என் மலர்
வழிபாடு

கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா- கொடியேற்றத்துடன் தொடங்கியது
காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா முடிவடையும் வரை தினமும் காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலை பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதியுலாவும் நடைபெறும்.
காரைக்கால்:
காரைக்காலில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா, தேர், தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடி கம்பத்தின் அருகே நிலை நிறுத்தப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கொடி கம்பத்தில் சிவாச்சாரியார்கள் ரிஷப கொடியை ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து பால், தயிர் மற்றும் மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், கைலாசநாதர், சுந்தரம்பாள், சண்டிகேஸ்வரர் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
விழாவில், காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. நாஜிம், அறங்காவலர் வாரிய தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ், விழா உபயதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா முடிவடையும் வரை தினமும் காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலை பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதியுலாவும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 13-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சகோபுர வீதியுலா (தெருவடைச்சான் சப்பரப்படல்) நடைபெற உள்ளது.
வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) தேரோட்டமும், 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவமும், 21-ந் தேதி (திங்கட்கிழமை) காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவும் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிருநாதன் தலைமையில், அறங்காவல் குழுவினர் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
Next Story






