search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T-SET"

    • 12ம் வகுப்பில் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.
    • 33 பேருக்கு ரூ 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பணப்பரிசுகள், கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம், சிறுபூலுபட்டி ரிங் ரோட்டில் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகில் இயங்கிவரும் டீ- செட் என்னும் திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் 27 -வது ஆண்டாக பிளஸ் 2 வகுப்பில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா டீ- செட் விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

    விழாவுக்கு டீ- செட் தலைவர் நிக்கான்ஸ் வேலுச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் துரைசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் டாக்டர் ராஜன் கலந்து கொண்டு பேசினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது : -

    டீ- செட் போன்ற அமைப்புகள் தொடர்ந்து 27 வது ஆண்டாக மாணவர்களின் முன்னேற்றத்திற்காக ஊக்கத்தொகை வழங்குவது மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தருவதுடன் அதனால் அவர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் தருகிறார்கள். இதன் மூலம் இவர்கள் சமூகத்தின் பிள்ளைகளாக நிற்கிறார்கள்.

    மாணவர்கள் இளம்பருவத்தில் பரிசு தொகை கிடைத்தாலோ, அல்லது பாராட்டுக்கள் வந்தாலோ அவர்கள் வாழ்க்கையின் எல்லையை தொட்டு விட்டோம் என்று நினைத்து தன்னம்பிக்கை இழந்து விடுவது தான் தற்போது நடந்து வருகிறது. அதிக பரிசு வாங்கியவர்கள் தோல்வி அடைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் வாழ்க்கையில் லட்சியம் இருக்க வேண்டும். வாழ்க்கை முறையை, எண்ணங்களை மாற்றி நம்மால் முன்னேற முடியும். உங்கள் குணாதிசயங்கள் மற்றும் திறமைகளை மற்றவர்களிடம் எடுத்துக் கூறுங்கள். விருப்பமில்லாத துறையை எடுக்காமல் உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள்.

    வாழ்க்கையில் குறைவான நாட்களில் வெற்றி அமையும் என்ற நினைப்பு வரக்கூடாது. அதிக நாட்கள் ஆனாலும் வெற்றியை அடைய முடியும் என்ற நிலையில் ஏற்றுக்கொள்வதுடன், நீங்களும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். ஒரு நாள் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். நடுத்தரமாக படித்தவர்கள் எல்லாம் தற்போது நாட்டை முன்னேற்றம் அடைய உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் நாமும் நாட்டை முன்னேற்ற உழைப்பு கொடுப்பதுடன் நம் சமூகத்தை உயர்த்தவும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பண பரிசுகளை வழங்கினார். இதில் 600 க்கு 597 மதிப்பெண்கள் எடுத்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி சுதர்ஷிகா, 596 மதிப்பெண்கள் எடுத்த லிட்டில் பிளவர் பள்ளி மாணவர் தியா ராஜ் மற்றும் ஏவிபி பள்ளி மாணவர் ஹரிஷ், அதேபோல் 595 மதிப்பெண்கள் எடுத்த விவேகானந்தா பள்ளி மாணவி அபிநயா, பிரண்ட்லைன் பள்ளி மாணவி விஜயா உள்பட 33 பேருக்கு ரூ 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பணப்பரிசுகள், கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

    முடிவில் டீ- செட் பொருளாளர் தேவராஜன் நன்றி கூறினார். விழாவில் காந்திராஜன், சுதாமா, கோபாலகிருஷ்ணன் ,கோவிந்தராஜன் உள்பட டீ- செட் முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவினை உடற்கல்வி ஆசிரியர் பழனிச்சாமி தொகுத்து வழங்கினார்.

    ×