என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கத்தை தவறவிட்ட வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று வெண்கல பதக்கத்தை நூலிழையில் தவறவிட்ட இந்திய வீரர்களுக்கு தனது பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான அல்ட்ராஸ் காரை பரிசாக வழங்குகிறது. இதற்கான அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் வெளியிட்டது.

"இந்த வீரர்கள் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்று, பல்வேறு இளம் வீரர்கள் தங்கள் வழியை பின்பற்ற ஊக்கம் கொடுத்துள்ளனர். இவர்களின் திறமையை அங்கீகரிக்கும் வகையிலும், இவர்களது கடின உழைப்பு மற்றும் அர்பணிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அல்ட்ராஸ் மாடலின் தங்க நிற வேரியண்டை வழங்குகிறோம்."
"உலகளவில் அதீத திறன் பெற்ற வீரர்களை எதிர்த்து விளையாடிய நம் நாட்டு வீரர்கள் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டாலும், ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களை வென்று மேலும் பல தடகள வீரர்கள் உருவாக உத்வேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்" என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் ஸ்கூட்டர் மாடலின் புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சில தினங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்கூட்டரின் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. மேலும் இதற்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது.
உலகிலேயே அதிகளவு முன்பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ஓலா ஸ்கூட்டர் தான் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதன்படி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.4kWh பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும் என்றும் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் கூறப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டிகோர் இ.வி. சிப்டிரான் எலெக்ட்ரிக் கார் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் இ.வி. சிப்டிரான் மாடலை ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இதற்கான அறிவிப்பு அந்நிறுவன சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி இருக்கிறது. முன்னதாக டிகோர் இ.வி. சிப்டிரான் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டது.

புதிய எலெக்ட்ரிக் செடான் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிப்டிரான் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதே தொழில்நுட்பம் நெக்சான் இ.வி. மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக டிகோர் இ.வி. மாடல் அதிக தூரம் செல்லும் வசதி, சிறப்பான செயல்திறன், காரின் வேகம் குறையும் போது மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதி உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என தெரிகிறது.
இந்த அம்சங்கள் எதையும் டாடா மோட்டார்ஸ் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. புதிய டிகோர் இ.வி. சிப்டிரான் முழு விவரங்கள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகும். முன்னதாக டிகோர் இ.வி. மாடல் சில ஆண்டுகளாக விற்பனை செய்யப்படுகிறது. எனினும், இந்த மாடலில் டாடாவின் எலெக்ட்ரா லோ-வோல்டேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் காரின் ரேன்ஜ் மற்றும் திறன்கள் குறைவாக இருந்தது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐ20 என் லைன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
ஹூண்டாய் நிறுவனம் ஐ20 என் லைன் மாடலை ஆகஸ்ட் 24 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. முந்தைய தகவல்களில் இந்த மாடல் செப்டம்பர் மாதத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது.
புதிய ஹூண்டாய் ஐ20 என் லைன் - என்6 மற்றும் என்8 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. என் லைன் மாடல் ஐ20 ஆஸ்டா வேரியண்டை தழுவி உருவாகி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலில் 1 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118 பி.ஹெச்.பி. திறன், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த மாடலில் ஐ.எம்.டி. யூனிட் ஸ்டான்டர்டு அம்சமாகவும், டாப் எண்ட் என்8 வேரியண்ட்டில் டி.சி.டி. யூனிட் வழங்கப்படுகிறது.
தோற்றத்தில் ஐ20 என் லைன் மாடலில் 17 இன்ச் டூயல்-டோன் அலாய் வீல், ஸ்போர்ட் பம்ப்பர், ரியர் டிப்யூசர், டூயல் எக்சாஸ்ட் டெயில்பைப், ஸ்போர்ட் கலர் மற்றும் காண்டிராஸ்ட் நிற ரூப் வழங்கப்படுகிறது. உள்புறத்தில் ஸ்போர்ட் இருக்கைகள், காண்டிராஸ்ட் ரெட் ஸ்டிட்ச் வழங்கப்படுகிறது.
டுகாட்டி நிறுவனத்தின் எக்ஸ்-டையவெல் சீரிஸ் மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன.
டுகாட்டி இந்தியா நிறுவனம் எக்ஸ்-டையவெல் சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எக்ஸ்-டையவெல் டார்க் மாடல் விலை ரூ. 18 லட்சம் ஆகும். எக்ஸ்-டையவெல் பிளாக் ஸ்டார் விலை ரூ. 22.60 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டுகாட்டி எக்ஸ்-டையவெல் சீரிசில் டையவெல் 1260 மாடலில் உள்ளதை போன்றே 1262சிசி, எல்-ட்வின் டெஸ்டா-ஸ்டிரெட்டா மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 157.8 பி.ஹெச்.பி. திறன், 127 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

போஷ் ஐ.எம்.யு., டுகாட்டி டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னெரிங் ஏ.பி.எஸ்., குரூயிஸ் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், பல்வேறு ரைடு மோட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை செயல்திறன் வெளிப்பாடு, திராட்டிள் மற்றும் ஏ.பி.எஸ். இயக்கத்தை ஒவ்வொரு மோடிற்கும் ஏற்ப மாற்றியமைக்கிறது.
புதிய டுகாட்டி எக்ஸ்-டையவெல் டார்க் மாடலில் டார்க் ஸ்டெல்த் பெயின்ட், மேட் பிளாக் வீல்கள், கார்பன் பிளாக் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்-டையவெல் பிளாக் ஸ்டார் மாடலில் மேட் கிரே, மேட் பிளாக் மற்றும் ரெட் ஸ்டிரைப் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடல்களுக்கான முன்பதிவு மற்றும் வினியோகம் துவங்கிவிட்டது.
மஹிந்திரா நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு இந்திய சந்தையில் அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் மஹிந்திரா கார்களுக்கு இந்திய சந்தையில் அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கின்றனர். இவை ஆகஸ்ட் மாதம் முழுக்க வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச அக்சஸரீக்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா XUV500 மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 6500 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. ஸ்கார்பியோ வாங்குவோருக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4500 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 17 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா மராசோ வாங்குவோருக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5200 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. XUV300 மாடலுக்கு ரூ. 10,480 தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.
பொலிரோ வாங்குவோருக்கு ரூ. 3500 தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் பல்வேறு மாற்றங்களுடன் உருவாகி வருகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தலைமுறை கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய தகவல்களின் படி 2021 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
முந்தைய ஸ்பை படங்களின்படி 2021 கிளாசிக் 350 மாடல் வெளிப்புற தோற்றம் சற்றே மாற்றப்பட்டு, புது தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மீடியோர் 350 மாடலின் தொழில்நுட்பங்கள் புதிய கிளாசிக் 350 மாடலிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புதிய கிளாசிக் 350 மாடலில் 349சிசி சிங்கில் சிலிண்டர், DOHC என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் மீடியோர் 350 மாடலில் வழங்கப்பட்ட டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் அம்சமும் 2021 கிளாசிக் 350 மாடலில் வழங்கப்படலாம்.
புதிய மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக அமையும். தற்போதைய கிளாசிக் 350 விலை ரூ. 1,79,782 என துவங்கி அதிகபட்சம் ரூ. 2,06,962 வரை விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
எம்ஜி ஹெக்டார் ஷைன் மாடல் மூன்று வேரியண்ட்களில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் ஹெக்டார் ஷைன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் துவக்க விலை ரூ. 14.52 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடல் சூப்பர் மற்றும் ஸ்மார்ட் வேரியண்ட்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டார் ஷைன் மாடலில் ஒற்றை கண்ணாடி கொண்ட சன்ரூப் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹெக்டார் டாப் எண்ட் மாடல்களில் பானரோமிக் சன்ரூப், பேஸ் வேரியண்ட்களில் சன்ரூப் வழங்கப்படவில்லை. இத்துடன் ஹெக்டார் ஷைன் மாடல் புதிதாக ஹவானா கிரே நிறத்தில் கிடைக்கிறது.
புதிய எம்ஜி ஹெக்டார் ஷைன் வேரியண்ட் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சி.வி.டி. யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ஹெக்டார் ஷைன் வேரியண்ட் டீசல் என்ஜின் கொண்ட மாடல் விலை ரூ. 16.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
கவாசகி நிறுவனத்தின் 2022 இசட்650 மோட்டார்சைக்கிள் புதிதாக கேன்டி லைம் கிரீன் டைப் 3 நிறத்தில் கிடைக்கிறது.
கவாசகி நிறுவனம் 2022 இசட்650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் விலை ரூ. 6.24 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 6 ஆயிரம் அதிகம் ஆகும்.

புதிய 2022 இசட்650 மாடல் கேன்டி லைம் கிரீன் டைப் 3 நிறத்தில் கிடைக்கிறது. இதில் கிரீம் மற்றும் பிளாக் நிற பெயின்ட், கிரே நிற கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது. இவைதவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
கவாசகி இசட்650 மாடலில் 649சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 67.31 பி.ஹெச்.பி. திறன், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இதில் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டூயல் சேனல் ஏ.பி.எஸ். மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
வால்வோ நிறுவனத்தின் XC40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாக இருந்தது.
வால்வோ நிறுவனத்தின் XC40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீடு தாமதமாகி இருக்கிறது. கார் உற்பத்திக்கு அத்தியாவசிய உதிரிபாகங்களில் ஒன்றாக செமிகண்டக்டர் இருக்கிறது. இதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகிறது.

இதன் காரணமாக இந்த மாடலுக்கான முன்பதிவும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய தகவல்களின்படி வால்வோ XC40 ரீசார்ஜ் இந்த ஆண்டே இந்திய சந்தையில் அறிமுகமாகும் என கூறப்பட்டது. தற்போது உலகம் முழுக்க செமிகண்டக்டர் பாகத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு வாகன உற்பத்தியாளர்களும் வாகன வெளியீட்டில் மாற்றங்களை செய்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் வால்வோ XC40 ரீசார்ஜ் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 4 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக வால்வோ ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் மற்றும் சபாரி புது வேரியண்ட்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் XTA+ மற்றும் சபாரி XTA+ மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹேரியர் XTA+ விலை ரூ. 19.14 லட்சத்தில் துவங்கி ரூ. 19.34 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டாடா சபாரி XTA+ மாடல் விலை ரூ. 20.08 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது XT+ மேனுவல் மாடலை விட ரூ. 1.29 லட்சம் அதிகம் ஆகும். இந்த மாடலில் பானரோமிக் சன்ரூப், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹேரியர் XTA+ மாடலில் 2 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
சபாரி XTA+ மாடலிலும் 2 லிட்டர் டீசல் என்ஜினே வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜினும் 168 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் XUV700 எஸ்.யு.வி. மாடல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை பண்டிகை காலக்கட்டத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய XUV700 மாடலின் சில முக்கிய அம்சங்கள் ஸ்பை படங்கள் வாயிலாக ஏற்கனவே வெளியாகிவிட்டன. இதைத் தொடர்ந்து மஹிந்திராவும் XUV700 அம்சங்களை ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறது. சமீபத்திய டீசரில் புதிய XUV700 பெரிய பானரோமிக் சன்ரூப் கொண்டிருக்கும் என தெரியவந்தது. இத்துடன் தனிப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை தகவல்கள், ஓட்டுனர் உறக்கத்தில் இருப்பதை கண்டறியும் வசதி போன்றவை வழங்கப்படுகிறது.

காரின் உள்புறம் 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல், டூயல் ஹெச்.டி. ரெசல்யூஷன் ஸ்கிரீன்- ஒன்று தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், சோனி மியூசிக் சிஸ்டம், மஹிந்திராவின் அட்ரினோ எக்ஸ் ஏ.ஐ. தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய 2021 மஹிந்திரா XUV700 மாடலில் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இவற்றுடன் மேனுவல், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.






