மருத்துவ குணம் நிறைந்த பேரிக்காய்

ஆப்பிளை விட கடினமான தோல் பகுதியை கொண்டது.பேரிக்காய் நரம்புத்தளர்ச்சி நோய்க்கு நல்லது.
மருத்துவ குணம் நிறைந்த பேரிக்காய்
Published on

தமிழ்நாட்டில் பேரிக்காய்தான் அதிக அளவில் பயிராகும் குளிர்மண்டல பழப்பயிராகும். இது மலைப்பகுதிகளில் சுமார் 1500 முதல் 2500 மீட்டர் உயரமுள்ள இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. 10 முதல் 12 ஆண்டு வயதுடைய மரங்களில் இருந்து 100 முதல் 120 கிலோ பழங்கள் கிடைக்கும்.

மே-ஜூன் மாதங்களில் வால்பேரியும், ஆகஸ்டு முதல் செப்டம்பர் வரை இதர பேரி வகைகள் மற்றும் நாட்டுப்பேரி வகைகள் அறுவடைக்கு வருகின்றன. பேரிக்காய் மரத்தின் தாவரவியல் பெயர் 'பைரஸ் கம்யூனிஸ்' என்பதாகும்.

பேரிக்காய் வடிவத்தில் ஆப்பிள் போல் தோற்றமளிக்கும். ஆனால், ஆப்பிளை விட கடினமான தோல் பகுதியை கொண்டது. இதன் மேல் தோல் கடினமாகவும், கசப்பாகவும் இருக்கும். எனவே மேல்தோல் நீக்கி உண்ணுவது வழக்கம். 100 கிராம் பேரிக்காயில் புரதம், நார்ப்பொருள், மாவுப் பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, தயமின், ரைபோபிளோவின், நியாசின், மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், கந்தகம், குளோரின், ஆக்சாலிக் அமிலம், பைட்டின் பாஸ்பரஸ், கரோட்டின் உள்ளிட்ட சத்துக்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பேரிக்காய் நரம்புத்தளர்ச்சி நோய்க்கு நல்லது. இதயத்தை பலப்படுத்தும். சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் கீல்வாதத்திற்கும் சிறந்தது. கல் அடைப்பை நீக்கும் குணங்கள் பேரிக்காயில் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com