்துவர் மற்றும் கல்வியாளராக பணியாற்றும் பார்கவி மூலம் விடையளிக்க முயன்றிருக்கிறோம்.

    புதுக்கோட்டையை சேர்ந்தவரான இவர், மருத்துவர். ராஜஸ்தான் மெடிக்கல் கல்லூரியில், மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் கற்றுக்கொடுத்து டீச்சிங் எனப்படும் கற்பித்தல் பணியையும் கற்றுக்கொண்டிருக்கிறார். இவர், இப்போது குழந்தைகளின் கற்றல் திறனையும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் ஆய்வு செய்து, அதை மேம்படுத்தும் ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளார். அவர் நம்முடைய கேள்விகளுக்கு விடைக்கொடுக்கிறார்.

    * இப்போது என்னென்ன கல்வி முறைகள் நடைமுறையில் இருக்கிறது?

    நம்முடைய தமிழ்நாட்டில் பல்வேறு கல்வி முறைகள் இருக்கின்றன. சி.பி.எஸ்.இ., தமிழ்நாடு ஸ்டேட் போர்ட், மெட்ரிகுலேஷன், இன்டர்நேஷனல் பாக்காலுரேட் (ஐ.பி.), ஐ.ஜி.சி.எஸ்.இ. போன்ற கல்வி முறைகள், எல்லோருக்கும் பரீட்சயமான கல்வி முறைகளாக திகழ்கின்றன. அதேசமயம், மாண்டி சோரி, ரெஜியோ எமிலியா, வால்டோர்ப், பேங்க் ஸ்டீரீட் இப்படியான மழலையர் கல்வி முறைகள்.... கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைந்து வருகின்றன. இவற்றோடு மெட்ரிகுலேஷன் தரத்திலான டெக்னோ பள்ளிகளும் அதிகம் முளைத்துவிட்டன.

    * எந்த கல்வி முறை சிறப்பானதாக இருக்கும்?

    இப்போது எல்லா கல்வி முறைகளும், அப்டேட் ஆகிவிட்டன. சில கல்வி முறைகள் அப்டேட் ஆகிக்கொண்டு இருக்கின்றன. அதனால், எது சிறந்தது என குறிப்பிடுவது, தேர்ந்தெடுப்பது கடினம்தான். இருந்தாலும், பள்ளிக்கும், வீட்டிற்குமான தொலைவு, கல்வி கட்டணம்... போன்றவைதான், பள்ளி தேர்வை நிர்ணயிக்கின்றன.

    முடிந்தவரை, செயல்முறை கல்வி அதிகமாக இருக்கும் கல்விமுறைகளை தேர்ந்தெடுப்பது நல்லது. சி.பி.எஸ்.இ., தமிழ்நாடு ஸ்டேட் போர்ட், மெட்ரிகுலேஷன், இன்டர்நேஷனல் பாக்காலுரேட் (ஐ.பி.), ஐ.ஜி.சி.எஸ்.இ. போன்ற கல்வி முறைகள் சிறப்பானதாக இருக்கும்.

    * குழந்தைகளின் கற்றல் திறனையும், புரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் எப்படி மேம்படுத்த முடியும்?

    கண்களால் பார்த்து படிப்பது ஒரு ரகம். இது டெக்னோ பள்ளிகளில் நடக்கும். டிஜிட்டல் திரைகளில் ரைம்ஸ் பாடல்கள், கதைகள் ஓடவிட்டு குழந்தைகளுக்கு டிஜிட்டல் கல்வி கற்றுக்கொடுப்பார்கள். அதேபோல கண்களால் பார்த்து படிப்பதுடன், அதை கைகளால் செய்து பார்த்தும், வரைந்து படிப்பதும் மற்றொரு ரகம். உதாரணத்திற்கு, வானவில் பற்றி கற்றுக்கொடுக்கும்போது 6 வண்ணங்கள் இருக்கும், ஒவ்வொரு வண்ணத்திற்கு ஒவ்வொரு பெயர் இருக்கும் என்று சொல்லிக்கொடுப்பதை விட, வண்ண பெயிண்டுகளை கையில் கொடுத்து, அவர்களை வானவில் வரைய சொல்லி, கற்றுக்கொடுக்கும் செய்முறை கல்வி மற்றொரு ரகம். விஷூவல் கல்வியை விட, செய்முறை கல்விக்குதான் ஆற்றல் அதிகம். அதுதான், குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும்.

    * ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறனும், குழந்தைகளின் கல்வி கற்றல் திறனும் முன்பும், இப்போதும் எப்படி இருக்கிறது?

    முன்பை விட, ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறன் அதிகரித்திருக்கிறது. இப்போது ஆசிரியர்கள் சிறப்பாக கல்வி கற்றுக்கொடுக்கிறார்கள். குறிப்பாக, வீடியோ காட்சிகள், மாதிரி உபகரணங்களை கொண்டு குழப்பமான பாடங்களையும் எளிதாக கற்றுக்கொடுக்கிறார்கள். அதேபோல குழந்தைகளின் கல்வி கற்கும் ஆர்வமும், அதிகரித்திருக்கிறது. ஆர்வமாக கல்வி கற்கிறார்கள். அதேசமயம், மாணவர்கள்-ஆசிரியர்கள் இவ்விருவரின் கல்வி பயணத்திற்குள், பெற்றோரின் தலையீடும் இப்போது அதிகரித்திருக்கிறது. காரணமில்லாமல் விடுமுறை எடுப்பது, குழந்தைகளுக்கு ஆதரவாக தேர்வுகளை தவறவிடுவது, குழந்தைகளை அடிக்கக்கூடாது, கண்டிக்கக்கூடாது, திட்டக்கூடாது... என நிறைய கண்டிஷன்களை முன்வைப்பது, அவன் படிக்கவில்லை என்றாலும் பராவாயில்லை அவனை கண்டிக்க வேண்டாம் என்பது போன்ற பல தலையீடுகள் அதிகரித்துவிட்டன. இது ஆரோக்கியமான சமூகத்தை கட்டமைக்க உதவாது என்பதையும், தங்களுடைய குழந்தைகளை ஒழுக்கமானவர்களாக வளர்க்க முடியாது என்பதையும் பெற்றோர் மறந்துவிடுகின்றனர்.

    * சமீபகால கல்விமுறை, குழந்தைகளுக்கு பாதிப்பை உண்டாக்குகிறதா?

    நிச்சயமாக, டிஜிட்டல் பள்ளிகளில் டிஜிட்டல் திரை மூலம் பாடம் நடத்தப்படுவதாலும், வீடுகளில் ஸ்மார்ட்போன் பயன்பாடும் அதிகரித்திருப்பதாலும் குழந்தைகளின் கண் பார்வை சிறுவயதிலேயே பாதிக்கப்படுகிறது. இன்றைய குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் டிஜிட்டல் கல்வி முறைகளே, பாதிப்பான கல்வி முறைகளாக மாறி வருவதை எவராலும் மறுக்க முடியாது.

    * எல்லா கல்வி முறையிலும், விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா?

    ஆம்...! இப்போது எல்லா கல்வி முறையிலும், எல்லா பள்ளிகளிலும் விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் விளையாட்டு அனுபவம், குழந்தைகளின் மன நலம் மற்றும் உடல்நல ஆரோக்கியத்திலும், மூளை வளர்ச்சியிலும் அதிக பங்காற்றுவதால், அதை எல்லா பள்ளிகளும் ஊக்கப்படுத்துகிறார்கள்.

    * கல்வி அறிவு இல்லாத பெற்றோர், சர்வதேச கல்வி முறையில் குழந்தைகளை சேர்க்க முடியாது என்ற கருத்து உண்மையா?

    இது, பள்ளி நிர்வாகத்திற்கு ஏற்ப மாறுபடும். நிறைய பள்ளிகள், இந்த கருத்தை பொய்யாக்கி உள்ளன. அதேசமயம், சில பள்ளிகள் இந்த கருத்தை உண்மை என நிரூபித்துள்ளன. ஆனால், நிறைய பெற்றோர் தங்களின் குழந்தைகள் மூலமாக கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள். ஒருசில பெற்றோர், குழந்தைகள் வாயிலாகவே ஆங்கிலம்-இந்தி மொழி பேசும் பழக்கத்தையும் உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

    * கற்றல் திறன், கற்பித்தல் திறன் சார்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறீர்கள். உங்களுடைய ஆசை என்ன?

    குழந்தைகளை, எந்த வகையிலும் பாதிக்காத தொழில்நுட்பங்களை கொண்டு, ஆர்வத்தை தூண்டும் வகையிலான கல்வி முறையை கட்டமைப்பதும், அதற்கேற்ற கற்பித்தல் திறனை வளர்ப்பதும்தான் என்னுடைய ஆசை. இப்போது வரை, ஆய்வின் மூலம் கற்றுணர்ந்த சில நுட்பங்களை பல பள்ளிகளுக்கு சென்று, கற்பித்து வருகிறேன்.

    • சாலையைக் கடக்கும்போதும், சைக்கிள் ஓட்டும்போதும் பல குழந்தைகள் காயமடைகின்றனர்.
    • சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை கற்றுக் கொடுக்க வேண்டும்.

    சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது அவசியமானது. இதன் மூலம் அவர்களை பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்க முடியும். குழந்தைகள் வெளிப்புறங்களில் இருக்கும்போதும், விளையாடும்போதும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதில் பலரும் போதுமான கவனம் செலுத்துவதில்லை. இதனால் சாலையைக் கடக்கும்போதும், சைக்கிள் ஓட்டும்போதும் பல குழந்தைகள் காயமடைகின்றனர். இதைத் தவிர்க்க, சிறு வயதிலேயே அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை கற்றுக் கொடுக்க வேண்டும்.

    சாலை பாதுகாப்பு பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும்போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். விபத்துகள், காயங்கள், சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் போன்றவற்றை பற்றி அதிக அளவில் எடுத்துக்கூறி அவர்களை பயமுறுத்தக்கூடாது. போக்குவரத்து விதிகளை பயமின்றி அறிந்துகொள்ளும் வகையில், அவர்களுக்கு வேடிக்கையாக கற்பிக்க வேண்டும்.

    சிக்னல்களின் அவசியம்: அடிப்படை போக்குவரத்து குறியீடுகள் மற்றும் சிக்னல்கள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நல்லது. நடந்து செல்லும்போது சாலையை கடப்பதற்கு பாதசாரிகளுக்கான பாதையை (ஜீப்ரா கிராசிங்கை) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    பச்சை விளக்கு எரியும்போது செல்வது, சிவப்பு விளக்கு எரியும்போது நிற்பது, மஞ்சள் விளக்கு எரியும்போது வேகத்தை குறைப்பது ஆகியவை முக்கியமான விதிகள் என்று அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.

    சைக்கிள் ஓட்டும்போது பாதுகாப்பு: குழந்தைகள் சைக்கிள் ஓட்டும்போதும் ஹெல்மெட் அணிய வலியுறுத்த வேண்டும். பிரேக், டயரில் போதுமான காற்று, சைக்கிள் செயின் என அனைத்தும் சரியான நிலையில் இருக்கின்றதா என்று சோதித்த பின்பே சைக்கிளைப் பயன்படுத்த அறிவுறுத்தவும். இரவில் சைக்கிளைப் பயன்படுத்தினால், அதில் பொருத்தப்பட்டிருக்கும் முகப்பு விளக்கு சரியாக இயங்குகின்றதா? என்று பார்க்கவும். சாலையில் செல்லும்போது, சைக்கிளுக்கான பாதையைப் பயன்படுத்த வேண்டும். அத்தகைய பாதை இல்லாத பகுதியில், சாலையின் ஓரமாக செல்ல அறிவுறுத்த வேண்டும். பரபரப்பான தெருக்களில் பெற்றோர் தங்கள் மேற்பார்வையின்றி குழந்தைகளை சைக்கிள் ஓட்ட அனுமதிக்கக்கூடாது.

    அவசரம் வேண்டாம்: சாலையை கடக்கும்போது இடப்புறமும், வலப்புறமும் பார்த்து கவனமுடன் செல்ல வேண்டும். ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வந்தால் அவற்றுக்கு வழிவிட வேண்டும். வாகனம் அருகில் உள்ளதா? தொலைவில் உள்ளதா? என்பதை உரத்த ஒலி அல்லது மெல்லிய ஒலியைக் கொண்டு எப்படி வேறுபடுத்திக் கண்டறிவது என்பது குறித்தும் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். சாலையைக் கடக்கும்போது, நிதானமாக நடந்து கடப்பது முக்கியம், அவசரமாக ஓடி கடக்கக்கூடாது எனவும் கற்றுத்தருவது அவசியம். சாலை விதிகளை செயல்முறை விளக்கமாகப் பெற்றோர் பயிற்சி அளித்தால் குழந்தைகளுக்கு எளிதில் புரிய வைக்க முடியும்.

    • கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தாமல் பயன்படுத்தலாம்.
    • குளிர்காலத்தில் எண்ணெயை மிதமான சூட்டில் உபயோகிப்பதே நல்லது.

    இந்திய கலாசாரத்தில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் வழக்கத்தை பலரும் கடைப்பிடித்து வருகிறார்கள். குழந்தை பிறப்பதற்கு சில நாட்கள் முன்னதாகவே, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் குழந்தை பராமரிப்புக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாரித்து வைப்பார்கள். அதில் முக்கியமானவை மசாஜ் செய்வதற்கான எண்ணெய் மற்றும் குளியல் பொடி.

    மசாஜ் செய்வதற்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யை பயன்படுத்துவார்கள். குழந்தைகளின் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும்போது சரும வறட்சி நீங்கும். உடல் வளர்ச்சி அதிகரிக்கும். எலும்புகள் வலுவாகும். ரத்த ஓட்டம் சீராகும். தேங்காய் எண்ணெய் அடர்த்தி குறைவாக இருப்பதால் சருமத்தில் எளிதாக ஊடுருவும்.

    இது கோடை காலத்தில் சருமத்தை குளிர்விக்கும். பனிக்காலத்தில் சருமத்துக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கும். பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் அழற்சியை நீக்கும். சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இதில் உள்ள ஆக்சிஜனேற்ற அழற்சி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் குழந்தைகளுக்கு சரும பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

    குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்காக, ரசாயனங்கள் கலக்காமல் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தலாம். அதற்கான குறிப்புகள் இங்கே…

    அதிக முற்றல் அல்லது இளசாக இல்லாமல், நடுத்தரமாக இருக்கும் தேங்காய்கள் 2 அல்லது 3 எடுத்துக்கொள்ளவும். அவற்றை துருவி தண்ணீர் சேர்க்காமல் இரண்டு முறை பால் பிழிந்துகொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் தேங்காய்ப்பாலை ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும். சிறிது நேரத்தில் பால் சிறு சிறு கட்டிகளாக மாறத் தொடங்கும்.

    அவ்வப்போது அதை அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கடைசியாக பாலில் இருக்கும் தண்ணீர் சத்து முழுமையாக வற்றி, எண்ணெய் மேலே மிதந்து வரும். இப்போது தீயை அணைக்கவும். எண்ணெய் ஆறியதும் வடிகட்டி கண்ணாடி ஜாடியில் ஊற்றி வைக்கவும். இதை அறை வெப்பநிலையில் வைத்திருந்து பயன்படுத்தலாம். வீட்டில் தயாரிக்கும் இந்த எண்ணெய்யை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்றாலும், குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் புதிதாக தயாரித்து பயன்படுத்துவது நல்லது. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல், பிரசவித்த தாய்மார்களும் இதைப் பயன்படுத்தலாம்.

    தேங்காய் எண்ணெய்யை குழந்தைகளுக்கு பயன்படுத்தும் முறை

    கோடைக்காலத்தில், பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய்யை சூடுபடுத்தாமல் அப்படியே பயன்படுத்தலாம். அதேசமயம், குளிர்காலத்தில் மிதமான சூட்டில் உபயோகிப்பதே நல்லது. முதலில் குழந்தையின் மார்பில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி, கைகளால் மேல்நோக்கி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

    அதைத் தொடர்ந்து தலை, கைகள், கழுத்து, கால்கள் மற்றும் பாதங்களில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம். வட்ட மற்றும் மேல்நோக்கிய இயக்கங்களில் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். குழந்தையின் தொப்புள், மூக்கு, கண்கள் மற்றும் காதுகளில் எண்ணெய் ஊற்றுவதைத் தவிர்க்கவும்.

    • டயப்பர் அணிவது, சில நேரங்களில் குழந்தையின் சருமத்தில் காயங்களை ஏற்படுத்தும்.
    • குழந்தையின் தொடைப்பகுதியில் சருமம் வீக்கமடைந்து, திட்டுகள் போல இருக்கும்.

    பயன்படுத்துவதற்கு எளிதாகவும், வசதியாகவும் இருப்பதால் குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. இதனால் குழந்தைகளுக்கு சரும பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். டயப்பர் உபயோகிப்பதற்கு முன்பு, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொண்டால் இந்த பாதிப்புகளை எளிதாகத் தடுக்கலாம்.

    டயப்பர் அணிவது, சில நேரங்களில் குழந்தையின் மென்மையான சருமத்தில் எரிச்சலுடன் கூடிய காயங்களை ஏற்படுத்தும். இது 'டெர்மடிடிஸ்' என்று அழைக்கப்படுகிறது. குழந்தையின் தொடைப்பகுதியில் சருமம் வீக்கமடைந்து, திட்டுகள் போல இருக்கும். தொடைப்பகுதி சிவந்து காணப்படும். அரிப்பு உணர்வு தீவிரமாகும்போது அந்த இடத்தில் சிறு சிறு கொப்புளங்களும் உண்டாகலாம். இவை வந்த பிறகு தடுப்பதை விட, வரும் முன்பு காப்பது நல்லது. இதற்கான தீர்வுகள் என்ன என்று பார்ப்போம்.

    டயப்பரை மாற்றுங்கள்

    பருத்தித் துணி பயன்படுத்தும் போது, சிறுநீர் கழித்தவுடன் ஈரமானதை உணர்ந்து உடனே மாற்றுவோம். ஆனால் டயப்பர் பயன்படுத்தும் போது ஈரத்தை உறிஞ்சிவிடுவதால், நாள் முழுவதும் ஒரே டயப்பரை அணிவிப்பவர்களும் இருக்கிறார்கள். துணிகளையோ, டயப்பரையோ துவைத்துப் பயன்படுத்துவதாக இருந்தால் வெந்நீரில் நன்றாக அலசி, வெயிலில் உலர வைத்து பயன்படுத்துங்கள்.

    உலர்வாக இருக்கட்டும்: டயப்பரைக் கழற்றிய உடன் குழந்தையின் பிறப்புறுப்புகள், பிட்டப்பகுதி, தொடைப்பகுதியில் மிதமான வெந்நீர் கொண்டு துடைத்து விடுங்கள். பிறகு மென்மையான பருத்தித் துணி கொண்டு ஒற்றி எடுத்து, உலர விடுங்கள். இதனால் சருமத்துக்கு தேவையான காற்றோட்டம் உள்ளே செல்லும். சருமம் சுவாசிக்க இயலும்.

    சுத்தம் செய்யுங்கள்: காலை, மாலை இரு வேளைகளிலும் குழந்தைக்கு டயப்பர் அணிவிக்கும் இடங்களில் மிதமான சூடுள்ள நீரில் சுத்தம் செய்யுங்கள். டயப்பர் அணிந்த பகுதியில், சதை மடிப்புகள் உட்பட எல்லா இடங்களிலும் மென்மையாக சுத்தம் செய்யுங்கள். பருத்தித் துணி அணிவித்தாலும் இத்தகைய பராமரிப்புகள் அவசியம் செய்ய வேண்டும்.

    இரவில் டயப்பர் அணிவித்தல்: குழந்தைக்கு இரவு நேரத்தில் டயப்பர் அணிவிப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம் அல்லது ஒரு டயப்பர் மட்டும் பயன்படுத்தலாம். குழந்தை தூங்கும்போது அணிவிக்கலாம். மறுநாள் காலை எழுந்தவுடன் முதலில் அதை மாற்றிவிடலாம். இதனால் டயப்பர் உபயோகிப்பதால் வரும் சரும பிரச்சினைகளைத் தடுக்கலாம்.

    பரிசோதியுங்கள்: குழந்தைகளின் தொடைப்பகுதியை அவ்வப்போது பரிசோதியுங்கள். தோல் சிவத்தல், தடிப்புகள் இருக்கும்போது டயப்பர் பயன்படுத்த வேண்டாம். குழந்தை சிறுநீர், மலம் கழித்தால் உடனே சுத்தம் செய்யுங்கள். டயப்பரை வெளியில் செல்லும்போது மட்டும் பயன்படுத்துங்கள். வீட்டில் இருக்கும்போது பருத்தித் துணிகள் அணிவிப்பது பாதுகாப்பானது.

    • பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கண்டிப்பாக நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும்.
    • பள்ளி மாணவர்களுக்கு கட்டாய நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும்.

    பூமியில் பிறந்த மனிதன் உலகை மட்டுமின்றி பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் வல்லமை பெற்றவனாக திகழுகிறான். எனினும் சிலர் அந்த பஞ்ச பூதங்களுக்குஇரையாகும் துயரமும் தொடருகிறது. 'நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவர் வாக்கு. அத்தகைய தண்ணீரை தேக்கிவைத்தும், ஆறு, கால்வாய்கள் வழியாகவும் விவசாயத்துக்கு கொண்டு செல்கிறோம். பூமியை தோண்டி கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்தும் பயன்படுத்துகிறோம்.

    தண்ணீரில் நிகழும் உயிரிழப்புகள்

    'உள்ளூர்காரனுக்கு பேயை கண்டால் பயம், வெளியூர்காரனுக்கு தண்ணீரை கண்டால் பயம்',

    'ஆழம் தெரியாமல் காலை விடாதே'

    போன்ற பழமொழிகள் தண்ணீரில் உள்ள ஆபத்தை எச்சரிக்கின்றன. எனினும் வெளியூர்களுக்கு செல்லும் இளைஞர்கள் அங்குள்ள நீர்நிலைகளை கண்டதும் குதூகலம் அடைகிறார்கள். நீச்சல் தெரியாவிட்டாலும், அதில் குளித்தே தீர வேண்டும் என்று ஆர்வம் ஏற்படுகிறது. நீச்சல் தெரிந்தவர் அழைக்கும்போது, நீச்சல் தெரியாதவரும் தண்ணீருக்குள் இருக்கும் ஆபத்தை உணராமல் உள்ளே இறங்கி உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

    அந்த வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் வெளியூர் நபர்கள் மற்றும் சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இதை தடுக்க ஆற்றங்கரையில் ஆபத்தான பகுதி, ஆழமான பகுதி குளிக்கக்கூடாது என்று எச்சரிக்கை பலகைகள் அமைத்துள்ளனர். ஆனாலும் அதையும் மீறி, கரையில் நின்று குளிக்க சென்று, ஆழமான பகுதிக்கு நகரும்போது காலனின் பிடியில் சிக்கிக்கொள்கிறார்கள்.

    நெல்லை மாவட்டம் பாபநாசம் தலையணையில் யாரும் உள்ளே சென்று குளிக்கக்கூடாது என்று தடுப்புச்சுவர் கட்டி கேட் போடப்பட்டு உள்ளது. ஆனாலும் சுவர் ஏறி குதித்து குளிக்க செல்கிறார்கள். இதனால் அடிக்கடி உயிரிழப்பு சம்பவங்கள் நடந்தேறி வருகிறது. சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் நெல்லை அருகே திருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் நீர்நிலைகளில் மூழ்கி 38 பேர் இறந்து உள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 13 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

    கரூர் பகுதிக்கு விளையாட சென்ற பள்ளி மாணவிகள் காவிரி ஆற்றில் குளித்தபோது அடுத்தடுத்து உள்ளே விழுந்து பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    தூத்துக்குடியில் 14 பேர் பலி

    நீண்ட கடற்கரையை தன்னகத்தே கொண்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு மாவட்டத்தின் நடுவே பாய்ந்தோடி சென்று கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆற்றின் கீழ் பல்வேறு குளங்கள் உள்ளன. மேலும் மானாவாரி பகுதியிலும் குளங்கள் அமைந்துள்ளன. மழைக்காலங்களில் இந்த குளங்கள் நிரம்பி வழிகின்றன. கோடைகாலங்களில் பெரும்பாலான குளங்களில் குறைந்த அளவு தண்ணீரே கிடக்கிறது.

    இதுபோன்ற குளங்கள், ஆறு, கடல் பகுதியில் சிறுவர்கள் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்கின்றனர். அப்போது நீச்சல் தெரியாமல் சிறுவர்கள், இளைஞர்கள் மூழ்கி இறக்கும் துயரமும் நிலவுகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 7 பேர் நீர்நிலைகளில் மூழ்கி இறந்து உள்ளனர். நடப்பு ஆண்டில் இதுவரை 7 பேர் நீர்நிலைகளில் மூழ்கி பலியாகி உள்ளனர். விளாத்திகுளம் அருகே புதூர் சிவலார்பட்டியில் கடந்த 13-ந் தேதி கண்மாயில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் இறந்த சம்பவம் மீளாத்துயரை ஏற்படுத்தியது.

    நீச்சல் பயிற்சி

    கோடை விடுமுறையில் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் நெஞ்சை நொறுங்க செய்கிறது. இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க அனைவரும் நீச்சல் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். சில நாடுகளில் ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது போன்று நீச்சல் பயிற்சியும் கட்டாயம் என்று கொண்டு வருவது நன்மை பயக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரிகள், நீச்சல் ஆர்வலர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

    பயப்பட தேவையில்லை

    நெல்லை மாவட்ட நீச்சல் கழக தலைவர் திருமாறன்:-

    மனித வாழ்க்கையில் நீச்சல் அத்தியாவசியமான ஒன்று ஆகும். இது உயிர் காக்கும் கலை ஆகும். நீச்சல் தெரியாமல் இருப்பது உடல் ஊனம் போன்றது. தண்ணீர் அருகில் செல்ல முடியாமல், ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியது வரும். பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கண்டிப்பாக நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும். இசை, நடனம், கணினி உள்ளிட்ட பயிற்சிகளை போன்று நீச்சல் கற்கும் பயிற்சிக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பெற்றோரிடம் போதிய ஆதரவு இல்லை.

    நீச்சல் பயிற்சி உயிர்காக்கும் கலை மட்டுமல்லாமல், ஒருமுறை கற்றுக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் தண்ணீருக்குள் நீந்தி செல்ல முடியும். இதன்மூலம் உடல் வலுப்பெறும். நீச்சல் அடிக்கும்போது அனைத்து உடல் உறுப்புகளும் செயல்படும். மனம் ஒருமுகப்படும். நெல்லையில் அண்ணா விளையாட்டு அரங்கில் 25 மீட்டர் நீள நீச்சல் குளம் மற்றும் கீழநத்தம் விளையாட்டு அரங்கில் சர்வதேச தரத்தில் பந்தய நீச்சல் குளம் ஆகிய 2 இடங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. இங்கு 12 நாட்கள் கோடைகால நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட விளையாட்டு அதிகாரியை சந்தித்து, உடனடியாக நீச்சல் பயிற்சி பெறலாம்.

    பெற்றோர், குழந்தைகளை இந்த பயிற்சிக்கு அழைத்து செல்ல வேண்டும். 12 நாட்கள் மட்டும் அழைத்து சென்று நீச்சல் பயிற்சி அளித்து விட்டால் வாழ்நாள் முழுவதும் நீர்நிலைகளுக்கு செல்லும் குழந்தைகள் குறித்து பயப்பட தேவையில்லை. முறையாக நீச்சல் கற்றுக்கொண்டால் மற்றவர்களை விட தண்ணீரில் அதிகநேரம் மிதக்க முடியும். பேராபத்தில் பிறரையும் காப்பாற்ற முடியும்.

    நெல்லை மணிமூர்த்தீசுவரத்தை சேர்ந்த ஆசிரியைநந்தினி:-

    நான் நெல்லை தாமிரபரணி ஆற்றில் 4 வயதிலேயே நீச்சல் கற்றுக் கொண்டேன். நீச்சல் தெரிந்திருப்பதால் ஆறு, குளத்தில் பயம் இன்றி குளிக்க முடிகிறது. நீச்சல் தெரிந்தால் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளலாம். எனவே, குழந்தை பருவத்திலேயே நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும். மனிதனுக்கு நீரும், காற்றும் முக்கியம் என்பது போல் நீச்சலும் முக்கியமாகும்.

    எச்சரிக்கைகளை மதித்து...

    நெல்லை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரி கணேசன்:-

    தண்ணீரை கண்டதும் பலருக்கும் குளிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். முன்பு பருவநிலை சரியாக இருக்கும். குளம், குட்டைகளில் நீர் நிரம்பி கிடக்கும். பெற்றோருடன் அங்கு சென்று நீச்சல் கற்றுக் கொள்வார்கள்.

    தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக தாமிரபரணி ஆறு மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் குளிக்கும் உள்ளூர் மக்கள் பாதுகாப்பாக குளித்துச் செல்கிறார்கள். ஆனால் வெளியூரில் இருந்து உறவினர்கள் வீட்டுக்கு வருகிறவர்கள், தாமிரபரணி ஆற்றில் சென்று குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்று சிக்கிக் கொள்கிறார்கள். இதற்கு நீச்சல் தெரியாததே காரணம் ஆகும்.

    எனவே, தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் குளிக்கும் பல இடங்களில் அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் எச்சரிக்கையை மீறி விடுகிறார்கள். சீவலப்பேரியில் பாலத்தில் கிழக்கு பகுதியில் அடிக்கடி நிகழ்ந்த உயிரிழப்பை தடுக்கும் வகையில் அங்கு பொதுமக்கள் இறங்கும் படிக்கட்டு அகற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுதவிர கிணறுகள், குளங்களிலும் சில நேரங்களில் நீச்சல் தெரியாமலும், வேறு காரணங்களினாலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையின்எச்சரிக்கைகளை மதித்து பொதுமக்கள் செயல்பட வேண்டும்.

    உடல் ஆரோக்கியம்

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் நீரில் மூழ்கி 38 பேர் இறந்து உள்ளனர். அதில் ஆண்கள் 25, பெண்கள் 10, குழந்தைகள் 3 பேர் ஆவார்கள். 66 பேரை காப்பாற்றி உள்ளோம். இதில் 59 ஆண்கள், 6 பெண்கள், 1 குழந்தை அடங்குவர். இந்த ஆண்டில் இதுவரை 9 ஆண்கள், 3 பெண்கள், ஒரு குழந்தை என 13 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். 5 பேரை காப்பாற்றி உள்ளோம்.

    தமிழகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அனைத்து விளையாட்டு பிரிவுகளுக்கும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கிற்கு நீச்சல் பயிற்சிக்கு புதிதாக பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    கிராமப்புறத்தை சேர்ந்தவர் சிறுவர், சிறுமியராக இருக்கும்போதே நீச்சல் உள்ளிட்ட கலைகளை அவர்களாகவே கற்றுக் கொள்வார்கள். ஆனால் நகர்ப்புறத்தில் அதற்கான வாய்ப்புகள் உருவாவதில்லை.

    வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுனர் உரிமம், ஹெல்மெட் அவசியம் என்பது போன்று நீச்சல் என்பதும் மிக அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கட்டாயமாக நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும். நீச்சல் தெரிந்தவர்களாக வளர்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் பள்ளியில் படிக்கும் பருவத்திலேயே மாணவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    பிளஸ்-2 வரை பெற்றோர் கண்காணிப்பில் இருக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும்போது சுதந்திரமாக செயல்படுகிறார்கள். அப்போதுதான் நீர்நிலைகளின் ஆபத்தை உணராமல் உள்ளே இறங்கி சிக்குகிறார்கள். எனவே அவர்களை நீச்சல் தெரிந்தவர்களாக உருவாக்க வேண்டும். இது ஆபத்து காலத்தில் உயிர் பலியாவதை தடுக்கும். மேலும் நீச்சல் பயிற்சியானது உடல் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    நீர்நிலைகளில் இறங்க வேண்டாம்

    தூத்துக்குடியை சேர்ந்த ரோஜா ராஜ்:-

    நான் நீரில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை நான் பல உயிர்களை காப்பாற்றி உள்ளேன். கடவுள் படைத்த உயிர் வீணாக போய் விடக்கூடாது. இதனை நான் மிகவும் விரும்பி செய்கிறேன். நீர்நிலைகளில் இளைஞர்கள் குளிக்கும்போது, கவனமாக இருக்க வேண்டும். நீச்சல் தெரியாதவர்கள் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம். இளைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீர்நிலைகளில் ஏற்படும் இறப்பை தடுக்க முடியும். நீச்சல் பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்காக தனியாக ஒரு குழுவையே ஏற்படுத்தவும் இருக்கிறோம். எனவே, பள்ளி மாணவர்களுக்கு கட்டாய நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • குழந்தைகள் கண்ணாடி அணியும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
    • குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

    இயற்கையை ரசிக்கும் ஓர் அற்புதமான வாய்ப்பு கண்களுக்கு மட்டுமே கிடைத்து இருக்கிறது. ஆனால் இந்த கண்களை பாதுகாப்பதில் நாம் பலரும் இன்று அலட்சியம் காட்டுவதால், பல்வேறு பின்விளைவுகளை சந்திக்கிறோம். முதுமை வயதை அடைவதற்கு முன்பே கண்பார்வை மங்கி போவது, முதுமையில் அணிய வேண்டிய கண் கண்ணாடியை இளமையில் அணிவது உள்பட ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.

    முன்பு கண் கண்ணாடி அணிவதை ஒரு குறையாக பார்த்தனர். திருமண நிகழ்வுக்குக்கூட பங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு காலத்தில் அது தடையாக இருந்திருக்கிறது. ஆனால் இன்றோ கண்ணாடி அணிவது நாகரிகமாக மாறத் தொடங்கிவிட்டது. இதன் விளைவு சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ஏராளமானோர் கண்ணாடி அணியும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

    இளம் வயதினர்

    தற்போது பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கண் பார்வை பிரச்சினை அதிகரித்து, கண்ணாடி அணியும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு, டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் இளம்வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    நாகரிக வளர்ச்சி எதில் இருக்க வேண்டுமோ? அதில் இல்லாமல், மற்றவற்றில் ஊற்றி வளர்ப்பது, இன்று பெரிய அளவிலான பிரச்சினைகளை இன்றைய தலைமுறை சந்திக்க தொடங்கி இருக்கிறது. அதில் ஒன்றுதான் இளம் வயதிலேயே கண்ணாடி அணிவது. இதுதொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர், மருத்துவர் என்ன சொல்கிறார்கள்? என்பதை பார்க்கலாம்.

    செல்போன், டி.வி.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவத் துறை தலைவர் விஜய்சோப்ரா:-மக்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது. குழந்தைகள் அழும் போது அவர்களை சமாதானம் செய்ய, பெற்றோர்கள் செல்போனை கையில் கொடுத்து அழுகையை நிறுத்துகின்றனர். காலப்போக்கில் குழந்தைகள் செல்போன் இருந்தால் தான் உணவு சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது என அனைத்திற்கும் அடம்பிடிக்க ஆரம்பிக்கின்றனர். கொரோனா கால கட்டத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது.

    அதில் இருந்து குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். செல்போன்களை அதிக நேரம் உற்றுப்பார்ப்பதால் குழந்தைகளுக்கு தூர பார்வையில் கோளாறுகள் ஏற்படுகிறது. அதேபோல் லேப்டாப்பில் படம் பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது போன்ற செயல்களின் காரணமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கண் பார்வை அதிகம் பாதிக்கப்படுகிறது. காலப்போக்கில் பார்வை கோளாறு, மங்கலான பார்வை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி கண்ணாடி பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. அதேபோல் உணவு பழக்க வழக்க முறைகளிலும் மாற்றம் வந்துள்ளது.

    கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், பிரைடு ரைஸ், பர்கர் போன்ற அரைவேக்காடு உணவுகளால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே குழந்தைகளுக்கு சிறு தானியங்கள், காய்கறிகள், பழ வகைகள் மற்றும் கீரைகள் போன்ற உணவு முறைகளை பழக்கப்படுத்த வேண்டும். அதேபோல் கண்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுத்தும் செல்போன் உள்ளிட்ட பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    துரித உணவு

    திருப்பத்தூரை அடுத்த கெஜல் நாயக்கன்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அறிவியல் ஆசிரியை ர.நித்யா:-குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. அதிகப்படியான ஒளி தொடர்ச்சியாக கண்களில் படுவதால் கண் நரம்புகளை பாதித்து கண் குறைபாடுகளை உருவாக்குகிறது. அதற்கு நம் அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள பல காரணங்களை கூறலாம். உணவு முறை, டி.வி., செல்போன் முழு முதல் காரணம் என்றாலும், நாம் அதிகமாக கவனிக்க தவறும் காரணம் எல்.இ.டி. பல்புகள். வீடுகள், வாகனங்களில் அதிகமாக பயன்படுத்தும் எல்.இ.டி. பல்புகள் மற்றும் செல்போன் பிளாஷ் லைட்டுகளிலிருந்து வரும் நீல ஒளி விழித் திரையை குறிப்பாக குழந்தைகளுக்கு உடனடியாக பாதிக்கும். இதர கண் நோய்களையும், தூக்கமின்மையையும் கொடுக்கும். அதனால் பொதுமக்கள் சமூகப் பொறுப்புடன் அலங்காரத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும், அதனை பயன்படுத்துவதை தவிர்த்தல் வருங்கால தலைமுறைக்கு செய்யும் சமூக கடமையாகும். சாதா குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது. செல்போனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஒழுங்கு முறை மற்றும் தினசரி உடற்பயிற்சியுடன் கூடிய கண் பயிற்சி குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கற்பித்து, பெற்றோரும் அவர்களுடன் இணைந்து செய்து நடைமுறைப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டால் கண் பார்வையை பல தலைமுறைகளுக்கு காப்பாற்றிக் கொள்ளலாம்.

    சத்துவாச்சாரியை சேர்ந்த பசுபதி:-எனது மகன் சிறுவயதில் இருந்தே கண் கண்ணாடி அணிந்து வருகிறான். தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் தேர்வுகள், ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இதனால் செல்போன், கம்ப்யூட்டரை குழந்தைகள் அதிகம் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் பல குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பெடுத்து படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. எனவே மாணவர்களுக்கு பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளின் நேரத்தை குறைக்க வேண்டும். குழந்தைகளுக்கு துரித உணவுகள் வழங்குவதை பெற்றோர் கைவிட வேண்டும். குழந்தைகளின் நலன் மீது பெற்றோருக்கு அக்கறை வேண்டும். அனைத்து பெற்றோருக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

    பாரம்பரிய உணவு

    செய்யாறு பகுதியை சேர்ந்த முதுகலை ஆசிரியர் எம்.முனுசாமி:-இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் உடல் பராமரிப்பு இன்றி இளம் வயதில் கண்ணாடி அணிவது அதிகரித்து வருகிறது. சரியான விகிதத்தில், காய்கறிகளுடன் சத்தான உணவு சாப்பிட வேண்டும். பாரம்பரிய உணவுகளை இன்றைய தலைமுறை சாப்பிடுவதில்லை, துரித உணவகம், பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்ட தின்பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதால் கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணிகின்ற நிலை ஏற்படுகிறது. நள்ளிரவு வரை கண்விழித்து செல்போனில் விளையாடுவதும், குறைந்த நேரம் தூக்கம் மேற்கொள்வதாலும் கண்ணில் குறைபாடு ஏற்படுகிறது. சரியான தூக்கம், சத்தான உணவு எடுத்துக் கொண்டால் மட்டுமே கண் குறைபாடு இன்றி கண்ணாடி அணிவதை தவிர்க்க முடியும்.

    அதிக வெளிச்சம்

    வேலூரைச் சேர்ந்த கண் பரிசோதகரும், ஆப்டிகல்ஸ் கடை உரிமையாளருமான வி.தேசிகன் கூறியதாவது:- தாய், தந்தையருக்கு கண் குறைபாடு இருந்தால் அது பரம்பரையாக குழந்தைக்கும் வரும். அவர்கள் பரிசோதனை செய்து கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும். பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் 9 மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டு கண்ணாடியை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு இரண்டு ஆண்டுகள் வரை பார்வை மாறாது. மற்றவர்கள் பரிசோதனை செய்து கண்ணாடியை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் வகுப்பறையில் கரும்பலகையில் எழுதுவதை படிக்க முடியும். பாடங்களில் கவனம் செலுத்த முடியும். குழந்தைகள் செல்போனில் அதிக வெளிச்சத்துடன் பார்ப்பதால் அவர்களுடைய கண்கள் பாதிப்படைகிறது. மேலும் பல குழந்தைகள் வீட்டில் உள்ள கார்ட்டூன் சேனல்களை திரும்ப திரும்ப பார்க்கின்றனர். தொடர்ந்து டி.வி. பார்ப்பதாலும், செல்போனில் விளையாடுவதாலும் முட்டை, கீரை, காய்கறிகள் போன்ற உணவுகளை உண்ணாததாலும் குழந்தைகளின் கண்கள் இளம் வயதிலேயே பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே கண்ணாடி அணியும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    பாதுகாப்போம்

    ஒரு குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், இருட்டில் பார்க்க முடியாமல் எப்படி திணறுகிறோம். அப்படி இருக்கும் போது கடவுள் நமக்கு அளித்த சிறப்பு பரிசான கண்களை நாம் சரியான முறையில் பாதுகாப்போம். அலட்சியம் காட்டாமல் விழிப்புணர்வோடு இருப்போம்.

    கண்களை பாதுகாக்க 'டிப்ஸ்'

    * வெளிச்சம் குறைந்த இடத்தில் படிப்பதை தவிர்க்க வேண்டும். பச்சை நிற காய்கறி வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

    * கண்களுக்கு அதிக அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபடுவதை கைவிடவேண்டும்.

    * கண்களில் ஏதாவது சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் பார்வை இழப்பை தவிர்க்க முடியும்.

    * இரவு படுக்கைக்கு செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு டி.வி., செல்போன், கணினி ஆகியவற்றை தவிர்க்க பழக வேண்டும். மாசு, தூசிகளினால் கண்கள் பாதிப்படையாமல் இருக்க, வெளியே சென்று வீடு திரும்பியதும் கண்களை தூய நீரில் கழுவ வேண்டும்.

    * கண்கள் தொடர்பான பயிற்சியை அவ்வப்போது மேற்கொள்வது அவசியம்.

    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
    • தொழில்நுட்பத்தில் சிக்கலைத் தீர்க்கும் நுட்பங்கள் குறித்த படிப்புகள் உள்ளன.

    கணினியை மையப்படுத்தி, உருவாக்கப்பட்டிருக்கும் சில டிஜிட்டல் படிப்புகளையும், அதன் சிறப்புகளையும் இந்த தகவல் தொகுப்பில் தெரிந்து கொள்வோம். செயற்கை நுண்ணறிவு

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தகவல் தொழில்நுட்பம், வங்கிகள் என அனைத்து துறைகளிலும் வேலைகளிலும் இன்று ஆன்லைனில் ஒரே நேரத்தில் அனைவரும் கையாளக் கூடிய விஷயங்கள் அனைத்துக்கும் காரணம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் வரை படிப்புகள் உள்ளன. பட்டயப் படிப்பு முடித்தவர்கள், சான்றிதழ் படிப்புகளையும் படிக்கலாம்.

    நிரலாக்கம், இயற்கணிதம், புள்ளியியல், அல்காரிதம் மற்றும் தொழில்நுட்பத்தில் சிக்கலைத் தீர்க்கும் நுட்பங்கள் குறித்த படிப்புகளும் உள்ளன. பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் இதற்கென தனித்துவம் பெற்ற கல்லூரிகள் உள்ளன.

    டிஜிட்டல் மார்க்கெட்டிங்- எஸ்.இ.ஓ.டிஜிட்டல்

    மார்க்கெட்டிங் என்பது எஸ்.இ.ஓ. எனப்படும் சர்ச் என்ஜின் ஆப்டிமேஷன் பணியையும் உள்ளடக்கியது. தங்கள் நிறுவனங்களின் இணையதளங்கள் எந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்துள்ளன, கூகுள் தேடலில் முன்னுரிமை கிடைக்க வழிகள், சமூக வலைத்தளங்களில் மார்க்கெட்டிங் உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்து கொள்ள இந்தப் படிப்பு உதவும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறைக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக இது குறித்த அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும். கணினிமயமாக்கலில் எஸ்.இ.ஓ. பணிகளுக்கான வேலைவாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. எனினும் புதிதாக பணியைத் தொடங்குபவர்கள் அதிக ஊதியத்தை எதிர்பார்க்க முடியாது.

    நெட்வொர்க் அண்ட் சைபர் செக்யூரிட்டி

    எந்தவொரு துறை வளர்ச்சி அடைகிறதோ அந்த அளவுக்கு அச்சுறுத்தல்களும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் முழுக்க முழுக்க தொழில்நுட்பங்கள் மூலமாக இயங்கும் கணினியில் அதே மாதிரியான மற்றொரு தொழில்நுட்பம் மூலமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் வரும். எனவே, வேறு யாரும் நமது தரவுகளை பயன்படுத்தாத வண்ணம் பாதுகாக்கவே நெட்ஒர்க் அண்ட் சைபர் செக்யூரிட்டி படிப்புகள் பயன்படுகின்றன.

    பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகள் முதல் ஆன்லைன் வணிகம் வரை அனைத்தும் இதில் அடங்கும். இதற்கான ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளும் தற்போது அதிகம் இருக்கின்றன.

    மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட்

    ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், பயனர்கள் எளிதாகப் பயன்படுத்தும் பொருட்டும், ஆன்லைன் தளங்களைப் போலவே செல்பேசிகளுக்கான செயலிகளும் அதிகரித்துவிட்டன. செல்பேசியில் பயன்படுத்துவதெற்கென பிரத்யேகமாக செயலிகள் வடிவமைக்கப்படுகின்றன.

    'அப்ளிகேஷன் டெவலப்பர்' எனும் இந்த பணியில் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., விண்டோஸ் போன்ற ஓ.எஸ். தொழில்நுட்பங்களில் இணையதளங்களுக்கான செயலிகளை வடிவைமைக்க வேண்டும்.

    இதற்காக சி, சி++, ஜாவா போன்ற கணினி மொழிகளை அறிந்திருக்க வேண்டும். கணினி அறிவியல் தொடர்பான ஒரு பட்டப்படிப்பை முடித்த பின்னர் தனியார் கல்வி நிறுவனங்களில் இந்த படிப்பை படிக்கலாம்.

    வெப் டிசைனிங் அண்ட் டெவலப்மென்ட்

    வணிக நிறுவனங்களுக்காகவோ தனிப்பட்ட பயன்பாட்டுக்காகவோ ஓர் இணையதளத்தை உருவாக்கும் வேலையே வெப் டிசைனிங் அண்ட் டெவலப்மென்ட். மொபைல் செயலிகளுக்கே அடித்தளமாக இருப்பவை இணையதளங்களே.

    சிறு, குறு தொழில் செய்வோரும் தங்கள் பொருள்களை ஆன்லைனில் விளம்பரப்படுத்த, விற்க இணையதளங்கள் அவசியம். எனவே, வருங்காலத்தில் வெப் டிசைனிங் அண்ட் டெவலப்மென்ட் படிப்பின் தேவை அதிகமாகவே இருக்கும். இதற்காக பி.எச்.பி, பைதான், ஏ.எஸ்.பி.நெட், ஜாவா, அடோப் போட்டோஷாப் போன்றவற்றைப் படிக்க வேண்டும். கணினி அறிவியல் தொடர்பான பட்டப்படிப்பு முடித்து இதனையும் சான்றிதழ் படிப்பாக முடித்திருக்க வேண்டும்.

    வி.எப்.எக்ஸ். அண்ட் அனிமேஷன்

    ஆன்லைன் கேமிங் துறை, 3-டி தொழில்நுட்பம் ஆகியவற்றில் விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் அனிமேஷனின் பயன்பாடு பெரிதும் முக்கியமானது. இதற்காக வி.எப்.எக்ஸ். மற்றும் அனிமேஷன் படிப்புகளை முடித்த பின்னர் மாயா, அடோப் போட்டோஷாப் மற்றும் சினிமா 4-டி ஆகியவற்றைப் பயன்படுத்துவது உங்கள் திறமைகளை வளர்க்க உதவும். இது தொடர்பான டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.

    கம்ப்யூட்டர் ஹார்ட்வேர்

    ஒரு மென்பொருள் இயங்க கணினி சரியான நிலையில் இருக்க வேண்டும். தரவுகளை செயல்படுத்தும் மதர்போர்டுகள், சேமித்து வைக்கும் ஹார்ட் டிஸ்க்குகள் என கணினியின் செயல்பாடுகளைக் கண்காணித்து சரி செய்யக் கூடிய பணியைச் செய்ய விரும்புபவர்கள், பட்டப்படிப்பை முடித்த பிறகு கணினி வன்பொருள் படிப்பை முடிக்க வேண்டும். குறைந்தது 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை படிக்க வேண்டியதிருக்கும்.

    டேலி அண்ட் எம்.எஸ். ஆபீஸ்

    எம்.எஸ். ஆபீஸ் என்பது கணினியில் வேலை செய்வதற்கான அடிப்படை அறிவாகும். அதுபோன்று அக்கவுண்ட்ஸ் பணிகளைச் செய்வதற்கு அவசியம் டேலி படிக்க வேண்டும். அதிகபட்சமாக மூன்று மாதங்களில் கற்றுக்கொள்ளலாம். பட்டப்படிப்பு முடித்த பின்னர் இந்த பயிற்சிகளையும் கற்றுக் கொண்டால் எளிதாக வேலை கிடைக்கும்.

    • குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் அளவுக்கு இடவசதியும் இல்லை.
    • வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்தபடி மொபைல் போன் மற்றும் கணினியில் தன்னந்தனியாக விளையாடுகின்றனர்.

    பாரம்பரியமான விஷயங்களை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் நாள் 'உலக பாரம்பரிய தினம்' கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையில், பாரம்பரிய சிறப்புமிக்க நமது விளையாட்டுகளை அழிந்து விடாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது முக்கியமானது.

    சில தலைமுறைகள் முன்பு வரை, அருகருகே உள்ள வீடுகளில் வசித்த சிறுவர்-சிறுமிகள் அனைவரும் ஒன்றாக விளையாடினர். வீட்டின் திண்ணைகளும், தெருக்களும் அவர்களின் விளையாட்டு இடங்களாக அமைந்தன. விளையாட்டு அவர்களுக்கு ஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, குழு உணர்வு, விடாமுயற்சி ஆகியவற்றை கற்றுக் கொடுத்தது. உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாகவும் வளர்ந்தனர்.

    தற்போதைய காலத்தில், அடுத்த வீட்டில் இருக்கும் நபர்களையே அடையாளம் தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு வாழ்க்கைமுறை மாறி இருக்கிறது. குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் அளவுக்கு இடவசதியும் இல்லை. வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்தபடி மொபைல் போன் மற்றும் கணினியில் தன்னந்தனியாக விளையாடுகின்றனர்.

    ஸ்மார்ட்போன் விளையாட்டுகள் குழந்தைகளின் உடலுக்கும், மனதுக்கும் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. கண் பார்வை பாதிப்பு, உடல் உழைப்பு இல்லாமை, பசியின்மை, அதீத கோவம், குணாதிசய சிக்கல்கள் என ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

    பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடும்போது மூளையின் எல்லா பகுதியும் சமமாக வேலை செய்யும். உதாரணத்துக்கு, 'பல்லாங்குழி' விளையாட்டு கணிதத் திறனை வளர்க்கும். சிறு கற்களைக் கொண்டு விளையாடும் 'சுங்கரக்காய்' விளையாட்டு கண் மற்றும் கைகளின் செயல்திறனை மேம்படுத்தும். 'கோலி குண்டு' விளையாட்டு, கண் பார்வையை கூர்மையாக்கவும், மணிக்கட்டு நரம்புகள் புத்துயிர் பெறவும் உதவும். 'உறியடி' போன்ற விளையாட்டுகள், மூளையின் செயல்பாட்டை தூண்டிவிடும். குழந்தைகள் கூடி விளையாடும் 'சொப்புச்சாமான்' விளையாட்டுகள் ஒற்றுமை உணர்வு, சிக்கனம், சேமிப்பு, பகிர்ந்து உண்ணுதல் போன்ற பண்புகளை அவர்களிடம் வளர்க்க உதவும்.

    களிமண் கொண்டு சிற்பங்கள் போன்ற கலைப்படைப்புகளை தயாரிக்கையில் குழந்தைகளின் கற்பனைத்திறன் அதிகரிக்கும். 'பாண்டி ஆட்டம்' கால்களின் செயல்திறனை மேம்படுத்தும். பம்பரம் விளையாடுகையில் நுண்திறன் மேம்படும். பச்ச குதிரை தாண்டும் விளையாட்டில் சிறந்தவர்கள் நீளம் தாண்டுதல் - உயரம் தாண்டுதலில் சாதிக்கலாம். ஆடுபுலி ஆட்டம் விளையாடுவோர், ஓட்டப் பந்தயத்தில் சிறந்து விளங்கலாம். ஓடி ஆடி விளையாடும் பாரம்பரிய விளையாட்டுகள் குழந்தைகளை மனதளவில் உற்சாகப்படுத்தும்.

    உடல் பருமன் அடைவதைத் தடுக்கும். பசியைத் தூண்டும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஆழ்ந்து தூங்கச் செய்யும். குழுவாக இணைந்து விளையாடுகையில், நட்புணர்வு பலப்படும். குழந்தைகளிடம் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் அதேசமயம், சில விஷயங்களை கவனத்தில் கொள்வதும் அவசியம். மூச்சுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, 'கபடி' போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுத்தும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். கண்ணாமூச்சி விளையாடுகையில், குழந்தைகள் ஆபத்தான இடங்களில் ஒளிந்துகொள்வதைத் தடுக்க வேண்டும். குழந்தைகள் விளையாடும்போது யாரேனும் பெரியவர்கள் உடன் இருந்து கண்காணிப்பது நல்லது.

    • இளம் தம்பதியர் பிறந்த குழந்தையை தங்கள் அருகிலேயே தூங்க வைப்பதற்கு ஆசைப்படுகிறார்
    • குழந்தையை திருப்பி படுக்க வைப்பது அதன் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    பிறந்த குழந்தைகள், பச்சிளங்குழந்தைகளை தனியாக தொட்டிலில் தூங்க வைப்பது வழக்கம். அது குழந்தைகளுக்கு சவுகரியமான சூழலை கொடுக்கும். எந்த அசவுகரியங்களுமின்றி குழந்தைகள் தூங்குவதற்கும் வழிவகுக்கும். இன்றைய காலகட்டத்தில் சில இளம் தம்பதியர் பிறந்த குழந்தையை தங்கள் அருகிலேயே தூங்க வைப்பதற்கு ஆசைப்படுகிறார்கள்.

    சிலர் குழந்தையை தங்கள் மார்பின் மீது குழந்தையின் தலைசாய்த்து தூங்க வைக்கிறார்கள். அப்படி குழந்தையை அரவணைத்தபடியே தூங்கவும் செய்கிறார்கள். மார்பில் குழந்தையை நெருக்கமாக வைத்திருப்பது குழந்தைக்கும், பெற்றோருக்கும் இடையே உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அது பகல் வேளையில் குழந்தையை தூங்க வைப்பதற்குத்தான் பொருந்தும். தாங்களும் தூங்கிய நிலையில் குழந்தையை மார்பின் மீது படுக்க வைப்பது சரியான வழிமுறை அல்ல.

    அது குழந்தைக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். தூங்கிய நிலையில் தங்கள் சவுகரியங்களுக்கு ஏற்ப வலது பக்கம், இடது பக்கம் திரும்பி படுப்பார்கள். அதே நிலையில் குழந்தையையும் திருப்பி படுக்க வைப்பது அதன் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சில சமயங்களில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தி குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

    சில தம்பதியர் தங்கள் இருவருக்கும் இடையே பச்சிளம் குழந்தையை தூங்க வைப்பார்கள். அதுவும் குழந்தைக்கு சவுகரியமான சூழலை கொடுக்காது. பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.

    அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்று நடத்திய ஆய்வின்படி, கடந்த 15 மாதங்களில் பாதுகாப்பற்ற முறையில் தூங்கிய சுமார் 30 குழந்தைகள் உயிரிழந்தனர். அந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் பெற்றோரின் அருகில் தூங்கியவர்கள். அவர்களின் இறப்புகளுக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

    குழந்தைகளை அருகில் தூங்க வைக்கும்போது ஆடைகளால் அதன் முகத்தை மறைப்பது, குழந்தைகளை நெருக்கமாக படுக்க வைக்கும்போது போதுமான அளவு சுவாசிக்க முடியாமல் சுவாசக்கோளாறு பிரச்சினையை எதிர்கொள்வது போன்றவை காரணமாக இருக்கலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

    குழந்தையை தனியாக தொட்டிலில் தூங்க வைப்பதுதான் சரியான வழிமுறை என்பதே மருத்துவர்களின் வாதமாக இருக்கிறது. குழந்தையுடன் நெருக்கமாக இருப்பதை உணரும் வகையில் தொட்டிலை அருகே அமைத்துக்கொள்ளலாம். அதன் மூலம் மூச்சுத்திணறல் உள்பட பிற அசவுகரியங்களில் இருந்து குழந்தையை காக்கலாம். குழந்தை ஆழ்ந்து தூங்குவதற்கும் வழிவகை செய்யலாம்.

    சில தம்பதியர் தங்கள் இருவருக்கும் இடையே பச்சிளம் குழந்தையை தூங்க வைப்பார்கள். அதுவும் குழந்தைக்கு சவுகரியமான சூழலை கொடுக்காது. பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.

    • பெரும்பாலான குழந்தைகள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர்.
    • பெற்றோர்களும் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பவே அச்சப்படுகின்றனர்.

    வெயிலோடு விளையாடி.... வெயிலோடு உறவாடி... என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்போம்.

    அந்த பாடலின் வரிகள் மாணவர்களின் வாழ்வியலோடு தொடர்பானது. வெயிலையும் பொருட்படுத்தாது நண்பர்களுடன் இணைந்து விளையாடிய அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு.

    வீடுகளுக்குள் முடங்கினர்

    ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் கோடை கால விடுமுறையை ஆரோக்கியமான முறையில் மாணவர்கள் கழிக்கின்றனரா? என்ற கேள்வி பேசும் பொருளாக எழுந்துள்ளது. பெரும்பாலான குழந்தைகள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். கம்ப்யூட்டர், டி.வி., செல்போன் என வீட்டுக்குள்ளேயே தங்களது கோடை கால விடுமுறையை கழித்து விடுகின்றனர் என்ற கருத்து நிலவுகிறது. பெற்றோர்களும் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பவே அச்சப்படுகின்றனர். இதற்கு சுற்றுப்புற சூழ்நிலைகள், அடுத்த கல்வியாண்டுக்கு தற்போதே தயார்படுத்துவது உள்ளிட்ட காரணங்கள் முன் வைக்கப்படுகிறது.

    குழந்தைகள் ஓடியாடி விளையாடுவது குறைந்து விட்டது. உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவதும் குறைந்துள்ளது. தற்போது கோடை கால விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது.இந்த கோடை கால விடுமுறையை மாணவர்கள் எவ்வாறு கழிக்கின்றனர்? எவ்வாறு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள், பெற்றோர் கூறும் கருத்துகளை காண்போம்:-

    வாசிப்பு பழக்கம்

    ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்மின்னல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரா.சி.வாசவி:- விடுமுறை என்பது அனைவருக்கும் உடல் மற்றும் மனம் ஓய்வெடுக்கவும் அடுத்த கல்வி ஆண்டிற்கு தன்னை தயார் செய்து கொள்ளவும் விடப்படுகிறது. இந்த கோடை விடுமுறையில் உடலும் மனமும் உறுதி பெற நீச்சல் பழகலாம். கேரம், செஸ், போன்ற சிந்தனையை தூண்டும் விளையாட்டுகளிலும், கபடி, கிரிக்கெட் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் போட்டிகளில் பங்கெடுத்து கொள்ளலாம். ஓவியத்தில் ஆர்வம் இருப்பவர்கள் ஓவியப் பயிற்சியை கற்று கொள்ளலாம். யோகாவில் விருப்பம் உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம்.

    இதுதவிர படங்கள் வரைதல், வண்ணம் தீட்டுதல், களிமண்ணால் ஆன பொருட்கள் செய்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம். முக்கியமாக பெற்றோர் குழந்தைகளை அருகில் உள்ள நூலகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு கதை புத்தகங்களையும் சிறு, சிறு கட்டுரைகளையும் படித்து வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். கைவினை பொருட்கள் செய்வதற்கான வகுப்புகளில் சேர்ந்து கைவினைப் பொருட்களை செய்யவும் வடிவமைக்கவும் கற்றுக் கொள்ளலாம்.

    தற்காப்பு கலைகள்

    வேலூரை சேர்ந்த சிலம்ப பயிற்சியாளர் ஜெயந்தி:- நான் வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறேன். சிலம்பத்தின் மீதான ஆர்வத்தின் காரணமாக சிலம்பம் கற்றுக்கொண்டேன். தற்போது ஏராளமான பெண்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்கிறேன். சிலம்பம் கற்றுக்கொள்வதால் மனஅழுத்தம் குறைகிறது. தற்போது கோடை கால விடுமுறை என்பதால் ஏராளமான மாணவிகள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருப்பார்கள். அவர்களுக்கு சிலம்பம், களரி உள்ளிட்ட தற்காப்பு கலைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

    அது அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுவை சேர்க்கும். இந்த கலைகளை கற்பதன் மூலம் ஞாபக சக்தி அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்காது. சோர்வு ஏற்படாது. மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கலாம்.

    பிறருடன் பேசும் போது துணிவுடன் பேசலாம். தலைமை பண்பு வளர்க்க இதுபோன்ற கலைகள் மாணவிகளுக்கு உதவும். மாணவர்களும் இதுபோன்ற கலைகளை கற்கலாம். இந்த கலைகள் எதிர்கால அரசு வேலைகளுக்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமையும். கோடை கால விடுமுறையை பயனுள்ளவாறு மாற்ற வேண்டும். அதற்கு பெற்றோரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    கல்வி சுற்றுலா

    வேலூரை சேர்ந்த பெற்றோர் ரவி:- குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் சுற்றுலா செல்ல வேண்டும். அந்த சுற்றுலா கல்வி சுற்றுலாவாக இருத்தல் வேண்டும். அதாவது பெற்றோர் உள்ளூரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்று, அந்த இடத்தின் வரலாறு குறித்து எடுத்துக் கூறலாம். குறிப்பாக வேலூர் கோட்டைக்கு அழைத்துச் சென்று வேலூர் கோட்டையின் பெருமை, வேலூர் வரலாறு குறித்து எடுத்துக் கூறலாம். நேரடியாக பார்க்கும்போது குழந்தைகள் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்வார்கள். மரக்கன்றுகள் நட்டு வளர்க்க கூறலாம். அப்போது இயற்கை மீது அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும். காலை அல்லது மாலையில் நடைபயிற்சி செல்லும்போது குழந்தைகளையும் அழைத்துச் சென்று நடைபயிற்சிக்கு பழக்கலாம். அப்போது உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கலாம்.

    சிறப்பு பயிற்சி முகாம்

    வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சோமலிங்கம்:- தற்போது பள்ளிகளுக்கு கோடை கால விடுமுறை தொடங்கி உள்ளது. மாணவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடத்துகின்றனர். அங்கு கைப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் குறித்து இலவசமாக பயிற்சி வழங்குகின்றனர். பங்கு பெறும் மாணவர்களை ஊக்குவிக்க சான்றிதழ்கள், உணவுகள், சீருடைகள் வழங்கப்படுகிறது. அங்கு மாணவர்களை அனுப்பி பயிற்சி பெற வைக்கலாம். செல்போனிலேயே மூழ்கிகிடக்கும் மாணவர்களுக்குள் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஆர்வம் இருக்கும். அந்த விளையாட்டினை பெற்றோர் கண்டுபிடித்து அதில் பயிற்சி வழங்கலாம். ஆறு, குளங்களில் பல குழந்தைகள் மூழ்கி உயிரிழக்கின்றனர். எனவே குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி வழங்க வேண்டும். அடுத்த கல்வியாண்டுக்குள் மாணவர்கள் நுழையும் போது புத்துணர்ச்சியுடன் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

    தனித்திறன்

    வாணியம்பாடியை சேர்ந்த பிரியா சக்தி:-

    பள்ளி விடுமுறையில் மாணவர்கள் தங்களின் தனித்திறனை வளர்த்துக் கொள்வதற்காக விளையாட்டு போட்டி, விளையாட்டு பயிற்சி, இசைப்பயிற்சி, தற்காப்பு கலை பயிற்சிகள், நூலகங்களில் வாசிக்கும் திறன் வளர்ப்பது போன்றவற்றில் சேர்ந்து பயனடைய வேண்டும். சிறுவர்களுக்கு ஓவிய போட்டிகள், இசை போட்டிகள் ஆகியவற்றில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான வழி வகைகளை பெற்றோர்கள் செய்ய வேண்டும். பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை பாதுகாப்பாக இந்த விடுமுறை நாட்களில் ஓரிரு நாட்கள் மட்டும் உடன் அழைத்துச் சென்று சுற்றுலா தலங்களை காண்பிப்பதோடு நிறுத்திவிட்டு மாணவர்களுக்கு தனித்திறனை வளர்ப்பதற்கு வேண்டிய வழி செய்ய வேண்டும்.

    யோகா பயிற்சி

    திருவண்ணாமலையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் கல்பனா:- கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த கோடை விடுமுறையை யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பயனுள்ளதாக கழிக்கலாம். இதனால் நமது பிள்ளைகளின் உடல் வலிமையும், மன உறுதியும் பெருகும். இந்த விடுமுறை நாட்களில் பிள்ளைகள் வீட்டில் செல்போன், டி.வி. போன்றவற்றை கண்டு களிக்கின்றனர். அவ்வாறு இல்லாமல் யோகா பயிற்சி மேற்கொள்வதால் உடல் ஆரோக்கியம் பெறும். அதனால் விடுமுறை நாட்களில் தினமும் நான்கு சின்ன, சின்ன யோகாசனங்கள் செய்து வந்தாலே உடல் ஆரோக்கியம் பெறும். மேலும் தொடர்ந்து மூச்சுப் பயிற்சி வழங்கி வந்தாலும் பிள்ளைகளின் உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

    பொது அறிவு

    அரக்கோணம் தனியார் நர்சரி பள்ளி முதல்வர் கவுரி:- தற்போது கோடை விடுமுறை பற்றிய சிந்தனைதான் குழந்தைகள் உள்ள எல்லா குடும்பத்துக்கும் அதிகமாக உள்ளது. வாசிப்பு என்பது குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். எனவே, கோடைகாலத்தில் தினசரி நாளிதழ்கள், சிறிய சிறிய கதை புத்தகங்களை படிக்க சொல்லலாம். இதனால் வாசிப்பு திறன் மேம்படும். மேலும், பொது அறிவுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது மறந்து வரும் விளையாட்டுகளான பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், ஸ்கிப்பிங், உள்ளே வெளியே போன்ற விளையாட்டுகள் விளையாடுவதால் உடல், மன ஆரோக்கியம் பெறமுடியும், பெற்றோர்களும், குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் போது விட்டு கொடுக்கும் மனப்பான்மையை அறிந்து கொள்ள முடியும். இது போன்ற பழமையான நம் கலாசார தொடர்புடைய விளையாட்டுகளும் மறந்து போகாமல் இருக்கும். தோட்டக் கலையைக் கற்றுக்கொடுப்பது அவர்களுக்கு விவசாயத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க உதவும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • டைப் 1 நீரிழிவு நோய், சிறு வயது குழந்தைகளுக்கு, பெரும்பாலும் நான்கு வயதை கடந்த பின்னர் ஏற்படுகிறது
    • கீழ்க்கண்ட மாற்று சிகிச்சை முறைகளின் சாத்தியகூறுகள் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசிக்கலாம்.

    பிறக்கும்போது குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் இருக்கும் நிலை, 'நியோநேட்டல் டயாபட்டீஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது மரபணு காரணங்களால் ஏற்படுகிறது. இன்சுலின் மற்றும் கிளைபன்கிளைமைட் போன்ற மருந்துகளால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். இது சில குழந்தைகளுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படுத்தினாலும் ஒரு சில குழந்தைகளுக்கு ஒரு வயது பூர்த்தியாகும் முன் தானாகவே குணமாகி விடுகிறது.

    டைப் 1 நீரிழிவு நோய், சிறு வயது குழந்தைகளுக்கு, பெரும்பாலும் நான்கு வயதை கடந்த பின்னர் ஏற்படுகிறது. இவர்களுக்கு வாழ்நாள் முழுக்க இன்சுலின் ஊசி செலுத்திக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. இருப்பினும் கீழ்க்கண்ட மாற்று சிகிச்சை முறைகளின் சாத்தியகூறுகள் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசிக்கலாம்.

    1) 'இன்சுலின் பம்ப்' உட்செலுத்திக்கொள்வது: இதன் மூலம் தினமும் மூன்று அல்லது நான்கு முறை இன்சுலின் போட வேண்டிய நிலையை மாற்றலாம்.

    2) கணைய மாற்று அறுவை சிகிச்சை: டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு நிரந்தர தீர்வாக கருதப்படுகிறது. எனினும் இதற்கு ஆகும் செலவு அதிகம் என்பதால் வசதி இல்லாதவர்களால் இந்த சிகிச்சை மேற்கொள்ள முடிவதில்லை.

    3) ஐலட்ஸ் செல் மாற்று அறுவை சிகிச்சை: இந்த முறை சிகிச்சையும் நீரிழிவு நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வாக கருதப்படுகிறது. இது கணைய ஐலட்ஸ் செல்களை உறுப்பு கொடையாளிகளிடமிருந்து பெற்று கல்லீரலில் உள்ள போர்டல் தமனியில் செலுத்தப்படுகிறது.

    4) ஸ்டெம் செல் சிகிச்சை (குருத்தணு சிகிச்சை): டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதில் மனித ஸ்டெம் செல்கள் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களாக மாற்றப்பட்டு, இன்சுலின் அதிகமாக சுரந்து, அதன் மூலம் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

    5) செயற்கை கணையம் (ஆர்டிபிசியல் பேன்க்கிரியாஸ்): இதில் இன்சுலின் பம்ப் மற்றும் குளுக்கோஸ் மானிட்டரைக் கொண்ட ஒரு மூடிய லூப் அமைப்பு, ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செயலியுடன் இணைந்து செயலாற்றுகிறது.

    6) பயோனிக் பேன்க்ரியாஸ்: இதில் பொருத்தப்படும் செயற்கை கணைய இயந்திரம், ரத்தத்தின் சர்க்கரை அளவை கண்காணித்து ஏற்ற தாழ்வுகளை சரிசெய்கிறது.

    ×