என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    2 ஆண்டுக்கு பிறகு தெப்ப உற்சவ தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரவு தெப்பல் உற்சவம் நடந்தது.

    திருப்பதியில் ஆண்டு தோறும் 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும்.கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் தெப்ப உற்சவத்தை விமரிசையாக நடத்த தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி முதல் நாள் தெப்ப உற்சவம் நேற்று இரவு தொடங்கியது. வரும் 17-ந் தேதி வரை 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடக்கிறது. தெப்பல் உற்சவம் தொடங்கியதையொட்டி ஏழுமலையான் கோவிலில் தினசரி நடைபெறும் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    முதல் நாளான நேற்று இரவு ஸ்ரீ சீதா, ராமர், லக்ஷ்மணர் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்ட தீர்த்தவாரி குளத்தில் மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உலா வந்தனர். 3 சுற்றுகள் வலம் வந்தனர். தெப்பல் உற்சவத்தில் வேதம், பாட்டு, நாதம் ஆகியவற்றுக்கு இடையே தெப்பல் உற்சவம் நடந்தது.

    2 ஆண்டுக்கு பிறகு தெப்ப உற்சவ தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.

    புஷ்கரணி முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வந்தனர்.

    இதனால் அலிபிரி சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருப்பதியில் நேற்று 74,167 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 33,976 பேர் முடி காணிக்கை செலுத்தினர் ரூ.4.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    அஸ்வபதி மன்னன், அந்த இளைஞன் யார் என்று விசாரிக்க நினைத்தார். அப்போது நாரதர் மூலமாக, அவன் ஒரு அரசகுமாரன் என்பதும், குறைந்த ஆயுளைக் கொண்டவன் என்பதும் தெரியவந்தது.

    பெண்கள் மேற்கொள்ளும் விரதங்களில் மிகவும் முக்கியமான விரதமாக ‘காரடையான் நோன்பு’ உள்ளது. மாசி மாதம் ஏகாதசியை ஒட்டி வரும் சிறப்பு மிக்க விரதம் இதுவாகும். பெண்கள் தங்களுடைய மாங்கல்ய பலத்தை பெருக்கிக் கொள்வதற்காக இந்த விரதத்தை கடைப் பிடிக்கிறார்கள். இந்த விரதத்தை ‘சாவித்திரி விரதம்’ என்றும், ‘காமாட்சி விரதம்’ என்றும் அழைக்கிறார்கள்.

    அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி. இவள் ஒரு முறை காட்டிற்குள் சென்றபோது, அங்கு வாழ்ந்து வந்த சத்தியவான் என்ற இளைஞனை சந்தித்து காதல் வயப்பட்டாள். நாட்டிற்கு திரும்பியதும், தன்னுடைய காதலைப்பற்றி தந்தையிடம் தெரிவித்தாள்.

    அஸ்வபதி மன்னன், அந்த இளைஞன் யார் என்று விசாரிக்க நினைத்தார். அப்போது நாரதர் மூலமாக, அவன் ஒரு அரசகுமாரன் என்பதும், குறைந்த ஆயுளைக் கொண்டவன் என்பதும் தெரியவந்தது. சத்தியவானின் ஆயுள் ரகசியத்தை அறிந்து கொண்ட மன்னன், தன்னுடைய மகளை அவனுக்கு மணம் முடித்துக் கொடுக்கத் தயங்கினான். ஆனால் சாவித்திரி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. “சத்தியவானைத் தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று தந்தையிடம் உறுதியாகச் சொல்லிவிட்டாள்.

    மகளின் பிடிவாதத்தை கண்டு மனம் பதறினாலும், வேறு வழியில்லாமல் சத்தியவானுக்கே, சாவித்திரியை மணம் முடித்துக் கொடுத்தார். திருமணத்திற்குப் பிறகு காட்டில் சத்தியவானுடன் வாழ்ந்து வந்தாள், சாவித்திரி. சரியாக ஒரு வருடம் முடிந்த நிலையில், சாவித்திரியின் மடியில் படுத்திருந்த நிலையிலேயே சத்தியவான் உயிர் பிரிந்தது. அன்றைய தினம் ‘காரடையான் நோன்பு’ ஆகும்.

    யார் கண்ணுக்கும் தென் படாத வகையில் அரூபமாக வந்த எமதர்மன், சத்தியவானின் உயிரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் காரடையான் நோன்பை முறைப்படி செய்து வந்த சாவித்திரியின் கண்களில் இருந்து எமதர்மன் தப்ப முடியவில்லை. அது எமதர்மனுக்கே தெரிந்தாலும் கூட, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து அகல முற்பட்டார்.

    எமதர்மன் செல்லச் செல்ல, அவரைப் பின்தொடர்ந்து சென்றாள் சாவித்திரி. ‘இவள் எதற்காக நம்மை பின் தொடர்ந்து வருகிறாள்’ என்று நினைத்த எமதர்மன், அதை அவளிடமே கேட்டுத் தெரிந்து கொள்வது என்று முடிவு செய்தார். “ஏ, பெண்ணே.. உனக்கு என்ன வேண்டும். எதற்காக என்னைப் பின் தொடர்ந்து வருகிறாய்?” என்று கேட்டார்.

    சாவித்திரி அதற்கு எந்தப் பதிலையும் சொல்லவில்லை.

    எமதர்மனே தொடர்ந்தார். “உன்னுடைய கணவனுக்காகத்தான் நீ என்னை பின் தொடர்கிறாய் என்றால், அதில் உனக்கு என்னால் எந்த நன்மைகளையும் செய்ய முடியாது. அவனது உயிர் திரும்புவது முடியாத காரியம். எனவே வேறு ஏதாவது வரம் என்னிடம் இருந்து உனக்கு வேண்டுமானால் கேள், நிச்சயமாக தருகிறேன்” என்றார்.

    எமதர்மன் அப்படிக் கேட்டதும், சாவித்திரி சாதுரியமாக செயல்பட்டு ஒரு வரத்தைக் கேட்டாள். அதாவது “எனக்குப் பிறக்கின்ற நூறு குழந்தைகளைத் தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டு, என் மாமனார் கொஞ்ச வேண்டும்” என்று கேட்டாள்.

    சாவித்திரி அப்படிக் கேட்டதும், யோசிக்காமல் எமதர்மன் “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி விட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

    ஆனால் அவரை மீண்டும் சாவித்திரி தடுத்து நிறுத்தினாள்.

    ‘எதற்காக தடுத்தாய்?’ என்பது போல் பார்த்த எமதர்மனிடம், “சரி.. நீங்கள் கொடுத்த வரத்தின்படி என்னுடைய கணவரின் உயிரைத் திருப்பித் தாருங்கள்” என்று கேட்டாள்.

    அப்போதுதான் அவருக்கு, எப்படிப்பட்ட ஒரு வரத்தைக் கொடுத்திருக்கிறோம் என்பது தெரிந்தது. கொடுத்த வரத்தை மீற முடியாது என்பதால், சத்தியவானின் உயிரை திருப்பிக் கொடுத்து விட்டு அங்கிருந்து அகன்றார் எமதர்மன்.

    சத்தியவானின் உயிரை சாவித்திரி மீண்டும் பெறுவதற்கு அவளுக்கு பெரும் உதவியாக இருந்தது, அவள் முறையாக கடைப்பிடித்து வந்த ‘காரடையான் நோன்பு’தான். அதனால் தான் இந்த விரதம் ‘சாவித்திரி விரதம்’ என்றும் பெயர்பெற்றது. இது காமாட்சி அம்மன் கடைப் பிடித்த விரதம் என்பதால் அது ‘காமாட்சி விரதம்’ என்றும் பெயரானது.
    சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் மூழங்க, கோவில் மூலஸ்தான விமான கலசத்துக்கும், 40 அடி உயர அங்காளம்மனுக்கும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 40 அடி உயரத்தில் அங்காள அம்மன் சிலை புதிதாக நிறுவப்பட்டுள்ளது.

    இந்த கோவிலில் 26 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது.

    நேற்று காலை 7 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும், கலச புறப்பாடும் நடந்தது. அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் மூழங்க, கோவில் மூலஸ்தான விமான கலசத்துக்கும், 40 அடி உயர அங்காளம்மனுக்கும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் அனுமந்தை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    பெண்ணாடம் ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டு பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    பெண்ணாடத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடி ஏற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பெண்ணாடம் ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டு பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    இறைவனை அடைவதற்கு சரணாகதியே தகுந்தது என்ற வழியை பின்பற்றுபவனே ‘ப்ரபந்நன்.’
    காக்கும் கடவுளாக இருக்கும் மகாவிஷ்ணுவை வழிபடுபவர்களை வைணவர்கள் என்று அழைக்கிறோம். பெருமாளை வழிபடும் இந்த வைணவர்கள், இறைவனை அடைவதற்காக மேற்கொள்ளும் வழிமுறைகளின் பேரில் 10 விதமாக பிரிக்கப்பட்டுள்ளனர். அத்வேஷி, அனுகூலன், நாமதாரி, சக்ராங்கி, மந்திரபாடி, வைஷ்ணவன், ஸ்ரீவைஷ்ணவன், ப்ரபந்நன், ஏகாந்தி, பரம ஏகாந்தி என்ற அந்த 10 வித வைணவர்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    அத்வேஷி:-

    எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும், மகாவிஷ்ணுவின் மீதும், அவரது அடியார்களிடத்திலும் வெறுப்பு கொள்ளாமல் இருப்பவன் ‘அத்வேஷி.’

    அனுகூலன்:-

    ஒருவர் அத்வேஷியாக இருப்பதோடு, தினமும் பெருமாள் ஆலயங்களுக்குச் செல்வது, கோவில் உற்சவங்களில் பங்கேற்பது, அடியவர்களை போற்றி மரியாதை செய்வது, மற்ற வைணவர்களோடு இணைந்து பணியாற்றுவது என்று இவை அனைத்தையும் விருப்பத்துடன் செய்பவனே ‘அனுகூலன்.’

    நாமதாரி:-

    மேலே குறிப்பிட்ட குணங்களோடு, மகாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் ஏதாவது ஒன்றை, தன்னுடைய பெயராக வைத்திருப்பவன் ‘நாமதாரி’ ஆவான்.

    சக்ராங்கி:-

    மேற்சொன்ன மூன்று குணங்களோடு, வேத சாஸ்திரங்களில் கூறியிருக்கும்படி, மகாவிஷ்ணுவின் திவ்ய ஆயுதங் களான சங்கு, சக்கர சின்னங்களை ஆச்சாரியன் மூலமாக தன் தோள்களில் தரித்தவரும், திருமண் காப்பு அணிந்தவரும் ‘சத்ராங்கி’ எனப்படுவார்.

    மந்திரபாடி:-

    முன்பு சொன்ன நான்கோடு, சகல ஐஸ்வரியங்களையும் கொடுக்கக்கூடிய அஷ்டகாட்சரமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை ஆச்சாரியன் மூலமாக உபதேசம் பெற்று, தினமும் ஜெபித்து காரியசித்தி பெறுபவரே, ‘மந்திரபாடி.’

    வைஷ்ணவன்:-

    இதற்கு முன்பாக கூறப்பட்ட ஐந்து குணங்களோடு, ஐம்புலன் இன்பங்களையும், இதர தேவதைகளை வழிபடுவதையும் விட்டவன், மோட்சம் அடைவதற்குரிய வழிகளான கர்ம, ஞான அல்லது பக்தி மார்க்கங்களை கடைப்பிடிப்பவனே ‘வைஷ்ணவன்.’

    ஸ்ரீவைஷ்ணவன்:-

    மேலே சொன்ன 6 வழிகளையும் கடைப்பிடித்து, வேறு சிந்தனை இல்லாமல், ஸ்ரீமந் நாராயணரை மட்டும் மனதில் நிறுத்தி, தினமும் தியானிப்பவனே ‘ஸ்ரீவைஷ்ணவன்.’

    ப்ரபந்நன்:-

    மேலே குறிப்பிட்ட 7 தகுதிகளோடு, இறைவனை அடைவதற்கு சரணாகதியே தகுந்தது என்ற வழியை பின்பற்றுபவனே ‘ப்ரபந்நன்.’

    ஏகாந்தி:-

    முன்பு சொன்ன எட்டு தகுதிகளோடு, பெருமாளை அடைவதற்கு சரணாகதியும் கூட போதுமானதல்ல என்று முடிவு செய்து, அந்த பகவானையே உபாயமாக பற்றிக்கொள்பவன்தான் ‘ஏகாந்தி’ ஆகிறான்.

    பரம ஏகாந்தி:-

    இதற்கு முன்பு சொல்லப்பட்ட 9 தகுதிகளையும் பெற்றிருந்தாலும், பகவானை சரணடைவதோ, அவனையே உபாயமாக கொள்வதோ கடினம் என்பதை உணர்ந்து, நல்ல வழிகாட்டியாக இருக்கும் நல்லதொரு ஆச்சாரியானை சரணடைந்து, அவர் மூலமாக பெருமாளை அடையலாம் என்று முடிவு செய்பவனே ‘பரம ஏகாந்தி.’
    தினந்தோறும் அதிகாலையில் ஆகாச கங்கை தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
    திருப்பதி திருமலையில் ஏராளமான தீர்த்தங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில தீர்த்தங்களைப் பற்றியும், அதில் நீராடுவதன் பலனையும் பார்க்கலாம்.

    சுவாமி புஷ்கரிணி: ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. இதனை ‘தீர்த்தங்களின் அரசி’ என்று அழைக்கிறார்கள். இங்கு சரஸ்வதிதேவி தவம் இயற்றியதாக தல புராணம் சொல்கிறது. மிகவும் புனிதத்துவம் பெற்ற தீர்த்தம் இது. மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூரிய உதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து, சூரிய உதயத்திற்கு பின்பான 6 நாழிகை வரை திருப்பதி மலையில் உள்ள அனைத்து தீர்த்தங்களும், இந்த தீர்த்தத்தில் கூடுகின்றன. எனவே அன்றைய தினம் இதில் நீராடி வழிபட்டால் இறைவனின் திருவடியை அடையலாம்.

    குமார தீர்த்தம்: மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசி பவுர்ணமி), சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் நீராடுபவர்கள், ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுவர்.

    தும்புரு தீர்த்தம்: இறைவனை தன்னுடைய நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர், திருப்பதி வெங்கடாஜலபதியை நினைத்து தவம் இருந்த இடத்தில் இருப்பதால் இதற்கு ‘தும்புரு தீர்த்தம்’ என்று பெயர். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பவுர்ணமி), இதில் நீராடுவோருக்கு பரமபதம் உண்டு.

    ஆகாச கங்கை: தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல பாபங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின் அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில் வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம். கோவிலில் இருந்து சுமார் 2 மைல் தூரம். எம்பெருமான் இவரது தீர்த்த கைங்கர்யத்தை மெச்சி காட்சி கொடுத்தார். சகல சித்திகளையும் அளிக்கும் இத்தீர்த்தத்தில் சித்திரைமாதம் பவுர்ணமியன்று நீராடுவது மிக விஷேசம்.

    பாண்டு தீர்த்தம்: வைகாசி மாதம் சுக்கிலபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய்க்கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால், அப்போது இதில் நீராடுவோர் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.

    பாபவிநாசன தீர்த்தம்: இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. மிக சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய தினத்தில் இதில் நீராடுவோர் பெறுவதற்கரிய ஞானம் பெறுகின்றனர். பாவங்களினின்றும் விடுபடுகின்றனர்.

    சக்கரத்தாழ்வார் சன்னிதியில் 48 நாட்கள், 12 நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், தொழில் வளர்ச்சி பெறலாம், வழக்குகள் சாதகமாகும்.
    மனிதப் பிறப்பில் இனிமை மட்டுமே நிரம்பியவர் எவரும் இல்லை. வாழ்வில் ஒருமுறையேனும் துன்பத்தை அனுபவிக்காதவர், மனிதப் பிறவி எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. கர்ம வினைப் பயனை அனுபவிக்க வேண்டியது இருந்தால்தான், மனிதப் பிறவியும் ஏற்படுகிறது. எனவே மனிதனும், அவனுக்கான துன்பமும் பிரிக்க முடியாதவை. ஆனால் அந்த துன்பங்களை குறைத்துக் கொள்வதற்கான எளிய பரிகாரங்களை மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

    வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரகத்தில் உள்ள சுக்ரனுக்கு, அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் கணவன்- மனைவி கருத்துவேறுபாடு மறையும்.

    கணவன்- மனைவி ஒற்றுமையாக வாழ, இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் (காலை 10.30- 12), மஞ்சள், குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிஷேகம் செய்ய வேண்டும். அதோடு நெய் தீபமும் ஏற்றுங்கள்.

    குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால், அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது மகரிஷிகளால் சொல்லப்பட்ட எளிமையான பரிகாரங்களில் ஒன்று.

    பெரும் துன்பத்தைத் தரக்கூடிய கடன் தொல்லையில் இருந்து விடுபட, யோக நரசிம்மரையும், சிறிய கடன் தொல்லைகளுக்கு லட்சுமிநரசிம்மரையும் வணங்குங்கள். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமண தடை விலகும்.

    கோவிலில் இருக்கும் திரிசூலத்திற்கு குங்கும பொட்டு வைத்து, எலுமிச்சைப் பழத்தை திரிசூலத்தில் குத்தி வைத்து வழிபட்டால், திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

    வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில், கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏவல், பில்லி, சூனியம் இருந்தால் நின்று விடும்.

    சக்கரத்தாழ்வார் சன்னிதியில் 48 நாட்கள், 12 நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், தொழில் வளர்ச்சி பெறலாம், வழக்குகள் சாதகமாகும். 21 செவ்வாய்க்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

    பைரவர் சன்னிதியில் தொடர்ச்சியாக 8 செவ்வாய்க்கிழமைகள் நெய் தீபம் ஏற்றி, சகஸ்ர நாம அர்ச்சனை செய்தாலும், கொடுத்த கடன் வசூலாகும்.

    உங்கள் வாழ்க்கையில் சனி பகவானின் பாதிப்பு குறைவதற்கு, ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவாலயங்களுக்குச் சென்று ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து அர்ச்சிக்க வேண்டும். சனிக்கிழமைகளில், சனி பகவானுக்கு தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றினாலும் பலன் கிடைக்கும்.

    சிவன்‬ கோவிலில் உள்ள வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகமாகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன.

    பிரதோஷ காலத்தில், பார்வதியுடன் ரிஷபாரூட மூர்த்தியாய் காட்சி தரும் ஈசனை வழிபடுபவர்களுக்கு, ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாராதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.

    மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் அன்று, தொடர்ச்சியாக 11 மாதங்கள் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தால், திருமணம் விரைவில் நடந்தேறும்.

    காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா முடிவடையும் வரை தினமும் காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலை பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதியுலாவும் நடைபெறும்.
    காரைக்கால்:

    காரைக்காலில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா, தேர், தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடி கம்பத்தின் அருகே நிலை நிறுத்தப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கொடி கம்பத்தில் சிவாச்சாரியார்கள் ரிஷப கொடியை ஏற்றி வைத்தனர்.

    தொடர்ந்து பால், தயிர் மற்றும் மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், கைலாசநாதர், சுந்தரம்பாள், சண்டிகேஸ்வரர் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

    விழாவில், காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. நாஜிம், அறங்காவலர் வாரிய தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ், விழா உபயதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா முடிவடையும் வரை தினமும் காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலை பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதியுலாவும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 13-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சகோபுர வீதியுலா (தெருவடைச்சான் சப்பரப்படல்) நடைபெற உள்ளது.

    வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) தேரோட்டமும், 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவமும், 21-ந் தேதி (திங்கட்கிழமை) காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவும் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிருநாதன் தலைமையில், அறங்காவல் குழுவினர் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
    ராகவேந்திரர் அவதரித்த தினத்தை முன்னிட்டு நாகை வெளிப்பாளையம் பகுதியில் உள்ள ராகவேந்திரர் மடாலயத்தில் ஜெயந்தி விழா நடைபெற்றது.

    ராகவேந்திரர் அவதரித்த தினத்தை முன்னிட்டு நாகை வெளிப்பாளையம் பகுதியில் உள்ள ராகவேந்திரர் மடாலயத்தில் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து ராகவேந்திர அஷ்டாஷர ஹோமம், மகா அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் ராகவேந்திரருக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல மாஞ்சாலி அம்மனுக்கு 10, 20, 50, 100 என மொத்தம் 5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பதி ரெயில் நிலையத்திலிருந்து 990 ரூபாய் கட்டணத்தில் பக்தர்களை திருமலைக்கு அழைத்து செல்லும் ஐ.ஆர்.சி.டி.சி. 1 மணி நேரத்தில் தரிசனம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
    திருப்பதி:

    கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திருப்பதியில் தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து சென்று வருகின்றனர்.

    திருப்பதியில் நாளொன்றுக்கு 25,000 என்ற எண்ணிக்கையில் 30 நாட்களுக்கு ஒரு முறை தேவஸ்தான நிர்வாகம் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது. அந்த டிக்கெட்டுகள் அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்குள் விற்று தீர்ந்து விடுகின்றன.

    இதுதவிர திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் நாளொன்றுக்கு 30,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் பக்தர்களுக்கு வழங்கி வருகிறது. இதற்காக ஒரு நாள் முன்னர் சென்று திருப்பதியில் காத்திருந்து கட்டண டிக்கெட்டுகளை வாங்கி திருமலைக்கு செல்ல வேண்டும்.

    இந்த நிலையில் தேவஸ்தானம் ஐஆர்சிடிசி மூலம் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. அவற்றை ஐஆர்சிடிசி ஆன்லைனில் அவ்வப்போது வெளியிட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் 990 ரூபாய் கட்டணம் செலுத்தி பக்தர்கள் அவற்றை முன்பதிவு செய்ய வேண்டும்.

    அதன் பின்னர் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாளன்று திருப்பதி ரெயில் நிலையத்திலிருந்து பக்தர்களை வேன் அல்லது கார் மூலம் திருமலைக்கு ஐஆர்சிடிசி நிறுவனம் அழைத்து செல்லும். அங்கு பகல் 11 மணிக்கு ஐஆர்சிடிசி நிறுவனத்திலிருந்து டிக்கெட் வாங்கிய பக்தர்கள் சாமி கும்பிட கோவிலுக்குள் செல்லலாம். ரூ.300 கட்டண தரிசனத்தில் அவர்கள் தரிசனத்திற்கு செல்லலாம்

    அவர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பின்னர் பக்தர்களுக்கு டிக்கெட்டுக்கு உரிய லட்டு பிரசாதம் ஒன்றை ஐஆர்சிடிசி நிறுவன உதவியாளர் வாங்கி கொடுப்பார். திருச்சானூர் கோவிலிலும் அவர்களுக்கு தரிசன ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
    ஆராட்டு விழா மற்றும் பங்குனி மாத பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவுக்காக நேற்று மாலை திறக்கப்பட்டது.

    தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவிலை திறந்து வைத்தார். இன்று முதல் ஆராட்டு விழா தொடங்கியது.

    இதற்கான கொடியேற்றம் காலை 10.30 மணிக்கு நடந்தது. திருவிழா கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்தார்.

    இன்று தொடங்கும் ஆராட்டு விழா வருகிற 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஸ்ரீபூதபலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறும்.

    17-ந் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடக்கிறது. 18-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடக்கிறது. அதன்பின்பு வழக்கமான பூஜைகளுக்கு பிறகு அன்று மாலை கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. மறுநாள் 19-ந் தேதி நடை அடைக்கப்படுகிறது.

    ஆராட்டு விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் விழாவில் பங்கேற்கலாம் என தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.

    ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் உடனடி முன்பதிவு செய்ய நிலக்கல்லில் சிறப்பு முன்பதிவு மையமும் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஆராட்டு விழா மற்றும் பங்குனி மாத பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்கள் திருவனந்தபுரம், கோட்டயம், கொட்டாரக்கரை, பத்தினம்திட்டை, எர்ணாகுளம், செங்கனூர் உள்பட பல்வேறு நகர்களில் இருந்து விடப்படுகிறது.

    திருக்கோவிலூர் அருகே கோலப்பாறை கிராமத்தில் உள்ள மலை மீது பிரசித்தி பெற்ற பால தண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது.
    திருக்கோவிலூர்:

     திருக்கோவிலூர் அருகே கோலப்பாறை கிராமத்தில் உள்ள மலை மீது பிரசித்தி பெற்ற பால தண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது. மாசி மாத சஷ்டி மற்றும் கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை முதல் பாலதண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

    காலையில் தொடங்கி, மாலை 6 மணி வரைக்கும் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திருக்கோவிலூர் மற்றும் அதைச சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
    ×