என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் லைகா புரொடக்ஷன்ஸ்.
    • இந்நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ், மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்திருந்தது. தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை தயாரித்து வருகிறது.




    இந்நிலையில் இந்த தயாரிப்பு நிருவனத்தின் 24வது பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'லவ் டுடே'.
    • இப்படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நடைபற்றது.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ளது. இதனை படக்குழு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தி கொண்டாடினர். இதில் படக்குழு, திரையுலகினர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஜிபி முத்து மேடையில் படத்தின் கதாநாயகி இவானா மற்றும் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டருக்கு மத்தியில் குத்தாட்டம் போட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

     


    • மலையாள திரையுலகில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ’பாசில் ஜோசப்’.
    • இவர் நடித்த ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    மலையாள திரையுலகில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பாசில் ஜோசப். இவர் 'குஞ்சி ராமாயணம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 'கோதா', 'மின்னல் முரளி' போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரின் 'மின்னல் முரளி' திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று இவருக்கான இடத்தை கொடுத்தது.


    பாசில் ஜோசப்

    கடந்த ஆண்டு விபின் தாஸ் இயக்கத்தில் பாசில் ஜோசப் நடிப்பில் வெளியான 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் பாசில் ஜோசப் - எலிசபெத் தம்பதியினருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.

    இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள பாசில் ஜோசப், "எங்கள் குட்டி தேவதை வருகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி! அவள் ஏற்கனவே எங்கள் இதயங்களைத் திருடிவிட்டாள். அவள் வளர்ச்சியையும் அவளிடமிருந்து ஒவ்வொரு நாளும் நாங்கள் கற்றுக் கொள்வதைப் பார்க்க காத்திருக்க முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.


    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.
    • தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன.

    இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வித்தியாசமான வண்ண உடையில் கீர்த்தி சுரேஷ் பதிவிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

    • தமிழில் நெல்லு, உன்னையே காதலிப்பேன், விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் நடித்தவர் அஞ்சலி நாயர்.
    • இவருக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் அஞ்சலி நாயர். இவர் தமிழில் நெல்லு, உன்னையே காதலிப்பேன், ரஜினியின் அண்ணாத்த, விஜய் சேதுபதியுடன் மாமனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.


    கடந்த 2011-ம் ஆண்டு அனீஷ் என்கிற இயக்குனரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். அதன்பின்னர் அஞ்சலி நாயர் கடந்த ஆண்டு அஜித் என்கிற உதவி இயக்குனரை திருமணம் செய்துகொண்டார். நடிகை அஞ்சலி நாயரும், இயக்குனர் அஜித்தும் திருமணம் ஆனதில் இருந்தே சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்கள். திருமணமான ஐந்தே மாதத்தில் இந்த தம்பதிக்கு குழந்தையும் பிறந்தது. 




    இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் படத்தில் நடித்தபோது வில்லன் நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்ற தகவலை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 


    அதில் அவர் கூறி இருப்பதாவது :- "கேரளாவை சேர்ந்தவளாக இருந்தாலும் எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும். பூர்வீகம் தமிழ்நாடா என கேட்கும் அளவும் சரளமாக தமிழ் பேசுவேன். இதனால் தமிழ் மொழியில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என நான் விரும்பினேன். 




    நான் தமிழில் முதன்முதலில் நடித்தபோது, வில்லன் நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவர் அப்படத்தில் வில்லன் மட்டுமல்ல இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். படப்பிடிப்பு இல்லாத சமயத்திலும் என்னை வெளியே செல்ல அனுமதிக்காமல் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தார். என்னிடம் புரபோஸ் செய்ததோடு, நான் எங்கு போனாலும் பின் தொடர்ந்து வந்தார். ஒருமுறை ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயற்சித்தார்.


     இதுதவிர எனது ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு சென்ற அவர், தனது வீட்டுக்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு அழைத்தார். இப்படி அவர் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் காவல்துறையின் உதவியை நாடினேன். இதையடுத்து கேரளாவுக்கே சென்றுவிட்டேன்" என தெரிவித்துள்ளார்.


    • நடிகை மீரா ஜாஸ்மின் 2014-இல் வெளிவந்த விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தார்.
    • இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புதிய கீதை, ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழில் கடைசியாக 2014-இல் வெளிவந்த விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தார்.


    மீரா ஜாஸ்மின்

    மலையாளத்தில் சில படங்கள் நடித்து வந்தாலும் தமிழில் இதுவே அவர் கடைசியாக நடித்த திரைப்படம். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    விமானம் போஸ்டர்

    அந்த வகையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக 'விமானம்' படக்குழு மீரா ஜாஸ்மினுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் இப்படம் மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.



    • அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படம் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.


    இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 10 இடத்தில் இருக்கும் படங்கள் பட்டியலில் 'துணிவு' திரைப்படம் மூன்று இடங்களை பிடித்துள்ளது. அதாவது, 'துணிவு' திரைப்படத்தின் ஹிந்தி வெர்ஷன் முதலிடத்தையும் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷன் இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. இதனை ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    மேலும், நான் இங்கிலீஸ் (non english) பிரிவில் முதல் ஐந்து இடத்தில் இரண்டு இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் ‘காந்தாரா’.
    • இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை குவித்தது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.


    கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'காந்தாரா' படம் குறித்து புதிய செய்தி பரவி வருகிறது.


    அதன்படி, இப்படத்தை ஆங்கிலத்தில் டப்பிங் செய்து வெளிநாடுகளில் திரையிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பகாசூரன்’.
    • இப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.


    பகாசூரன்

    இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆனந்தம் கூத்தாடும்' பாடலை படக்குழு வெளியிட்டது. தந்தை மற்றும் மகளின் பாசத்தை வெளிப்படுத்தும் இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டானது.


    பகாசூரன் போஸ்டர்

    இந்நிலையில், இந்த பாடல் 1.8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 'பகாசூரன்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜோஜு ஜார்ஜ்.
    • இவர் தமிழில் ஜெகமே தந்திரம், பபூன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

    மலையாளத்தில் பிரபல நடிகரான ஜோஜு ஜார்ஜ், தமிழில் தனுசுடன் ஜெகமே தந்திரம், பபூன் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். இவர் நடித்துள்ள 'இரட்டா' திரைப்படம் கடந்த 3-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், நடிகர் ஜோஜு ஜார்ஜ் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்கப் போவதாக வீடியோ ஒன்று வெளியிட்டு தெரிவித்துள்ளார்.


    ஜோஜு ஜார்ஜ்

    அதில் ஜோஜு ஜார்ஜ் கூறியதாவது, "இரட்டா படத்தின் புரொமோஷனுக்காக மீண்டும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்க முயன்றேன். ஆனால், எனக்கு எதிராக தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான சைபர் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். நான் உங்களிடம் உதவி கேட்கவில்லை. என்னை தேவையில்லாமல் துன்புறுத்துவதை நிறுத்தினால் நன்றாக இருக்கும். என்னை கலைஞனாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி" இவ்வாறு கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ‘லியோ’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'(Leo - Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    லியோ படக்குழு

    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    சமீபத்தில் 'லியோ' படப்பிடிப்பில் விஜய் நடித்த காட்சி இணையத்தில் கசிந்து வைரலானது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு லியோ படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்டால் அவை உடனடியாக நீக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    லியோ படக்குழு

    இந்த நிலையில் லியோ படப்பிடிப்பு தளத்தில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்பு அரங்கில் கூடுதல் பாதுகாப்பு போட்டு உள்ளே வருபவர்கள் செல்போன் மற்றும் கேமரா ஏதேனும் வைத்து உள்ளார்களா என்று பரிசோதித்த பிறகே அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘கிரிமினல்’.
    • இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.


    கிரிமினல் படக்குழு

    சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 23-ஆம் தேதி மதுரையில் தொடங்கியது. இந்நிலையில், இந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை கவுதம் கார்த்திக் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.

    மேலும் 'கிரிமினல்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


    ×