என் மலர்
செய்திகள்
- சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை:
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன், பாகிஸ்தான், நமிபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. பரம போட்டியாளரான பாகிஸ்தானை பிப்.15-ந்தேதி கொழும்பில் சந்திக்கிறது.
இந்த நிலையில். டி20 உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம்:-
அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்ஷர் பட்டேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.
- தமிழ் திரையுலகம் என்பது இசை, பாடல், உணர்ச்சிகள் ஆகியவற்றின் அழகிய கலவை.
- ஜெயச்சந்திரன் தனது உணர்ச்சிமயமான குரலால் பாடல்களுக்கு உயிர் கொடுத்தார்.
இசையமைப்பாளர் சபேஷ் மற்றும் பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களின் மறைவு இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
தமிழ் திரையுலகம் என்பது இசை, பாடல், உணர்ச்சிகள் ஆகியவற்றின் அழகிய கலவை. இதில் தனித்துவமான பங்களிப்பு செய்தவர்கள் பலர். அவர்களில் இசையமைப்பாளர் சபேஷ் (சபேஷ்-முரளி ஜோடியின் ஒரு பகுதி) மற்றும் பாடகர் பி. ஜெயச்சந்திரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சபேஷ் தனது இசையால் தமிழ் சினிமாவை செழுமைப்படுத்தினார் என்றால், ஜெயச்சந்திரன் தனது உணர்ச்சிமயமான குரலால் பாடல்களுக்கு உயிர் கொடுத்தார். இவர்களின் திரைப்பயணம், தமிழ் இசையின் பொன்னான அத்தியாயங்களில் ஒன்று.
நம்மை விட்டு மறைந்த இசையமைப்பாளர் சபேஷ் மற்றும் பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களின் திரையுல பங்களிப்புகள் குறித்து இக்கட்டுரையில் பார்ப்போம்
இசையமைப்பாளர் சபேஷ்:
இசையமைப்பாளர் சபேஷ் சென்னையைச் சேர்ந்தவர். தமிழ் திரையிசையில் சபேஷ்-முரளி என்ற ஜோடியின் மூலம் இருவரும் புகழ்பெற்றனர். இவர்கள் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரர்கள். அண்ணன் தேவாவின் உதவியாளர்களாக தொழிலைத் தொடங்கிய இவர்கள், பின்னர் சுயாதீன இசையமைப்பாளர்களாக உருவெடுத்தனர்.
இசையமைப்பாளர் சபேஷ் அவர்களின் திரைப்பயணம் 1990களின் பிற்பகுதியில் தொடங்கியது, ஆனால் முழுமையான இசையமைப்பாளர்களாக 2001ஆம் ஆண்டு 'சமுத்திரம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவரின் இசை கவனம் ஈர்த்தது.

சபேஷ்-முரளி ஜோடியின் இசை, உணர்ச்சிகரமான மெலடிகள் மற்றும் பின்னணி இசையால் பிரபலமானது. அவர்கள் இசையமைத்த 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' (2006), 'ஆட்டோகிராஃப்' (2004), 'தவமாய் தவமிருந்து' (2005) 'போக்கிஷம்' (2009), 'கூடல் நகர்' (2007), 'மிளகா' (2010), 'கோரிபாளையம்' (2010) , 'மாயாண்டி குடும்பத்தார் (2009)' ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
குறிப்பாக, 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் இசை, வரலாற்று நகைச்சுவைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டது. அவர்கள் சில படங்களில் பாடல்களையும் பாடியுள்ளனர்.
சபேஷ், சினிமா இசைக்கழகத்தின் (Cine Musicians Union) முன்னாள் தலைவராகவும் பணியாற்றினார், இது அவரது தொழில்துறைக்கான அர்ப்பணிப்பை காட்டுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, 2025 அக்டோபர் 23ஆம் தேதி, 68 வயதில் சபேஷ் காலமானார். இது தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

பாடகர் ஜெயச்சந்திரன்:
பாடகர் ஜெயச்சந்திரன் தென்னிந்திய திரையிசையின் ஜாம்பவான். 1944 மார்ச் 3ஆம் தேதி கேரளாவின் இரிஞ்சலகுடாவில் பிறந்த இவர், 2025 ஜனவரி 9ஆம் தேதி தனது 80ஆம் வயதில் காலமானார்.
அவரது தந்தை ரவிவர்மா கொச்சனியன் தம்புரான் ஒரு இசைக்கலைஞர், இது ஜெயச்சந்திரனின் இசை ஆர்வத்தை தூண்டியது. இரிஞ்சலகுடா நேஷனல் உயர்நிலைப்பள்ளி மற்றும் கிறிஸ்ட் கல்லூரியில் படித்த இவர், மிருதங்கம் மற்றும் இலகு இசையில் மாநில இளைஞர் திருவிழாவில் பரிசுகள் வென்றார்.
ஜெயச்சந்திரனின் திரைப்பயணம் 1965இல் தொடங்கியது. அவரது முதல் பாடல் 'ஒரு முல்லப்பூ மலையுமாயி' ('குஞ்சலி மரக்கார்' படம், மலையாளம்).
தமிழில் 1973இல் 'மனிப்பயல்' படத்தில் 'தங்கச் சிமிழ் போல்' மற்றும் 'அலைகள்' படத்தில் 'பொன்னென்ன பூவென்ன' பாடல்களுடன் அறிமுகமானார்.

அவரது குரல், உணர்ச்சி மற்றும் மென்மையால் பிரபலமானது, இது இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், ஏ.ஆர். ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற உதவியது. தமிழில் எண்ணற்ற பாடல்கள் பாடியுள்ளார்.
சில குறிப்பிடத்தக்க பாடல்கள்: 'வாழ்க்கையே வேஷம்' ('ஆறிலிருந்து அறுபது வரை', 1979), 'தாலாட்டுதே வானம்' ('கடல் மீன்கள்', 1981), 'காத்திருந்து காத்திருந்து' ('வைதேகி காத்திருந்தாள்', 1985), ராசாத்தி உன்ன ('வைதேகி காத்திருந்தாள்', 1985), 'மயங்கினேன் சொல்ல தயங்கினேன்' ('நானே ராஜா நானே மந்திரி', 1985), 'பூவ எடுத்து ஒரு' ('அம்மன் கோவில் கிழக்காலே', 1986), 'கத்தாழங்காட்டு வழி' ('கிழக்கு சீமையிலே', 1993), 'கண்ணத்தில் முத்தமிட்டால்' (2002). இவை அனைத்தும் இளையராஜா மற்றும் ரகுமானின் இசையில் உருவானவை.
அவரது சாதனைகள்: தேசிய திரைப்பட விருது (1985), 5 கேரளா ஸ்டேட் விருதுகள், 4 தமிழ்நாடு ஸ்டேட் விருதுகள், கலைமாமணி (1997), ஜே.சி. டேனியல் விருது (2020) ஆகியவை அடங்கும்.

16,000க்கும் மேற்பட்ட பாடல்களுடன், அவரது பங்களிப்பு தென்னிந்திய இசையை ஒருபடி மேலே உயர்த்தியது.
முடிவுரை:
சபேஷ் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோரின் திரைப்பயணம், தமிழ் சினிமாவின் இசைக்கு புதிய பரிமாணங்களைச் சேர்த்தது. சபேஷின் இசை அமைப்புகள் உணர்ச்சிகளை தூண்டினால், ஜெயச்சந்திரனின் குரல் அவற்றை உயிர்ப்பித்தது. அவர்களின் படைப்புகள் இன்றும் ரசிகர்களின் இதயங்களில் ஒலிக்கின்றன. தமிழ் திரையிசைக்கு இவர்களின் பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்...
- மும்பை அணிக்காக ரோகித் சர்மா களமிறங்குகிறார்.
- ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் விராட் கோலி விளையாட உள்ளார்.
விஜய் ஹசாரே டிராபி தொடர் வரும் 24-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி ஒருநாள் தொடராக நடைபெற உள்ளது. இந்த தொடர் பிளேட், எலைட் என்ற இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பிளேட் பிரிவில் மேகாலயா, மிசோரம், அருணாச்சல பிரதேசம், பீகார், மணீப்பூர், நாகலாந்து இடம் பெற்றுள்ளது.
எலைட் பிரிவில் தமிழ்நாடு, புதுச்சேரி, குஜராத், ஆந்திரா, டெல்லி, ஹரியானா, ரெயில்வேஸ், ஒடிசா, சவுராஸ்ட்ரா, பஞ்சாப், மகாராஷ்டிரா, சண்டிகர், கோவா, ஹிமாசல் பிரதேசம், உத்திரகாண்ட், மும்பை, சிக்கீம், பெங்கால், விதர்பா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, திரிபுரா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், அசாம், பரோடா, ஐதராபாத், உத்தர பிரதேசம் ஆகிய அணிகள் இந்த பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் விஜய் ஹசாரே தொடரில் இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாட உள்ளனர். அதன்படி மும்பை அணிக்காக ரோகித் சர்மா களமிறங்குகிறார். அவர் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் விராட் கோலி விளையாட உள்ளார்.
இவர்கள் இருவரும் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர் பார்ப்பு உள்ளது.
- முதலமைச்சர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.
- மாலை கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
நெல்லை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சபாநாயகர் அப்பாவு, தி.மு.க. துணைபொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம்தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மனோதங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலையத்தில் அவருக்கு ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு நெல்லை சென்ற அவருக்கு மாவட்ட எல்லையான பாளை கே.டி.சி. நகரில் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிரகாம்பெல் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை சென்றார். நெல்லையில் சாலையின் இருபுறமும் திரண்ட தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாலை 4 மணிக்கு புறப்பட்டு வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து இரவில் ரெட்டியார்பட்டி யில் ரூ.56 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை மின்னும் விளக்கொளியில் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி அளவில் வண்ணார்பேட்டையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் பிரமாண்ட அரசு விழாவில் பங்கேற்கிறார்.
அங்கிருந்தபடி ரூ.72.10 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மேம்பட்ட மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார். மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.5.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம், பாளையங்கோட்டையில் ரூ.3½ கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டுதல் மையம், பாளையங்கோட்டையில் ரூ.1.69 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள உணவு பகுப்பாய்வு ஆய்வக கட்டிடம் ஆகியவற்றை பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மேலும் மேலப்பாளையம் மீரா பள்ளிவாசலில் ரூ.1.70 கோடியில் சமுதாய கூடம் உள்பட ரூ.182.74 கோடியில் முடிவுற்ற 32 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டையில் காயிதே மில்லத் பெயரில் ரூ.98 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ள அறிவுசார் நூலக கட்டிடம் உள்பட ரூ.357 கோடியில் 11 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
50 புதிய பஸ் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து 45 ஆயிரத்து 112 பயனாளிகளுக்கு ரூ.101.48 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இவ்வாறாக நெல்லை மாவட்டத்திற்கு மொத்தம் ரூ.696 கோடியில் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவுக்காக சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
25 மற்றும் 26-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 22-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, மத்திய மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- இந்த தாக்குதலை பார்த்த தனது மகள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
- தங்கள் ஊழியரின் இத்தகைய நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானி ஒருவர் பயணியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் அங்கித் திவான் என்பவர், ஸைப்ஸ் ஜெட் விமானத்தில் ஏறுவதற்கு, தனது 7 வயது மகள், 4 மாத கைக்குழந்தை மற்றும் மனைவியுடன் பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது ஊழியர்கள் என்ட்ரி வழியாக வரிசையில் புகுந்து முன்னால் செல்ல முயன்ற ஏர் இந்தியா விமானி வீரேந்தர் என்பவரை அங்கித் திவான் கடிந்துகொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த விமானி வீரேந்தர், இது ஊழியர்கள் என்ட்ரி என்றும், திவானை படிப்பறிவு இல்லையா என்று திட்டியுள்ளார். அதோடு அவரை தாக்கியும் உள்ளார்.
இந்தத் தாக்குதலில் அங்கித் திவானின் முகத்தில் ரத்தம் வழிந்தது.முகம் முழுவதும் ரத்தக் கறையுடன் இருக்கும் தனது புகைப்படத்தை அங்கித் திவான் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், இந்த தாக்குதலை பார்த்த தனது மகள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து புகார் அளிக்க வேண்டாம் என அதிகாரிகள் தன்னை வற்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் ஊழியரின் இத்தகைய நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வருகிறது.
- மூத்த மகள் தமிழ்செல்வி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
- சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாதம்பதி பகுதியை சேர்ந்தவர் தணிகாச்சலம் (வயது 35), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஐஸ்வர்யா (28). இவர்களுக்கு தமிழ் செல்வி, நிஷா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் தமிழ்செல்வி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். இன்று காலை தமிழ் செல்வியை பள்ளிக்கு அனுப்புவதற்கு தாய் ஐஸ்வர்யா, தனது 4 இரண்டாவது மகள் நிஷாவையும் கூடவே அழைத்து சென்றுள்ளார்.
அப்போது பள்ளி பஸ் வந்த உடன் தமிழ் செல்வியை ஏற்றி விட்டார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ் சக்கரத்தில் 2 வயது நிஷா சிக்கி உயிரிழந்தார்.
மகள் பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்ததை கண்டு தாய் பதறி போய் கதறினார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இங்கிலாந்து அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- இங்கிலாந்து அணிக்கு இன்னும் 228 ரன்கள் தேவை.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 371 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 286 ரன் எடுத்தது. 85 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 271 ரன் எடுத்து இருந்தது. டிராவிஸ் ஹெட் சதம் அடித்தார். அவர் 142 ரன்னுடனும், அலெக்ஸ் கேரி 52 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 356 ரன்கள் முன்னிலை, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது. டிராவிஸ் ஹெட் 170 ரன் குவித்து அவுட் ஆனார். டெஸ்டில் அவரது 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 5-வது விக்கெட் ஜோடி 162 ரன் எடுத்தது.
அலெக்ஸ் கேரி 72 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் எளிதில் ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 84.4 ஓவரில் 349 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 435 ரன் இலக்காக இருந்தது.
இங்கிலாந்து தரப்பில் ஜோஸ் டங் 4 விக்கெட்டும், கார்ஸ் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், வில் ஜேக்ஸ், பென் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 435 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி ஆடியது.
31 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 2 விக்கெட்டை இழந்தது. பென் டக்கெட் 4 ரன்னிலும், ஓலிபோப் 17 ரன்னிலும், கம்மின்ஸ் பந்தில் பெவிலியன் திரும்பினார்கள். 3-வது விக்கெட் டுக்கு கிராவ்லியுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக விளையாடினர். இருந்தாலும் பேட் கம்மின்ஸ் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய கிராவ்லி அரைசதம் கடந்து அசத்தினர். அடுத்து வந்த ஹாரி ப்ரூக் 30 ரன்னிலும் பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னிலும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிராவ்லி 85 ரன்னிலும் நாதன் லயன் பந்துவீச்சில் வெளியேறினார்.
இதனால் இங்கிலாந்து அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு இன்னும் 228 ரன்கள் தேவை என்ற நிலையுடன் கடைசி நாளில் களமிறங்கும். 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் போட்டியில் வெற்றி பெறலாம் மேலும் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற நோக்கி ஆஸ்திரேலியா நாளை களமிறங்கும். ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடைபெறும்.
- வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
அப்போது மாவட்டக்கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இக்கூட்டத்தில் SIR-க்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நம்பிக்கை மோசடி செய்ததற்காக 7 ஆண்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள், ஆக மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை
- ஏற்கனவே "தோஷகானா 1" வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தோஷகானா பார்ட் 2 வழக்கில் தண்டனை கிடைத்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு மற்றுமொரு ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி பெற்ற பரிசுகளில் ஊழல் செய்ததாக வழக்கு.
இந்த வழக்கு 'தோஷகானா 2' என்று அழைக்கப்படுகிறது. அரசு கருவூல பரிசுகள் தோஷகானா என்று அளிக்கப்படுவதால் இந்த பெயர்
2021-ம் ஆண்டு சவுதி அரேபியாவிடமிருந்து இம்ரான் கான் தம்பதி பரிசாக பெற்ற விலைமதிப்பற்ற நகைகள், வைரங்கள் மற்றும் ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட அரசு பரிசுகளை, அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் மோசடி செய்தததே இவர்கள் மீதான குற்றச்சாட்டு.
சுமார் 10.9 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை அவர்கள் கையாடல் செய்ததாக புலனாய்வு அமைப்பு தெரிவித்தது.
இந்நிலையில், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.
அதன்படி நம்பிக்கை மோசடி செய்ததற்காக 7 ஆண்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள், ஆக மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தலா 1.64 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதேபோல் மற்ற சில பரிசுகளை கையாடல் செய்ததாக "தோஷகானா 1" வழக்கில் தண்டனை பெற்றுள்ள இம்ரான் கானுக்கு இந்த தோஷகானா பார்ட் 2 வழக்கில் 17 ஆண்டு தண்டனை பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதுமட்டுமின்றி பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்று இம்ரான் கான் ஏற்கனவே அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அண்மையில் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால் சிறை நிர்வாகம் அதை மறுத்தது.
இதற்கிடையே இம்ரான் கான் மனைவி புஷ்ரா பீபி ஏற்கனவே இந்த 'தோஷகானா 2' வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், தற்போது அவருக்கு 17 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் பிடிஐ கட்சி இத்தீர்ப்பை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், சட்டத்தை கேலி செய்யும் செயல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
- தண்டவாளத்தில் யானைகள் கூட்டம் இருப்பதைக் கண்டதும், ரெயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தினார்.
- விபத்து குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுகாத்தி:
மிசோரம் மாநிலம் சாய்ரங்கில் இருந்து புதுடெல்லிக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று அதிகாலை அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சுமார் 126 கி.மீ தொலைவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது தண்டவாளப் பகுதியில் யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. வேகமாக வந்த ரெயில் யானைகள் மீது மோதியது. இந்த விபத்தில் 8 யானைகள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. ஒரு குட்டி யானை படுகாயம் அடைந்தது. தகவல் அறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக வந்து படுகாயம் அடைந்த குட்டி யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
மேலும் இந்த விபத்தில் சில ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. ஆனால் ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து நடந்த பகுதிக்கு நிவாரண ரெயில்கள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் விரைந்தனர். யானைகள் வழித்தடமாக குறிப்பிடப்படாத இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தண்டவாளத்தில் யானைகள் கூட்டம் இருப்பதைக் கண்டதும், ரெயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தினார். எனினும், யானைகள் மீது மோதியதால் ரெயில் தடம் புரண்டது. ரெயில் தடம் புரண்டதாலும், யானையின் உடல் பாகங்கள் தண்டவாளங்களில் சிதறிக் கிடந்ததாலும், அசாம் மற்றும் வடகிழக்கின் பிற பகுதிகளுக்கான ரெயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்த விபத்து குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவர் இயக்கிய பல படங்கள் மாநில மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது.
- தமிழில் வெளியான “லேசா லேசா” படத்தில் இவர் நடித்த நகைச்சுவை கதாப்பாத்திரம் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும்.
மலையாள திரையுலகின் பிரபல நடிகரும், இயக்குநருமான நடிகர் ஸ்ரீனிவாசன் உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மட்டனூர் அருகே உள்ள பாட்டியம் பகுதியில் 1956-ம் ஆண்டு பிறந்த ஸ்ரீனிவாசன், 1977-ம் ஆண்டு "மணி முழக்கம்" என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமா துறையில் நுழைந்தார். பள்ளி ஆசிரியர் மற்றும் இல்லத்தரசியின் மகனான இவர் பொருளாதாரம் இளங்கலை பட்டதாரி ஆவார்.
சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாக சென்னையில் உள்ள தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் முறையான திரைப்பட பயிற்சி பெற்றவர். அவர் நடித்த முதல் படத்திலேயே தனது தனிப்பட்ட நடிப்பின் மூலமாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.
அதன்பிறகு மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்த இவர், மலையாள சினிமாவின் மதிக்கப்படும் நடிகர்களில் ஒருவரானார். 225 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீனிவாசன், சமூகத்தில் நடக்கும் விஷயங்களை தனது காமெடி வாயிலாக வெளிப்படுத்தி ரசிகர்களால் கவரப்பட்டவர்.
மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமாக்களிலும் நடித்துள்ள அவர், தனது நகைக்சுவை நடிப்பால் தமிழக ரசிகர்களையும் கவர்ந்தவர். திரைப்பட துறையில் நடிப்பு மட்டுமின்றி, பல படங்களில் இயக்குனராகவும் இருந்துள்ளார். மேலும் திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் இயக்கிய பல படங்கள் மாநில மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது.
தமிழில் வெளியான "லேசா லேசா" படத்தில் இவர் நடித்த நகைச்சுவை கதாப்பாத்திரம் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும். அவரது முக பாவணை மற்றும் நகைச்சுவை பேச்சு, அந்த படத்தில் இறுதிவரை ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கும். பாரதிராஜாவின் "ரெட்டச்சுழி" படத்திலும் நடித்திருக்கும் அவர் அப்போதே தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தனது தனித்துவமான நகைக்சுவை நடிப்பின் மூலம் மலையாள மற்றும் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீனிவாசன், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் உதயம்பேரூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து சிகிச்சை பெற்றார்.
டயாலிசிஸ் சிகிச்சைக்காக அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று வந்த படி இருந்துள்ளார். இந்தநிலையில் அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து திரிபுனித்துராவில் உள்ள தாலுகா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஸ்ரீனிவாசன் இன்று காலை 8.30 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது மறைவு மலையாள திரையுலகினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஸ்ரீனிவாசனின் மறைவு குறித்து கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ஆடியோவில், "எனது நல்ல நண்பர் ஸ்ரீனிவாசன் இனி இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியாக இருந்தது. நான் படித்த திரைப்படக் கல்லூரியில் அவர் என் வகுப்புத் தோழர். அவர் ஒரு சிறந்த நடிகர் மற்றும் மிகவும் நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று கூறியுள்ளார்.






