search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதன்மை கல்வி அதிகாரி"

    • திருவளர்செல்வி ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
    • கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த திருவளர்செல்வி, ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த பாலமுரளி திருப்பூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பாலமுரளி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

    • 12ம் வகுப்பில் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.
    • 33 பேருக்கு ரூ 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பணப்பரிசுகள், கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம், சிறுபூலுபட்டி ரிங் ரோட்டில் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகில் இயங்கிவரும் டீ- செட் என்னும் திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் 27 -வது ஆண்டாக பிளஸ் 2 வகுப்பில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா டீ- செட் விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

    விழாவுக்கு டீ- செட் தலைவர் நிக்கான்ஸ் வேலுச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் துரைசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் டாக்டர் ராஜன் கலந்து கொண்டு பேசினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது : -

    டீ- செட் போன்ற அமைப்புகள் தொடர்ந்து 27 வது ஆண்டாக மாணவர்களின் முன்னேற்றத்திற்காக ஊக்கத்தொகை வழங்குவது மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தருவதுடன் அதனால் அவர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் தருகிறார்கள். இதன் மூலம் இவர்கள் சமூகத்தின் பிள்ளைகளாக நிற்கிறார்கள்.

    மாணவர்கள் இளம்பருவத்தில் பரிசு தொகை கிடைத்தாலோ, அல்லது பாராட்டுக்கள் வந்தாலோ அவர்கள் வாழ்க்கையின் எல்லையை தொட்டு விட்டோம் என்று நினைத்து தன்னம்பிக்கை இழந்து விடுவது தான் தற்போது நடந்து வருகிறது. அதிக பரிசு வாங்கியவர்கள் தோல்வி அடைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் வாழ்க்கையில் லட்சியம் இருக்க வேண்டும். வாழ்க்கை முறையை, எண்ணங்களை மாற்றி நம்மால் முன்னேற முடியும். உங்கள் குணாதிசயங்கள் மற்றும் திறமைகளை மற்றவர்களிடம் எடுத்துக் கூறுங்கள். விருப்பமில்லாத துறையை எடுக்காமல் உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள்.

    வாழ்க்கையில் குறைவான நாட்களில் வெற்றி அமையும் என்ற நினைப்பு வரக்கூடாது. அதிக நாட்கள் ஆனாலும் வெற்றியை அடைய முடியும் என்ற நிலையில் ஏற்றுக்கொள்வதுடன், நீங்களும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். ஒரு நாள் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். நடுத்தரமாக படித்தவர்கள் எல்லாம் தற்போது நாட்டை முன்னேற்றம் அடைய உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் நாமும் நாட்டை முன்னேற்ற உழைப்பு கொடுப்பதுடன் நம் சமூகத்தை உயர்த்தவும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பண பரிசுகளை வழங்கினார். இதில் 600 க்கு 597 மதிப்பெண்கள் எடுத்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி சுதர்ஷிகா, 596 மதிப்பெண்கள் எடுத்த லிட்டில் பிளவர் பள்ளி மாணவர் தியா ராஜ் மற்றும் ஏவிபி பள்ளி மாணவர் ஹரிஷ், அதேபோல் 595 மதிப்பெண்கள் எடுத்த விவேகானந்தா பள்ளி மாணவி அபிநயா, பிரண்ட்லைன் பள்ளி மாணவி விஜயா உள்பட 33 பேருக்கு ரூ 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பணப்பரிசுகள், கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

    முடிவில் டீ- செட் பொருளாளர் தேவராஜன் நன்றி கூறினார். விழாவில் காந்திராஜன், சுதாமா, கோபாலகிருஷ்ணன் ,கோவிந்தராஜன் உள்பட டீ- செட் முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவினை உடற்கல்வி ஆசிரியர் பழனிச்சாமி தொகுத்து வழங்கினார்.

    • பள்ளி தலைமையாசிரியர் காலை 8:30 மணிக்கே ஆஜராகி விட வேண்டும்.
    • கூட்ட பொருள் சார்ந்த புத்தகம் இல்லையெனில் தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாதாந்திர கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி பேசியதாவது:-

    அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க செய்ய வேண்டும்.அதற்கேற்ப பள்ளி தரத்தை மேம்படுத்துவதில் தலைமையாசிரியர்கள் கவனம் செலுத்துவது அவசியம். 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, சனிக்கிழமைதோறும் ஆசிரியர்களை சுழற்சி முறையில் பாட வாரியாக வரவழைத்து, சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். இதுதவிர தினமும் காலை, 8:30 மணிக்கும், மாலை 4:15 முதல், 5:30 மணிக்குள் சிறப்பு வகுப்புகள் நடத்தி கொள்ளலாம்.

    பள்ளி தலைமையாசிரியர் காலை 8:30 மணிக்கே ஆஜராகி விட வேண்டும். வகுப்பாசிரியர்கள் 'வாட்ஸ்அப்பில்' மட்டுமே தகவல்களை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு தகவல்கள், செய்திகள் அனுப்பப்படுவது தவிர்க்க வேண்டும். மாணவர்கள் தரப்பில் ஆசிரியர்கள் மீதான புகார்கள் பெறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாணவர்களின் புகார் பெட்டி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டு பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து தொடக்க, மேல்நிலைப்பள்ளிகளில் சுகாதார பணியாளர்கள் வருகை சார்ந்த விவரம் ஒவ்வொரு மாதமும் 3-ந் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட வேண்டும்.ஆசிரியர் மானியம், பிற பணப்பயன்கள் உடனுக்குடன் பெற்று வழங்கப்பட வேண்டும். நிரந்தர அங்கீகாரம் பெற்ற உதவிபெறும் பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் கட்டட உறுதி சான்று, கட்டட உரிமை சான்று, தீயணைப்பு, சுகாதார சான்று ஆகியவை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    மிதிவண்டி, லேப்டாப் சார்ந்த இருப்பு பதிவேடுகள், சிறப்பு நிலை, தேர்வுநிலை, தகுதிகாண் பருவம், பணிவரன்முறை சார்ந்த ஆசிரியர்களின் கருத்துருக்கள் முறையாக பராமரிக்க வேண்டும். சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் பிற அமைப்புகள், மதம் சார்ந்த அமைப்புகளில் பொறுப்புகளில் இருப்பதாக பல புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, நிரந்தர சிகிச்சை பெறுவோருக்கு விபத்து காப்பீடு, உதவித்தொகை பெற ஆவண செய்தல் வேண்டும் என்றார்.

    மேலும் அவர் பேசுகையில், ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை, சிறப்பு ஊக்கத்தொகை திட்டம், கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவர்கள் பட்டியலை தயார்நிலையில் இருப்பது அவசியம். அடுத்த மாதாந்திர கூட்டத்தில் இதுசார்ந்த விவரங்கள் கேட்கப்படும். எனவே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இவற்றை நகல் எடுத்து தயாராக வைத்திருக்க வேண்டும். கலெக்டர், மற்றும் உயர்கல்வி அதிகாரிகள் பார்வையிட வரும்போது கூட்ட பொருள் சார்ந்த புத்தகம் இல்லையெனில் தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  

    • பள்ளி வளாகங்களை, வகுப்புகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.
    • மாவட்டத்தில் பராமரிப்பில்லாத அரசு பள்ளி கட்டமைப்புகள் சீரமைக்க பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    திருப்பூர்,

    கொரோனா தொற்றுக்கு பின் மீண்டும் பள்ளிகள் பிப்ரவரி 1-ந்தேதி முதல் துவங்கின. மே மாதம் அனைத்து பொதுத்தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் 2022-23ம் கல்வியாண்டு வரும் 13-ந் தேதி துவங்குகிறது.

    இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து அரசு பள்ளிகளிலும் மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) திருவளர்ச்செல்வி அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடந்தது. அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 183 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    இது குறித்து முதன்மை கல்வி அதிகாரி பேசியதாவது :-

    மாணவர்கள் பாதுகாப்பாக உணரும் விதமாக, பள்ளி வளாகங்களை, வகுப்புகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.வகுப்பறைகளை கிருமி நாசினி தெளித்துதூய்மையாக பராமரிக்க வேண்டும். எந்த வகையிலும் மாணவர் சேர்க்கை குறையவிடக்கூடாது. அதற்கேற்ப பள்ளி தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.

    மாணவர், ஆசிரியர் சார்ந்த தகவல்கள், தளவாட பொருட்கள், கழிப்பிட வசதி, வகுப்பறைகள் உள்ளிட்ட தகவல்களை 'எமிஸ்' தளத்தில் உடனுக்குடன் பதிவேற்றுங்கள். இனி வரும் காலங்களில்இதனடிப்படையிலே நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். மாவட்டத்தில் பராமரிப்பில்லாத அரசு பள்ளி கட்டமைப்புகள் சீரமைக்க பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தலைமையாசிரியர்கள் இதற்கான விவரங்களை தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் சிதிலமடைந்துள்ள கட்டடங்களை அகற்றுதல், கூடுதல் கழிப்பறை கட்டுதல், வகுப்பறை மேற்கூரைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்படும் என்றார்.

    ×