என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் எஸ்யுவி மாடல் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் விற்பனைக்கு வந்தது.
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் குஷக் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்கோடா குஷக் மாடல் விலை ரூ. 10.49 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்தியாவில் ஸ்கோடா குஷக் மாடல் மூன்று வேரியண்ட் மற்றும் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
புதிய குஷக் மாடலை வாடிக்கையாளர்கள் ஸ்கோடா ஆன்லைன் தளம் அல்லது அருகாமையில் உள்ள விற்பனையகம் சென்று நேரடியாக முன்பதிவு செய்யலாம். ஸ்கோடா குஷக் 1 லிட்டர் TSI வேரியண்ட்களின் வினியோகம் அடுத்த மாதம் துவங்குகிறது. 1.5 லிட்டர் TSI வேரியண்ட்கள் ஆகஸ்ட் மாதத்தில் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.

ஸ்கோடா நிறுவனத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகமாகும் முதல் மாடலாக குஷக் இருக்கிறது. புதிய ஸ்கோடா குஷக் கேன்டி வைட், பிரிலியண்ட் சில்வர், ஹனி ஆரஞ்சு, கார்பன் ஸ்டீல் மற்றும் டொர்னாடோ ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த எஸ்யுவி 1 லிட்டர் TSI மற்றும் 1.5 லிட்டர் TSI என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இதன் 1 லிட்டர் TSI என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 1.5 லிட்டர் TSI என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பத்து புது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இதற்காக இந்தியா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த இன் செல் மற்றும் பேட்டரி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் டாடா மோட்டார்ஸ் கூட்டணி அமைத்து இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன விற்பனை இந்த ஆண்டு மட்டும் இரண்டு சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நெக்சான் இவி மாடல் விற்பனையில் இதுவரை 4 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது.
"எலெக்ட்ரிக் வாகன விற்பனை எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம். 2025 வாக்கில் பத்து புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதுதவிர நாடு முழுக்க சார்ஜிங் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முதலீடு செய்ய இருக்கிறோம்," என டாடா மோட்டார்ஸ் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவான புது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை கிராவ்டான் மோட்டார்ஸ் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஐதராபாத் நகரை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான கிராவ்டான் மோட்டார்ஸ் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கி இருக்கிறது. கிராவ்டான் நிறுவனத்தின் முதல் பேட்டரி மோட்டார்சைக்கிள் குவாண்டா என அழைக்கப்படுகிறது.
புதிய குவாண்டா மாடல் அறிமுக விலை ரூ. 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வினியோகம் 2021 அக்டோபர் மாத வாக்கில் துவங்குகிறது. குவாண்டா மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளை கிராவ்டான் மோட்டார்ஸ் 2016 ஆம் ஆண்டு துவங்கியது.

இந்த மோட்டார்சைக்கிளின் பிரேம், மோட்டார் கேசிங் மற்றும் பேட்டரி போன்றவை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. நகரம் மற்றும் கிராமம் என இருதரப்பு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டு இருப்பதாக கிராவ்டான் மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது.
புதிய குவாண்டா எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் சந்தையில் விற்பனை செய்யப்படும் 100சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. கிராவ்டான் குவாண்டா மோட்டார்சைக்கிள் 3 kWH லித்தியம் அயன் பேட்டரி கொண்டுள்ளது. இந்த மாடல் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும். மோட்டார்சைக்கிளை Eco மோடில் இயக்கும் போது 320 கிலோமீட்டர் வரை செல்ல முடியும் என கிராவ்டான் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் வெளியீடு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்கோடா நிறுவனம் ஐரோப்பாவின் முன்னணி ஆட்டோமொபைல் விற்பனையாளர் என்ற பெருமையை பெற அசத்தலான எதிர்கால திட்டத்தை வகுத்துள்ளது. இத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கவும் ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி 2030 ஆம் ஆண்டு வாக்கில் 50 சதவீத ஸ்கோடா மாடல்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட இருக்கின்றன.

ஸ்கோடா எதிர்கால திட்டத்தை `நெக்ஸ்ட் லெவல்' என அழைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஐரோப்பிய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் 2030 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 70 சதவீத பங்குகளை பெற ஸ்கோடா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2022 என்யார்க் கூப் மாடலை காம்பேக்ட் கிராஸ்-ஓவர் மாடலாக மாற்ற ஸ்கோடா முடிவு செய்துள்ளது.
இத்துடன் வோக்ஸ்வேகன் குழுமத்தின் MEB-லைட் பிளாட்பார்மை பயன்படுத்தி சிறிய ரக அர்பன் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கவும் ஸ்கோடா திட்டமிட்டு உள்ளது. ஐரோப்பா மட்டுமின்றி இந்தியா, ரஷ்யா மற்றும் வட ஆப்ரிக்கா சந்தைகளிலும் முன்னணி இடம்பிடிக்க ஸ்கோடா இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் குஷக் மாடலை மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
வைட் மோட்டார்சைக்கிள் கான்செப்ட்ஸ் நிறுவனம் சுசுகி ஹயபுசா மாடலை தழுவி புது எலெக்ட்ரிக் பைக் கான்செப்டை உருவாக்கி இருக்கிறது.
பிரிட்டனை சேர்ந்த வைட் மோட்டார்சைக்கிள் கான்செப்ட்ஸ் நிறுவனம் WMC250EV பெயரில் புது எலெக்ட்ரிக் பைக் ப்ரோடோடைப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக் மணிக்கு சுமார் 400 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
வோக்சான் வாட்மேன் மாடலை கொண்டு கடந்த ஆண்டு மோட்டோ ஜிபி வீரர் மேக்ஸ் பியாகி மணிக்கு 367 கிலோமீட்டர் வேகத்தில் சென்றார். இவரது சாதனையை WMC250EV மாடல் முறியடிக்கும் என கூறப்படுகிறது.

ப்ரோடோடைப் மாடல் பிரத்யேக ஏரோடைனமிக் டிசைன் கொண்டுள்ளது. இதன் உருவ அமைப்பு இரண்டாம் தலைமுறை சுசுகி ஹயபுசா மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் நடுப்பகுதியில் வி-ஏர் என அழைக்கப்படும் டக்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழக்காமல் இருக்க உதவும்.
இந்த எலெக்ட்ரிக் பைக் பின்புறம் 30kW மோட்டார்களையும், முன்புறம் 20kW மோட்டார்களையும் கொண்டுள்ளது. இவை 134 பிஹெச்பி திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் திறனை அடுத்த ஆண்டு வாக்கில் அதிகரித்து பொலிவியா சால்ட் பிளாட்களில் உலக சாதனை படைக்கும் முயற்ச்சி மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இவி மாடலில் சில புது அம்சங்களை வழங்கி இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இவி காரில் சில புது அம்சங்களை வழங்கி இருக்கிறது. அதன்படி நெக்சான் இவி மாடலில் தற்போது புது அலாய் வீல்கள், புது டேஷ்போர்டு லே-அவுட், இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன்போடெயின்மென்ட் ஸ்கிரீனில் இருந்த பட்டன்கள் நீக்கப்பட்டுள்ளன.

புதிய அப்டேட்டின் படி பட்டன்களால் இயக்கப்பட்டு வந்த அம்சங்களை இனி டச் ஸ்கிரீன் மூலமாகவே இயக்கலாம். இத்துடன் நெக்சான் இவி மாடலில் டூயல்-டோன் 5 ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. முன்னதாக 8 ஸ்போக் அலாய் வழங்கப்பட்டு இருந்தது.
ஏப்ரல் 2021, வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் பயணிகள் எலெக்ட்ரிக் வாகனமாக டாடா நெக்சான் இவி இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் டாடா நெக்சான் இவி டார்க் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 மாடலில் ஆட்டோ பூஸ்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் XUV700 மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் புதிய XUV700 இந்த ஆண்டு இந்தியாவில் வெளியிடப்படும் என தெரிகிறது. புதிய XUV700 மாடலில் ஆட்டோ பூஸ்டர் ஹெட்லைட்களை வழங்க இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

டீசர் வீடியோவின்படி மஹிந்திரா XUV700 இரவு நேரத்தில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தை கடக்கிறது. இவ்வாறு வேகத்தை கடக்கும் போது கூடுதல் ஹெட்லைட்கள் தானாக ஆன் ஆகிறது. புதிய XUV700 இந்த ஆண்டே அறிமுகம் செய்யப்படும் என மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது. அதன்படி புதிய மஹிந்திரா கார் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது.
முன்னதாக இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் மற்றும் வீடியோக்களில் புது மஹிந்திரா XUV700 மாடலில் C-வடிவ எல்இடி டிஆர்எல்கள், முற்றிலும் புது பம்ப்பர்கள், கிரில், அலாய் வீல்கள், C-வடிவ எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
மாசிராட்டி நிறுவனத்தின் புதிய MC20 மாடல் இந்திய வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாசிராட்டி நிறுவனத்தின் MC20 இந்திய முன்பதிவு துவங்கியுள்ளது. இந்த காரின் முதல் யூனிட் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் வினியோகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்திய சந்தையில் ஜிப்லி, லிவான்டி மற்றும் குவாட்ரோபோர்ட் போன்ற மாடல்களை மாசிராட்டி விற்பனை செய்ய இருக்கிறது.

சர்வதேச சந்தையில் மாசிராட்டி MC20 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் 3 லிட்டர் வி6 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 621 பிஹெச்பி பவர், 730 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும்.
மாசிராட்டி MC20 மாடல் - வெட், ஜிடி, ஸ்போர்ட், கோர்சா மற்றும் ESC என ஐந்து விதமான டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. இவற்றை சென்டர் கன்சோலில் உள்ள டயல் மூலம் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய சூப்பர்கார் பற்றிய இதர விவரங்கள் வரும் மாதங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது.
லூசிட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் துவக்க விலை 70 ஆயிரம் டாலர்கள் ஆகும்.
லூசிட் மோட்டார்ஸ் நிறுவனம் தனது லூசிட் ஏர் மாடலுக்கான முன்பதிவு 10 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. புதிய லூசிட் ஏர் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் காருக்கான முதல் போட்டியாக பார்க்கப்படுகிறது.

லூசிட் ஏர் எலெக்ட்ரிக் கார் துவக்க விலை 70 ஆயிரம் டாலர்கள் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை 1,69,900 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ``லூசிட் ஏர் மாடல் உற்பத்தியில் சில சிக்கல்கள் இருந்தது, தற்போது இவை அனைத்தும் சீராகும் நிலை ஏற்பட்டுள்ளது," என லூசிட் மோட்டார்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட்டர் ராலின்சன் தெரிவித்தார். இவர் டெஸ்லா மாடல் எஸ் கார் திட்டத்தின் முன்னாள் தலைவராக இருந்தார்.
லூசிட் ஏர் முதற்கட்ட யூனிட்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் வினியோகம் செய்யப்படும் என ராலின்சன் தெரிவித்தார். லூசிட் ஏர் மாடலின் டிரீம் எடிஷன் முதலில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். டிரீம் எடிஷன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 809 கிலோமீட்டர்கள் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ஒலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு விரைவில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. ஒலா நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பவிஷ் அகர்வால் இதனை உணர்த்தும் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
Time to order some paint! What color would you like on the Ola Scooter? Already got you covered for Black! What else? @OlaElectricpic.twitter.com/NXMftKJrrq
— Bhavish Aggarwal (@bhash) June 24, 2021
அவரது ட்வீட்டில் ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புகைப்படத்தை இணைத்து, தனது பாலோவர்களிடம் எந்த நிறங்களில் வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய தகவல்களின் படி ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 150 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் கழற்றும் வசதி கொண்ட லித்தியம் அயன் பேட்டரி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், கிளவுட் கனெக்டிவிட்டி, அலாய் வீல்கள், டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
ஆடி நிறுவனத்தின் இ-டிரான் எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் இ டிரான் எலெக்ட்ரிக் மாடல் ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய இ டிரான் மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் மாடல்கள் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகமாகிறது. இரு எஸ்யுவி மாடல்கள் விலை ரூ. 1.20 கோடி வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஆடி இ டிரான் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் EQC மற்றும் ஜாகுவார் ஐ பேஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய ஆடி எஸ்யுவி மாடல் பெரிய கிரில், கூர்மையான ஹெட்லைட்களை கொண்டுள்ளது. காரின் பக்கவாட்டு பகுதிகள் ஆடி கியூ5 போன்றே காட்சியளிக்கிறது.
ஆடி இ டிரான் மாடலில் மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்கள், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேண்-கீப் அசிஸ்ட், பானரோமிக் சன்ரூப், பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீரிங் வீல் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது.
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்கள் குறைந்த மாத தவணையில் விற்பனை செய்யப்படுகின்றன.
டி.வி.எஸ். நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ரூ. 5 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இத்துடன் 100 சதவீத நிதி சலுகை, ரூ. 1555 மாத தவணை வசதி வழங்கப்படுகிறது.

இந்த சலுகை டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ், ரேடியான் மற்றும் ஸ்போர்ட் மாடல்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று மாடல்களிலும் 109.7சிசி சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.08 பிஹெச்பி பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை வழங்குகிறது.
இந்த மோட்டார்சைக்கிள்களில் 10 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன. முன்னதாக டி.வி.எஸ். நிறுவனம் தனது வாகனங்களுக்கான இலவச சர்வீஸ் சேவையை ஜூன் 30 வரை நீட்டித்தது.






