search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய இணை மந்திரி"

    • மலைக் கிராமங்களில் மக்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.
    • அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை.

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை விவேகானந்தா கேந்திரா சார்பில், கோவையில் உள்ள நவ இந்தியா பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கற்ற சுதந்திர ஓட்டத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், தொடங்கி வைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    இன்று முதல் 15-ந் தேதி வரை, நாட்டு மக்கள் அனைவரும், இல்லந்தோறும் மூவண்ணக் கொடியேற்ற வேண்டுமென பிரதமர் திரு.நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கடந்த 10 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 


    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் அனைவரும், தத்தமது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். மலைக் கிராமங்களில் உள்ள மக்களும், தாமாக முன்வந்து அவரவர் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.

    வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, மகாகவி பாரதியார் போன்ற ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்ட மாநிலம் தமிழகம்.

    இவர்கள் தவிர, அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களையும் நினைவுகூர்ந்து அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தியாகிகளின் வாரிசுகளும் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

    சர்வதேச அரங்கில் வளர்ந்து வரும் நாடாக உள்ள இந்தியா, நாட்டின் 100-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள 2047-ம் ஆண்டுக்குள், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கனவு கண்டதைப் போன்று வல்லரசு நாடாக மாறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வ.உ.சி.யின் தற்சார்பு கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்.
    • அப்துல் கலாம் கண்ட கனவுபடி, இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக திகழும்.

    'ஓலம்' சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற தலைப்பிலான காணொளி வெளியீட்டு விழா சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஸ்ணவா கல்லூரியில் நேற்று நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது: 


    உலகின் தலை சிறந்த நாடாக இந்தியா உள்ளது. குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் இந்த நாடு அடைந்துள்ள வளர்ச்சியை அனைவரும் கண்கூடாக காண முடியும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி கப்பலை இயக்கிவர் வ.உ. சிதம்பரனார்.

    அவரது தற்சார்பு கனவை இன்று பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி கொண்டு இருக்கிறார். நாடு 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், வ உ சி யின் 150 ஆவது பிறந்த தினம் வருவது மேலும் சிறப்பு வாய்ந்தது. பிரதமர் விடுத்த அழைப்பின்படி, வரும் 13 முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும்.

    இது ஆங்கிலேயர்கள் தாக்குதலின்போது தேசிய கொடியை கீழே விழாமல் காத்த திருப்பூர் குமரனுக்கு செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கையாக இருக்கும். இளைஞர் மத்தியில் அக்னிபத் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது, லட்சக்கணக்கான இளைஞர்கள் தாமாகவே முன்வந்து அக்னிபத் திட்டத்திற்கு பதிவு செய்து வருகின்றனர்.

    அப்துல் கலாம் கண்ட கனவுபடி, இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக திகழும். ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்பு எப்படி இந்தியர்கள் உலகுக்கே வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் இருந்தார்களோ, அதேபோல நாட்டின் 100-வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும் 2047-ம் ஆண்டு இந்தியா மீண்டும் உலக நாடுகளை வழிநடத்தும் வல்லமையை பெற்றிருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிரதமர், தமிழக முதல்வரின் முயற்சியால்தான் செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடைபெறுகிறது.
    • செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடப்பது நமக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு.

    44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடங்கி வைத்தார்.

    விழாவில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இணை மந்திரி எல் முருகன், தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய மத்திய இணை மந்திரி எல் முருகன், பிரதமர் நரேந்திரமோடி, 2 மாதங்களுக்கு முன்பு இதே சென்னையில் இருந்து பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்ததாக தெரிவித்தார்.

    44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு தமிழகத்தில் நடப்பது நமக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு என்றும், பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் முயற்சியால்தான் செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி விளையாட்டையும், விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

    நாட்டின் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் வேளையில், பழங்குடியினத்தை சேர்ந்த திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவராக்கி 75 வருடங்களில் நிகழாத சாதனையை பிரதமர் செய்துள்ளார் என்றும், ஐ. நா. சபையில் 'யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பிரதமர் பேசியதும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதி இருக்கை உள்பட பல்வேறு நிகழ்வுகளில் தமிழ் மொழியை உலக அரங்கிற்கு பிரதமர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் எல்.முருகன் குறிப்பிட்டார்.

    • தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் மோடி உலகம் முழுவதும் பிரபலப்படுத்துகிறார்.
    • இளைஞர்கள் மற்றவர்களுக்கு வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும்.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கௌரவ விருந்தினராக பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர் தெரிவித்துள்ளதாவது:

    தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் மோடி உலகம் முழுவதும் பிரபலப்படுத்துகிறார். ஐநா சபையில் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற தமிழ் இலக்கியத்தை மேற்கோள் காட்டி பிரதமர் தமது உரையை தொடங்கினார். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் மகாகவி பாரதியார் இருக்கை தொடங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.

    உலகம் முழுவதும் இந்தியர்கள் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பரவலாக இருக்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இருக்கிறார். அனைவரும் தாய்மொழியில் கற்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் தமிழ் போன்ற மாநில மொழிகள் உட்பட தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரகாசிக்கின்ற இளம் தொழில்முனைவோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இளைஞர்களே நாட்டின் எதிர்காலம். அவர்கள் இந்தியாவை உலக அளவில் முன்னேற்றுவார்கள். இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் மற்றவர்களுக்கு வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும்.

    கொரோனா நெருக்கடியிலிருந்து பல நாடுகள் மீளமுடியாத நிலையில், இந்தியா இதிலிருந்து மீண்டு வந்திருப்பதோடு இதுவரை நாட்டில் கட்டணமில்லாமல் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்திய சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகே உள்ள பழைய பேரூராட்சி அலுவலக மைதானத்தில் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது.
    • நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.தளவாய்சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.எம்.ஆர்.காந்தி, திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா, கீல்தொண்டு நிறுவன இயக்குனர் சிலுவைவஸ்தியான்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி,

    இந்தியாவின்75-வது சுதந்திர திருவிழாவையொட்டி இந்திய சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகே உள்ள பழைய பேரூராட்சி அலுவலக மைதானத்தில் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் தென்மண்டல இயக்குநர் ஜெனரல் எஸ்.வெங்கடேஸ்வர் தலைமை தாங்கினார். சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் இயக்குனர் ஜெனரல் எம். அண்ணாதுரை வரவேற்று பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே, நிலக்கரி, மற்றும் சுரங்க அமைச்சகத்தின் இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய சுதந்திர போராட்ட வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அதன் பிறகு மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே குத்துவிளக்குஏற்றி 5 நாள் புகைப்படகண்காட்சியை தொடங்கி வைத்துபேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இன்னும் 25 ஆண்டு களுக்குப் பின்னர் நம்நாடு எப்படி இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி நிதிநிலை அறிக்கையை தயாரித்துள்ளார். 2014-ம்ஆண்டில் நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றபோது ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்த 8 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பிரதமர் மோடி அடுத்த 25 ஆண்டுகளை கணக்கில் கொண்டு தயாரித்திருக்கிறார்.

    25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று அடிப்படையில் மோடியின் தொலை நோக்கு பார்வையில் அந்த திட்டங்களை தொடர்ந்துசெயல்படுத்தி வருகிறார். 130 கோடி மக்களில் 80 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி மேம்படுத்த வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகள், கழிப்பறைகள், மின்சார வசதி, எரிவாயு இணைப்புகள் என்று மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து சிறந்த முறையில் பிரதமர்மோடி செயலாற்றி வருகிறார். கொரோனா காலகட்டத்தி ல் மக்களுக்கு தடுப்பூசி, மாத்திரை, மருந்துகளை உலகத்திலேயே இலவசமாக வழங்கிய ஒரே பிரதமர் மோடி மட்டும்தான். இந்தியா முழுதும் 130 கோடி மக்களுக்கு இலவச தடுப்பூசி போடவைத்தபெருமை பிரதமர் மோடியை சேரும்.

    ஜன்தன் திட்டத்தின் மூலம் 45 கோடி மக்கள் வங்கிக்கணக்கு தொடங்கும் திட்டத்தை செயல்படுத்திஉள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் உலகத் தலைவர்களை திரும்பிப் பார்க்க வைத்த பிரதமராக மோடி திகழ்கிறார். 8 ஆண்டுகளில் பிரதமர்மோடி செய்த சாதனைகளை ஒரு நாளில் சொல்ல முடியாது.

    இவ்வாறு மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே பேசினார்.

    இந்தநிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.தளவாய்சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.எம்.ஆர்.காந்தி, திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா, கீல்தொண்டு நிறுவன இயக்குனர் சிலுவைவஸ்தியான்உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வங்கிகள் மூலம் ஏழைகளுக்கு கடன் உதவியாக ரூ.15 கோடியே 60 லட்சத்துக்கான காசோலையை மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே வழங்கினார். மகளிர் சுய உதவி குழுவைச்சேர்ந்த பெண்களுக்கும் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். முடிவில் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனர் காமராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை கள விளம்பர துணை இயக்குனர் சிவகுமார் தொகுத்து வழங்கினார்.

    ×