என் மலர்
செய்திகள்
- பெர்குசன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
- முதல் குழந்தை பிறக்கும்போது மனைவி அருகே இருக்க முடிவு செய்து நாடு திரும்புகிறார்.
டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் இடம் பிடித்துள்ளார். இவர் இன்று சொந்த நாடு திரும்புகிறார் என்ற அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
பெர்குசனின் மனைவி எம்மா (Emma) நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு எப்போது வேண்டுமென்றாலும் குழந்தை பிறக்கலாம். தனது முதல் குழந்தை பிறக்கும்போது மனைவியின் அருகில் இருக்க பெர்குசன் விரும்புகிறார். இதனால் அவர் சொந்த நாடு திரும்புகிறார் என தலைமை பயிற்சியாளர் ராப் வால்டர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணி 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளை நியூசிலாந்து வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
வருகிற 17-ந்தேதி கனடாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். அப்போது பெர்குசன் அணியில் இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 வயதான பெர்குசன் 3 போட்டிகளில் 108 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- தமிழ் அழகன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
- அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக பணியாற்றியவரும், அதிமுக-வில் மூத்த முன்னோடியாக விளங்கிய, மறைந்த மரியாதைக்குரிய ஆர்.எம். வீரப்பன் அவர்களின் மகனும்,
தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பணியாற்றியவரும், சிறப்பான ஆன்மீக சேவை புரிந்தவருமான
வீ. தமிழ் அழகன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- தேவையில்லாமல் இறுக்கமாக கட்டுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
- சலவை சோப்பு வைத்து கொட்டிய இடத்தை நன்றாக கழுவி, 10-15 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் செய்வது சிறந்தது.
விஷப்பூச்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றைய கால கட்டத்தில், அவற்றிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதே பெரிய சவாலாக இருக்கிறது. அந்தக் காலத்தில் கிராமப்புறங்களில் செடி, கொடிகளுக்கு இடையே மட்டுமே காணப்படும் விஷப்பூச்சிகள் தற்போது நகர்ப்புறங்களுக்குள் படை எடுக்க தொடங்கி விட்டன. இந்தச்சூழலில் திடீரென தேனீ, குளவி போன்றவை கடித்தால் என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக்கூடாது என்பது பற்றி பார்ப்போம்.
செய்யக்கூடாதவை
கடித்த இடத்தில் கீறுதல், விஷத்தை உறிஞ்சுதல், மிகுந்த அழுத்தம் கொடுத்தல், மருந்துகள் தடவுதல், தேவையில்லாமல் இறுக்கமாக கட்டுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
அபாய அறிகுறிகள்
மூச்சுத்திணறல்
முகம், உதடு, நாக்கு அல்லது தொண்டை வீக்கம்
கடும் தலைச்சுற்றல், மயக்கம்
தொடர்ந்து வாந்தி அல்லது வாந்தி உணர்வு
இதயத் துடிப்பு அதிகரித்தல்
உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றுதல்
கடும் அலர்ஜி
விஷப்பூச்சி கொட்டினால் என்ன செய்ய வேண்டும்?
தேனீயோ அல்லது குளவியோ கொட்டினால் முதலில் பதற்றம் கொள்ளாமல் கொட்டிய இடத்தில் இருக்கும் அந்த கொடுக்கை ஏ.டி.எம். கார்டு, ஸ்கேல் வைத்து அழுத்தி தேய்த்து அகற்றவும். விஷப்பூச்சி கொட்டிய இடத்தில் கையை வைத்து அழுத்தவோ, கொடுக்கை பிடுங்கவோ கூடாது.
சலவை சோப்பு வைத்து கொட்டிய இடத்தை நன்றாக கழுவி, 10-15 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் செய்வது சிறந்தது. உடனே மருத்துவமனை செல்வது முக்கியமானது.
- அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரியங்காவிற்கு அதீத இரத்தப்போக்கு ஏற்பட்டது.
- யோகேஷின் தந்தை ஓய்வுபெற்ற வார்டு பாய்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிற்கு அருகே அம்பேத்கர் நகரில் புக்கியா என்ற கிராமத்தில் நவஜீவன் என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி பிரியங்கா என்ற 28 வயது பெண், பிரசவத்திற்காக இந்த கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார்.
அப்பெண்ணுக்கு யோகேஷ் வர்மா (32) என்ற பி.ஏ. பட்டதாரியும் சுப்ளம் விஸ்வகர்மா (19) என்ற 12-ஆம் வகுப்பு மாணவரும் சேர்ந்து சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் பிரியங்காவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரியங்காவிற்கு அதீத இரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக அவர் லக்னோவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நவஜீவன் கிளினிக் கடந்த 5 ஆண்டுகளாக உரிய அனுமதி அல்லது பதிவு இன்றி இயங்கி வந்தது அம்பலமாகியுள்ளது. தற்போது அந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
யோகேஷ் மற்றும் சுப்ளம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். யோகேஷின் தந்தை ஓய்வுபெற்ற வார்டு பாய் என்பதால், அவரிடம் உதவியாளராக இருந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு யோகேஷ் இது போன்ற சிகிச்சைகளைச் செய்து வந்துள்ளார்.
மருத்துவமனையை நடத்தி வந்த ரூபி என்ற பெண் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
- வாகனங்களை வாடகைக்கு பிடித்து மைக் மூலம் பிரசாரம் நடக்கிறது.
- தி.மு.க., அ.தி.மு.க கட்சியினர் தேர்தல் களத்தில் தினமும் வாகனங்களை வாடகைக்கு எடுத்து மக்களை சந்தித்து வருகிறார்கள்.
கோவை:
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் தீவிரம் காட்டி வருகின்றன.
தேர்தல் கூட்டணி இன்னும் இறுதிக்கட்டத்தை எட்டாத நிலையில், முக்கிய கட்சிகள் இப்போதே தேர்தல் களத்தில் இறங்கி விட்டன.
கோவையில் அ.தி.மு.க. சார்பில் மினி லாரி மற்றும், மினி ஆட்டோக்களை வாடகைக்கு பிடித்து ஒவ்வொரு வார்டு, பகுதி வாரியாக சென்று அ.தி.மு.க.வினர் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுவரை நூற்றுக்கணக்கான தெருமுனை பிரசாரங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக வாகனங்களை வாடகைக்கு பிடித்து மைக் மூலம் பிரசாரம் நடக்கிறது.
அதேபோன்று பா.ஜ.க சார்பில் மக்களிடம் கருத்து கேட்கும் இயக்கம் நடத்தப்படுகிறது. இதற்காக வாகனங்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று வாகனங்களை நிறுத்தி வைத்து பொதுமக்களிடம் துண்டு சீட்டு கொடுத்து நிரப்பி, அதனை உள்ளே போடுமாறு தெரிவித்து வருகின்றனர். இந்த வாகனங்களும் கோவை பகுதியை சுற்றி வருகின்றன.
அதேபோன்று தி.மு.க சார்பில், தேர்தல் அலுவலகம் திறப்பு, ஆட்டோ நிறுத்தம் திறப்பு, பொதுக்கூட்டம் என்று கோவையில் தேர்தல் களத்தில் தி.மு.க தீவிரமாக வலம் வருகிறது.
தி.மு.க., அ.தி.மு.க கட்சியினர் தேர்தல் களத்தில் தினமும் வாகனங்களை வாடகைக்கு எடுத்து மக்களை சந்தித்து வருகிறார்கள். இதனால் வாடகை வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தொழில் சூடு பிடித்துள்ளது. இதுவரை லோடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்த இந்த வாகனங்கள் தற்போது தேர்தல் களத்தில் வலம்வர தொடங்கியுள்ளன.
அரசியல் கட்சிகள் போட்டி போட்டு வாடகைக்கு அமர்த்தி வருவதால் இனி லாரி வாகனங்கள், மினி ஆட்டோக்களுக்கான மவுசு அதிகரித்துள்ளது. இதனால் வாடகை கட்டணம் உள்ளிட்ட கட்டணமும் அதிகரித்து வருகிறது.
- குளிர்காலம் என்பதால் கேதர்நாத் கோவில் மூடப்பட்டுள்ளது.
- மகா சிவராத்திரியான தினமான இன்று கோவில் திறக்கப்படும் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத் கோவில் குளிர்காலத்தை முன்னிட்டு சுமார் 6 மாத காலம் மூடப்படும். தற்போது வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவி வருவதால் கோவில் மூடப்பட்டுள்ளது. குளிர் காலம் முடிவடைந்த பின்னர் ஏப்ரல் 22-ந்தேதி மீண்டும் கோவில் திறக்கப்படும் ஸ்ரீ பத்ரிநாத்- கேதர்நாத் கோவில் கமிட்டியின் மக்கள் தொடர்பு அதிகாரி ஹரிஷ் கவுர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் கோவில் திறப்பதற்கான மங்களகரமான தேதி மற்றும் நேரம் மகா சிவராத்திரி தினமான இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கேதர்நாத்தில் உள்ள ஓம்கரேஷ்வர் 12 ஜோதிர்லிங்கத்தில் ஒன்றாகும். 9.5 குவிண்டால் மலர்களுடன் கோவில் அலங்கரிக்கப்பட்டு, தலைமை பூசாரி, கேதர்நாத் எம்.எல்.ஏ, கோவில் கமிட்டி தலைவர், மதத் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடை திறக்கப்படும்.
பத்ரிநாத் கோவில் ஏப்ரல் 23-ந்தேதியும், கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்கள் ஏப்ரல் 19-ந்தேதி திறக்கப்படுகிறது.
- இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
- விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவர் தயாரிப்பில் சில தினங்களுக்கு முன் "பூக்கி" என்ற திரைப்படம் வெளியானது. முற்றிலும் புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், பூக்கி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வருகின்றன. இந்த நிலையில், படத்தை திரையரங்கில் தவற விடாதீர்கள் என்று விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வணக்கம், நல்ல சினிமா விரும்பிகளே மற்றும் காதலன் காதலிகளே. நான் POOKIE பூக்கி என்ற ஒரு நல்ல படத்த புது talents வச்சு produce பண்ணி 2 days-க்கு முன்னால release பண்ணிருக்கேன். பூக்கி ஒரு super படம், பாத்தவங்கட்ட கேளுங்க Miss பண்ணாம பாருங்க. அப்புறம், ஒரு நல்ல படத்தை theatre-ல miss பண்ணிட்டோம்னு feel பண்ணாதிங்க, நன்றி," என குறிப்பிட்டுள்ளார்.
- மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப் பூக்களை பறித்து இங்குள்ள பெருமாளை பூஜித்து வந்தனர்.
- அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது, திருநாவாய் நவ முகுந்தன் கோவில். 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரால் பாடல் பெற்ற தலமாகவும் இந்த ஆலயம் போற்றப்படுகிறது. இத்தலத்தில் திருமாலை நினைத்து 9 யோகிகள் தவம் செய்துள்ளனர். இதனால் இத்தலம் 'நவ யோகித்தலம்" என்று அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி 'நாவாய் தலம்' என்றாகி, தற்போது 'திருநாவாய்' எனப்படுகிறது.
முன்னொரு காலத்தில் காடு வழியாக ஒன்பது முனிவர்கள் பயணித்தனர். செல்லும் வழியில் ஒரு இடம் பிடித்துப்போக, அந்த இடத்தில் விஷ்ணுவை வேண்டி தவம் செய்யத் தொடங்கினர். அவர்களில், ஒருவர் பின் ஒருவராக எட்டு முனிவர்கள் முக்தியடைந்தனர். இந்த நிலையில் ஒன்பதாவதாக இருந்த முனிவர் வருத்தம் அடைந்தார். அவர் முன்பாகத் தோன்றிய விஷ்ணு, அவரது வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார். அம்முனிவர், "இறைவா, என்னுடன் தவமிருந்த எட்டு முனிவர்களும் முக்தி பெற்று விட்டனர். அவர்களுடன் அவர்கள் வழிபட்டு வந்த தங்கள் உருவச் சிலைகளும் மறைந்து போய்விட்டன. அவர்களைப் பிரிந்து நான் மட்டும் தனிமையில் இருப்பதால் வருத்தம் தோன்றுகிறது" என்றார். இறைவன் அவருடைய கவலையைப் போக்க, எட்டு முனிவர்களையும் காட்டியருளினார். அந்த முனிவர்கள், "இறைவன் அருளால் நாங்கள் முக்தி பெற்றுவிட்டாலும், பிறர் கண்களுக்குத் தெரியாமல் இங்கு உங்களோடுதான் இருக்கிறோம்" என்றனர். அதைக்கேட்ட முனிவர் இறைவனிடம், தானும் பிறர் கண்களுக்குத் தெரியாமல் இருக்க அருளும்படி வேண்டினார். இறைவனும் அவர் வேண்டியதை வழங்கினார். அவர் வழிபட்டு வந்த இறைவனின் திருவுருவச் சிலையையும் தன்னுடன் மறைந்து வந்தடையச் செய்யும்படி இறைவனிடம் வேண்டினார்.
இறைவன் "முனிவரே, நானும் இங்கிருந்து தங்களுடன் மறைவாக வந்துவிட்டால், இந்த இடம் ஒன்பது முனிவர்கள் வழிபட்டு முக்தியடைந்த இடம் என்பது மற்றவர்களுக்கு தெரியாமலே போய்விடும். பிறர் கண்களுக்குத் தெரியாத நீங்கள் இங்கிருக்கும் நதியில் நீராடி, இங்குள்ள மலர்களைப் பறித்து இந்தத் திருவுருவச் சிலையினை அலங்கரித்து வழிபட்டு வாருங்கள். பிற்காலத்தில் இந்த இடம் அனைவரும் வழிபடும் சிறப்பு மிகுந்த இடமாகி விடும்" என்றார். பின்பு, இறைவன் ஒன்பதாவது முனிவர் வழிபட்ட திருவுருவச்சிலையின் வடிவிலேயே இங்கு கோவில் கொண்டார் என்று இத்தல வரலாறு கூறுகிறது.
மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப் பூக்களை பறித்து இங்குள்ள பெருமாளை பூஜித்து வந்தனர். ஒரு சமயம் கஜேந்திரனுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூக்கள் கிடைக்காமல் போனது. கஜேந்திரன், இதை பெருமாளிடம் கூறி வருந்தியது. உடனே பெருமாள் லட்சுமியை தேவியை அழைத்து, "இனிமேல் பூப்பறிக்க வேண்டாம், கஜேந்திரனுக்காக விட்டுக்கொடு" என்றார். லட்சுமியும் ஒப்புக்கொண்டார். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன், தினமும் ஏராளமான பூக்களைப் பறித்து பெருமாளை அர்ச்சித்து வந்தது. பூஜையின் போது பெருமாள், லட்சுமி தேவியை தன்னுடன் ஏக சிம்மாசனத்தில் அமரச்செய்து, கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாக புராண வரலாறு கூறுகிறது.
கோவில் அமைப்பு
இக்கோவிலில் பெருமாள், 'நாவாய் முகுந்தன்' என்ற பெயரில் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில், முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில், வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார். தாயார் திருநாமம் மலர்மங்கை நாச்சியார். மிகப்பழமையான இக்கோவிலின் உட்புற சுவர்களில் காலத்தால் அழியாத பல ஓவியங்கள் உள்ளன. கோவில் சுற்றுப்பகுதியில் கணபதி, திருமகள், ஐயப்பன் ஆகியோர் சன்னிதிகளும் காணப்படுகின்றன.
துவாபர யுகத்தில் கிருஷ்ணர் இங்கு வந்து பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து, தம் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவுகடந்த புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள். மூலவர் நாவாய் முகுந்தன், கால்கள் பாதி உள்ளே பதிந்த நிலையில் அருள்பாலிப்பதால், இங்கே நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள், முட்டியிட்டு பிரதட்சணம் செய்வது வழக்கம்.
அமைவிடம்
கேரளாவின் திரூர் நகரில் இருந்து தெற்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. பாலக்காடு, குருவாயூர், திருச்சூர் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து திரூர் செல்வதற்கு பேருந்து வசதி உள்ளது. திரூரில் இருந்து கோவிலுக்கு பேருந்தில் செல்லலாம்.
- வர்த்தக ஒப்பந்தத்தை விவசாயிகளுக்கு எதிரான துரோகமாக பார்க்கிறோம்- ராகுல் காந்தி
- பால்வளத் துறையை பலவீனப்படுத்தாமல், விரிவுபடுத்தியவர்கள் நாங்கள்தான்- அமித் ஷா
இந்தியா சமீபத்தில் ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலமாக இந்தியாவில் உள்ள விவசாயிகள், விவசாயம் பாதிக்கப்படும் என ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை விவசாயிகளுக்கு எதிரான துரோகமாக பார்க்கிறோம் என்று எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி பொய் பரப்புகிறார். விவசாயிகள் முழுமையாக பாதுகாக்கப்படுகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-
விவசாயிகள் பாதுகாப்பு பற்றி பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி எடுத்த நிலையை பார்க்கும்போது எனக்கு சிரிக்கத்தான் தோன்றுகிறது. நாட்டை தவறாக வழி நடத்தியதற்கான நீண்ட கால வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. தற்போது அவர்கள் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பொய் பரப்பி வருகிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் கையெழுத்தான ஒவ்வொரு வர்த்தக ஒப்பந்தத்திலும், பிரதமர் மோடி உங்கள் நலன்களை முழுமையாகப் பாதுகாத்துள்ளார் என்பதை இந்த நாட்டின் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மீனவர்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். கவலைப்படத் தேவையில்லை.
பால்வளத் துறையை பலவீனப்படுத்தாமல், விரிவுபடுத்தியவர்கள் நாங்கள்தான். அனைத்து ஒப்பந்தங்களிலும், பால்வளத் துறைக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி ஜி, எந்த மேடையை வேண்டுமானாலும் முடிவு செய்யுங்கள். பாஜக யுவ மோர்ச்சாவின் தலைவர் கூட வந்து விவசாயிகளுக்கு யார் தீங்கு செய்தார்கள், அவர்களின் நலனுக்காக யார் பாடுபட்டார்கள் என்பது குறித்து உங்களுடன் விவாதிக்க முடியும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
- ஜெர்மனியில் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் இருவரும் பேசினர்.
- குறைந்த வரியை மீண்டும் உயர்த்துவோம்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது.
ரஷிய எண்ணெயை இந்தியா வாங்காது என அமெரிக்கா கூறி வந்தாலும், இந்தியா தரப்பில் தெளிவான பதில் இல்லை.
இதற்கிடையே ஜெர்மனியில் மியூனிக் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், "ரஷியாவின் எண்ணெய் மீது அமெரிக்கா கூடுதல் தடைகளை விதித்துள்ளது.
இந்தியாவுடனான எங்கள் பேச்சுவார்த்தையில், கூடுதலாக ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை நாங்கள் பெற்றுள்ளோம்" என்றார்.
தொடர்ந்து இதே மாநாட்டில் மற்றொரு அமர்வில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரூபியோவின் கூற்றை நேரடியாக உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.
ஜெய்சங்கர் கூறியதாவது, "இந்தியாவின் முடிவுகள் எப்போதும் அதன் மூலோபாயத் தன்னாட்சி அடிப்படையிலேயே இருக்கும். இது இந்தியாவின் வரலாறு மற்றும் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்த ஆழமான கொள்கை.
உலகளாவிய எரிசக்தி சந்தை தற்போது மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. எண்ணெய் கொள்முதல் என்பது அரசியல் அழுத்தத்தின் அடிப்படையில் அமையாது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள், ஐரோப்பிய நிறுவனங்களைப் போலவே, கிடைக்கும் தன்மை, விலை மற்றும் அபாயங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தே முடிவெடுக்கும்" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தப்படி ரஷிய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துமா என்ற நேரடி கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு எது சிறந்தது என்று கருதுகிறார்களோ அதையே செய்வார்கள்" என்று முடித்தார்.
இதற்கிடையே வெனிசுலாவில் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு 25% இருந்து 18% ஆக குறைந்த வரியை மீண்டும் உயர்த்துவோம் என அமெரிக்கா மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அத்தையின் கணவர், அவரது மகன் மற்றும் தனது தந்தையால் சிறுமி இந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
- சிறுமி 8 வயதாக இருக்கும் போது அவரது தாய்மாமன் பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
கேரளாவை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவளது தந்தை மற்றும் உறவினர்களே இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவர போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள புன்னப்பிரா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, தனது தோழியை சந்தித்த போது கடந்த 4 ஆண்டுகளாக தந்தை மற்றும் உறவினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவதாக கூறி கண்ணீர் விட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
விசாரணையில் சிறுமியின் தாய், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் தந்தையின் சகோதரி வீட்டில், சிறுமி தங்கினார். அங்கு தான் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
அத்தையின் கணவர், அவரது மகன் மற்றும் தனது தந்தையால் சிறுமி இந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானது தெரிய வந்ததை தொடர்ந்து தந்தை உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சிறுமி 8 வயதாக இருக்கும் போது அவரது தாய்மாமன் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது தொடர்பான புகாரில் போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- புதுச்சேரியில் தி.மு.க., பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- வருகிற தேர்தலில் போட்டியிடுவதற்காக வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை கண்டறியும் வேலையில் தி.மு.க., ரகசியமாக சர்வே நடத்தி வருகிறது.
புதுச்சேரி:
தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் தி.மு.க. - காங்கிரஸ் இடையே இதுவரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கப்படாமல் இழுபறியாக இருந்து வருகிறது.
த.வெ.க. தரப்பில் கூறப்பட்டுள்ள 70 எம்.எல்.ஏ.க்கள் சீட்டு, துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவி உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சியை தி.மு.க. பக்கம் செல்ல முடியாத அளவிற்கு நிறுத்தி வைத்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தலைவர் செல்வப்பெருந்தகை மட்டுமே தி.மு.க. கூட்டணிக்கு வலியுறுத்தி வருகிறாரே தவிர ராகுல் காந்தி கூட்டணி குறித்து இதுவரை எதுவும் கூறாமல் உள்ளார்.
இதனால் எரிச்சல் அடைந்துள்ள தி.மு.க. தலைமை கூட்டணி ஆட்சி கிடையாது என பகிரங்கமாகவே தெரிவித்துள்ளது.
இந்நிலையில் த.வெ.க.,வால் தங்களை மதிக்காமல் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியில் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் தி.மு.க., தலைமையிலேயே கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என காங்கிரஸ் கட்சிக்கு வெளிப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் தி.மு.க., பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் தி.மு.க. தலைமையில் அமைக்கும் அமைச்சரவையில் முதல்-அமைச்சர் அல்லது உள்துறை அமைச்சர் பதவிகளை தி.மு.க.வே வகிக்கும். இதற்கு கூடுதல் இடங்களில் வருகிற தேர்தலில் போட்டியிடுவதற்காக வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை கண்டறியும் வேலையில் தி.மு.க., ரகசியமாக சர்வே நடத்தி வருகிறது.
கடந்த தேர்தல் போல் இல்லாமல் புதுச்சேரியில் கூட்டணியில் 15 இடங்கள் இல்லை என்றால் காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டு, 2 கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தை கூட்டணியுடன் போட்டியிடுவது என தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாகவே கங்கிரஸ் அல்லாத கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. ஆலோசனை நடத்தியுள்ளது.






