என் மலர்tooltip icon

    செய்திகள்

    • நிதின்நபின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார்.
    • புதுச்சேரி பா.ஜ.க சார்பில் சக்தி கேந்திர சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

    பா.ஜனதாவின் புதிய தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதின்நபின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார். அவருக்கு புதுச்சேரி எல்லையான கோரிமேட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அவர் பாரதியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அக்கார்டு ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் புதுச்சேரி பா.ஜ.க சார்பில் சக்தி கேந்திர சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க-வினர் கட்சி மற்றும் நாட்டின் நலனுக்காக ஓயாமல் உழைத்து வருவது மிகப்பெரிய பலம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் பா.ஜ.க வலிமையான வளர்ச்சியடைந்து வருகிறது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து உற்சாகத்துடன் செயல்பட்டு தேர்தலில் நமது கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற செய்ய வேண்டும்.

    அதற்காக சக்தி கேந்திர நிர்வாகிகள், பூத் தலைவர்கள் களத்தில் இறங்கி வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    நாடு முழுவதும் ஒரு லட்சம் புதிய இளைஞர்களை அடையாளம் கண்டு, நாடாளுமன்றம் முதல் உள்ளாட்சி வரை தேர்தல்களில் போட்டியிடும் வகையில் பிரதமர் அறிவித் துள்ள திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரி பா.ஜ.க தலைவர் வி.பி.ராமலிங்கம், செல்வகணபதி எம்.பி.மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து முதலியார் பேட்டை 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பா.ஜ.க வல்லுனர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் பா. ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின்நபின் கலந்து கொண்டு பேசினார்.

    நேற்று இரவு புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் தங்கிய பா.ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்று தியானம் செய்தார். அதனை தொடர்ந்து பா.ஜ.க கட்சியின் தலைமை அலுவலகத்தில் மணவெளி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், கவர்னர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

    தொடர்ந்து கணபதி செட்டிகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிகழ்ச்சிகளில் அவருடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட வியாவும் பங்கேற்றார்.

    • நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • கடந்த 2011ம் ஆண்டு ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆர்.ஓ.வி. நீர்மூழ்கி கலத்தை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பாசனத்திற்கு போக வைகை அணைக்கு செல்லும் நீர் மூலம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.

    999 ஆண்டு கால குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணையின் மேலாண்மை, நீர் பயன்படுத்தும் உரிமை, நீர்திறப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை தமிழக பொதுப்பணித்துறை செய்து வருகிறது.

    இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என கேரள அரசு மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் வதந்தியை கிளப்பி வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பேபி அணையை பலப்படுத்திவிட்டு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு தமிழக அதிகாரிகள் பராமரிப்பு பணி மேற்கொள்ள தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மேலும் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    கடந்த 2011ம் ஆண்டு ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆர்.ஓ.வி. நீர்மூழ்கி கலத்தை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அணை பலமாக உள்ளது. அச்சப்பட தேவையில்லை என உத்தரவிட்டு பல்வேறு வழிகளை வழங்கி வருகின்றனர். கடந்த நவம்பர் 10ம் தேதி அணையை மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு செய்தது. பின்னர் மதுரையில் நடத்திய ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் நவீன ஆர்.ஓ.வி. மூலம் ஆய்வு நடத்த இரு மாநில அதிகாரிகள் ஒப்புதலோடு முடிவு எடுக்கப்பட்டது.

    தரைக்கு மேல் இருந்து இயக்கப்படும் இந்த கருவி மூலம் அணைக்கு அடியில் நீரில் மூழ்கியுள்ள சுவர்கள், தடுப்புகள், கழிவுநீர் வெளியேற்றம் ஆகியவற்றை ஆராயலாம். மேலும் ஆழமான அபாயகரமான பகுதிகளில் கருவிகள் பொருத்தப்பட்ட காமிராக்கள் மூலம் முப்பரிமாண வீடியோ மற்றும் படங்களை பதிவு செய்து கொள்ளலாம. 14 ஆண்டுகளுக்கு பின்னர் 2வது முறையாக ஆய்வு நடத்துவதற்காக ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லியில் உள்ள மத்திய மண் மற்றும் பொருட்கள் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆர்.ஓ.வி. நீர் மூழ்கி கலம் வரவழைக்கப்பட்டு தமிழக பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் ஆய்வுக்காக சுமார் 7 பேர் கொண்ட வல்லுனர் குழுவுடன் துறை அதிகாரிகள், இரு மாநில அதிகாரிகள் முன்னிலையில் நாளை முதல் அணையின் 250 மீட்டர் நீருக்கு அடியில் அணையின் உட்புறம், முன்புறப்பகுதிகளில் ஆய்வு நடைபெற உள்ளது. தினசரி 20 மீட்டர் மட்டுமே ஆய்வு செய்ய முடியும் என்பதால் 12 நாட்கள் வரை ஆய்வு நடபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னையில் கடற்கரை-செங்கல்பட்டு, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த ரெயில் சேவையை பயன்படுத்துகிறார்கள்.

    போக்குவரத்து சேவையில் புறநகர் மின்சார ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புறநகர் மின்சார ரெயில்களில் கட்டணம் மிகவும் குறைவு என்பதாலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைவாக பயணம் செய்யலாம் என்பதாலும் அதில் பயணிப்பதை பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

    சென்னையில் கடற்கரை-செங்கல்பட்டு, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த ரெயில் சேவையை பயன்படுத்துகிறார்கள்.

    தற்போது ரெயில் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை. வழக்கமாக உள்ள அதே கட்டணமே நீடிக்கிறது. இதேபோல் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்படவில்லை என்று ரெயில்வே துறை அறிவித்து உள்ளது.

    • சாலையில் சென்றவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொண்டே சென்றனர்.
    • தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் மேற்கே உள்ள பெக்கர் ஸ்டால் பகுதியில் ஒரு மதுபான விடுதியில் இன்று அதிகாலை ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

    அப்போது அங்கு மர்ம நபர்கள் துப்பாக்கிகளுடன் வந்தனர். 2 வாகனங்களில் வந்த அக்கும்பல் மதுபான விடுதி முன்பு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

    பின்னர் அக்கும்பல் தப்பி சென்றபோது சாலையில் சென்றவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொண்டே சென்றனர்.

    இந்த தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்கிடையே 12 மர்ம நபர்கள் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட மதுபான விடுதி சட்ட விரோதமாக நடந்து வந்ததாக தெரிகிறது.

    கடந்த 6-ந்தேதி தலை நகர் பிரிட்டோரியாவுக்கு அருகிலுள்ள ஒரு தங்குமிடத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்து 12 பேரை சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய அரசு நிதி வழங்காத நிலையில், மேற்கு வங்க அரசு தனது சொந்த நிதியைக் கொண்டு 2024-இல் 'கர்மஸ்ரீ' திட்டத்தைத் தொடங்கியது.
    • மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியில் மக்களுக்கு வேலை வழங்குவோம். நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல மம்தா பேசினார்.

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில அரசின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான 'கர்மஸ்ரீ' க்கு மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்டப்போவதாக அறிவித்துள்ளார்.

    மத்திய அரசு தனது தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு, அதற்கு "விபி ஜி ராம் ஜி" எனப் பெயர் மாற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மம்தா பானர்ஜி இந்த முடிவை எடுத்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய மம்தா, "தேசியத் தலைவர்களுக்குச் சில கட்சிகள் மரியாதை செலுத்தத் தவறினால், நாங்கள் அதைச் செய்வோம். தேசத் தந்தையின் பெயரையே நீக்குவது மிகுந்த அவமானமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

    முன்னதாக முறைகேடுகளைக் காரணம் காட்டி 2022-ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்திற்கான ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் சுமார் 58 லட்சம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 6,919 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.

    மத்திய அரசு நிதி வழங்காத நிலையில், மேற்கு வங்க அரசு தனது சொந்த நிதியைக் கொண்டு 2024-இல் 'கர்மஸ்ரீ' திட்டத்தைத் தொடங்கியது.

    இது கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 50 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.

    மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியில் மக்களுக்கு வேலை வழங்குவோம். நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல மம்தா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.    

    இதற்கிடையே நேற்று மேற்கு வங்கம் வந்த பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் காட்டு ராஜ்ஜியம் விரைவில் அகற்றப்படும் என பொதுக்கூட்டத்தில் சூளுரைத்துச் சென்றார். 

    • டெல்லியில் இன்று காற்றின் தரம் 386 என்ற அளவில் ‘மிகவும் மோசமான’ பிரிவில் இருந்தது.
    • பனிமூட்டம் காரணமாக வடக்கு ரெயில்வேயால் இயக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்களும் தாமதமாகியுள்ளன.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு கடுமையாக உள்ளது. மேலும் கடும் பனிமூட்டமும் நிலவி வருகிறது. இதனால் டெல்லியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் இன்று அடர்ந்த பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் காலை 10 மணிக்கு டெல்லி விமான நிலையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானச் செயல்பாடுகள் இயல்பு நிலையில் தொடர்கின்றன என்று தெரிவித்தது.

    அதேவேளையில் புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவணைகளுக்கு அந்தந்த விமான நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தியது. டெல்லியில் இன்று காலை காற்றின் தரம் 386 என்ற அளவில் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்தது. நகரத்தில் உள்ள 16 கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவாகியுள்ளது, மீதமுள்ள நிலையங்களில் மிகவும் மோசமான அளவில் பதிவாகியுள்ளது.

    மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக வடக்கு ரெயில்வேயால் இயக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்களும் தாமதமாகியுள்ளன.

    • துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட லஞ்சம் பெற்றார்.
    • லஞ்சப் பணம் 3 லட்சம் ரூபாயுடன், கணக்கில் வராத 2.23 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி ஒருவர், துபாயைச் சேர்ந்த நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாதுகாப்பு அமைச்சகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதி பிரிவில் துணை திட்ட அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் லெப்டினன்ட் கர்னல் தீபக் குமார் சர்மா.

    துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட, அந்த நிறுவனத்தின் சார்பாக வினோத் குமார் என்பவர் மூலம் தீபக் குமார் சர்மாவுக்கு 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது.

    கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி இந்த லஞ்சப் பணத்தைப் பெற்றபோது, தீபக் குமார் சர்மா மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரையும் சிபிஐ கைது செய்தது.

    இந்த ஊழல் சதியில் ஈடுபட்டதாக தீபக் குமார் சர்மாவின் மனைவியும், ராணுவ அதிகாரியுமான கர்னல் காஜல் பாலி மற்றும் துபாய் நிறுவனத்தின் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

    டெல்லியில் உள்ள தீபக் குமார் சர்மாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், லஞ்சப் பணம் 3 லட்சம் ரூபாயுடன், கணக்கில் வராத 2.23 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

    பெங்களூரு, ஜம்மு மற்றும் டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

    • டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
    • கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தேதி ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, 215 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் தூரத்திற்கு 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    215 கி.மீ.க்கு மேல் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

    மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கி.மீ.க்கு 2 பைசா உயர்த்தப்படும்.

    500 கி.மீ தூரம் ஏசி அல்லாத பெட்டியில் பயணிக்கும் பயணிகள் கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டும்.

    உதாரணமாக சென்னையில் இருந்து மதுரை மற்றும் கோவைக்கு செல்லும் ரெயில்களில் ரூ10 கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும்.

    இதுதவிர்த்து அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் 1 கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேநேரம், 215 கி.மீ வரை பயணிக்க கட்டண உயர்வு இல்லை. மேலும் புறநகர் ரெயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வு மூலம் ரெயில்வே ரூ.600 கோடி கூடுதல் வருவாயை ஈட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே ஊழியர் ஊதியச் செலவு ரூ. 1,15,000 கோடியாகவும், ஓய்வூதியச் செலவு ரூ. 60,000 கோடியாகவும் அதிகரித்துள்ளதால் 2024-25 நிதியாண்டில் மொத்த ரெயில்வே துறையின் செலவு ரூ. 2,63,000 கோடியாக உயர்ந்துள்ளது.

    எனவே இந்த செலவுகளை சமாளிக்க பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது.

    முன்னதாக கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தேதி ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக ரெயில்வே கட்டணங்களை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.        

    • நேற்று முதல் 2 நாட்களுக்கு பிரம்மபுத்திரா நதியில் படகு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • மொத்தம் 45 நிமிடம் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று காலை மேற்கு வங்காளம் சென்றார். பின்னர் அங்கிருந்து அசாமிற்கு பிற்பகலில் சென்றார்.

    கவுகாத்தியில் ரூ.4000 கோடியில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் வாகன பேரணி நடத்தி பா.ஜ.க. தலைமை அலுவலகம் சென்றார்.

    2-வது நாளான இன்று பிரதமர் மோடி அசாம் போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதை தொடர்ந்து பிரம்மபுத்திரா நதியில் சொகுசு கப்பலில் பிரதமர் மோடி மாணவர்களுடன் உரையாற்றுகிறார்.

    3 அடுக்குகள் கொண்ட எம்.வி.சராய்தேவ்-2 கப்பலில் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். அசாமில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 மாணவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். மொத்தம் 45 நிமிடம் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதையொட்டி அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதலே பாதுகாப்புபடை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் நேற்று முதல் 2 நாட்களுக்கு பிரம்மபுத்திரா நதியில் படகு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மாணவர்களின் கலந்துரையாடலுக்கு பிறகு திப்ருகர், நாம்ரூப் ஆகிய பகுதிகளில் பிரதமர் மோடி ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான அம்மோனியா-யூரியா உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    • டெல்லி பெல்லி படத்தை இயக்கியவர் பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் வீர் தாஸ்.
    • அமீர் கான் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வீர் தாஸ், 'ஹேப்பி படேல்: கதர்னக் ஜசூஸ்' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

    தமிழில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி நடிப்பில் வெளியான 'சேட்டை' படத்தை யாராலும் மறந்துவிட முடியாது. இது இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த 'டெல்லி பெல்லி' படத்தின் ரிமேக் ஆகும்.

    இந்த டெல்லி பெல்லி படத்தில் நடித்தவர் பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் வீர் தாஸ். இந்நிலையில் அமீர் கான் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வீர் தாஸ், 'ஹேப்பி படேல்: கதர்னக் ஜசூஸ்' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

    வீர் தாஸுடன், மோனா சிங், மிதிலா பால்கர் மற்றும் ஷரிப் ஹாஷ்மி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

    மேலும் இதில் டெல்லி பெல்லியல் நடித்த நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    எனவே நீண்ட வருடம் கழித்து டெல்லி பெல்லி கூட்டணியில் உருவாகி உள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

    இந்த படம் வரும் ஜனவரி 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

    இதில் அமீர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டெல்லி பெல்லியை போல நகைச்சுவை மற்றும் அதிரடி காட்சிகளுடன் ஹேப்பி படேல் டிரெய்லர் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.  

    • வழக்கு ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை பொதுவெளியில் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே காணாமல் போனது.
    • அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.

    பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை பொதுவெளியில் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, அதில் இருந்த 16 முக்கியமான கோப்புகள் மாயமாகியுள்ளன.

    இதில் டொனால்ட் டிரம்ப் தொடர்பான புகைப்படங்களும் அடங்கும் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதித்துறையின் இணையதளத்தில் எப்ஸ்டீன் தொடர்பான ஆயிரக்கணக்கான பக்கங்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டன. இதில் டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இடம்பெற்றிருந்தனர்.

    ஆனால், சனிக்கிழமை காலையில் பார்த்தபோது, அதில் குறைந்தது புகைப்படங்கள் உள்ளிட்ட 16 கோப்புகள் நீக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

    மாயமான கோப்புகளில் ஒன்று, ஜெப்ரி எப்ஸ்டீன், டொனால்ட் டிரம்ப், மெலனியா டிரம்ப் மற்றும் கிஸ்லேன் மேக்ஸ்வெல் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படமாகும்

    நிர்வாணப் பெண்களின் படங்கள் மற்றும் எப்ஸ்டீனின் இடத்தில் எடுக்கப்பட்ட சில ரகசிய புகைப்படங்களும் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

    இந்தக் கோப்புகள் எதற்காக நீக்கப்பட்டன அல்லது தவறுதலாக நீக்கப்பட்டனவா என்பது குறித்து அமெரிக்க நீதித்துறை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.

    இன்னும் என்னவெல்லாம் மறைக்கப்படுகின்றன? அமெரிக்க மக்களுக்கு வெளிப்படைத்தன்மை தேவை என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    யார் இந்த எப்ஸ்டீன்?

    ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.

    இதையும் படியுங்கள்: கம்போடியா உடனான மோதல் எதிரொலி: 1,000 பள்ளிகளை மூடியது தாய்லாந்து

    2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.

    2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.

    ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.

    'எப்ஸ்டீன் கோப்புகள்'

    ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், அவருடைய தொலைபேசி அழைப்பு பதிவுகள், விமானப் பயணப் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவருடன் தொடர்பு கொண்ட பிரபலங்களின் பட்டியல் ஆகியவை 'எப்ஸ்டீன் கோப்புகள்' என அழைக்கப்படுகின்றன.

    • அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறைக்குள் சென்ற பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
    • என்னிடம் தவறாக நடந்து கொண்ட டாக்டர் தற்போது அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து வருகிறார்.

    சென்னை:

    சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-

    சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. பிசியோதெரபி படித்து வருகிறார். 4-ம் ஆண்டு மாணவியான இவர் பெரம்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார்.

    அந்த ஆஸ்பத்திரியில் ரூ.4 ஆயிரம் சம்பளத்துடன் பயிற்சி பெற்ற மாணவி அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரான டாக்டர் ஒருவர் மீதுதான் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.

    இது தொடர்பாக மாணவி அளித்துள்ள புகாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரி உரிமையாளரான டாக்டர் எனக்கு காலை 6.30 மணிக்கு போன் செய்து நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. நேரில் வா என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து பகல் 1 மணி அளவில் நான் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். இதன் பிறகு டாக்டர் தனது காரில் பெண் ஒருவருக்கு மசாஜ் செய்ய வேண்டி உள்ளது என என்னிடம் தெரிவித்தார். இதை நம்பி நான் அவருடன் கொளத்தூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு காரில் சென்றேன்.

    அப்போது டாக்டர் என்னிடம் நீ, காபி, டீ எதுவும் சாப்பிடுகிறாயா? என்று கேட்டார். நான் அந்த பழக்கம் இல்லை என்று கூறினேன். இதையடுத்து காரில் இருந்த குளிர்பானத்தை எனக்கு கொடுத்தார். அதனை குடித்ததும் நான் மயக்கம் ஆகிவிட்டேன்.

    அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறைக்குள் சென்ற பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நீண்ட நேரம் கழித்து கண்விழித்து பார்த்தபோது எனது உடலில் ஆடைகள் எதுவும் இல்லை.

    என்னை காரில் அழைத்து சென்ற டாக்டரும் ஆடை எதுவும் இன்றி படுக்கையில் எனது அருகில் படுத்து இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவரை தள்ளி விட்டு விட்டு உடைகளை அணிந்துக் கொண்டு அங்கிருந்து அச்சத்துடன் வீட்டுக்கு வந்து விட்டேன். பயந்து போய் யாரிடமும் சொல்லாமல் இருந்தேன்.

    பின்னர் இதுபற்றி எனது அக்காவிடம் கூறினேன். இதற்கு பிறகு அவரும், எனது உறவினர்களும் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரிடமும், அவரது மனைவியிடமும் இதுபற்றி கேட்டு சண்டை போட்டனர்.

    என்னிடம் தவறாக நடந்து கொண்ட டாக்டர் தற்போது அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து வருகிறார். எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னுடன் தகாத உறவில் ஈடுபட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மருத்துவ மாணவி முதலில் இந்த புகார் மனுவை செம்பியம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கொளத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து மகளிர் போலீசார் மாணவி அளித்த புகார் மீது தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    மாணவி புகாரில் கூறி இருப்பது பற்றிய தகவல்கள் தொடர்பாக கூடுதல் விவரங்களையும் சேகரித்தனர். இதில் மாணவியின் பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து டாக்டர் கார்த்திகேயனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பிசியோதெரபிஸ்ட் டாக்டரான இவர் சொந்தமாக ஆஸ்பத்திரியை நடத்தி வரும் நிலையில்தான் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.

    பிசியோதெரபிஸ்ட் படித்து வந்த கொடுங்கையூர் மாணவியை அடைவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக நோயாளி ஒருவருக்கு பிசியோதெரபி செய்ய வேண்டும் என்று ஏமாற்றி மாணவியை தனது காரில் அழைத்துச் சென்றிருப்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

    இதையடுத்து கொளத்தூர் ஜெயந்தி நகர் 2-வது தெருவில் உள்ள சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாணவியை அழைத்துச் சென்ற போதுதான் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். இதற்காக கோககோலா குளிர்பானத்தை வாங்கி அதில் மயக்க மருந்தை கலந்து தயாராக வைத்திருந்து உள்ளார்.

    இதைதான் மாணவிக்கு கொடுத்து மயக்கம் அடைய செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கற்பழித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பிசியோதெரபிஸ்ட் டாக்டரான கார்த்திகேயன் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டு உள்ளது. பி.என்.எஸ். 123-குற்றம் செய்யும் நோக்கத்துடன் விஷம் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருளை சாப்பிட கொடுத்தல், பி.என்.எஸ். 63-கற்பழிப்பு, பி.என்.எஸ். 64-கற்பழிப்புக்கான தண்டனையை உறுதி செய்யும் பிரிவு ஆகிய 3 சட்டப் பிரிவுகளின் கீழ் டாக்டர் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த பாலியல் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×