search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரிக்காய்"

    • உடலின் சீரான இயக்கத்திற்கு ரத்த ஓட்டத்தின் பங்களிப்பு இன்றியமையாதது.
    • ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.

    உடலின் சீரான இயக்கத்திற்கு ரத்த ஓட்டத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. சுவாசத்திற்கு அவசியமான ஆக்சிஜனை கடத்துவதற்கும், ஹார்மோன்கள், சர்க்கரை, கொழுப்புகள், செல்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் பக்கபலமாக இருக்கிறது.

    சுற்றுச்சூழல் மாசுபாடு, மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கங்கள் போன்றவற்றால் உடலில் நச்சுக்கள் சேர்வது தவிர்க்கமுடியாதது. அவைகளை அப்புறப்படுத்தி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது அவசியமானது. அதற்கு ரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன் அதனை சுத்திகரிப்பதும் முக்கியமானது.

    நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவை இயற்கையாகவே ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியை செய்கின்றன. எனினும் ரத்த சுத்திகரிப்பு செயல்முறையை தூண்ட உதவும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. அத்தகைய உணவு வகைகளை பார்ப்போம்.

    * உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவும் இயற்கை சுத்திகரிப்பானாக பிரக்கோலி விளங்குகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. பிராக்கோலியை காய்கறி சாலட்டாக தயாரித்தோ, சமையலில் சேர்த்தோ சாப்பிடலாம்.

    * ஆப்பிள், பிளம்ஸ், பேரிக்காய், கொய்யாப்பழம் போன்றவை ரத்தத்தை சுத்திகரிக்கும் பழ வகைகள். இவை ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்புக்களைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள், கழிவுகளை நீக்கும் பணியையும் செய்கின்றன.

    * தக்காளி பழத்தில் இருக்கும் லைகோபின், குளுட்டாயோன் போன்றவையும் உடலிலுள்ள கழிவுகள், ரசாயனங்களை நீக்கும் தன்மை கொண்டவை.

    * ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, கிரான்பெர்ரி போன்ற பெர்ரி இன பழங்களையும் சாப்பிட்டு வருவது நல்லது. அவை கல்லீரலின் ஆரோக்கியத்தைக் காக்க உதவும்.

    * கீரை வகைகள் ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதற்கு துணை நிற்பவை. கல்லீரலில் உள்ள நொதிகளை அதிகரிக்கவும், ரத்த சுத்திகரிப்புக்கும் உதவி புரியும்.

    * பீட்ரூட் சாறு இயற்கையாகவே உடலில் நச்சுத்தன்மையற்ற நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. கல்லீரல் வீக்க பிரச்சினையில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும். ஆதலால் பீட்ரூட்டை ஜூசாகவோ, சாலட்டாகவோ, பொரியலாகவோ தயார் செய்து சாப்பிடுவது நல்லது.

    * சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்துவது நல்லது. இதில் இரும்புச் சத்து அதிகமிருக்கிறது. ஹீமோகுளோபின் அளவுகளையும், ரத்த ஓட்டத்தையும் சீராகப் பராமரிக்கவும், ரத்தத்தைத் தூய்மைப்படுத்தவும் உதவுகிறது.

    * குடிநீர், இயற்கையாகவே ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணியை மேற்கொள்கிறது. சிறுநீரகம் மூலம் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீராக வெளியேற்றுகிறது. இரவு முழுவதும் செப்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இவ்வாறு செய்து வருவது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களையும் நீக்க உதவும்.

    * முகப்பரு, வறண்ட மற்றும் ஆரோக்கியமற்ற சருமம் போன்ற தோல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு, ரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக இருக்கின்றன.

    * ரத்தத்தைச் சுத்திகரித்துத் தூய்மைப்படுத்துவதன் மூலம் தலைவலி, ஒவ்வாமை, குமட்டல் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.

    * சிறுநீரகம், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் நிணநீர் மண்டலம் ஆகிய அனைத்தின் செயல்பாடுகளுக்கும் ஆரோக்கியமான ரத்த செல்கள் இன்றியமையாதது. ரத்தத்தில் உள்ள அதிக எண்ணிக்கையிலான வெள்ளை அணுக்கள் விபத்தின்போது ரத்த இழப்பை குறைக்க உதவுகின்றன.

    • ஆப்பிளை விட விலை மிகவும் குறைவானது.
    • பேரிக்காயில் நீர்ச்சத்து அதிகமுள்ளது.

    பேரிக்காயின் ஆங்கில பெயர் பியர். இது ஆப்பிள் வகையைச் சேர்ந்தது. ஆப்பிளை விட விலை மிகவும் குறைவானது. அதனால்தான், இதை `ஏழைகளின் ஆப்பிள்' என்று அழைக்கிறார்கள். பேரிக்காய் நன்கு முற்றி கனியாகிறது. நாம் சாப்பிடுவது பேரிக்கனிதான். ஆனால் பொதுவாக பேரிக்காய் என்றே சொல்கிறோம். பேரிக்காயில் நீர்ச்சத்து அதிகமுள்ளதால் இங்கிலாந்து மக்கள் பேரிக்காயை `கோடைக்கால தண்ணீர்குடம்' என்று கூறுகிறார்கள்.

    நன்மைகள்

    பேரிக்காயில் கால்சியம், பாஸ்பரஸ் கணிசமாக உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கும் நல்லது. இதை ஜூஸ் ஆக குடிப்பதை விட, துண்டுகளாக்கி மென்று தின்பதால், இதில் உள்ள சத்துப்பொருட்கள் சிதையாமல் முழுவதும் கிடைக்கும். பேரிக்காயை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். ரத்தத்தில் ஆக்சிஜன் அதிகம் கிடைக்கச் செய்யும். அஜீரணக் கோளாறுகளை அகற்றி, நன்கு பசியை உண்டாக்கும்.

    பெக்டின் உள்ளதால் குடல் புற்றுநோய் திசுக்கள் வளராது காக்கும் ஆற்றலும் கொண்டது. இதில் நுண்ணூட்ட சத்துகளும், விட்டமின்களும் தாராளமாக இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட்டால் சோர்வு, மன இறுக்கம் நீங்கி புத்துணர்வு தரும். கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தைக் குறைத்து, குளிர்ச்சியை ஏற்படுத்தும். நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பேரிக்காயை அடிக்கடி உண்டு வர, நரம்புகள் பலம் பெறும்.

    சத்துகள்

    பேரிக்காயில் புரதம், மாவுப்பொருட்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்சத்துக்கள், மெக்னீசியம், சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் 'ஏ', 'பி', பெக்டின் முதலிய சத்துகள் உள்ளன.

    • கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
    • விநாயகர் சதுர்த்தி வருவதால் அதிகளவில் வியாபாரிகள் பேரிக்காய்களை நேரடியாக வாங்கி செல்கின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, பீன்ஸ், காலிபிளவர் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளும் மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப்பூண்டும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர சீசன் காலங்களில் பிளம்ஸ், ஆப்பிள் உள்ளிட்ட பழ வகைகளும் விளைவிக்கப்படுகிறது. மேலும், மருத்துவ குணம் கொண்ட பேரிக்காய்களும் அதிகளவு விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து பேரிக்காய் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு ஜாம் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் அதிகளவில் வாங்கி செல்லப்படுகிறது.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அப்சர்வேட்டரி, வட்டக்கானல், பிரகாசபுரம், வில்பட்டி, பெருமாள் மலை, மன்னவனூர் உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேரிக்காய் 2வது முறையாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 2 மாதங்கள் வரை இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த சில வாரங்களாக விலை குறைந்து இருந்த நிலையில் தற்போது வெளியூர் வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் விலை சற்று அதிகரித்துள்ளது.

    விநாயகர் சதுர்த்தி வருவதால் அதிகளவில் வியாபாரிகள் பேரிக்காய்களை நேரடியாக வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • நீலகிரி மாவட்டம் மலை பிரதேசமாக உள்ளதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது.
    • அரசு தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் பேரிக்காய், பிளம்ஸ், பீச் உட்பட பழமரங்கள் உள்ளன.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் மலை பிரதேசமாக உள்ளதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது நீலகிரி மாவட்டம் இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலையை ஒத்து இருந்ததால் அங்கு விளையக்கூடிய பிளம்ஸ், பேரி, பீச் உட்பட பல்­வேறு வகை பழ வகைகளை பயிரிட்டு விளைவித்தனர்.

    அவ்வப்போது நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப பழங்கள் மகசூல் கொடுத்தன. தற்போது மாவட்டத்தில் பேரிக்காய் சீசன் நிலவி வருகிறது. இதனை விவசாயிகள் ஊடுபயிராகவும் தனியாகவும் பயிரிட்டு மகசூல் எடுத்து வருகின்றனர். அரசு தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் பேரிக்காய், பிளம்ஸ், பீச் உட்பட பழமரங்கள் உள்ளன.

    ஜாம் தயாரிக்கும் பணி சீசனுக்கு ஏற்ப பழங்கள் பழப் பண்ணையிலிருந்து பழவியல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு நிலையத்தில் ஜாம், ஸ்குவாஸ், ஊறுகாய் உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது குன்னுார் பகுதிகளில் பேரிக்காய் சீசன் களைகட்டியுள்ளதால் அரசுப்பழப் பண்ணையில் விளைந்த பேரிக்காய் கொண்டு வரப்பட்டு ஒரு டன் அளவிலான பேரிக்காயை கொண்டு ஜாம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளில் தோட்டக்கலைத்துறையின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில் பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணி முழுமையாக முடித்து தோட்டக்­கலைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களுக்கு அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாத பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×