search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய செயலி"

    • புதிய செயலியால் 3 நபர்கள் மூலமாக கடவு சொல்லை பயன்படுத்தி தான் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியும். கடவுச்சொல் வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது.
    • இதனால் கடந்த 2 மாதங்களாக அடிப்படைப் பணிகள் செய்வதற்கு தேவையான பணத்தை எடுக்க முடியவில்லை.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பகுதியில் 23 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் அரசு பொதுமக்களுக்கு பல்வேறு அடிப்படை பணிகளை செய்து வருகின்றது.

    இதை நிர்வாகம் செய்ய தலைவர் ,துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் உள்ளனர். தற்போது தமிழக அரசு ஊராட்சி நிர்வாகத்தை நவீனப்படுத்தும் வகையில் மாநில அரசின் நிதியை வங்கிக் கணக்கு மூலமாக நிர்வாகம் செய்து வருகின்றனர்.

    வங்கி கணக்குகளை நிர்வாகம் செய்ய ஊராட்சித் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகிய 3 நபர்கள் மூலமாக கடவு சொல்லை பயன்படுத்தி தான் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியும். கடவுச்சொல் வருவதற்கு தாமதம் ஏற்படுவதால் பணம் எடுக்க முடியவில்லை.

    இதனால் கடந்த 2 மாதங்களாக அடிப்படைப் பணிகள் செய்வதற்கு தேவையான பணத்தை எடுக்க முடியவில்லை. மேலும் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவ தால் அனைத்து வகையான பணியாளர்களுக்கும் உரிய தொகை வழங்க முடியவில்லை. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிய செயலி அறிமுகப்படுத்தியதில் காலை 8.30 மணிக்கு பதிவேடு தானாக திறந்துகொள்ளும். 9 மணிவரை மட்டுமே பதிய முடியும்.
    • குடும்ப சூழ்நிலையால் 9 மணிக்குமேல் வருவதால் எஸ்.எம்.எஸ் என்ற செயலியில் பெயர் பதிய முடியவில்லை. இதனால் சம்பளம் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

    நிலக்கோட்டை:

    ஊராட்சிகளில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலைதிட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் போதுமான வருமானம் கிடைப்பதால் பொதுமக்களுக்கு உதவியாக இருந்தது. ஆனால் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    வேலை நேரத்தை 9 மணிமுதல் 5 மணிவரை என்பதை 10 மணிமுதல் 4 மணிவரை என குறைக்கவேண்டும் என பயனாளிகள் கேட்டுெகாண்டிருந்தனர். இந்தநிலையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் காலை 8.30 மணிக்கு பதிவேடு தானாக திறந்துகொள்ளும். 9 மணிவரை மட்டுமே பதிய முடியும்.

    இதனால் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் காலை 8 மணிக்கு வரவேண்டும் என பணித்தள பொறுப்பாளர்கள் அறிவுறுத்தினர். குடும்ப சூழ்நிலையால் 9 மணிக்குமேல் வருவதால் எஸ்.எம்.எஸ் என்ற செயலியில் பெயர் பதிய முடியவில்லை. இதனால் சம்பளம் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

    தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு உணவு சமைத்து கொடுத்து காலை 8 மணிக்கு வருவது என்பது இயலாத காரியம். எனவே வேலை நேரத்தை குறைக்க வேண்டும். முறையாக சம்பளம் வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா கூறுகையில், அரசு கடந்தமாதம் ஒரு புதிய செயலியை அமல்படுத்தி உள்ளது. இதில் 9 மணிக்குள் மட்டுமே பயனாளிகள் பெயரை பதிய முடியும். எனவே அனைத்து 100 நாள் பணியாளர்களும் 8 மணிக்கு வரவேண்டும் என நிர்பந்திக்கவேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

    • போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தும் விதமாக கூட்டம் நடத்தப்பட்டது.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் மற்றும் புதுவையில் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை ஒருங்கிணைப்பு கூட்டம் கிருமாம்பாக்கம் பகுதியில் நடந்தது.

    கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா தலைமை தாங்கி பேசினர்.

    புதுவை மாநில போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், மோகன்குமார், ஜிந்தா கோதண்டராமன், செல்வம் வீரவல்லவன் கடலூர் மாவட்ட டி.எஸ்.பி.க்கள் பிரபு, சபியுல்லா, விஜயகுமார், நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கடலூர் மாவட்டம் மற்றும் புதுவை யூனியன் பிரதேச போலீசாருக்கு இடையேயான செயல்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்து விவாதித்தனர்.

    விவாதத்தில் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பகிர்தல்-சேகரித்தல், எல்லைச் சோதனைச் சாவடிகளில் விழிப்புடன் இருக்கும் போலீசார் மூலம் போலி மதுபானங்கள், கஞ்சா, புகையிலை பொருட்கள் போன்றவற்றை சட்ட விரோதமாக கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்துதல்.

    சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை பகிர்தல், குற்றத் தடுப்பு அம்சத்தில் கூட்டு ரோந்து, மாநிலங்களுக்கு இடையேயான போலீசார் குற்றப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு ஒருங்கிணைப்பு, எல்லை பகுதியில் ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணிப்பது என்பது குறித்து விவாதித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த கூட்டம் எல்லை பகுதியில் போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்டது. இரு புறத்தில் இருந்து வரக்கூடிய குற்ற நிகழ்வுகளை பரிமாறிக் கொள்வது. இதன் மூலம் பொதுமக்களை பாதுகாக்க முடியும். இரு மாநில எல்லை போலீசாரிடையே தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள வாட்ஸ் அப் செயலி ஏற்படுத்தப்படும்.

    இரு மாநில போலீசார் இடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். எல்லைப்புற போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசாரிடையே மாதம் தோறும் கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்து உள்ளதாக தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் எல்லைபுற போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு, குற்றப்பிரிவு, அமலாக்க பிரிவு போலீசார் என 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். 

    • சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரம் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் அனைத்து வகையான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்கள், மொத்த கொள்முதல் விற்பனை நிறுவனங்கள் மற்றும் மறுபொட்டலமிடுபவர், ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும், உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களை நிவர்த்தி செய்ய தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் புகார்கள் பெறப்பட்டு 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதில், தற்போது உணவு தொடர்பான பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாகவும், விரைவு நடவடிக்கைக்கு 'ஏதுவாக www.foodsaftey.tn.gov.in என்ற புதிய இணையதளத்தையும், tn food safety consumer app என்ற செயலியையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

    இதில், பொதுமக்கள் தங்களது புகார்களை டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதிகளுடனும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஸ்கீரீன் ரீடர் அணுகள் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆண்டராய்டு ஐஓஎஸ்ஸில் பதிவிறக்கம் செய்யலாம்.

    மேலும், இந்த இணையத்தில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தொடர்பு எண்கள், சேவைகள் மற்றும் முக்கிய துறை சார்ந்த இணைய இணைப்புகள் குறிப்பாக பதிவு மற்றும் உரிமம் விண்ணப்பித்தல், உணவு கலப்படங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் புத்தகங்கள், புகார் வசதிகள் போன்ற அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.

    இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கூறியதாவது தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்கள்பொது மக்கள் இதற்கான இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலமும் தெரிவித்து பயனடையலாம்.

    மேலும், புகார்தாரரின் விபரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரம் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வு அறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கூறியதா வது:-

    "நுகர்வோர் குறை தீர்ப்பு செயலி, ஆர்யுசிஒ, உணவு செரிவூட்டல் ஆகியவை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விழிப்புணர்வு குறும்படங்கள் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், லிங்க்ட்இன், யூடியூப் போன்ற சமூக வலை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் உணவு பாதுகாப்புத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு செயலி ஆகிய சேவைகளை முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வெளிநாடுகளில் பல்வேறு செயலிகள் நடைமுறையில் உள்ளன.
    • செயலி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் வாகன ஓட்டுநா்கள் உறங்குவதை எச்சரிக்கும் வகையில் புதிய செயலியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா் தொடங்கி வைத்தாா். வாகன ஓட்டுநா்கள் இரவு நேரத்தில் வாகனங்களை இயக்கும்போது தங்களை அறியாமலேயே உறங்குவதால் அதிக அளவு விபத்து ஏற்பட்டு மனித உயிா்கள் பலியாகி வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் பல்வேறு செயலிகள் நடைமுறையில் உள்ளன.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டம் லேம்ஸ் ஆட்டோ மேஷன் என்ற நிறுவனம் இதற்கான செயலியை உருவாக்கியுள்ளது. இரவு நேரத்தில் கனரக வாகனங்களை இயக்கும்போது ஓட்டுநா்க ளுக்கு உறக்கம் வந்தால் இந்த செயலி வாகன ஓட்டுனா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் நெடுஞ்சாலை களில் கனரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது இந்த செயலி மூலம் தீயணைப்புத் துறையினா், காவல் துறையினா் மற்றும் ஆம்புலன்ஸ் முதலுதவி வாகனங்களுக்கு தகவல் அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது .

    இந்த செயலியை ஊட்டியை அடுத்த கேத்தி பகுதியில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ தனியாா் பொறி யியல் கல்லூரியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.கனரக வாகன ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கத்தினரை அழைத்து இந்த செயலி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட கனரக வாகன ஓட்டுனா்கள் மற்றும் உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

    • அனைத்து பிரிவு நிர்வாக பணியாளர், மேற்பார்வையாளர், அலுவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு வசதியாக தமிழக அரசு மொபைல் செயலி அறிமுகம் செய்தது.
    • 1-ந்தேதி முதல் பிரிவு பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று விடுமுறை எடுத்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் கோட்ட போக்குவரத்து தலைமை அலுவலக அனைத்து பிரிவு நிர்வாக பணியாளர், மேற்பார்வையாளர், அலுவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு வசதியாக தமிழக அரசு மொபைல் செயலி அறிமுகம் செய்தது. இவர்கள் கடந்த 1-ந்தேதி முதல் பிரிவு பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று விடுமுறை எடுத்து வருகின்றனர். தலைமை அலுவலக மத்திய பணிமனை தொழில் நுட்ப பணியாளர், பாதுகாவலர், மேற்பார்வையாளர், பிரிவு அலுவலர்கள் இம்முறையில் நாளை முதல் (1-ந்தேதி) விடுப்பு எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமை அலுவலகத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம், படிப்படியாக மற்ற பணிமனைக்கும் கொண்டு வரப்படும் என தெரிகிறது.  

    • வரி செலுத்தவும், குறைகள் குறித்த புகார்களை தெரிவிக்கவும் விரைவில் திருச்சி மாநகராட்சி சார்பில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது
    • இந்த செயலியில் மாநகராட்சி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களின் விவரங்கள் இடம் பெறும்

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி நிர்வாகம் ஆன்லைன் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இருக்கும் மொபைல் அப்ளிகேஷனை மாற்றிவிட்டு புதிதாக அறிமுகம் செய்ய உள்ளனர்.

    இந்த செயலியில் மாநகராட்சி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களின் விவரங்கள் இடம் பெறும். இதில் மாநகர வாசிகள் முன்பதிவு செய்து தேவைகளை நிவர்த்தி செய்யலாம். அது மட்டும் அல்லாமல் புகார்கள் அளிக்கும் வசதி, வரி செலுத்துதல் போன்ற அம்சங்களும் இடம்பெறுகிறது.

    மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான ஒரு இடத்தையும் ஒதுக்கியுள்ளனர். இந்த புதிய செயலிக்கு திருச்சி சிட்டிசன் ஆப் என பெயரிடப்பட்டுள்ளது. ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்குள் புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உபயோகமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவாது என்று சொல்லப்பட்டாலும் பெரும்பாலான மக்களிடம் ஸ்மார்ட் போன் வசதி இருப்பதால் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு செயலி மூலம் உதவ முடியும் என்கிறார்கள்.

    ×