என் மலர்tooltip icon

    செய்திகள்

    • பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றார்.
    • 29 நாடுகள் அவருக்கு சர்வதேச விருதுகளை அளித்து கவுரவப்படுத்தி உள்ளன.

    புதுடெல்லி:

    அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, புளோரிடாவில் அதிபர் டிரம்பைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பின் போது அதிபர் டிரம்ப், தனது இரண்டாவது பதவி காலத்தின் முதல் ஆண்டில் மட்டும் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் என பெருமையுடன் பேசினார்.

    நீண்டகால போர்களை முடிவுக்கு கொண்டுவந்த தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ராஜதந்திரமாக இத்தனை போர்களை நிறுத்தியும் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

    ஆனால், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கோ வெளிநாடுகள் அனைத்தும் தங்களின் உயரிய விருதுகளை வழங்கி கவுரவித்து வருகின்றன.

    பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து அவருக்கு பல நாடுகள் சர்வதேச விருதுகளை அளித்து கவுரவப்படுத்தி உள்ளன. இந்த ஆண்டு மட்டும் 10 நாடுகள் தங்களின் உயரிய விருதுகளை வழங்கியுள்ளன.

    இதுவரை 29 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். அதன் விவரம் வருமாறு:


    2016:

    ஏப்ரல் 3: சவுதி அரேபியா - ஆர்டர் ஆஃப் அப்துல் அஜீஸ் அல் சவுத்

    ஜூன் 4: ஆப்கானிஸ்தான் - ஸ்டேட் ஆர்டர் ஆப் காஜி அமீர் அமானுல்லா கான் விருது.

    2018, பிப்ரவரி 10: பாலஸ்தீனம் - கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன விருது

    2019

    ஜூன் 8: மாலத்தீவு - ஆர்டர் ஆஃப் தி டிஸ்டிங்குவிஷ்ட் ரூல் ஆஃப் நிஷான் இசுதீன் விருது.

    ஆகஸ்ட் 24: ஐக்கிய அரபு அமீரகம் - ஆர்டர் ஆஃப் சயீத் விருது.

    ஆகஸ்ட் 24: பஹ்ரைன் - கிங் ஹமத் ஆர்டர் ஆஃப் தி ரினைசன்ஸ் விருது.

    2020, டிசம்பர் 21: அமெரிக்கா - லீஜியன் ஆப் தி மெரிட் விருது.

    2023:

    மே 22: பிஜி - கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி விருது

    மே 22: பப்புவா நியூ கினியா - கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோ விருது.

    மே 22: பலாவ் - பலாவ் குடியரசு எபகல் விருது.

    ஜூன் 25: எகிப்து - ஆர்டர் ஆப் தி நைல் விருது.

    ஜூலை 14: பிரான்ஸ் - கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் விருது.

    ஆகஸ்ட் 25: கிரீஸ் - தி கிராண்ட் கிராஸ் ஆப் ஆர்டர் ஆப் ஹானர் விருது.

    2024:

    மார்ச் 22: பூடான் - ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் கியால்போ விருது.

    ஜூலை 9: ரஷியா - ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருது.

    நவம்பர் 17: நைஜீரியா - கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் விருது.

    நவம்பர் 20: டொமினிகா -டொமினிகோ அவார்ட் ஆஃப் ஹானர் விருது.

    நவம்பர் 20: கயானா - ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது.

    டிசம்பர் 22: குவைத் - தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது.


    2025:

    மார்ச் 5: பார்படாஸ் - ஹானரி ஆஃப் பிரீடம் விருது.

    மார்ச் 11: மொரீஷியஸ் - ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் மற்றும் கீ ஆஃப் தி கிராண்ட் கமாண்டர் விருது.

    ஏப்ரல் 5: இலங்கை - மித்ர விபூஷணயா விருது.

    ஜூன் 16: சைப்ரஸ் - கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகாரியோஸ் III விருது.

    ஜூலை 2: கானா - தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா விருது.

    ஜூலை 4: டிரினிடாட் மற்றும் டொபாகோ - தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் அண்ட் டொபாகோ விருது

    ஜூலை 8: பிரேசில் - தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ் விருது.

    ஜூலை 9: நமீபியா - ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஏன்சியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸ் விருது.

    டிசம்பர் 16 : எத்தியோப்பியா - கிரேட் ஹானர் ஆப் எத்தியோப்பியா விருது

    டிசம்பர் 18 : ஓமன் - தி ஃப்ர்ஸ்ட் கிளாஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஓமன் விருது.

    • புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமைய வேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • நடிகர் அஜித் குமார் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன.

    புதிதாக பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாகவும், ஏற்றமிகு வாழ்க்கையை அளிப்பதாகவும் அமைய வேண்டும் என அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் திருப்பூர் அருகிலுள்ள வெள்ளகோயில் அருகே கொங்குநாடு ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மேலும், அஜித் குமார் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், புத்தாண்டு அனைவருக்கும் வளமான ஆண்டாகவும், உங்கள் வாழ்க்கை அழகானதாகவும் அமைய வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • 2.22 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
    • இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, ரேசன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முடிவு செய்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுப்பதற்கான டோக்கன் வழங்கும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ. 248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 1 முழு நீள கரும்பு கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    2.22 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சுமார் 317-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பல்வேறு என்கவுண்டர்களில் கொல்லப்பட்டனர்.
    • 860-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    2025 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் நக்சலிசத்திற்கு எதிரான போரில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மத்திய அரசு "2026 மார்ச் 31-க்குள் நக்சலிசம் இல்லாத பாரதம்" என்ற இலக்கை நிர்ணயித்து, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டில் மட்டும் பாதுகாப்புப் படைகள் நக்சலைட்டுகளுக்கு எதிராக மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளன. சுமார் 317-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பல்வேறு என்கவுண்டர்களில் கொல்லப்பட்டனர்.

    சுமார் 1,973-க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு பொதுவாழ்விற்குத் திரும்பியுள்ளனர். குறிப்பாக சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இது அதிகளவில் நிகழ்ந்துள்ளது.

    860-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பாகக் கருதப்பட்ட உயர்மட்டத் தலைவர்கள் இந்த ஆண்டில் வீழ்த்தப்பட்டனர்.

    மத்வி ஹித்மா: நக்சல் இயக்கத்தின் மிகவும் தேடப்பட்ட மற்றும் கொடூரமான கமாண்டர்களில் ஒருவரான இவர், நவம்பர் 2025-ல் சத்தீஸ்கர்-ஆந்திரா எல்லைப் பகுதியில் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இவர் மீது பல கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. 

    கணேஷ் உய்கே: மத்திய குழு உறுப்பினர் மற்றும் ஒடிசா மாநில பொறுப்பாளரான இவர், டிசம்பர் 2025-ல் ஒடிசாவின் கந்தமால் பகுதியில் கொல்லப்பட்டார். இவர் மீது ரூ.1.1 கோடி வெகுமதி இருந்தது. 

    கேசவ ராவ் (எ) பசவராஜ்: ஜூன் 2025-ல் மற்றொரு மூத்த தலைவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    சலபதி மற்றும் அருணா: ஜனவரி 2025-ல் சத்தீஸ்கர்- ஒடிசா எல்லையில் நடந்த தாக்குதலில் மத்திய குழு உறுப்பினர் சலபதி மற்றும் அவரது மனைவி அருணா உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். ஆப்பரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.


    சத்தீஸ்கரின் கர்ரேகுட்டா மலைப்பகுதிகளில் 21 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த வேட்டையில், 27 கடினமான நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இங்கிருந்த மிகப்பெரிய ஆயுதத் தொழிற்சாலை மற்றும் பயிற்சி முகாம்களைப் பாதுகாப்புப் படைகள் தகர்த்தன.

    நக்சல் பாதிப்பு குறைந்த மாவட்டங்கள்

    அரசின் தீவிர நடவடிக்கையால் நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 2014-ல் 126 ஆக இருந்த நக்சல் பாதிப்பு மாவட்டங்கள், 2025-ல் வெறும் 11 ஆகக் குறைந்துள்ளது. இதில் மிகத் தீவிர பாதிப்புள்ள மாவட்டங்கள் வெறும் 3 மட்டுமே மிஞ்சியுள்ளன.

    அபுஜ்மர் (Abujhmad) மற்றும் வடக்கு பஸ்தர் போன்ற பல ஆண்டுகளாக நக்சல் கோட்டைகளாக இருந்த இடங்கள் இப்போது "நக்சல் அற்ற பகுதிகள்" என அறிவிக்கப்பட்டுள்ளன.


    வெறும் ஆயுதப் போர் மட்டுமின்றி, "பேச்சுவார்த்தை - பாதுகாப்பு - ஒருங்கிணைப்பு" என்ற மும்முனை உத்தியையும் மத்திய அரசு கையாண்டது. சரணடையும் நக்சலைட்டுகளுக்கு நிதி உதவி மற்றும் வாழ்வாதாரத்தை அரசு வழங்குகிறது.

    நக்சல் பகுதிகளில் 17,500 கி.மீ சாலைகள், 5,000 மொபைல் கோபுரங்கள் மற்றும் 900-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் 2025-க்குள் நிறுவப்பட்டுள்ளன.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தபடி, 2026 மார்ச் மாதத்திற்குள் நக்சலிசம் இந்தியாவில் முழுமையாக ஒழிக்கப்படும் என்ற இலக்கை நோக்கி 2025-ம் ஆண்டின் வெற்றிகள் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன.

    • கடந்த 2025-ம் ஆண்டு நமக்கு சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருந்தது.
    • நாம் பெரிதும் நம்பியவர்களின் துரோகங்களையும், ஏமாற்றங்களையும் எதிர்கொண்டோம்.

    பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2025-ம் ஆண்டு நமக்கு சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருந்தது. நாம் பெரிதும் நம்பியவர்களின் துரோகங்களையும், ஏமாற்றங்களையும் எதிர்கொண்டோம். ஆனால், என் தாயார் அடிக்கடி சொல்வது போல, நடந்தவை யாவும் நன்மைக்கே எடுத்துக்கொண்டு நாம் முன்னேறுகிறோம். துரோகங்கள் நம்மை உடைக்கவில்லை. மாறாக நம்மை இன்னும் கூர்மையாக்கி அசைக்க முடியாத சக்தியாக மாற்றியிருக்கிறது.

    தர்மம் தாமதிக்கலாம். ஆனால் தவறாமல் ஜெயிக்கவும் செய்யும் என்ற வாக்கிற்கு இணங்க, வஞ்சகத்தின் மேகங்கள் விலகி, நீதியின் ஒளி விரைவில் பிறக்கும். 2026- ஆண்டு, துரோகத்திற்கு எதிரான உண்மையின் வெற்றியாகவும், அச்சுறுத்தலுக்கு எதிரான நம்பிக்கையின் வெற்றியாகவும் அமையும்.

    நேற்றிரவு எனது தாயார் என்னிடம் ஒரு தீர்க்கமான நம்பிக்கையை பகிர்ந்துகொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி 26 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும்' என்பதே அந்த நம்பிக்கை.

    இந்த இயக்கம் பதவி ஆசைக் கொண்டவர்களால் கட்டப்பட்டது அல்ல. ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த உண்மையான தொண்டர்களாலும், மக்களாலும் கட்டப்பட்டது. உங்கள் அன்பும், விசுவாசமுமே எங்களின் மிகப்பெரிய பலம்.

    இந்த புத்தாண்டு தமிழகத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலோடும். சேவை மனப்பான்மையோடும் 2016-ஐ பாமக-வின் பொற்காலமாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.

    தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    இவ்வாறு ஸ்ரீகாந்தி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது.

    நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்'. ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய சூரியபிரதாப் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் நடிகை அபர்சக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    ஒய்.ஜி. மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது. சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் படிப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நடிகர் கவுதம் ராம் கார்த்திக் 'ரூட்' படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார்.

    இந்த நிலையில் புத்தாண்டு தினமான நாளை காலை 11 மணிக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.

    • எங்களிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைத்து உள்ளோம்.
    • கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை சரியாக சென்று கொண்டிருக்கிறது.

    கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    முதற்கட்ட விசாரணை கரூரில் நடந்தது. விசாரணையில் த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் மற்றும் த.வெ.க. நிர்வாகிகளிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.

    அடுத்தகட்ட விசாரணைக்காக த.வெ.க. நிர்வாகிகள் புதுடெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களாக நடந்த விசாரணையில் த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சி.டி. நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் கலெக்டர் தங்கவேலு, போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானது குறித்து ஆதவ் அர்ஜூனா கூறுகையில் "எங்களிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைத்து உள்ளோம். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை சரியாக சென்று கொண்டிருக்கிறது. கரூர் சம்பவத்தில் உண்மை வெளியே வர வேண்டும். எங்கள் குடும்பத்தில் 41 பேரை இழந்துள்ளோம். உண்மைக்காக போராடி வருகிறோம்.

    அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு அறிவில்லாத துறையை கொடுக்க வேண்டும். சுகாதாரத்துறையை கொடுத்து அரசை அவமானப்படுத்த வேண்டாம்" என்றார்.

    பாலையா நடித்துள்ள பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் ஜனநாயகன் என வதந்தி பரவி வருகிறது.

    பாலையா நடித்துள்ள பகவந்த் கேசரி-யின் தமிழ் ரீமேக்தான் ஜனநாயகன் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக பகவந்த் கேசரி படத்தின் இயக்குநர் அனில் ரவிப்புடியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஜனநாயகன் விஜய் சார் படம் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். எனவே படம் வெளியாகும் வரை அப்படித் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    விஜய் சாருடைய கடைசிப் படத்தில் எனக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா என்பது படம் திரைக்கு வந்த பின்புதான் தெரியும். வாரிசு படப்பிடிப்பு தளத்தில் விஜய் சாரை சந்தித்து பேசியிருக்கிறேன். அவர் ஒரு அற்புதமான மனிதர் என்று தெரிவித்துள்ளார்.

    ஜனவரி 2-ந்தேதி ஜனநாயகன்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. அதன் மூலம் இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என தெரிகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜனநாயகன்'. கே.வி.என் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் அனிருத் இசையமைத்துள்ளார்.

    பகவந்த் கேசரியின் ரீமேக் என வதந்தி பரவி வரும் நிலையில் ஜனநாயகன் பட இயக்குநர் ஹெச். வினோத் கூறுகையில் "ஜனநாயகன் படத்திற்காக நாங்கள் 6 மாறுபட்ட வெர்சனில் கதை எழுதினோம். இந்த கதை முக்கியமாக விஜய், பாபி தியோல், மமிதா பைஜு ஆகியவரை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    படத்தை பார்த்த பின், இந்த படத்திற்கு ஏன் ஜனநாயகன் டைட்டில் வைக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்வீர்கள். விஜய் அரசியலுக்குள் நுழைந்ததில் இருந்து, கதையில் அரசியல் தொடர்பான தகவலை சேர்த்தேன். சற்று தயக்கத்துடன் தயாரிப்பாளரிடம் இந்த விசயத்தை சொன்னேன். ஆனால், அவர் மிகவும் சந்தோசம் அடைந்தார். அரசியல் தொடர்பான கருத்துகள் குறித்து உறுதியான சில ஆலோசனைகளும் வழங்கினார்.

    இது தளபதி படம். ரசிகர்கள் முதல் காட்சிக்காக காத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வரவிருக்கும் டீசர், டிரெய்லர், பாடல்கள் மற்றும் ஸ்கீரின் மூலம் படத்தின் அடையாளம் குறித்து வதந்திகளுக்கு விடை கிடைக்கும். அத்துடன மேற்கொண்டு தெளிவும் கிடைக்கும்" என்றார்.

    ஆனால், ரீமேக் குறித்து வதந்தி வருகிறதே, என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என நேரடியாக பதில் அளிக்கவில்லை.

    • காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 70,369 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சுமார் 20,000 பேர் குழந்தைகள் ஆவர்.
    • 3,000 முதல் 4,000 குழந்தைகள் தங்கள் கை அல்லது கால்களை இழந்து ஊனமுற்றுள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது.

    காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் 2025-ஆம் ஆண்டு பாலஸ்தீனியர்களுக்கு மற்றுமொரு துயரமான ஆண்டாகவே அமைந்தது.

    காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையை முன்னெடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஆண்டாகவும் இது அமைந்தது. 

    காசா போர்

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது.

    இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 250 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர். இதில் பாதி பேர் மீடகப்பட்ட நிலையில் 96 பேர் இன்னும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

    தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 26 மாதங்களாக காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 70,369 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சுமார் 20,000 பேர் குழந்தைகள் ஆவர்.  1.7 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

    சுமார் 3,000 முதல் 4,000 குழந்தைகள் தங்கள் கை அல்லது கால்களை இழந்து ஊனமுற்றுள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது.

    இனப்படுகொலை

    செப்டம்பர் 2025-ல் ஐநா விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.

    உயிரிழப்புகள், பசி மற்றும் மருத்துவத் தேவைகளைத் தடுத்தல் போன்றவை இதற்கு ஆதாரங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டன.

    மக்களைக் கொல்லுதல், கடுமையான உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துதல், வாழ்க்கைச் சூழலை அழித்தல், பிறப்புகளைத் தடுத்தல் ஆகிய 4 குற்றங்களையும் இஸ்ரேல் திட்டமிட்டு தொடர்வதால் காசாவில் இஸ்ரேல் புரிவது இனப்படுகொலையே என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    இஸ்ரேலின் தாக்குதல்கள் தற்செயலானவை அல்ல, அவை காசா மக்களின் அன்றாட வாழ்வை முடக்குவதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

    பசி, பட்டினி, பஞ்சம்:

    இஸ்ரேல் விதித்த கடுமையான தடைகளால் 2025-ல் பஞ்சம் உச்சத்தை அடைந்தது. போர் தொடங்கியதில் இருந்து 461 பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறந்துள்ளனர், இதில் பெரும்பாலான மரணங்கள் 2025-ல் நிகழ்ந்தவை.

    5 வயதிற்குட்பட்ட 54,600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட கொடும் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    அதன் அறிக்கையின்படி, காசாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொள்கின்றனர்.

    காசா நகரம் உட்பட பாலஸ்தீனத்தின் சுமார் 20 சதவீத பகுதியில் பஞ்ச நிலைமை இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

    மத்திய கிழக்கு வரலாற்றில் ஒரு பகுதியில் பஞ்சம் அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

    இடிபாடுகளாக எஞ்சிய காசா:

    அக்டோபரில் வெளியான ஐநா அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80% கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.

    மொத்த சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 373.5 டிரில்லியன்) ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளன. இவற்றை அகற்ற மட்டும் ரூ.99.6 டிரில்லியன் செலவாகும்.

    போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம். மேலும், காசாவின் வளமான நிலப்பரப்பை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அறிக்கை தெரிவித்தது.

    நவம்பரில் வெளியான ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (UNCTAD) கடந்த நவம்பரில் வெளியிட்ட அறிக்கை, காசா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப 70 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவாகும் என்றும், அதை முடிக்க பல தசாப்தங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கிறது.

    அந்த அறிக்கையில், காசாவில் நடந்த போரும், அந்தப் பிரதேசத்தின் மீது விதிக்கப்பட்ட தடைகளும் பாலஸ்தீனப் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன.

    காசாவில் தொடர்ந்து, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அழிவு, அந்தப் பகுதி வாழத் தகுதியான இடமாகவும், சமூக ரீதியாக மீண்டும் கட்டியெழுப்பப்படவும் முடியுமா என்பதில் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காசாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான, பல பரிமாண வறுமையை எதிர்கொள்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

     அடிப்படை தேவைகளுக்கு அலைமோதும் காசா மக்கள்:

    இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் காசாவின் அடிப்படை உள்கட்டமைப்பை முற்றிலுமாக முடக்கியுள்ளன.

    காசாவின் ஒரே மின் உற்பத்தி நிலையம் எரிபொருள் தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்டது. ஒட்டுமொத்த மின் விநியோக அமைப்பில் 80% சிதைக்கப்பட்டுள்ளது.

    மக்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும், சிறிய ஜெனரேட்டர்கள் மூலமும் மிகக் குறைந்த அளவே மின்சாரத்தைப் பெறுகின்றனர்.

    இஸ்ரேலின் குண்டுவீச்சுகள் கடல்நீரை நன்னீராக்கும் நிலையங்கள் மற்றும் தண்ணீர் பம்பிங் நிலையங்களை அழித்ததால் மக்கள் உப்பு மற்றும் உலோக வாடை வீசும் பாதுகாப்பற்ற தண்ணீரை அருந்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது குழந்தைகளுக்கு தோல் வியாதிகள் மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற நோய்களை உண்டாக்கி வருகிறது.

    மருத்துவமனைகள் போதிய மருந்துகள், மின்சாரம் மற்றும் உபகரணங்கள் இன்றி இயங்குகின்றன. மருத்துவர்கள் மொபைல் போன் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யும் அவலநிலை நீடிக்கிறது.

    சாலைகள் தகர்க்கப்பட்டுள்ளதால், மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மக்களைச் சென்றடைவதில் பெரும் தாமதம் ஏற்படுகிறது.

    வெனிஸ் வெளிச்சம்

    இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 வயது பாலஸ்தீன சிறுமியான ஹிந்த் ரஜப்பின் கதையைச் சொல்லும் 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' 82வது வெனிஸ் திரைப்பட விழாவில் சில்வர் லயன் விருதை வென்றது.

    பிரெஞ்சு-துனிசிய இயக்குனர் கவுதர் பென் ஹனியாவால் இயக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஹிந்த் ரஜப் உடைய வாழ்வின் இறுதித் தருணங்களை ஆவணப்படுத்தி உள்ளது.

    ஐநா பொதுச் சபையும், தனி நாடு அங்கீகாரமும்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் கடந்த செப்டம்பரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாலஸ்தீன பிரச்சனை முதன்மையாக விவாதிக்கப்பட்டது.

    "தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு நாம் வழங்கும் பரிசு அல்ல, மாறாக அது அவர்களின் உரிமை" என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.

    இந்த ஐநா பொதுச்சபை கூடுவதற்கு முன்னதாக, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா,போர்ச்சுகல் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தன.

    ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் வைத்து, பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க், மால்டா, மொனாக்கோ, அன்டோரா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தன.

    இதன் மூலம், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்தது. இதை இஸ்ரேலும், அமெரிக்காவும் கடுமையாக எதிர்த்தது.

    டிரம்ப் அமைதி திட்டமும், கண்துடைப்பு போர் நிறுத்தமும்:

    அக்டோபர் 10, 2025 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் காசாவில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.

    காசாவில் ஒரு தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட அரசாங்கத்தை அமைப்பது, இஸ்ரேலியப் படைகளுக்குப் பதிலாக சர்வதேச அமைதிப் படையை நிலைநிறுத்துவது இதில் அடங்கும்.

    மேலும், ஒப்பந்தப்படி, டிசம்பர் 9-க்குள், ஹமாஸிடம் எஞ்சியிருந்த இஸ்ரேல் பணய கைதிகள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டனர். பதிலாக, இஸ்ரேல் சிறையிலிருந்த பாலஸ்தீனியர்களை விடுவித்தது.

    போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும், இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை.

    தீவிரவாதிகளைத் தாக்குகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், நவம்பர் 30 வரை மட்டும் 352 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

    2025-ஆம் ஆண்டு முடிவடையும் நிலையிலும், காசா மக்களின் துயரமும் கண்ணீரும் முடிவுக்கு வந்தபாடில்லை.  இதற்கிடையே 2026 ஜனவரி 1-ந்தேதி முதல் காசாவில் பல உதவி அமைப்புகளின் செயல்பாடுகளை நிறுத்தப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 

    • வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டனர்.
    • முகவரி மாறியவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் ஆவார்கள்.

    நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை சீர் செய்ய சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பீகாரில் தொடங்கிய இந்த பணி, 2-ம் கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா, குஜராத், அசாம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில், இந்த தீவிர திருத்தப்பணி மிகவும் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

    இந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியின் முதல் கட்டமாக வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் கொடுத்து பூர்த்தி செய்து பெறப்பட்டன. கடந்த மாதம் 4-ந்தேதி தொடங்கிய இந்த பணி, கடந்த 14-ந்தேதி முடிவடைந்தது. இந்த பணியின் அடிப்படையில் 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. அதன்படி அக்டோபர் மாதத்தில் இருந்த 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 என்ற வாக்காளர் எண்ணிக்கை, வரைவு பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 பேர் மட்டுமே இடம் பெற்றனர்.

    அதாவது மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டனர். அதில் இறந்தவர்கள் 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர். முகவரி மாறியவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருந்தவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் ஆகும்.

    இந்த வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயரை சேர்க்க படிவம் 6 மற்றும் உறுதிமொழி சான்றிதழ் கொடுத்து பெயர் சேர்த்து கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த பணி அடுத்த மாதம் (ஜனவரி) 18-ந்தேதி வரை நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக பெறப்படும் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 அல்லது 19-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7,35,191 பேர் விண்ணப்பித்துள்ளனர். வேட்பாளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க 9505 பேர் விண்ணப்பத்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளனர்.

    • அணிவகுப்பில் இரண்டு பாக்ட்ரியன் ஒட்டகங்கள், நான்கு ஜான்ஸ்கர் குதிரைகள், நான்கு வேட்டையாடும் பறவைகள், பத்து இந்திய இன ராணுவ நாய்கள் கலந்துகொள்ளும்
    • மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடைபெறும்.

    மத்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் ஆண்டுதோறும் சுதந்திர குடியரசு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, மத்திய ஆயுதப் படைகள், மாநில படைகள், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் உள்ளிட்ட அணிவகுப்புகள் நடைபெறும். 

    இந்த நிலையில், வருகின்ற ஜன. 26 ஆம் தேதி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பில், இந்திய ராணுவத்தின் மறுசீரமைப்பு மற்றும் கால்நடைப் படைப் பிரிவைச் சேர்ந்த குதிரைகள், ஒட்டகங்கள், பறவைகள், மோப்ப நாய்கள் கலந்துகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    அணிவகுப்பில் இரண்டு பாக்ட்ரியன் ஒட்டகங்கள், நான்கு ஜான்ஸ்கர் குதிரைகள், நான்கு வேட்டையாடும் பறவைகள், பத்து இந்திய இன ராணுவ நாய்கள், அத்துடன் ஏற்கனவே சேவையில் உள்ள ஆறு வழக்கமான ராணுவ நாய்களும் இடம்பெறும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

    தற்போது தில்லி செங்கோட்டைப் பகுதியில் நடைபெற்று வரும் குடியரசு நாள் ஒத்திகை நிகழ்வில் இந்த விலங்குகளும், பறவைகளும் கலந்துகொண்ட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

    • அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட கடந்த 15-ந்தேதி முதல் விருப்பமனு விநியோகம்.
    • இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் சுமார் 9,500 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் தேர்தல் கூட்டணி ஜனவரி மாதத்தில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம்.

    அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் அதிமுக விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தருமாறு கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்று 31-ந்தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் அப்படிவங்களை வழங்கலாம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி விருப்ப மனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. மொத்தம் சுமார் 9,500 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர். விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்க்காணல் விரைவில் தொடங்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×