search icon
என் மலர்tooltip icon

    டெல்லி

    • வேறு யாரை அங்கு வேட்பாளராக களம் இறக்குவது என்று ஆலோசனை நடந்து வருகிறது.
    • காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாக கருதப்படுகின்றன. ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது அவர் மேல்சபை எம்.பி. ஆகி விட்டதால் அந்த தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது. இதற்கிடையே ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது. கடந்த முறை ராகுல் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார். வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர் எம்.பி. யாக முடிந்தது. இந்த தடவையும் அவர் வயநாடு தொகுதியில் களம் இறங்கி உள்ளார். அந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது.

    இந்த நிலையில் அவர் அமேதியிலும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அமேதியில் ராகுலையும், ரேபரேலியில் பிரியங்காவையும் களம் இறக்குவது பற்றி காங்கிரஸ் தேர்தல் மையக்குழு ஆலோசனை கூட்டம் கடந்த சனிக்கிழமை டெல்லியில் நடந்தது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அமேதி, ரேபரேலி தொகுதி நிலவரம் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ராகுல் மற்றும் பிரியங்காவை இந்த தொகுதிகளில் போட்டியிட வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். ராகுல் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடுவது தொடர்பாக அறிவிப்பை காங்கிரஸ் வெளியிடவில்லை.

    இந்த நிலையில் அமேதி தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. வருகிற 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்த நிலையில் இன்று பா.ஜ.க. வேட்பாளர் ஸ்ருமிதி இரானி மனுதாக்கல் செய்து உள்ளார். அவரை எதிர்த்து ராகுல் களத்தில் இறங்குவாரா? என்பதில் தற்போது கேள்விக்குறி எழுந்துள்ளது. ஸ்ருமிதிஇரானியை எதிர்த்து போட்டியிட ராகுல் மிகவும் தயங்குவதாக தெரிய வந்துள்ளது. கடந்த முறை ராகுலை சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி வீழ்த்தி இருந்தார். அதன் பிறகு அவர் அமேதி தொகுதியில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு அந்த தொகுதியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இதனால் அமேதியில் போட்டியிட்டால் மீண்டும் தோல்வியை தழுவ நேரிடுமோ? என்று ராகுல்காந்தி தயங்குவதாக தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து வேறு யாரை அங்கு வேட்பாளராக களம் இறக்குவது என்று ஆலோசனை நடந்து வருகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அவரை அமேதியில் காங்கிரஸ் களம் இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்கள் செய்து வரும் ராபர்ட் வதேரா மீது ஏற்கனவே மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டு மக்களின் மனநிலையைதான் பாரதிய ஜனதா பிரதிபலிக்கிறது.
    • இந்த தடவை எங்களுக்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு கிடைத்து இருக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி மாநிலம் வாரியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தனது கருத்துக்களை பிரதமர் மோடி வெளிப்படுத்தி உள்ளார்.

    அந்த பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இதுவரை நான் நாடு முழுவதும் 70 நகரங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்தி பிரசாரம் செய்து உள்ளேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் என் மீது அளவு கடந்த அன்பையும் ஆதரவையும், பாசத்தையும் காட்டியதை காண முடிந்தது. மக்களின் இந்த அபரிமிதமான அன்பை பார்க்கும் போது 400 இடங்களுக்கு மேல் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்ற எங்களது இலக்கு நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

    பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்தால் அது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அளிக்கும் வாக்கு என்பதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்து புரிந்து இருக்கிறார்கள். தற்போது 2 கட்ட தேர்தல் முடிந்து இருக்கிறது. இந்த 2 கட்டங்களிலும் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையான தோல்வியை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாரதிய ஜனதா 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும் என்று நாங்கள் இலக்கு நிர்ணயித்து இருப்பதற்கு முக்கிய காரணம் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் இன மக்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சட்டங்களை திருத்தி விடுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள்.

    அப்படிப்பட்டவர்கள் நான் முதல்-மந்திரி ஆனதில் இருந்து தற்போது வரை என்னென்ன செய்து வருகிறேன் என்று சற்று ஆய்வு செய்து பார்க்க வேண்டும். எந்த ஆதாரமும் இல்லாமல் என் மீது குற்றச்சாட்டு சொல்லக்கூடாது. நாட்டு மக்களின் மனநிலையைதான் பாரதிய ஜனதா பிரதிபலிக்கிறது. மக்கள் இன்னமும் மாற்றங்கள் வேண்டும் என்கிறார்கள். அதை நிச்சயம் செய்வோம். பாரதிய ஜனதா தோற்கும் என்று காங்கிரசின் இளவரசர் சொல்கிறார். உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதால்தான் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் நழுவி சென்று விட்டனர். அப்போதே அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டனர். இந்த தடவை எங்களுக்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு கிடைத்து இருக்கிறது. நிச்சயம் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்.


    தென் இந்தியாவில் இந்த தடவை பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. தென் இந்தியாவில் நான் எங்கு சென்றாலும் மக்கள் அபரிமிதமான ஆதரவை கொடுத்தனர். அன்பு மழையை பொழிந்தனர். தென் இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளின் ஆட்சியைதான் மக்கள் பார்த்து வருகிறார்கள். அந்த கட்சிகளின் ஆட்சிகள் அரசை தவறாக வழிநடத்துவதையும், பிரிவினைவாத செயல்களை செய்வதையும் வாக்கு வங்கி அரசியல் நடத்துவதையும் தான் பார்த்து வருகிறார்கள். மொத்தத்தில் தென் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள மாநில கட்சிகள் ஊழல் செய்வதையே முதன்மையாக கொண்டு இருப்பதையும் மக்கள் பார்த்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி கலாச்சாரம், பண்பாடு மீது நடத்தப்படும் வெறுப்பு தாக்குதலையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் காரணமாக காங்கிரஸ் மீதும், மாநில கட்சிகள் மீதும் மக்களுக்கு மிகப்பெரிய வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் தென் மாநில மக்கள் மத்தியில் பா.ஜ.க. தலைமையில் நடைபெறும் சிறப்பான ஆட்சியையும் பார்க்கிறார்கள்.

    மக்கள் நல திட்டங்களில் பாரதிய ஜனதா அரசு செய்துள்ள முக்கிய திருத்தங்களையும் தென் மாநில மக்கள் பார்க்கிறார்கள். நாங்கள் கொண்டு வந்துள்ள முக்கிய நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. பாரதிய ஜனதாவிடம் அவர்கள் நம்பிக்கை ஒளியை பார்க்கிறார்கள். எனவே தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவை மக்கள் நம்ப தகுந்த மாற்று சக்தியாக ஏற்க தொடங்கி இருக்கிறார்கள். தென் இந்தியாவில் பாரதிய ஜனதாதான் மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக கடந்த தேர்தலில் திகழ்ந்தது. இந்த தடவை தென் இந்தியாவில் அதிக வெற்றி பெறும் கட்சியாக பாரதிய ஜனதா திகழும். தமிழகம் உள்பட தென் இந்தியாவில் பாரதிய ஜனதா குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெறும். இந்த தடவை தென் இந்திய தேர்தல் முடிவுகள் பல பாரம்பரிய கதைகளுக்கு முடிவு கட்டுவதாக இருக்கும். தென் இந்தியாவில் இந்த தடவை பாரதிய ஜனதாவுக்கு வாக்கு வங்கியும் கணிசமாக அதிகரிக்கும். தேர்தல் முடிவு வெளியாகும் போது அதை நீங்கள் பார்ப்பீர்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    • அமித்ஷாவின் பேச்சை திரித்து தவறான வீடியோக்களை வெளியிட்டிருப்பது தெரியவந்தது.
    • மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. வரும் 7-ந் தேதி 3-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பட்டியல் சாதியினர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது.

    மேலும் அந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததோடு பா.ஜனதா 400 இடங்கள் வெற்றி பெற்றால் இடஓதுக்கீடை ரத்து செய்து விடுவார்கள் என குறிப்பிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அமித்ஷாவின் பேச்சை திரித்து தவறான வீடியோக்களை வெளியிட்டிருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அமித் மாலவிகா கூறுகையில், தெலுங்கானாவில் முஸ்லீம்களுக்கான இடஓதுக்கீடு விவகாரத்தில் அமித்ஷாவின் கருத்துக்களை தவறாக சித்தரிக்கும் வகையில் வீடியோ மாற்றப்பட்டுள்ளது. காங்கிரசார் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பரப்பி வருகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் அமித்ஷாவின் வீடியோவை திருத்தி வெளியிட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோ 56 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்தது.
    • சில பயனர்கள், மெட்ரோ நிர்வாகம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.

    டெல்லி மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் கட்டுக்கடங்காத கூட்டம், இருக்கைகளுக்கு சண்டை போட்ட பயணிகள், இளம் ஜோடிகளின் அத்துமீறல் என பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்நிலையில் தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில் டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் குழு ஒன்று பாரம்பரிய பாடல்களை பாடி நடனமாடும் காட்சிகள் உள்ளது. அந்த குழுவில் 5-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். அனைவருமே பாரம்பரிய பாடல்களை பாடிய நிலையில், சிறிது நேரத்தில் அனைவரும் குழுவாக சேர்ந்து நடனமாடுகின்றனர்.

    இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ 56 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்தது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பெண்களின் பாரம்பரிய நடனத்தை பாராட்டினாலும், பொது இடங்களில் இதுபோன்ற நடனமாடுவது சரியல்ல என பதிவிட்டனர்.

    சில பயனர்கள், மெட்ரோ நிர்வாகம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.



    • டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி விலகினார்.
    • பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். டெல்லி காங்கிரஸ் உள் விவகாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபக் பதரியா தலையிடுவதாக கூறி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    தீபக் பதரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்களை கட்சியில் இருந்து நீக்கக்கோரி தொடர்ந்து அழுத்தம் வருவதால் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.

    இதற்கிடையே, அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க. பக்கம் தாவலாம் என தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், நான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப்போவது இல்லை. காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வேன். கட்சி தொண்டர்களுடன் தொடர்பில் இருப்பேன். கட்சியின் கொள்கைகளை நிலைநாட்டவே இந்த முடிவை எடுத்துள்ளேன். பாராளுமன்ற தேர்தலில் சீட் ஒதுக்குவதில் உள்ள பிரச்சனை காரணம் இல்லை என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரு கட்சியின் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பது இதுவே முதல் முறை
    • பாஜக சர்வாதிகாரம் செய்தால், அது சரியானது. ஆனால் யாராவது அதைப் பற்றி பேசினால், அது தவறு. இது ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதைக் காட்டுகிறது

    ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு நிமிட தேர்தல் பிரச்சாரப் பாடலை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ திலீப் பாண்டே எழுதி பாடியுள்ளார். இந்த பாடல் ஏப்ரல் 25-ம் தேதி கட்சி தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி இன்று தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "ஒரு கட்சியின் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பது இதுவே முதல் முறை. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, இந்த பாடல் ஆளும் கட்சியையும் விசாரணை நிறுவனங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

    எங்கள் கட்சியின் பிரசார பாடலில் பாஜகவை குறிப்பிடவில்லை மற்றும் தேர்தல் நடத்தை நடத்தை விதிகளை மீறவில்லை. இதில் உண்மை வீடியோக்கள் மற்றும் சம்பவங்கள் உள்ளன.

    பாஜக சர்வாதிகாரம் செய்தால், அது சரியானது. ஆனால் யாராவது அதைப் பற்றி பேசினால், அது தவறு. இது ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதைக் காட்டுகிறது.

    பாஜக செய்த தேர்தல் விதிமுறை மீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. பாஜக செய்த தேர்தல் விதிமுறை மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை நிறுத்த வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார்.

    ஆம் ஆத்மின் குற்றசாட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "விதிகளை மீறி இருந்ததால் பரப்புரை பாடலில் சில வரிகளை மட்டுமே மாற்ற பரிந்துரைத்தோம். கெஜ்ரிவால் சிறையில் இருப்பது போன்று இடம்பெற்றுள்ள வரிகள் நீதித்துறையை அவதூறு செய்வதாக உள்ளது. விதிகளுக்கு முரணான இந்த சொற்கள் விளம்பரத்தில் பலமுறை வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

    • ஐ.பி.எல். போட்டியில் டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோதின.
    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யார்-யார்? இடம் பெறுவார்கள்? என்று முன்னாள் வீரர்கள் நாள் தோறும் கணித்து வருகிறார்கள்.

    ஐ.பி.எல். போட்டியில் வீரர்களின் செயல்பாடு குறித்து அணி தேர்வு இருக்கும் என்று கருதப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியில் டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோதின.

    இந்தப் போட்டிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா-தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் 20 ஓவர் உலக கோப்பை குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று தகவல் வெளியானது.

    அதன்படி ரோகித் சர்மாவும் ரோகித் சர்மாவும் அகர்கரும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சதிப்புக்கு பிறகு வீரர்களின் தேர்வு இறுதி செய்யப்படும். நாளை அல்லது நாளை மறுநாள் இந்திய அணி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் வீராட் கோலி இடம் பெறுவார். அவர் தொடக்க வீரராக ஆடுவாரா? அல்லது 3-வது வீரராக ஆடுவாரா? என தெரியவில்லை.

    சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள். ரிங்குசிங், ஷிவம் துபே, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

    இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகி ஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகியவை உள்ளன. அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது. 9-ந் தேதி பாகிஸ்தானுடனும், 12-ந் தேதி அமெரிக் காவுடனும் 15-ந் தேதி கனடாவுடனும் மோதுகிறது.

    • ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா.
    • டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 4ல் ஆம் ஆத்மி, 3ல் காங்கிரஸ் போட்டி.

    டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் மேலிடம் தங்களின் கருத்துக்களை கேட்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 4ல் ஆம் ஆத்மி, 3ல் காங்கிரஸ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

    • பயணத்தில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • புதன்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    3 நாட்கள் பயணமாக டெல்லி சென்று உள்ள அவர் வருகிற செவ்வாய்க்கிழமை சென்னை திரும்புவார் என்று ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகவும் அவரது பயணத்தில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை வந்த பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி புதன்கிழமை அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    • நாம் சர்வாதிகாரத்தை நீக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வாக்களிக்க வேண்டும்.
    • பள்ளிக்கூடங்களை கட்டினார், இலவச மின்சாரம் வழங்கினார். இதனால் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால். இவரது மனைவி சுனிதா. கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி, பஞ்சாப், அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என அக்கட்சியின் தலைவர் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று கிழக்கு டெல்லி தொகுதி வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோ நடத்தினர்.

    அப்போது அவர் கூறுகையில் "நாம் சர்வாதிகாரத்தை நீக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வாக்களிக்க வேண்டும். உங்களடைய முதல்வர் (அரவிந்த கெஜ்ரிவால்) சிங்கம். அவரை உடைந்து போக செய்ய முடியாது. அவர் யாருக்கும் தலைகுனியமாட்டார். கெஜ்ரிவால் பள்ளிக்கூடங்களை கட்டினார். இலவச மின்சாரம் வழங்கினார். மொகல்லா கிளினிக் தொடங்கினார். இதனால் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்" என்றார்.

    நாளை மேற்கு டெல்லி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரோடு ஷோ நடத்துகிறார்.

    • வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரிசியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி.
    • மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2000 மெட்ரிக டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் அனுமதி.

    2023-24-ல் வெங்காயத்தின் உற்பத்தி அதற்கு முந்தைய காலக்கட்டத்தை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாலும், உள்நாட்டில் தேவை அதிகரித்ததாலும், வெளிநாட்டிலும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது.

    இந்த நிலையில் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரிசியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2000 மெட்ரிக டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் அனுமதி அளித்துள்ளது.

    இந்த வெங்காயம் முற்றிலும் ஏற்றமதியைச் சார்ந்தது. வழக்கமான வெங்காயத்தை விட இந்த வெங்காயம் அறுவடை செய்வதற்கு அதிக செலவாகும்.

    • வேட்பாளர்கள் பெயர் என்னிடம் வரும்போது, அதற்கான அறிவிப்பாணையில் கையெழுத்திடுவேன்.
    • அதன்பின் அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கான இன்னும் சில நாட்கள் காத்திருங்கள்.

    காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு இன்னும் வேட்பார்ளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது. இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

    அப்போது அமேதி, ரேபரேலி தொகுதியில் யாரை நிறுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் எனத் தகவல் வெளியானது. மேலும், இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதி வேட்பாளர்களுக்காக இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆலோசனை முடிந்து வேட்பாளர்கள் பெயர் என்னிடம் வரும்போது, அதற்கான அறிவிப்பாணையில் கையெழுத்திடுவேன். அதன்பின் அறிவிப்பு வெளியிடப்படும்

    ராகுல் காந்தி தொகுதி மாறியதாக அடிக்கடி கூறப்படுகிறது. வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் எத்தனை முறை தொகுதிகள் மாறினார்கள் என்பதை என்னிடம் தெரிவிக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி பாய்ந்தோடும் ஆறு போன்றது. கட்சியில் வளர்ச்சி பெற்று பின்னர் வெளியேறிய சிலரால் பாதிக்கப்படாது.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    ×